Tuesday, June 30, 2015

இப்பல்லாம் யாருங்க ஜாதி பாக்குறா? - சத்யா

அவன் வரவேற்பறையில் அமர்ந்திருந்தான்.

இந்த இண்டர்வியூவில் எப்படியாவது செலக்ட் ஆக வேண்டும் என்ற வெறி அவனுக்குள் இருந்தது. 12000 சம்பளம், 

நேரத்துக்கு போய் வரலாம், ஷிப்ட் என்ற பேரில் கண்ட நேரத்துக்கு போய் வரும் தொல்லையும், அதனால் அர்த்த ராத்திரியில் 

போலீசிடம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்ற தேவையும் இல்லை.

'ராகவ் ப்ரமோட்டர்ஸின் சிஸ்டம் அட்மின்' மனதிற்குள் சொல்லும்போதே சந்தோசமாய் இருந்தது.

காலை 9 மணிக்கு போய் மாலை 5 மணிக்குத் திரும்பும் மக்கள் கடலோடு கலப்பதின் ஆனந்தத்தை இப்போதே உணர்ந்து கொண்டிருந்தான்.

மாலை வேளைகளில் நண்பர்களோடு கழிக்கப் போகும் நேரத்தினை நினைத்துக் கொண்டிருந்தான்.

"சார் உங்கள கூப்பிடறாங்க",அவன் கற்பனைகளை இடைமறித்தார் கிரே கலர் சட்டையும், புளு கலர் சட்டையும் போட்ட 

வயதான செக்யூரிட்டி. உள்ளே போனான். ஒரு கண்ணாடி ரூமை கை காட்டினார் அந்த ஊழியர்.

ஒரு பெண் அதிகாரி அமர்ந்திருந்தாள், நல்ல நிறம், ப்ளூ நிற சுடிதார், அதற்கு மேட்சாக ஸ்டிக்கர் போட்டு லூஸ் ஹேர். அவள் 

டேபிளில் ப்ளூ நிற விரிப்பிட்டு அதில் வெள்ளை நிற பேப்பர் வெயிட், வெள்ளை நிற தண்ணீர் ஜக்கு, வெள்ளை நிற ஆப்பிள் 

லேப்டாப் என ராகவ் ப்ரமோட்டர்ஸின் ப்ளூ,வெள்ளை நிற லோகோ போன்றே இருந்தது.

தன்னுடைய கம்பெனியின் மேனேஜர் டேபிளை நினைத்துப் பார்த்தான். பழைய தகர டேபிளில் எப்போதும் அழுக்கு படிந்த 

ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியுடன் போட்டி போடும் அளவு மொத்தமான நோட்டோடு அமர்ந்து கொண்டு இவன் போகும்போதெல்லாம் ஒரு ஏளனப் பார்வை பார்க்கும் தாடிக்கார மேனேஜரை நினைத்து பார்த்தான். 'ச்ச அதெல்லாம் ஒரு கம்பெனியா'.

அவள் அவனை பார்த்தாள் மாநிறம், அதிகம் உறுத்தாத மீசை, டானிஷ் நிற சட்டை, டாமி ப்ளூ பேண்ட் வசீகரமாய் இருந்தான். 

இயல்பாக அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

"வாங்க உக்காருங்க"

"தேங்க் யூ மேடம்"

"உங்க பேரு"

"அசோக் "

"மிஸ்டர் அசோக், உங்க ரெசுயூம் பார்த்தேன். நீங்க படிச்சது பி.ஏ பிலாசபி பட் நீங்க 2 இயர்ஸ் சிஸ்டம் அட்மினா எக்ஸ்பிரியன்ஸ் இருக்குன்னு போட்ருக்கீங்க. ஏன் நீங்க பிலாசபி சைடு போகல.?"

