Monday, December 23, 2013

பட்ட மனம் – சுட்ட நிஜங்கள்.... - வேழம்

படம் : ஜென்னிமா
நிஜங்களல்ல என நிஜங்களை
நிராகரித்த வேளையில்…
கனவுலகில் கவிழ்ந்திருந்தேன்.
கண்மூடிவிட்டால் – கவலையே
கடுகளவுகூட இல்லையே…
ஆழமான எண்ணம்!...
போலியான யதார்த்தம்
காலியாக வேண்டும்.
நடிப்பு நாற்காலியில்
அமர்ந்து கொண்டேன்.
நடிக்கத் தெரியாத அவலம்,
நடிப்பென்று தெரிந்தால் கேவலம்.

எனக்கு நானே சொல்லிக் கொண்டது - கேகே

படம் : ஜென்னிமா

               சிறகை இழந்துவிட்ட மனசு
               எப்படிப் பறக்கும்?
               யௌவனத்தின் பாதையில்தான்
               எத்தனை முட்கள்.
               கஷ்டம்தான் கலங்கியதில்லை.
               தூரத்துப் பச்சை அல்லது
               பாலைவனச் சோலை அல்லது ஏதோ ஒன்று.
               மெல்லிய சிலிர்ப்பில் உடல் மிளிர்ந்து
               எழுந்துவிட்டான் அவன்
               சிறிய புன்னகையில் உதிர்ந்தன வடுக்கள்.
               சிறகே உதிர்ந்து விட்டாலும்
               பறக்கத்தான் துடிக்கும் மனசு.
               வெளி வியாபித்திருக்கிறது
               வரவேற்க.

