Monday, November 23, 2015

(தேடாமல் கிடைத்த) கவிதை - ரமேஷ்

ஆழ்ந்து நோக்குகையில்
சுழிவுகள் புலப்படும்
சிலபோது…

நகரும் குழிகள்
பயமுறுத்தும்
உற்று நோக்கலுக்குப்பின்
வாய்கள்
தரையாய் தோன்றும்

உதிர்ந்த இழைகள்
காட்சிப்பிழை

சுழியிலிருந்து தொடரும்
பெரும் வட்டங்கள்
காணாமல் போனது அனைத்தும்

வலிந்து திரும்புகையில்
காலில் அகப்பட்டது
சுழி.

-    (என்றோ எழுதியது)

‘நிக்ரகம்’ - நிகழ்துதலும் - நிகழ்த்துகளமும்...







நன்றி : நாராயணனுக்கும் சம்சுதீன் ஹீராவுக்கும்

Saturday, November 21, 2015

வரவேற்கிறோம்...

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் நடிப்புச் சுதேசிகள் கலைக்குழு நிகழ்த்தும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் ‘நிக்ரகம்’ நாடகம் நடைபெற உள்ளது.
அனைவரையும் வரவேற்கிறோம்...

Monday, November 16, 2015

ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள் - மதிகண்ணன் - சிறுகதை

அஞ்சு வருஷம் இருக்கும். அவ கல்யாணத்தன்னிக்கு அவளைக் கடைசியாப் பாத்தது. கல்யாணத்துக்கு என்ன பரிசு குடுக்கலாம்ன்னு ஒருநாள் பூராம் யோசிச்சு ஒரு முடிவுக்கும் வரமுடியாமப் போச்சு. மறுநாள் கைவினைப் பொருள்கள் விக்கிற கடைக்குள்ள நுழையும்போதே கண்ணுலபட்ட தாஜ்மஹால் மனசைப் பறிக்க, அதையே அவளுக்கு திருமணப் பரிசாக் குடுத்தேன். தாஜ்மஹால் குடுக்கலாமா வேணாமான்னு ரொம்பவெல்லாம் யோசிக்கல. தாஜ்மஹாலுக்குக் கீழ எங்க ட்ராவல்ஸோட விசிட்டிங் கார்ட ஒட்டி வச்சிருந்தது எவ்வளவு நல்லதாப் போச்சு. அதுல இருந்த நம்பரப் பாத்துட்டுத்தான் அவ போன் பண்ணியிருக்கா. நாளைக்கு எங்க வீட்டுக்கு வர்றதாச் சொல்லியிருக்கா. அவ பேசுன நம்பருக்குக் கூப்புட்டுப் பாப்பமுன்னு பாத்தா, எப்பக் கூப்புட்டாலும் அந்தக் கம்பெனிப் பொண்ணு குறுக்க புகுந்து ‘நெட்ஒர்க் பிஸி’ ‘நெட்ஒர்க் பிஸி’ன்னு சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டு இருக்கு. கேக்குற எனக்குத்தான் சலிப்பா இருக்கு. இனிய குரல்தான். இருந்தாலும் எரிச்சலாயிருக்கு. என் ப்ரண்டோட பேசுறதுக்குத் தடையா அந்தக் குரல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருக்கு. தடையின்னாலும் மீறமுடியாத தடை. எதிர்வினையாற்ற எந்த வாய்ப்பும் இல்லாத இப்படியான தொழில்நுட்பச் செயல்திட்டங்களுக்கு எதிரா நாம என்னதான் செஞ்சுற முடியும்.
மத்தியானம் சாப்புட வரும்போது “ஒன் ஃப்ரண்டு பாத்திமா ஃபோன் பண்ணுச்சு. நம்ம ஊரு என்ஜினியரிங் காலேஜில அவுக வீட்டுக்காரருக்கு ஏதோ வேலை இருக்காம். நாளைக்கு ஆத்தாங்கர பள்ளிவாசலுக்குப் போகணுமாம். சாயங்காலமா பேமிலியோட நம்ம வீட்டுக்கு வருதாம்”ன்னு சொல்லிட்டு, இவர்பாட்டுக்கு சவாரி இருக்குன்னு குற்றாலம் போயிட்டாரு. நாளைக்குக் காலையிலதான் வருவாரு. இடையில பேசுனப்பகூட நம்பர் சரிதானான்னு அவருகிட்ட கேட்டேன். இதே நம்பர்ன்னுதான் சொல்றாரு. சரி இருக்கட்டும். அதான் நாளைக்கு வர்றாளேன்னு நினைக்கவும் முடியவில்லை. ஒரே பரபரப்பா இருக்கு.