"நான் எம்.எஸ்.டபுல்யூ படிச்சேன் பட் என்னோட குடும்ப சூழலால என்னால பீஸ் கட்ட முடியல. அதான் ஒரு ஹார்ட்வேர் கோர்ஸ் படிச்சுட்டு சிஸ்டம் அட்மின் ஆயிட்டேன்"

"சரி நீங்க ஏற்கனவே உங்க டெக்னிகல் இண்டர்வியூ கிளியர் பண்ணிட்டீங்க. அதுனால தான் இன்னிக்கு கூப்ட்டு இருக்கோம். உங்களுக்கு முதல்ல நீங்க அப்ளை பண்ணிருக்கற போஸ்ட் பத்தி சொல்லிடறேன்"

"சரி மேடம்"

"இந்த போஸ்ட் சிஸ்டம் அட்மின். பேசிக் பே 4000, அலவன்ஸ் இன்சென்டிவ் எல்லாம் சேத்து 12000 வரும். அதுல P.F , E.S.I போக 10300"

"ஒகே மேடம்"

"அப்பறம் ஜாப் டைமிங் மார்னிங் 9.30 டூ ஈவினிங் 5.30. இங்க இருக்கற 25 சிஸ்டம்ஸ் ஹாண்டல் பண்ண ஒரு அட்மின் அண்ட் ரெண்டு அசிஸ்டண்டு."

"சரி மேடம்"

பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தாள். இவனுக்கு உள்ளூர சந்தோஷம் பொங்க ஆரம்பித்தது.

"உங்க அப்ளிகேஷன்ல உங்க அட்ரஸ் இல்ல. அப்ளிகேசனுக்கு தேவையில்ல பட் ஜாய்னிங் பார்ம்ல அட்ரஸ் ப்ரூப் தேவைப்படும்"

"இருக்கு மேடம்.லைசென்ஸ் ஜெராக்ஸ் போதும்ல மேடம்"

"போதும். நீங்க எங்க இருந்து வரீங்க? ஏன்னா, உங்களுக்கு பிக்-அப் தேவையானு தெரியணும்."

"நோ நீட் மேடம். நான் பைக்ல வந்துடுவேன். பக்கம் தான். சுப்ரமணியபுரம்"

"எனி ஹௌ மே ஐ நோட் யுவர் அட்ரஸ்.?"

"ஷ்யூர் மேடம். நம்பர் 12, அம்பேத்கார் காலனி...."

எழுதுவதை நிறுத்திவிட்டு ஏறிட்டாள். "எங்க.?" சந்தேகமாக கேட்டாள்.

"சுப்ரமணியபுரம் மேடம்".

"இல்லை அட்ரஸ் இன்னொரு தடவ சொல்லுங்க"

"நம்பர் 12, அம்பேத்கார் காலனி, சுப்ரமணியபுரம்"

சர்டிபிகேட்களுக்குள் நுழைந்து தேட ஆரம்பித்தாள். இதோ டிசி கிடைத்து விட்டது. அதில் அவள் தேடிய பிரிவு கிடைத்து விட்டது.

'ஜாதி'

வேகமாக வலப்பக்கம் பார்த்தாள். 'சாதிச் சான்றிதழை பார்க்கவும்', அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. 
மெதுவாக அவனை ஏறிட்டாள்.

"நீங்க என்ன கேஸ்ட்ப்பா?"

அவன் சங்கடப்பட்டான். "எதுக்கு மேடம் கேக்கறீங்க? இது ப்ரைவேட் கம்பனி தான?"

"ப்ரைவேட் கம்பெனி தான்ப்பா. ஆனா எங்க கம்பெனில வேலை செய்யறவங்க கேஸ்ட் எங்களுக்குத் தெரியணும்"

சரி இவளிடம் விவாதம் செய்து பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்தவனாய் சொன்னான் "அருந்ததியர் மேடம்"

"என்னது அருந்ததியரா? அப்படீன்னா "

"எங்க கேஸ்ட் மேடம்"

"அப்படி ஒரு கேஸ்ட் நான் கேள்விப்பட்டதில்லையே?"

"இல்ல மேடம் எங்க கம்யூனிடி சர்டிபிகேட்லகூட அப்படித்தான் இருக்கு"

"இல்லப்பா எனக்கு புரியல. உங்க ஜாதிக்கு வேற எதாவது பேரு இருக்கா?"

வெகுநேரம் தயங்கி விட்டு சொன்னான் "ச****ர் மேடம்". அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

"ம் அப்படி புரியற மாதிரி சொல்லு. உன் ஜாதிய சொல்ல என்ன தயக்கம். நீயே இப்படி தாழ்வு மனப்பான்மையோட இருக்காத. இப்பல்லாம் யாரு ஜாதி பாக்கறா". இவ்வளவு நேரம் வந்த "ங்க" என்ற வார்த்தை குறைந்திருந்ததை அவனால் உணர முடிந்தது.

"..."