Tuesday, December 17, 2013

THE BICYCLE THIEF – திரைப்படமும் வாழ்க்கையும் – முனியசாமி

உலகத் திரைப்படம், விளைவு இதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா ஒன்று மட்டும். தெரியும் காமராஜருக்குப் பிறகு, இப்ப வரையிலும் ஓ,பன்னீர் செல்வத்தைத்தவிர மற்ற எல்லாருமே சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான். உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் எங்க ஊரில் ஒரு அம்மாவிடம் “என்னம்மா யாருக்கு உங்க ஓட்டு”ன்னு கேட்டதுக்கு, “இந்தத் தடவ விஜயகாந்துக்குத்தான் போடணும்” என்றார். “ஏம்மா இப்படி ஒரு முடிவு”ன்னு கேட்டதுக்கு, “அம்மாவுக்கும் போட்டாச்சு… அய்யாவுக்கும் போட்டாச்சு… ஒன்னும் சரியா வரல… விஜயகாந்த் கொஞ்சம் தைரியமான ஆளு… எத்தனை படத்துல தீவிரவாதிகளை சுட்டுக் கொல்றாரு. அவரு நாட்டுக்கு நல்லது செய்வாருன்னுதான் அவருக்குப் போடலாம்ன்னு பார்க்கிறேன்” என்றார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும், நாம் ஒத்துக் கொள்ளாவிட்டாலும்கூட சினிமாவேறு, அரசியல்வேறு என்பது புரிவதில்லை. அப்படியெல்லாம் முன்புதான் இருந்தது. இப்போது இல்லை என்று நாம் நம்பினால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக வந்திருக்கவே முடியாதே. கட்சி தொடங்குவதற்கு முன்னால் அவருடைய அரசியல் நடவடிக்கைகள் என்ன? சினிமா தவிர வேறு ஒன்றும் இல்லையே…
நான் பள்ளியில் படிக்கும்போது என் அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தந்திருந்தார். எங்க ஊரு ரோட்டுல சைக்கிள் பஞ்சர் ஆகாட்டி அந்த சைக்கிள் சைக்கிளே இல்லை. என்னோட சைக்கிளும் அடிக்கடி பஞ்சராச்சு. அடிக்கடி பஞ்சர் ஒட்டுறதுக்குக் காசு இல்லை. இரண்டு டயரப்போட்டு ஒருவழியா பஞ்சராகுறதக் குறைச்சேன். பள்ளிக்கூடம் முடிஞ்சு லீவு விட்டதும் சைக்கிள ஓரம் கட்டியாச்சு. மறுபடியும் பள்ளிக்கூடம் தொடங்கும்போது சைக்கிள் சக்கரத்தில சீவனே இல்லை. வைக்கோலைத் தினிச்சு ஏதாவது செய்யமுடியுமான்னு ஒரு ஆராய்ச்சி. அதுலயும் இரண்டு நாள் ஓடுச்சு. இப்படித் தொடங்கின என்னோட சைக்கிள் வாழ்க்கை. இப்ப நானு தொலைபேசித் துறையில தற்காலிகமா கேபிள் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். செம்பட்டியில ஒரு வேலைக்காக காலையில ஆபிஸ்ல இருந்து 9 கிமீ போய் பாத்து முடிச்சதும், புளியம்பட்டி அப்புறம் மறுபடி வேற ஒரு பகுதி இப்படி ஒரு நாளைக்கு சுமாரா 30 கிமீ வரைக்கும் சைக்கிள் ஓட்டுற மாதிரியான நிலைமை. இன்னைக்கு என்னோட வாழ்க்கையின் ஒரு அங்கமா, வேலைக்கான கருவிகளில் ஒன்னா சைக்கிளும் மாறிருச்சு.
‘பை சைக்கிள் தீஃப்‘ ஒரு அருமையான திரைப்படம். வறுமை பற்றிய விஷயங்களும் வேலையில்லாத் திண்டாட்டமும் நன்றாக எடுத்துரைக்கப்படுகின்றன. குறிப்பாக வறிய குடும்பச் சுழலில் வளரும் ஒரு அன்பான குழந்தையின் உணர்வுகள் நன்றாகச் சொல்லப்பட்டுள்ளன. முதல்காட்சி ஆடைகளைப்பற்றிய விஷயங்கள். வேலை போன அவனுக்கு வேலை கிடைக்கிறது. அந்த வேலைக்கு சைக்கிள் வைத்திருப்பது ஒரு அடிப்படைத் தகுதியாக இருக்கிறது. குளிர்ப்பிரதேசத்தில் வாழ்கின்ற அந்தக் குடும்பத்தினர் போர்வை உட்பட படுக்கைப் பொருள்களை அனைத்தையும் அடகு வைத்து, ஒரு சைக்கிளை வாங்குகிறார்கள். ஏணியைத் தூக்கிக் கொண்டு போய் சுவற்றில் வால் போஸ்ட்டர் ஒட்டும் வேலை. ஏணியில் ஏறி போஸ்ட்டர் ஒட்டிக் கொண்டிருக்கும்போது கண் முன்னே ஒருவன் சைக்கிளைத் திருடிக் கொண்டு ஓடுகிறான். அவனைப் பிடிக்க முடியவில்லை. வேலை பறிபோகிறது. அவனைத் தேடிப்போயும் பயனில்லை. காவல் துறை எல்லா நாடுகளிலும் ஒன்றே போல் இருக்கிறது. கடவுளும் கைவிடுகிறார். குறிபார்க்கிறார்கள். பயனில்லை. தன் மகனுடன் சைக்கிளைத் தேடிப்போன அவன் இறுதியில் மகனை பேருந்தில் வீட்டிற்குச் செல்லச் சொல்லிவிட்டு, காத்திருந்து ஒரு சைக்கிளைத் திருடுகிறான். மாட்டிக்கொண்டு உதைபடுகிறான். மகன் அப்பாவை அடியிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கிறான். பரிதாபப்பட்ட பொதுமக்கள் புத்திகூறி அனுப்புகிறார்கள். அப்பாவும் மகனும் வீடு நோக்கி நடக்க அவர்களின் நடை பின்னணியில் இருந்து செய்யப்பட்ட கேமிரா பதிவுடன் படம் முடிவடைகிறது.
மகன் ஒவ்வொரு முறை தவறு செய்யும்போதும் அம்மாவிடம் சொல்லி விடுவேன் என்கிறார் அப்பா. இப்போது மகன் அப்படி ஏதும் சொல்லாமல் அப்பாவுடன் நடந்து செல்கிறான் என்பது என்னை மிகவும் பாதித்தது. அவருக்கு (திருடியாவது) ஒரு சைக்கிள் கிடைக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இப்படியான திரைப்படங்கள் நம்மை நம் வாழ்க்கையைச் சொல்வதன் மூலம் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கின்றன. இப்படியான உணர்ச்சிவசப்படல் இன்றைய தேவையாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியாகி 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
 

Friday, November 15, 2013

ஏறக்குறை உண்மையாக...

சென்ற ஆண்டின் நகல்களாம்
இவ்வாண்டின் புற்களே போல்,
சும்மா உன் நகல்கள்தாம்
அத்துனை பெண்களும் உண்மையில்.