கோட்டைமேட்டுல ‘விஏஓ’வா இருந்த அப்பாவுக்கு கடலூர் பக்கத்தில மாற்றல் வந்ததுனால, நாங்க குடும்பத்தோட சிக்கந்தர் சாவடிக்கு குடிபோனோம். சிக்கந்தர் சாவடியில இருந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில நான் புதிய மாணவியாக ஒன்பதாம் வகுப்புல காலடி எடுத்துவைச்சப்ப, எனக்குக் கிடைச்ச தோழி பாத்திமா. இன்னொருத்தி ஸ்டெல்லா. இந்த ரெண்டுபேரையும் தவிர சொல்லிக்கிற மாதிரி தோழிகள்ன்னு யாரும் கிடையாது. ஸ்டெல்லா காலேஜ்ல படிச்சுக்கிட்டிருந்தப்ப அவ அப்பா இறந்துட்டார். அம்மா திருச்சபை நடத்துற அனாதை இல்லத்தில சமையல் வேலைக்குப் போயிட்டாங்க. ஸ்டெல்லா விடுதி மாணவியாயிட்டா. அவளோட படிப்புச்செலவ திருச்சபை பார்த்துக்கிருச்சு. படிச்சு முடிச்சதும், கன்னியாஸ்த்திரியா திருச்சபையின் சேவைக்காகன்னு ஸ்டெல்லா தன்னையே ஒப்புக்கொடுத்துக்கிட்டா. பி.எட். முடிச்சு இப்ப பாண்டிச்சேரியில ஒரு கான்வெண்ட்டுல டீச்சரா இருக்கா. போனவருஷம் கோட்டைமேட்டுக்கு ஒரு கல்யாணத்துக்காகப் போனப்ப பாத்தேன். எம்ஃபில் படிச்சுக்கிட்டு இருக்குறதாவும் சீக்கிரமே அதே கான்வெண்டுல ப்ரின்சிபாலா ஆயிருவேன்னும் சொன்னாள். சம்பளம்பத்திக் கேட்டதுக்கு, வழக்கம்போல சத்தமில்லாமச் சிரிச்சிக்கிட்டே, “தேவையில் இருக்கிறவங்களுக்காக உழைக்கிறது வேலை இல்லை, சேவை. என்னோட ஆசிரியப்பணி சேவை”ன்னுசொன்னா.  அவ சொன்னப்ப எனக்கு என்னமோ மாதிரி இருந்துச்சு. ஆனா, அவசொல்லுற விஷயத்துல  அவ உறுதியா இருக்கான்றது நல்லா தெரியுது. நமக்குத்தான் மனசு கெடந்து அடிச்சுக்கிறுது. சரி அவளுக்கு விதிச்சது அவ்வளவுதான்னு நெனச்சுக்கிட்டேன்.
பன்னண்டாப்பு முடிச்சதும் எனக்கு நல்ல வரன் வந்துச்சுன்ற காரணத்துக்காக நானு குடும்பத்தலைவியா மாறி கீழக்கரையில குடிபுகுந்தேன். பாத்திமா பி.இ. முடிச்சுட்டு ஒரு இன்ஜினியர் கையப்பிடிச்சா. அவளோட கல்யாணத்துக்குப் பிறகு நாங்க ரெண்டுபேரும் தொடர்பு எல்லைக்கு வெளியில இருந்தோம். இப்ப தொடர்பு எல்லைக்குள்ள மட்டுமில்ல எங்க வீட்டிற்கும் வரப்போறா. மூன்றாம் வகுப்புல அடியெடுத்து வச்சுருக்குற என் மகள் பவானியப் பள்ளிக்கூடத்திலயிருந்து கூட்டிட்டு வரும்போது பாத்திமா வர்றதாச் சொன்னேன். “பாத்திமா யாரும்மா?”ன்னு பவானி கேட்ட கேள்விக்கு “பிறகு சொல்றேன்”ன்னு பதில் சொல்லி வச்சேன். சாயங்காலத்தில இருந்து இரவு படுக்கைக்குச் போறதுக்குள்ள, இருபது முறையாவது சலிப்பற்ற அந்தப் பெண்ணின் குரல செல்பேசியில கேட்டேன். ராத்திரி இட்டிலியை ஊட்டிக்கிட்டிருக்கும்போது மறக்காம பவானி கேட்டாள் “பாத்திமா யாரும்மா?”
“என்னோட க்ளாஸ்மேட்”
“பக்கத்து சீட்டா…?”
“ம்… சுந்தர்மாமா கல்யாணத்துக்குப் பாண்டிச்சேரி போகும்போது பார்த்தோமே… கான்வெண்ட் மிஸ்… ஸ்டெல்லா ஆன்ட்டி… அவங்க, நானு, பாத்திமா மூனு பேருமே ஒரே டெஸ்க்”
கொஞ்ச நேரம் யோசிச்ச பவானி… “ம்… ப்ரௌன் கலர்ல நீளமா முழுக்கை நைட்டி போட்ருந்தாங்கல்ல அந்த ஆன்ட்டியா?” என்றாள்.
ஸ்டெல்லா போட்டிருந்த கன்னியாஸ்த்திரிகளோட அங்கியைத்தான் பவானி அப்படிக் கேட்டாள்ன்றத புறிஞ்சுக்கிட்டு “ம்… அவங்கதான்…” என்றேன்.
“பாத்திமா ஆன்ட்டியும் அதுமாதிரிதான் ட்ரஸ் போட்டிருப்பாங்களா?”
“அப்புடி இல்லம்மா… அவங்க நன்… அதுனால அப்படி ட்ரஸ் பண்ணியிருந்தாங்க… இவங்க முஸ்லிம்” என்று மகளுக்கு நான் விளக்கம் சொன்னோன்.