"நீ என்னப்பா பீஸ் கட்ட முடியலன்னு எம்.எஸ்.டபுல்யூ படிக்கலன்னு சொல்ற?. நீங்கதான் ஸ்காலர்ஷிப்லையே  படிக்கறீங்களே?" பேச்சில் நக்கலும், துவேஷமும் தெறித்தது.

அவளை ஏறிட்டான். பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, "மேடம், நாம ஜாப் பத்தி பேசுவோமே" என்றான்.

அவளும் கொஞ்சம் அதிகமாக பேசி விட்டதை உணர்ந்தாள் சுதாரித்தபடி "இல்லப்பா நீங்க அப்ளை பண்ணின போஸ்டுக்கு இங்கயே அசிஸ்டண்டா இருக்கற பையன் அப்ளை பண்ணி இருக்கான். அவனுக்கு ப்ரமோஷன் குடுக்கலாம்னு இருக்கோம்."

"ஓ"

"நீங்க வேணா ஹவுஸ் கீப்பிங் இன்சார்ஜ் போஸ்ட் இருக்கு.ஜாய்ன் பண்றீங்களா.?"

"ஹவுஸ் கீப்பிங்ன்னா.?" சந்தேகமாக கேட்டான்.

"ஒன்னும் இல்லப்பா. இங்க கிளீன் பண்ண ரெண்டு பொம்பளைங்க வருவாங்க. அவங்கள வேலை வாங்கணும். ஒன்னும் பெரிய ப்ராப்ளம் இருக்காது. 'உங்க ஆளுங்க தான்'. ஏதாவது ஜெராக்ஸ் எடுக்கணும்னா எடுத்துட்டு வரணும். அவ்வளவு தான். 

இதுக்கு ஸ்கேல் பே எதுவும் இல்லை. 10000 சேலரி. நீங்க அப்ளை பண்ணின ஜாப்க்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை."

"என்ன மேடம் என் ஜாதி தெரிஞ்சதும் இப்படி பேசறீங்களா?" என்றான் காட்டமாக.

"அப்படியெல்லாம் இல்லப்பா. அந்த போஸ்ட் காலியா இல்ல அதான் இங்க ஜாய்ன் பண்ணிக்கறியான்னு கேட்டேன்."

"அந்த போஸ்டுக்கு நான் அப்ளை பண்ணவே இல்லையே? தேவையில்லாம என்ன கூப்டு இருக்க வேண்டாமே"

"நீ அந்த கம்பெனில 4500 ரூபா சம்பளம் வாங்கற. இங்க வந்தா 10000 கெடைக்கும்ல. என்ன ரொம்ப கஷ்டமான வேலை? ரெண்டு பேர வேலை வாங்க போற. எப்பயாவது அவங்க லீவ் போட்டா அவங்க வேலைய நீ பாக்க வேண்டியது இருக்கும். அவ்ளோதான".

'அவங்க லீவ் போட்டா அவங்க வேலைய நீ பாக்க வேண்டிது இருக்கும்' அவனுக்குத் தெளிவாக புரிந்தது.

"எங்கப்பன் இந்த வேலை செஞ்சு நானும் அந்த வேலை செஞ்சுற கூடாதுன்னு தான் மேடம் படிக்க வெச்சாரு. நீங்க எம்புட்டு காச குடுத்தாலும் மறுபடி இந்த வேலைய என் குலத்தொழிலாக்க மாட்டேன். என் சர்டிபிகேட்ட குடுங்க. நான் வரேன்." என்றபடி கிளம்பினான்.

அவன் கனவுகள் அனைத்தும் உடைந்தது போல் இருந்தது. திரும்பி ஒருமுறை கண்ணாடி அறைக்குள் இருந்த அவளைப் பார்த்தான் காறித்துப்ப வேண்டும் போல் இருந்தது.

"பெரிய ராஜ பரம்பரை, செய்ய மாட்டாரோ, கக்கூஸ் கழுவறவன் எல்லாம் கம்ப்யூட்டர் வேலை பாக்க போறானாம் ச****ப்பயலுக்கு திமிர பாரு" மனதிற்குள் கறுவிக்கொண்டு ஆப்பிள் லேப்டாப்பில் சமையல் குறிப்பு படிக்க ஆரம்பித்தாள் அந்த மேனேஜர்.

அவளது செல்போன் ஒலித்தது, பங்கஜம் ஆன்ட்டி என்று காட்டியது.