ஆயினும் சிலபோது சிறுபார்வை
மற்றவர்மேல் விழநேரும்.
அச்சிறு பார்வையும்
சென்ற ஆண்டின் நகல்களாம்
இவ்வாண்டின் புற்களேபோல் – அந்த
அத்துனை பேரும் ஐயமின்றி
உந்தன் நகலாக்கமெ யெனும்
எந்தன் பார்வை உறுதிப்படவே.
     லித்தானிய மூலம்              : ஜஸ்டினாஸ் மார்கின்கேவிசியஸ்
       ஆங்கில மொழிபெயர்ப்பு        : பீட்டர் மெட்பஸ்ட்
ஆங்கில வழி தமிழாக்கம்       : நிலா விழியன்

Thursday, October 10, 2013

அர்த்தங்கள் - இவான்

படம் வடிவமைப்பு : ஜென்னிமா இந்து மதி
புதைந்து போன சொற்களின்
அர்த்தங்களைத் தேடி
புதைந்து கொண்டிருக்கிறேன்
இதோ சிறிது தூரம் சிறிது தூரம்
எனச் சொல்லி ஆழமாய்ப்
புதைந்து கொண்டிருக்கிறேன்
என்னைப் போலவே பலர்.
உயிர்ப்பும் உணர்வும் அற்ற
ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது.
மெதுவாகச் சென்று உற்றுப் பார்க்கிறேன்
திடீரென ஓர் அசைவு
கொண்ட அது மெதுவாய்ப்
புன்னகைத்து கட்டித் தழுவி
நெற்றியில் முத்தமிட்டது.
அது உணர்வோடுதானிருந்தது.
கண்கள் மிளரச் சொன்னது
நாம்தான் அவைகளின் அர்த்தங்கள்.
(நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய கவிதை)

முகமூடியுடன் நான் - கு.பா.

படுக்கையறை
நிலைக் கண்ணாடி
கையில் முகமூடியுடன் நான்
அகோரமாய்
பரிதாபகரமாய்...
என் முகம்.
கண்ணாடி சொல்கிறது;
ஆஹா! எவ்வளவு அழகு.
சிரமப்பட்டு
மறுபடியும் முகமூடிக்குள்
நான்.
(தேடலில் சிக்கிய அமரர் தோழர் கு.பா.வின் கவிதை)