“அப்படீன்னா… இவங்க தலைய மூடுற நைட்டி போட்டிருப்பாங்க…” என்ற பவானி கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ”ரெண்டும் ஒன்னுதாம்மா… கலர்தான் வேற…” என்றபடி சிரித்தாள். மகளின் அந்தச் சிரிப்பு என்னை மிகவும் தொந்தரவு செய்தது. கீழக்கரைக்கு நான் கல்யாணமாகி வந்தப்ப இருந்ததவிட இப்ப பர்தா போடும் பெண்களோட எண்ணிக்கை அதிகம். சரியாச் சொன்னா பர்தா போடாத முஸ்லிம் பெண்களை இப்ப வெளியில எங்கயும் பார்க்க முடியுறதில்ல. முந்தியெல்லாம் அப்புடி இல்ல. இன்றைய கீழக்கரையோட நிலைமைதான் நான் படிக்கிற காலத்துல சிக்கந்தர் சாவடியில. இப்படி மனம்போனபடியெல்லாம் யோசிச்சுக்கிட்டே ராத்திரி வேலையெல்லாம் முடிச்சுட்டு படுக்கைக்குப் போனேன். படுக்கையிலயும் பவானி பாத்திமா பத்திக் கேட்டாள்.
“பாத்திமா ஆன்ட்டி வீட்டுல குட்டிப் பிள்ளைங்க இருக்காங்கலாம்மா?”
“தெரியலடி…”
“ஃப்ரண்டுன்னு சொன்ன…”
“ஃப்ரண்டுதான்… ஆனா பாத்து ரொம்ப நாளாச்சு. அவ கல்யாணத்தன்னைக்குப் பாத்தது”
“நாளைக்கு குட்டிப் பிள்ளையக் கூட்டிட்டு வருவாங்களா?”
“கூட்டிட்டு வருவாங்க… இப்ப நீ தூங்கு…”ன்னு சொன்னதுக்கப்பறமும் அவ கேட்ட சின்னச் சின்னக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லித் தூங்க வைச்சேன். பவானி தூங்கினபிறகு அவ கேட்ட கேள்விகளால நான் தூக்கமில்லாதவளா ஆயிட்டேன். என் மனசு பழைய விஷயங்கள அசைபோட ஆரம்பிச்சுச்சு.
சுனாமிக்கு அப்புறம் வந்த பொங்கல் லீவு முடிஞ்சு பள்ளிக்கூடத்துக்குத் திரும்பின மறுநாள் காலையில கிளாசுக்கு ஒரு சுற்றறிக்கை வந்துச்சு. ‘நாளை மாலை 4 மணிக்கு சுனாமி பற்றிய விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி இருப்பதால், நாளை பள்ளி 6 மணிக்குத்தான் முடியும். மாணவிகள் வீட்டில் தகவல் சொல்லிவிட்டு வரவேண்டும்’ன்னு அந்தச் சுற்றறிக்கை வலியுறுத்திச் சொல்லுச்சு. சுனாமி வந்து ஒரு மாசம்கூட ஆகல. அப்பயெல்லாம் எங்க பள்ளிக்கூடத்துக்கு யாராவது வந்து எதையாவது குடுத்துக்கிட்டே இருந்தாங்க. ஏதாவது சொல்லிக்கிட்டே இருந்தாங்கள். ஏதாவது செஞ்சுக்கிட்டே இருந்தாங்க. அப்படி வர்றவங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து பிள்ளைகள சகஜவாழ்க்கைக்குக் கொண்டு வர்றது அவசியம்ன்னு எல்லாப் பள்ளிக்கூடத்துக்கும் உத்தரவு போட்டிருந்ததா சொன்னாங்க. சுனாமியால அப்பாவ அம்மாவ அக்காவ தம்பிய சொந்தக்காரங்கள நண்பர்கள இழந்த பிள்ளைகள் நிறையப்பேரு எங்க பள்ளிக்கூடத்துல இருந்தாங்க. வீடு வாசல மட்டுமில்லாம பள்ளிக்கூடப்பையைப் பறிகொடுத்தவங்களுங்கூட எங்க பள்ளிக்கூடத்துல நிறையப் பேர் இருந்தாங்க. எங்கள் பள்ளிக்கூடப் பிள்ளைகள்லயும்கூட மூனுபேரு சுனாமியினால இறந்துபோயிருந்தாங்க. பாதிக்கப்பட்டவங்களோட சோகம் எங்க எல்லாரையும் சேர்த்துப் பிடிச்சிருந்துச்சுன்னுதான் சொல்லணும். சோகபூதங்கள் பள்ளிக்கூடத்து மாடியில சுத்திலும் நின்னுக்கிட்டு அதுகளோட நிழல எங்க மேல விழவச்சு அப்புடியே எங்களையெல்லாம் இருட்டுல வச்சிருந்தமாதிரி இருந்துச்சு. பள்ளிக்கூடத்து ரூமெல்லாம் இருட்டு. எங்கள் முகமெல்லாம் இருட்டு. யாரும் யாரையும் பாத்து சிரிக்கிறதுன்றது மறந்து போன நாட்களா இருந்துச்சு அந்த நாட்கள். எங்க டீச்சர்ஸும் யாரையும் கண்டிக்காம, எதையும் கண்டுக்காம அமைதியாப்பேசி, பாடங்களையெல்லாம் அப்படியே நகர்த்தி விட்டாங்க.