"ஹலோ ஆன்ட்டி எப்படி இருக்கீங்க?" என்றாள்.

"நன்னா இல்லடியம்மா. நான் ஒன்ன பெத்து வெச்சுருக்கேனே எப்படி நன்னா இருக்க முடியும்?" எதிர் முனையில் அழும் குரல் கேட்டது.

"என்னாச்சு ஆன்ட்டி. உஷா என்ன பண்ணினா?"

"எவனையோ லவ் பண்றாளாம். அந்த கடன்காரன் ஒரு எழவும் படிக்கல, எதோ மெக்கானிக் ஷாப் வெச்சுருக்கனாம். இன்னிக்கு நம்மாத்துக்கு வந்து பொண்ணு கேக்கராண்டி. நேக்கு நாண்டுண்டு சாகணும் போல இருக்கு. சரி லவ் பண்ணி தொலைச்சது நல்ல பிராமண பையனா பாத்து லவ் பண்ணிருந்தா பரவாயில்ல."

"வேற என்ன கேஸ்ட் ஆன்ட்டி. நான் வேணுன்னா அவர்ட்ட சொல்லி பையன கூப்பிட்டு மிரட்ட சொல்லறேன்"

"சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதேடியம்மா அந்த பையன் உங்க ஆளு தானாம். நோக்கே தெரியும். நான் உங்காத்த தவிர எங்கியும் போமாட்டேன். நேக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அவர் இடிஞ்சு போய் உக்காந்துருக்கார்." சேரில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

"எங்க ஆளா அப்ப சரி பொழைசுப்பான். ஆன்ட்டி நீங்க ஒன்னும் கவலை படாதீங்க. அந்த பையன் நல்ல பையனாதான்  தெரியுது. நம்ம உஷா சரியா தான் ஆன்ட்டி முடிவு எடுப்பா. எங்க வீட்டுக்கே மருமகளான மாதிரி தான். நீங்க என்ன பண்ணுங்க. மாப்பிள்ளைக்கு சீதனமா குடுக்கற காசுல அந்த பையனுக்கு ஒரு ஷோ ரூம் வெச்சு குடுத்துருங்க உஷா எதிர்காலம் நல்லா இருக்கும்ல. அது மட்டும் இல்லாம இப்பல்லாம் யாரு ஆன்ட்டி ஜாதி பாக்குறா. நீங்க ஒன்னும் பயப்படாதீங்க அங்கிள் கிட்ட எடுத்து சொல்லுங்க. இனிமே நாமள்லாம் ஒரே குடும்பம் ஆயிட்டோம். சரியா."

"ம் சரிம்மா" எதிர் முனையில் பங்கஜம் ஆன்ட்டி குழப்பத்தோடு போனை வைத்தாள்.

"அண்ணே பாத்ரூம் எங்கண்ணே?" அசோக் செக்யூரிட்டியை கேட்டான்.

மாடிப் படிகட்டை ஒட்டி இருந்த 'டாய்லெட்' என்ற பலகையை நோக்கி கை நீட்டினார்.

இரண்டு அடி வைத்தான்.

'அவங்க லீவ் போட்டா அவங்க வேலைய நீ பாக்க வேண்டிது இருக்கும்' காதில் ஒலித்தது.

இயலாமையில் கண்கள் கலங்க திரும்பி நடந்தான்.

(2015 ஜூன் 21 அன்று நடைபெற்ற படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற சிறுகதை)