Wednesday, July 24, 2013

அபத்தங்களின் குப்பையாகக் குவிந்து கிடக்கும் மரியான் - மதிகண்ணன்



          தமிழகத்தின் ஒரு கடற்கரையோர கிராமத்தில், தந்தையை கடலுக்குப் பறிகொடுத்துவிட்டு, தாய் சீலியின் ஆப்பக்கடை வருமானத்தில் வளர்ந்து, கடலின் அடியாழத்திற்குச் சென்று மூச்சடக்கிக் காத்திருந்து, வேல்க்கம்பால் குத்தி பெருமீனை வேட்டையாடும் ‘கடல்ராஜா’ என தன்னைத்தானே வரித்துக்கொண்ட கதாநாயக இளைஞன் மரியான். தமிழ்த் திரையுலக வரலாற்றின் அதிகபட்சங்களால் தீர்மானிக்கப்பட்ட வரையறையினை மாற்றாமல் மரியானுக்கு விரட்டி விரட்டி காதல் வலை விரிக்கும் கதாநாயகி பனிமலர். வேண்டா வெறுப்பாய் இருக்கும் மரியானுக்கு ’சாதிக்கணும்னு நெனைக்கிற அத்தனை பேருக்கும் பொம்பள வாட பட்டுக்கிட்டே இருக்கணும்லே’ன்னு போதிக்கிற மனைவியைப் பறிகொடுத்த பனிமலரின் அப்பாவின் ஒற்றை வாக்கியத்தால் மனம்மாறி பனிமலரைக் காதலிக்கத் தொடங்குகிறான். கழட்டிப் போட்ட பெண்ணின் செருப்பைப் பாதத்தால் தடவியே சுகம் காணும் வட்டிக்காரன் பனிமலரைப் பெண்கேட்க, அவனை அடித்துப் போட்டுவிட்டு ‘கடல்ல பொறந்து, கடல்ல வளர்ந்து, கடல்லையே சாக’ நெனச்ச மரியான் ஆப்பிரிக்காவில் கட்டிட சித்தாள் வேலைக்கு முன் பணம் வாங்கி பனிமலரின் கடனை அடைத்துவிட்டு, இரண்டு வருட ஒப்பந்தத்தில் குடிபெயர்கிறான்.
          இரண்டு வருட ஒப்பந்தம் முடிந்து திரும்ப இருக்கும்போது ஆப்பிரிக்கத் தீவிரவாதிகள் கம்பெனியிடம் பணம் பறிப்பதற்காக அந்தக் கம்பெனியில் வேலை செய்யும் மரியான், தமிழ்நாட்டு சாமி, ஒரு ஹிந்திக்காரன் என மூன்று சித்தாள்களைக் கடத்துகிறார்கள். ஈவு இரக்கமின்றி நடந்து கொள்ளும் தீவிரவாதிகள் கோபமாக இருக்கும்போது மரியான் பாடும் தமிழ்பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார்கள். ஹிந்திக்காரன் செத்த பிறகு, கம்பெனிக்காரனிடம் பணம் கேட்டு மரியானைப் பேசச் சொல்ல அவன் ஐஎஸ்டி போட்டு பனிமலருடன் பேசுகிறான். இதைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் கடைசியில் ரிசீவரைப் பிடுங்கி கண்டுபிடிக்கும் கேணைகளான தீவிரவாதிகள். “நானும் தீவிரவாதி… நானும் தீவிரவாதி…” என வடிவேலுபாணி டயலாக் மட்டும்தான் மிச்சம். மீதியெல்லாம் சரியாக வருகிறது. (சிரிப்பு தீவிரவாதிகள்?) ஒரு வழியாத் தப்பிச்சு இருபதுநாள் தண்ணி சாப்பாடு இல்லாத தெம்போட 300 கிலோ மீட்டர் ஓடி ஓடி கடந்து வந்தா… வர்ற வழியில பொட்டக் காட்டுல மூணு சிறுத்தைகள்… மரியானைப் பாத்துட்டு, “ரொம்ப எலும்புந்தோலுமா இருக்காரு இந்த தென்னகத்து புரூஸ்லீ… நமக்கு வேற பல்லு வலி” அப்புடீன்னு திரும்பிப் போயிருது.
          அப்புறம் ஒரு தீவிரவாதி இவரக் கண்டு பிடிச்சு, துப்பாக்கியக் கீழ போட்டுட்டு அடிச்சுக் கொல்ல வந்ததும், மரியான் ஓடித் தப்பிக்கப் பார்த்தால் கடல். அப்புறம் என்ன. நம்ம ‘கடல் ராஜா’ இடுப்பளவு தண்ணியில முங்கி மூச்சுப்பிடிச்சு அந்தத் தீவிரவாதிய அடிச்சு கொண்ணு போட்டுட்டு மயக்கமாயிர்றாரு. இரண்டு மீனவர்கள் காப்பாத்தி, ஆஸ்பத்திரியில சேத்து, இவரு முழிச்சு, தமிழ்நாட்டுக்கு வந்து, பாறையில குந்தியிருக்குற பனிமலர எந்திரிக்கச் சொல்லி கட்டிப் புடிச்சுக்கிறாரு. இதாங்க ‘சாவே இல்லாதவன்’ கதை. ஆனா, படம் பாத்து முடிக்கிறதுக்குள்ள நமக்கெல்லாம் சாவு ‘மிஸ்டு காலா’ வருது. இந்தக் கதைக்கு இடையில கடல்ல சக்கரையும் பாலைவனத்துல சாமியும் சாகுறது, ஊரு மத்தியில அடிவாங்கி அவமானப்பட்ட வட்டிக்காரர், கடன் திரும்பி வந்த பிறகு, ஏன்னு கேட்க மரியான் ஊருல இல்லாதப்பயும் பனிமலர எந்தத் தொந்தரவும் செய்யாம இருக்கிறது, மரியான் திரும்ப வரப்போறான்னு தெரிஞ்சதும் கத்தி முனையில பனிமலர வன்புணர்ச்சி செய்ய முயல்றது, அந்த நேரம் பார்த்து பனிமலரோட அப்பா வந்து ஒரு பார்வ பார்த்ததும் பேசாம திரும்பப் போயிறது. இப்படி ஏகப்பட்ட சங்கதி இருக்கு படத்துல.
          சில தொலைக்காட்சிகள்ல மரியானுக்காக பொதுப்பார்வை, சிறப்புப் பார்வை, சிறப்புக் கண்ணோட்டம், படம் வர்றதுக்கு முன்னால சிறப்பு முன்னோட்டம், படம் வந்தபிறகு சிறப்பு பின்னோட்டம்… அய்யோ… என்னால தாங்க முடியலையே… “நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காதமாதிரி நடிக்கிறது” சின்ன வயசுல பாத்த கார்டூன் படத்துல இரண்டு பேர் கோல்ஃப் விளையாடுவாங்க. பந்து குழிய விட்டு விலகிப் போகும்போது குழிய இழுத்துக்கிட்டு வந்து பந்து உருள்ற வழியில வச்சு ஜெயிக்கிறதா ஒரு காட்சி வரும். அந்தப் படைப்பாற்றலை (Creativity) ரசிக்க முடிந்தது. குழி இழுபடுவதின் அபத்தம் குழியில் பந்து விழுந்தால்தான் வெற்றி என்ற தர்க்கத்தில் (logic) அறிவை அமைதிப்படுத்தி, அது படைப்பாற்றல் ஆகிறது. அறிவிற்கும் தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டு, படைப்பாற்றல் பாட்டில் என்ன விலை? என்ற கேள்வியோடு வழக்கமான கமர்சியல் செம்மறியா(ன்)கக்கூட இல்லாத அபத்தங்களின் (தொகுப்பாக) குப்பையாக மரியான் குவிந்து கிடக்கிறது உருவமற்று.