சுனாமி விழிப்புணர்வுன்னு சொல்லிக்கிட்டு பள்ளிக்கூடத்துக்கு வர்றவுங்க ஏற்கனவே உள்ளூர் சோகத்தோட இருக்குற எங்க மேல வெளியூர் சோகத்தையும் எறக்கி வச்சுட்டு எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா இருங்கன்னு சொல்லிட்டுப் போயிக்கிட்டிருந்தாங்க. அதுலயும் சிலரு அவசர அவசரமா மிஷின் மாதிரி வந்து எங்களை வரிசையாக்கி, ஏந்திய எங்கள் கைகள்ல பிஸ்கட் பாக்கெட்களை வைச்சுட்டு அதே அவசரத்தோட வெளிய போனாங்க. இதன் மூலமா தங்கள் கடமைய நிறைவேத்திட்டதா அவங்க நெனச்சிருப்பாங்க போல. பிண ஊர்வலத்தில ஆவி வீடு திரும்பாம இருக்குறதுக்காக வழிநெடுக கடுகையும் பொரியையும் விதைச்சுக்கிட்டே போவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். எங்க பள்ளிக்கூடத்துக்கும் வீடுகளுக்கும் இடையில நாங்க விதைச்சுட்டுப்போன பிஸ்கட் பாக்கெட்டுகல்லாம் யாருக்கு வழிகாட்டுறதுக்குன்னு தெரியல. வழியெல்லாம் இறைஞ்சு கெடக்குற பிஸ்கட் பாக்கெட்டுகள நாய்கள்கூட சீண்டல. இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்தபிறகும்கூட பிஸ்கட் விநியோகம் நிக்கவேயில்ல. தொடர்ந்து யாராவது வந்து எதையாவது கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. எங்களுக்கு உண்மையிலேயே என்ன தேவைன்றத யாருமே கேட்கல. பேரிடர் நெருக்கடி முடிஞ்சு, வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிக்கிட்டிருக்கிற சூழ்நிலையில பள்ளிக்கூடங்கள்ல பிஸ்கட் பாக்கெட் குடுக்கிறது எந்தவகையான நிவாரணம்ன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்குப் புரியல.
பாதிக்கப்பட்டவங்களுக்கான நிவாரணம்ன்னும் மறுவாழ்வுன்னும் சொல்லிக்கிட்டு சுனாமியைக் காட்டிலும் அதிகமாச் சுருட்டுன சிலரையும் எங்களுக்கு அப்பவே தெரியும். ‘உணர்வுகளின் விளைச்சலை அறிவால அறுவடை’ செய்றதா நினைக்கிற அவங்கக்கிட்ட நாங்க என்ன சொல்ல முடியும். பொய்யா ’நன்றி’ சொல்லி அனுப்பி வச்சோம். மனசார யாருக்கும் நன்றி சொன்னதில்ல. இப்படி இருந்த நேரத்துலதான் ‘சுனாமி விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி’ன்ற அறிவிப்பு. அவங்களும் பிஸ்கட் பாக்கெட் தரலாம். யாரும் பார்க்காம இருக்கும்போது அதையெல்லாம் எறியுறதுக்கு இடம் தேடணும். பள்ளிக்கூடத்துக்குள்ள பிஸ்கட் பாக்கெட்களை போடக்கூடாதுன்னு ஏற்கனவே தடைவிதிச்சிருக்காங்க.
மறுநாள் நாலு மணிக்கு முன்னாலயே எங்க பி.டி.யோட விசில் சத்தம் எங்களயெல்லாம் கிரவுண்டுல நெட்டு நெட்டா நிறுத்தி அப்படியே உட்கார வச்சுது. ஜனவரி மாசம்னாலும்கூட வெயில் சுள்ளுன்னு உரைச்சுச்சு. பொம்மலாட்டக்குழு வந்துட்டாங்க. நாங்க உட்கார்ந்திருக்கிறதப் பாத்துட்டு அவங்களுக்குள்ள ஏதோ பேசிக்கிட்டாங்க. அதுல ஒருத்தர் பி.டி.கிட்டயும் பிறகு எச்.எம்.கிட்டயும் எங்களக் காட்டி ஏதோ சொன்னார். பிறகு பி.டி. ஊதி ஊதி எங்கள நிழல் இருந்த இடத்துக்கு நகத்துனாங்க. இருந்தாலும் சிலர் வெயில்லதான் உக்காந்திருந்தாங்க. வரவேற்புரை, எச்.எம்.மோட தலைமையுரை, அது இதுன்னு அஞ்சு நிமிஷம் வழக்கம்போல சுனாமி கிளிசரின எங்க கண்கள்ல தடவுற வேலையப் பாத்தாங்க.
“மேடை அமைக்க இன்னும் சிறிது நேரம் ஆகும் என்பதால் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு அம்புலி அவர்கள் இப்போது உங்கள் முன்னே சுனாமி பற்றி கருத்துரை வழங்குவார்”ன்னு  எங்கள் தமிழம்மா சொன்னதும் நாங்க ரொம்பவே பயந்து போயிட்டோம். வெளுத்துப்போன சாம்பல் கலர் சட்டையை கருப்பு பேண்டுக்குள்ள ‘இன்’ பண்ணியிருந்த அவர் எங்கள் முன்னால வந்து நின்னார். இவருதான் எங்கள நிழல்ல உட்கார வைக்கிறதுக்காக எச்.எம்.கிட்ட பேசுனவர். பாக்கெட்டுல இருந்த கர்ச்சீப்பை எடுத்து அழுத்தமாக முகத்தத் துடைக்சுக்கிட்டார். கண்களையும் துடைச்சுக்கிட்டார். சோகத்தப் பிழியறதுக்கு தயாராகுற அந்த மனுஷனை காதால் எதிர்கொள்ள நாங்களும் தயாராயிக்கிட்டிருந்தோம்.