Thursday, June 25, 2015

மருளாடி - கா.சி.தமிழ்க்குமரன்

கொட்டுச்சத்தம் அந்த இடத்தையே அதிரவைத்துக்கொண்டு இருந்தது. உடம்பெல்லாம் வியார்வை வழிய கொட்டே கிழிந்துவிடும்படி உயிரைக் கொடுத்து வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தனார். ஊவாங்கொட்டுக்காரார். ….….என்ற இழுவைச்சத்தம் திடும்  திடும்   என்றுவிழும் கொட்டின் சத்தத்தைத் தூக்கியடித்தது. பீப்பீக்களின் சத்தம் காத்தைக் கிழித்து காதைக் கிழித்தது. ஊர்க்கூட்டம் மொத்தமும் அலங்காரிக்கப்பட்ட கிராமதேவதையின் கோவிலுக்குமுன். சிறுவர்கள் கொட்டுக்காரார்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க உடல் புல்லரிக்க பெண்களின் குலவைச்சத்தம் விடாமல் மாறிமாறி ஒலித்துக்கொண்டு இருந்தது. கூட்டத்தின் நடுவே வெற்று உடம்பில் வௌர்ளை வேட்டி தார்ப்பாய்ச்சி கட்டியிருக்க அவ்வேட்டி மஞ்சள் தண்ணீர் ஊற்றியதால் மஞ்சள் வேட்டியாய் மாறியிருந்தது. செருப்பில்லா அவ்வொற்றை உடையுடன் கையில் வேப்பங்குலையுடன் கண்மூடி அசையாமல் நின்றிருந்தார் மருளாடி. இன்னும் அருள் வந்து இறங்கவில்லை. கொட்டுக்காரார்கள் இன்னும் வேகமாய் அடித்துப்பார்த்தார்கள். இரண்டு பீப்பீக்காரார்களும் கழுத்துநரம்புகள் புடைக்க தம்கட்டி இரண்டுபுறமும் காதில் சென்று உச்சஸ்தாயியில் உடம்பில் உள்ள காற்றே வெளியேறிவிடும் போல நெடுநேரம் தம்கட்டி ஊதினார்கள். ஊவாங்கொட்டுக்காரார் இழுஇழு என்று இழுத்துப்பார்த்தார். ம்.. ஒருஅசைவும் இல்லை. குத்துக்கல்லாய் நின்றுகொண்டிருந்தார் மருளாடி.
என்னய்யா ஒருநாளும் இல்லாத திருநாளா இருக்கு. எந்த வருசமும் இப்படி ஆனதில்லையேய்யா…’‘அதானேஆத்தாவந்து இறங்குவேனான்னு அடம்பிடிக்கறா பாருங்களேன்’. ‘இப்பவே மொதக்கோழி கூப்புடுற நேரமாச்சு. இன்னமே சட்டிஎடுத்து ஊர் சுத்தி வரணும்….’

