Friday, February 3, 2012

இருப்பு - செல்வா

நிலத்தில் புதையுண்ட
நீர்த் திவலைகள்
தன் இருப்பை உறுதி செய்து கொள்கின்றன
பாட்டாளிகளின்
வியர்வைத் துளிகளுடன்
புணர்வதன் மூலம்

விளைச்சலை
சவீகரித்துக் கொண்ட
முதலாளி
தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறான்
செயற்கை சுவாசம்
அளிப்பதன் மூலம்

மக்கள் நலம் பேணும்
அரசு இயந்திரம்
தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறது
தானியங்களை
கடலுக்கு
தானம் செய்து

அராஜகத்தின் ஆணிவேர்
கொரவனும்
பாண்டவனும்
தன் இருப்பை உறுதி செய்கிறான்கள்
ஏகலைவன்களையும்
சார்வாகன்களையும்
நந்தன்களையும்
வீழ்த்தி

தேசப்பாதுகாப்பின்
தெய்வீக மகான்கள்
தன் இருப்பை உறுதி செய்து கொள்கின்றனர்
கோத்ரா எரிப்பு
தாஜ் ஓட்டல்
தாக்குதல்களால்

அரிதாரத்தின்
ஆத்திசூடிகள்
தன் இருப்பை உறுதி செய்து கொள்கின்றன
வெண்மணி
பிரிக்கால்
ஒடுக்கப்பட்டோர்
படுகொலைகளால்

வரலாறு நெடுகிலும்
வியர்வையும் ரத்தமும்
சிந்தியவன் நீ
இருப்பை உறுதி செய்து கொண்டவன்
அவன்

உனது இருத்தலுக்கு
நீ
என்ன செய்யப் போகிறாய்...?
(மாவிபக – படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

2 comments:

  1. kavithai arumai. vazhthugal.
    mudal patthi mattum kavithaiyin karuvodu ottavillai. pariseelikavum.
    - kandhagapookkal sreepathy

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு நன்றி. படைப்பாளரிடம் முதல் பத்தி பற்றி பேசுகிறேன்.

      Delete