“வணக்கம். தலைவர் உள்ளிட்ட ஆசிரியைகளுக்கும், குழந்தைகளுக்கும் வணக்கம். பொம்மலாட்டம் பார்க்கலாம் என வந்த உங்களை காக்க வைப்பதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். பொம்மலாட்டம் எப்படி இருக்கும்? அதைத்தான் பார்க்கப் போறோமே. இப்ப நாம வேற சில விஷயங்களைப் பார்க்கலாம்…”ன்னு ஆரம்பிச்சு அவர் பேசிக்கிட்டிருந்தார். அன்னைக்கி என்ன பேசுனார்ன்னு இன்னைக்கி ஞாபகமில்லைன்னாலும் அவரு பேசத்தொடங்குன கொஞ்ச நேரத்திலயே எங்களக் கவ்விப்பிடிச்சு, தன்னோட கடவாயில ஒதுக்கியிருந்த சோக பூதத்தோட பிடியில இருந்து நாங்க கொஞ்சங் கொஞ்சமா தப்பிச்சு இயல்பான நிலைக்கு வர்றத எங்களால உணர முடிஞ்சுச்சு. நிச்சயமா அவரு சுனாமி பத்தி ஏதும் பேசல.
“இப்ப ஒரு சின்ன விளையாட்டு… வேற ஒன்னும் இல்லை. நான் உங்கள ஏமாத்த முயற்சி பன்றேன். நீங்கள் ஏமாறாம இருக்கணும். இதுதான் விளையாட்டு… ரூல்ஸ விளைடலாமான்றத முடிவு பண்ணதும் சொல்றேன். விளைடலாமுல்ல…”
விளையாட்டுன்னு சொன்னதும் நாங்க கொஞ்சம் உற்சாகமாயிட்டோம்ன்னுதான் சொல்லணும். “விளையாடலாம்…”ன்னோம். நீண்ட நாள் சோகம் எங்கள் வார்த்தைகள்ளல அப்பியிருந்துச்சு.
“எல்லோரும் கலந்துக்கலாம்… எல்லோரும்னா எல்லோரும்தான்… குழந்தைகளிடம் தோற்கத் தைரியமிருக்கும் ஆசிரியைகளும் கலந்து கொள்ளலாம். குழந்தைகள்தான் அவங்கள விளையாடக் கூப்பிடணும்”ன்னு அவர் சொன்னதும் டிசம்பர் 26க்கு முந்தைய நாட்கள்ல இருந்த அதே பழைய உற்சாகக் குரல்ல எங்க டீச்சர்ஸ நாங்க விளையாடக் கூப்பிட்டோம். எங்க சந்தோஷத்தப் பார்த்ததாலயோ இல்லையின்னா வேற வழியில்லாமயோ எங்க எச்.எம்.ஐயும் பி.டி.யையும் தவிர மத்த எல்லாரும் விளையாட்டுல கலந்துக்கிட்டாங்க. விளையாட்டு தொடங்குறதுக்கு முன்னால மேடை போட்டுக்கிட்டிருந்தவங்கள அவர் திரும்பிப் பார்த்தார். அவங்க “15”ன்னாங்க.
“இன்னும் கால்மணி நேத்தில் பொம்மலாட்டம் தொடங்கவிருக்கிறது. அதுவரைக்கும் நாம விளையாடலாம். விளையாட்டின் பெயர் நான் ஆணையிடுகிறேன்…. …. …. …. விளையாட்டு முடிந்ததாக நான் அறிவிக்கின்ற வரைக்கும் விதிகளை கண்டிப்பா பின்பற்றனும்றத மறந்துறாதீங்க”ன்னு சொல்லி விளையாட்டைத் தொடங்கினார். ரூல்ஸக் கேட்கும்போது ரொம்ப ஈஸியாத் தெரிஞ்சுச்சு. விளையாடும்போதுதான் பிரச்சனை என்னன்றதே புரிஞ்சது. அவரு மொதல்ல சொன்ன மாதிரி எங்கள ஏமாத்த முயற்சி பண்ணல. நிச்சயமா ஏமாத்திக்கிட்டிருந்தார். அடிக்கடி நாங்க ரூல்ஸ மீறுனதுனாலயே ‘அவுட்’ ஆனோம். கூட்டம் கூட்டமா ‘அவுட்’ ஆனோம். ஒருதடவை மொத்தமா நிறையப் பேர் ‘அவுட்’டானதும் விளையாட்டை முதல்லயிருந்து தொடங்கினார். எங்க டீச்சர்ஸ் ரொம்ப வேகமா ‘அவுட்’டானாங்க. டீச்சர்ஸ் ‘அவுட்’டாகுற ஒவ்வொரு தடவையும் நாங்க சந்தோஷமா விதவிதமா சத்தம் போட்டோம். விளையாட்ட அவரு நடத்தினவிதம் விளையாடத் தூண்டுறமாதிரி இருந்துச்சு. யாராவது ‘அவுட்’ ஆகுற ஒவ்வொரு தடவையும், அவுங்க அவுட் ஆனதுக்கான காரணமா அவரு சொன்னதெல்லாம் இன்னைக்கும் என் காதுல அப்படியே கேக்குது.
“உணர்ச்சி வசப்படும்போதெல்லாம் தோற்றுப் போக வாய்ப்பிருக்குன்றத மறக்காதீங்க”
“நமக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறதுதான்… தோற்றுப் போறதுக்கு முக்கிய காரணம்”