ஆமா சட்டி கொண்டு செலுத்திட்டுத்தானே மத்தவேலைகளை ஆரம்பிக்கமுடியும்.’
ஆத்தாளுக்கு என்ன கொறவச்சோமுன்னு  இப்பிடி சோதிக்கிறான்னு தெரியலியே’.
பெண்களின் குலவை நாவறள சுதிகுறைந்து சத்தம் குறைந்து கொண்டே வந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும்கவலையின் ரேகைகள் படரஆரம்பித்தது.
உணார்ச்சி வசப்பட்ட சிலர்ஆத்தா நாங்க தெரிஞ்சும் தெரியாம ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சுக்க தாயி. நெடுஞ்சாங்கிடையாய் மண்ணில் விழுந்து கண்ணீரை உகுத்தார்கள்.
       இந்த அசாதரணமான நிகழ்ச்சியைப் பார்க்க சிறுவார்களுக்கு பயம் வந்து விட்டது. தன் தாய் தந்தையரின் பின்னே ஒளிந்து கொண்டு மிரட்சியுடன் ஒருகண்ணால் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அந்த அதிகாலை வேளையில் கோவிலைச் சுற்றி கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகள் இரவை விரட்டியடித்துக் கொண்டு இருந்தன. லைட்டைச் சுற்றிலும் சிறுபூச்சிகளும் வண்டுகளும் கொய்யென்று சுற்றிக்கொண்டு இருந்தன. கோவிலுக்கு மக்கள் கூட்டம் வருவதும் தங்களுக்குள் குசு குசுவென பேசிக்கொள்வதுமாய் இருக்க நேரம் கடந்துகொண்டிருந்தது.
ஏம்ப்பா மருளாடி வெரதமெல்லாம் எப்பிடி….. சரியாத்தானே இருந்தாரு’.
யோவ் வாயக்கழுவுய்யாஎதச்சந்தேகப்பட்டாலும்படலாம்…. வெரத விசயத்துல பத்தரமாத்து தங்கமுய்யாகாப்புகட்டுனதுல இருந்து நேத்து வரைக்கும் பச்சத்தண்ணிபல்லுலபடாம ராத்திரிக்கு ரெண்டேரெண்டு வாழைப்பழத்தோட வெரதத்த முடிக்கிறவரப் பாத்து இப்பிடிப்பேசுனா நம்மநாக்கு அழுகிப்போயிடும். வெரத விசயத்துல அப்பிடி ஒரு சுத்தபத்தம்’.
‘அதெல்லாம் சரிதான்….பின்னே ஆத்தா சோதிக்கிறதுக்கு ஏதாவது காரணம் வேணுமில்ல’.
ஆளாளுக்கு கூட்டத்தில் பேச்சும் சலசலப்புமாக முடிவின்றி நீண்டுகொண்டிருந்தது.
கருப்பாயி கூட்டத்தோடு கூட்டமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு நேரந்தான் ஒத்தைக்காலிலேயே பொறுப்பாய் நிக்கிறது. கால்மாத்தி நிக்கிறதுக்கு அந்தக்காலின் வீக்கம் குறைந்திருந்தாலும் வலி இன்னும் விடவில்லை. போனமாசம் நடந்ததை நெனச்சுப்பாத்தா கால்வலியைவிட மனவலிதான் நெஞ்சைப் பிசைந்தது. கட்டைவண்டியில சொறுகியிருந்த ஊணுகம்பைப் புடுங்கி அடிச்சதுல காலே ஒடைஞ்சதுபோல வலி. நாலுநாள் படுத்த படுக்கைதான். ஊருநாட்டுல எந்தப்பொம்பளதான் இந்தக்கோலத்துல இப்பிடி பாத்துட்டு சும்மா இருப்பா. வெளிய தெரிஞ்சா வெக்கக்கேடு. காட்டுலயே ஒருமூச்சு பேசாத பேச்செல்லாம் பேசி நாறடிச்சுட்டுத்தான் வீட்டுக்கு வந்தா. அப்பவெல்லாம் கம்முன்னுவந்த பய வீட்டுக்கு வந்து மனசுதாங்காம ரெண்டு வார்த்தையவிடவும் எங்க இருந்துதான் அம்புட்டுவௌம் வந்துச்சோ ஒத்தப்பேரி பொம்பள என்ன செய்வா பாவம். அடிவாங்குனதுதான் மிச்சம். நாலுநாளாய் உயிர்போய் உயிர் வந்தது. காட்டுல சோளக்கதிர் அறுக்கவந்த மேகாட்டுக்காரியை காட்டுலயேவச்சு…. சே….. நெனச்சுப் பாத்தாலும் இன்னும் அருவருப்பா இருக்கு. எதவேணாலும் பொம்பள விட்டுக்கொடுப்பா. இத விட்டுக்கொடுப்பாளா…. காட்டுல பேசாத பேச்சையெல்லாம் செவனேன்னு கேட்டுட்டு இருந்துட்டு ஊருக்குள்ள நாலுபேருக்கு தெரிஞ்சுடுமுன்னு கோவமயித்துல அடியானஅடி பேதியில போகுறபய…. தூ…..குடிக்கி…. இவஞ்செஞ்ச கூத்துக்கும் என்னைய இப்பிடி அடிச்சதுக்கும் எங்கூடப் பொறந்த பொறப்புன்னு இருந்திருந்தா தூக்கிப்போட்டு வகுந்துருக்க மாட்டாங்க. ஒத்தப்பேரிங்கறதுனால இந்தப்போடு போடுறசன்னமான அடியாமாட்டப் போட்டு அடிக்கிற மாதிரி. மனுசந்தானா நீயெல்லாம் ஊருக்குள்ள வெள்ளைளையுஞ் சொள்ளையுமா அலையுறபுள்ளைங்க தலையெடுத்திருந்தாக்கூட ஏன் எதுக்குன்னு சிண்டப் புடிச்சிருக்கும். கைக்குள்ளயும் காலுக்குள்ளயும் சின்னப் புள்ளைங்க காலைக்கட்டிக்கிட்டு தேமித்தேமி அழுதுச்சுக பாவம். அதுக மொகத்தாச்சனைக்காச்சும் விட்டானா பாவிப்பய. இருடீ இன்னும் நாலுவருசந்தான் அப்புறம் எம்பயலுக ஒன்னை என்ன செய்யுறாங்கன்னு பாரு. மனசுக்குள் இன்னும் வெஞ்சினம் தீரவில்லை. அனிச்சையாய்க் காலைத்தடவிப் பார்த்தாள் கோடாய்  வீக்கம் கைக்குத் தட்டுப்பட்டது.
ஆத்தாளுக்கு ஏதோ கொறையிருக்கு. அதான்  வந்து எறங்க மாட்டேங்குறா
அது என்னான்னு ஆத்தா வந்து எறங்குனாத்தானய்யா தெரியும்
ஊவா….ஊவாஇழுப்பு தேய்ந்து கொண்டிருந்தது. கொட்டுகாரார்கள் முக்கிமுக்கிஅடித்து கை வலித்ததுதான் மிச்சம். ஆளாளுக்கு தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஆத்தா வந்து எறங்குற மாதிரி தெரியவில்லை.
ஏய் நிறுத்துங்கப்பா கொட்ட”.
இப்பிடியே அடிச்சுக்கிட்டே இருந்தா ஒன்னும் நடக்காது ரெண்டு எளவட்டபயக போயி பழையஆளைக் கூட்டிட்டு வாங்கப்பா”.
வேகமாய் ரெண்டுபோர் ஊருக்குள் ஓடினார்கள். கொட்டுக்காரார்கள் உடம்பில் வழிந்த வோர்வையைத் துண்டால் துடைத்துக் கொண்டனார். அந்த விடியக்காலையில் ஊவாங்கொட்டுக்காரார் கொஞ்சம் தண்ணி ஊத்துங்கசாமி எனக் கேட்டு இருகைகளையும் சேர்த்துப் பிடித்து விழுந்த தண்ணீரை முழங்கைகள் வழியே ஓட குடித்து நிமிர்ந்தபோது வேர்வையும் தண்ணீரும் கலந்து கீழே வழிந்தோடியது.
கன்னம் ஒடுங்கிப்போய் நெடுநெடுவென உயரமாய் நடக்கமாட்டாமல் நடந்துவந்த பழையமருளாடியை கைத்தாங்கலாய் ரெண்டுபோர் அழைத்துவந்தார்கள். ஆத்தாவைப் பார்த்து ஒருநிமிடம் கண்ணை மூடி நெக்குருகி வணங்கியபோதே உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொண்டது பழையவருக்குபுதுமருளாடியை முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள். மஞ்சத்தண்ணி ஊத்தி ஊத்தி உடம்பு வெடவெடவென மெல்லியதாய் நடுங்கியது. பூசாரி திருநீறு பரப்பிய சூடத்தட்டுடன் பக்கத்தில் நிற்க பழையவர் ம்ம்…..என உறுமிக்கொண்டே சூடத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு தளார்ந்த உடம்பு விரைக்க திடீரென்று ஏய்….. என்று சத்தம் போடவும் அருகில் இருந்தவார்கள் ஒருகணம் திடுக்கிட்டுத்தான் போனார்கள். தட்டில் இருந்த திருநீரை கைப்பிடி அள்ளி தன்தலையில் தூவிக்கொண்டு புதுமருளாடியின் நெற்றியில் ஒரேஅடி. பக்கத்தில் இருந்தவார்கள் பயந்து விலகசொல்லாத்தா சொல்லு….  கொறையச்சொல்லு.. இப்பிடியே மசமசன்னு நின்னுக்கிட்டு இருந்தா ஒம்புள்ளைகளுக்கு என்ன தெரியும்…..  கண்கள் சிவக்க நாக்கை துருத்தி மடித்து கடித்தபடி ம்..ம்….எனப்பெருமூச்சுவிட புது மருளாடியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. ‘நீ வந்து சொன்னாத்தானே தெரியும் வர்றியா இல்லையா.. இப்ப நீ இறங்கி வராட்டாநாஞ்சும்மா இருக்கமாட்டேன்ஆமா…’ஆத்தாளுக்குச் சவால் விட்டார்.