“பார்க்கிற விஷயம் ரொம்பப் பாதிக்கும் மகளே. நாம்தான் கவனமா இருக்கணும்”
“நம்மள அளவுக்கு அதிகமா புகழ்ந்தா… கவுத்தப் போறாங்கன்னு அர்த்தம்… ஜாக்கிரதை”
இப்படி நிறைய. எங்கள்ல யாராவது ஒருத்தர்கிட்ட அவரு ஏதாவது சொல்லும்போது ரொம்ப இயல்பா ‘மகளே’ன்னு கூப்பிட்டுப் பேசுனது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஏன்னா, அப்படிக் கூப்பிடற யாரையும் நான் இன்னைக்கிவரைக்கும்கூட பாத்ததில்ல.  பாத்திமாவையும் என்னையும் தவிர எல்லோரும் அவுட்டாயிட்டாங்க. நாங்க ரெண்டு பேரு மட்டும்தான் நிக்கிறோம். ஒரே நடுக்கமா இருக்கு. பாத்திமாவ ஆதரவாப் பிடிச்சுக்கிறலாமுன்னு அவ கையத் தொட்டா பயந்து போயி உதறிவிடுறா. அவ எப்புடிப் பயந்துக்கிட்டிருந்தாளோ.
“இந்த விளையாட்டைப் பொறுத்தவரைக்கும் நான் எங்கேயும் யாரையும் ஜெயிக்க விடுறதில்லை. ஏன்னா… உங்கள்ல யாராவது ஜெயிச்சா நான் தோற்றுப் போனதாத்தானே அர்த்தம்”ன்னு சொல்லிட்டு வாட்டர் பாட்டில எடுத்து தண்ணி குடிச்சார்.
முதல்லயே அவுட்டாயிருந்தா எந்தப் பிரச்சனையும் இல்ல. கூட்டத்தோட கூட்டமாப் போயிருக்கும். இப்ப கடைசியா மாட்டிக்கிட்டதால நாங்க ரெண்டு பேரும் எப்புடி அவுட்டாகப் போறோம்ன்றது எல்லாருக்கும் விளாவாரியாத் தெரியப்போகுது. விழுகுறதுல எந்தப் பிரச்சனையுமில்ல. அது மத்தவுங்களுக்குத் தெரிஞ்சுரும்றத நெனைச்சாத்தான் வெட்கமா இருக்கு.
“இருந்தாலும், இங்க நிற்கின்ற இரண்டு குழந்தைகளையும் வெற்றி பெற்றவங்களா அறிவிச்சு, நான் தோற்றதா நீங்க நினைச்சாலும் பரவாயில்லை, விளையாட்டை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்றவர்களுக்காக ஒரு சிறிய பரிசு காத்திருக்கிறது. பரிசைப் பெற இருவரையும் மேடைக்கு முன் அழைக்கிறேன்”ன்னு சொல்லிட்டு திரைபோட்டு மூடியிருந்த பொம்மலாட்ட மேடைக்குள்ள அவரு போயிட்டார்.
கைதட்டல்… கைதட்டல்… கைதட்டல்… ஒட்டு மொத்தப் பள்ளிக்கூடத்தோட உளமார்ந்த கைதட்டல். அது ஜெயிச்ச எங்களுக்கா… இல்லையின்னா தன்னைத்தானே தோத்துப்போனதா அறிவிச்சுக்கிட்டாரே அவருக்கா….
உட்காந்திருக்கிற பிள்ளைங்கள விலக்கிவிட்டு, குனியச்சொல்லி, தாண்டி மேடைக்கு நாங்க முன்னேறிக்கிட்டிருக்கும்போது பாத்திமாவுக்கான ஆலோசனைகள் காத்துல மிதந்து வந்தன.
“பாத்து… பர்தாவ எடுத்துரு”
“எடுக்காத… அத்தா உரிச்சுருவாரு”
“பரவாயில்லை எடுத்துரு” பாத்திமா என்ன செய்யலாம்ன்னு முடிவு பண்றதுக்குள்ள நாங்க மேடைக்கு முன்னால வந்துட்டோம். அம்புலி ரெண்டு பேருட்டயும் பேர் கேட்டார். சொல்லிக்கிட்டோம். ரெண்டு பேரு பேரையும் சொல்லி மறுபடியும் ஒருதடவ நாங்க ஜெயிச்சதுக்காக கைதட்டச் சொன்னார். பிள்ளைங்க இப்பத்தா எங்க ரெண்டு பேருக்காகவும் கை தட்டினாங்க. “பரிசு சிறியது என்றாலும் வெற்றி பெரியது”ன்னு சொல்லி எனக்கு பரிசக் குடுத்தார். அடுத்ததா பாத்திமாவுக்கு பரிசு தரப்போகையில எச்.எம். “பாத்திமா… பர்தாவ வேண்ணா எடுத்துருப்பா”ன்னாங்க. பாத்திமா என்னயப் பாத்தா. நான் ‘எடுத்துரு’ன்றதுக்கு அடையாளமா லேசாச் சிரிச்சுக்கிட்டே தலையாட்டிட்டுனேன். மத்த பிள்ளைங்க இருந்த பக்கம் திரும்பிப் பாத்தா. பர்தாவுக்குள் இருந்த நானூறுக்கும் அதிகமான கண்கள் எல்லாமே பாத்திமாவையே உறுத்துப் பார்ப்பது மாதிரி எனக்குப்பட்டது. மறுபடியும் பாத்திமா எச்.எம்.ஐப் பாத்தா. எச்.எம். “ம்…”ன்னாங்க.  தயக்கத்தோடயும் பயத்தோடயும் அவள் பர்தாவை எடுக்க தயாரானாள். அம்புலி “வேண்டாம் மகளே… இருக்கட்டும்”ன்னு சொல்லி அவளுக்கான பரிச அவகிட்ட குடுத்தார். கூட்டத்துல இருந்த மத்த பிள்ளைங்களப் பாத்து, “யாருடைய கட்டாயத்திற்காகவும் உங்களுக்கு விருப்பமில்லாத எதையுமே செய்யாதீங்க. விருப்பமானதைச் செய்யாமலும் இருக்காதீங்க”ன்னார். நாங்க எங்க இடத்துக்குத் திரும்பினோம்.
சுனாமிபத்தி கருத்துரையாற்றுவார்ன்னு எங்க தமிழம்மா அறிமுகப்படுத்துன அம்புலி சுனாமின்ற வார்த்தையைக்கூட உச்சரிக்கல. ஆனா, அது ஏற்படுத்திய ரணங்களுக்கு மருந்து போட்டிருந்தார். எங்கள மனஅழுத்தத்திலிருந்து வெளிய கொண்டு வந்திருந்தார். அந்த வயசுல புரியாத இந்த விஷயம் கொஞ்ச நாளைக்கப்புறந்தான் எனக்குப் புரிஞ்சது. பொம்மலாட்டம் முடிஞ்சு பிள்ளைகள்லாம் வீட்டுக்குக் கிளம்பிக்கிட்டிருந்தாங்க. ‘ஸ்கூல் பேக்’கை எடுத்துக்கிட்டு நானும் பாத்திமாவும் ஸ்டெல்லாவும் மேடையப் பிரிச்சுக்கிட்டிருந்த இடத்தில இருந்த அம்புலியைப் பாக்கப் போனோம். இப்ப பாத்திமா பர்தா போட்டிருக்கல. என்னைப் பார்த்ததும் சிரித்த அம்புலி உடன் வந்திருந்த பாத்திமாவிடம், “மகளே பாத்திமா… பர்தா எங்கே…?” என்றார். நாங்கள் ஆச்சரியமாக அவரைப் பார்க்க “உன்னோட வர்றது பாத்திமான்னு கண்டுபிடிக்கிறதில எந்தச் சிரமமும் இல்லை மகளே” என்றபடி ஸ்டெல்லாவைப் பார்த்தார். “இவள் ஸ்டெல்லா… நாங்க மூனு பேரும் திக் ஃப்ரண்ட்ஸ்” என்றேன் நான். “நல்ல ப்ரண்ட்ஸ். எப்பயும் இப்படியே நல்ல ஃப்ரண்ட்ஸா இருங்க”ன்னார்.
நான் “சரி”ன்னேன்.
பாத்திமா “சாரி…”ன்னு சொன்னாள்.
அவரு “எதுக்கு?”ன்னு கேட்டார்.
“நான் அப்படி நடந்துக்கிட்டிருக்கக்கூடாது”
“எப்படி?”
“எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு. அதான் உங்களைப் பார்த்து சாரி சொல்லலாம்ன்னு வந்தேன்” என்றாள்.
“மகளே… எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை”
“நாங்க எப்படி இருக்கணும்ன்னு சொல்லுங்க” என்று பாத்திமா கேட்டதும் மென்மையாகச் சிரித்தார்.
“நீங்க நீங்களாவே இருங்க. யாருக்காவும் உங்கள மாத்திக்காதீங்க. கேட்கிறதுக்கு ஈஸியா இருக்கிற இந்த விஷயம்தான் வாழ்க்கையில செயல்படுத்துறதுக்கு ரொம்பக் கஷ்டமானது”ன்னு சொன்னார். அப்புறம் கொஞ்ச நேரம் நாங்க பேசுறதக் கேட்டுக்கிட்டிருந்தார். அவரோட போன் நம்பர் கேட்டதுக்கு விசிட்டிங் கார்டு குடுத்தார்.
படிச்சு முடிக்கிற வரைக்கும் தவழ்ந்துக்கிட்டிருந்த என்னோட வாழ்க்கை அதுக்கப்புறமா நாலுகால் பாய்ச்சல் வேகமெடுத்தது. விசிட்டிங் கார்டு வாங்குன ஞாபகமே பத்து வருஷத்துக்கப்புறம் இப்பத்தான் வருது. கடைக்குப் போட்ட பழைய நோட்டுப்புத்தகத்தோட அது அப்பவே போயிருக்கும். ஆனா அவர் மட்டும் அடிக்கடி “நீங்க நீங்களாவே இருங்க. யாருக்காவும் உங்கள மாத்திக்காதீங்க. கேட்கிறதுக்கு ஈஸியா இருக்கிற இந்த விஷயம்தான் வாழ்க்கையில ரொம்பக் கஷ்டமானது”ன்னு என் மண்டைக்குள்ள இருந்து சொல்லிக்கிட்டே இருந்தார். நிதானமா யோசிச்சுப் பாத்தா ஸ்டெல்லாதான் யாருக்காகவும் அவள மாத்திக்காதவளா, தான் தானேவே இருக்காளா? என்னால அப்படி ஏன் இருக்க முடியல. சுதந்தரமா இருக்கிறதா நம்பிக்கிட்டிருக்கிற என்னோட நெலைமையே இப்படி இருக்கும்போது பாத்திமா… நாளைக்கி நான் எப்படிப்பட்ட பாத்திமாவ சந்திக்கப் போறேன்.