மருளாடியின் உடல் லேசாய் சிலிர்த்தது. கால்தசைகள் நடுக்கமெடுத்தது. உடலைகுறுக்கி இரண்டு கைகளையும் முறுக்கி குனிந்து வில்லாய் வளைத்து நின்றார். கன்னத் தசைகள் துடித்தது.
டேய்….அடிங்கடா கொட்ட
இதற்காகவே காத்திருந்ததுபோல வீறுகொண்டு எழுந்த கொட்டுக்காரார்கள் அந்த இடத்தையே ரணகளமாக்கினார்கள். ‘டேய்என்ற சத்தத்துடன் கண்களில் கோபம் கொப்புளிக்க மருளாடியின் கால்கள் அந்த இடத்தைச் சுழன்றாடியது.  “ஆத்தா வந்துட்டா” “ஆத்தாவந்துட்டா”“தாயிவந்துஎறங்கிட்டாசந்தோசப்பெருக்கில் மக்கள்தம் கைகளை தலைக்குமேல் குவித்து நெக்குருகி நிற்கும் வேளையில்
டேய் நிறுத்துங்கடாகொஞ்ச நேரத்தில் தஸ் புஸ் என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
கொட்டுச் சத்தம் நின்றது.  எல்லேரையும் சுற்றி ஒருமுறை பார்வையைச் சுழற்றியபடி
போனவருசம் சொன்னது என்னாச்சுடா
ஆத்தா சொன்னாத்தானே தெரியும்
ஆத்தாவுக்கு திருவாச்சி வாங்கி வைக்கிறதா சொன்னீங்களே என்னடா ஆச்சு
ஆத்தா உனக்குத் தெரியாதா போனவருசந்தான் மழதண்ணி இல்லாம் பஞ்சமாப் போச்சுல்ல. ஊர்ச்சனமே பொழப்பத்தேடி வெளியூருக்குள்ள போயிட்டாங்க. எதுராவுக்கு ஒங்கடனை செஞ்சு முடிச்சுடுறோம் தாயி”.
அது எப்புடிடா என்னைய மறக்கலாம்
தப்புத்தான் தாயி ஒம்புள்ளைகள நீதான் மன்னிக்கணும்
மக்கள் கூட்டமே காலில் விழுந்து வணங்க ஆத்தா கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தாள். முகத்தில் கொப்புளித்த கோபம் குறைந்துஅடிடா கொட்டமீண்டும் அருள் ஏறியது. வேப்பஞ் சிறாய்களில் நிரப்பப்பட்ட அந்த மண்ணாலான அக்கினிச்சட்டி நல்லெண்ணையின் தீ நின்று எரிந்தது. கோவிலுக்குள்ளிருந்து எடுத்துவந்த சட்டி பூசாரியிடமிருந்து மருளாடிக்கு கைமாற அக்கினியின் தனல் சும்மா வானத்துக்கும் பூமிக்குமாய் சொலித்தது. ஆட்டமென்றால் அப்படி ஒரு ஆட்டம். ஊரே வைத்தகண் வாங்காமல் பக்திப் பரவசத்தில்.
ம்நடங்கய்யா கௌக்கு வெளுக்குதுஊர்சுத்திவரணுமுல்ல.ம்..நடங்கநடங்க
ஒவ்வொரு வீடாய்ச் சென்று அருள் பாலித்து முதுகில் தண்ணீர் வாங்கிச் சென்றார் மருளாடி. ஊர்ச்சனமே பின்தொடர்ந்தது. அந்தக்கடைசி வீட்டில் சாமிக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றும் போதே அந்தப் பெண்ணுக்கு அருள்ஏறி ஆட ஆரம்பித்தாள். சுற்றிச்சுற்றி வந்து அக்கினிச் சட்டியைக் கேட்டு கைநீட்டினாள். மருளாடி மறுக்க விடாப்பிடியாய் சுழன்று சுற்றி வந்தாள். ஒரு கட்டத்தில் திருநீற்றை அள்ளி தலையோடு சேர்த்து ஒருஅடி. ‘அடங்குஅடங்குஆத்தா சொல்றேனுல்லம்…”அந்தமானிக்க அடங்கியது. சலிக்காமல் கொட்டுக்காரார்கள் வெளுத்து வாங்கினார்கள்.
ஓவ்வொரு பொங்கலுக்கும் மருளாடி வீட்டுக்காரிங்குற கெத்துல கருப்பாயி மொகமெல்லாம் பூரிப்போட ஊரைசுத்தி வருவாள்.  இந்த வருசம் மனசுக்குள்ள திகுதிகுன்னு எரிஞ்சது.  நெசமாத்தான் ஆத்தாவந்து எறங்குறாளாஆத்தா மேலயே சந்தேகம் வந்தது.
 மேகாட்டுக்காரிட்ட ஆத்தா நல்லா வந்து எறங்குறால்ல”.
இன்னைக்கு நேத்தா அவ வந்தகாலந்தொட்டு ஆடத்தானப்பா செய்யுறா”.
      தூ….. எனகாரித்துப்பிவிட்டு ஒருகாலை மெதுவாய் பொத்தி பொத்தி தன் வீட்டை நோக்கி நடந்தாள் கருப்பாயி.
(2015 ஜூன் 21 அன்று நடைபெற்ற படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற சிறுகதை)