லேசாகத் தலை சுற்றுவதுபோல் இருந்தது. எப்பத் தூங்கினேன் எப்படித் தூங்கினேன்னே தெரியல. தூங்கிட்டேனான்றதும்கூடச் சரியாத் தெரியல… கனவா நனவான்னும் தெரியல… நான் பர்தாவோடயும் பாத்திமா அங்கியோடயும் ஸ்டெல்லா சுடிதாரோடயும்…. இல்ல… இல்ல… நான்தான் அங்கியில… பாத்திமா புடவையில… ஸ்டெல்லா பர்தாவோட… இல்ல… இல்ல… மூன்று பேருமே முக்கால் ஜீன்ஸ், காலரில்லாத டீ சர்ட்டோட கால்மேல கால்போட்டபடி சிரிச்சுப் பேசிக்கிட்டு கடற்கரையோர ஹோட்டல்ல உக்காந்து பெரிய கண்ணாடி ஜக்குல வளைஞ்ச ஸ்ட்ரா போட்டு ஜூஸ் சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். பக்கத்துல வெள்ளை அங்கி போட்ட ஒருத்தர், பச்சை அங்கி போட்ட ஒருத்தர், காவி அங்கி போட்ட ஒருத்தர்ன்னு சொந்த முகமில்லாத மூனுபேர் மிகவும் பணிவா எங்களோட அடுத்த ஆர்டருக்காகக் காத்துக்கிட்டிருக்காங்க…
நன்றி : அக்டோபர் கணையாழி
அக்டோபர் கணையாழியில் வெளியான சிறுகதைகளில் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Friday, November 6, 2015

ஆக்கவோ... நீக்கவோ... - மதிகண்ணன் - சிறுகதை

இலைகள் ஆளாய்ப் பறந்து திரிந்து, பின் சருகாகித் தனிமைப்பட்ட காலம். காலைச் சூரியன் உச்சத்தில் நின்று, பின் இற்று வீழ்ந்த நேரம். மூவண்ணம் பூசப்பட்ட பரம்பரைச் சுதேச முடி திருத்தகத்திலிருந்து அந்தப் பொதுமனிதன் “ஐயோ… வேண்டாம் ஆளை விடு” என்றபடி வெளியில் ஓடி வந்தான். அவனது முகத்தில் இடப்புறம் சவரம் செய்வதற்காகப் பூசப்பட்ட சோப்பு நுரை வழிந்து கொண்டிருந்தது. வலக் கன்னம் மழிக்கப்பட்டிருந்தது. மழிக்கப்பட்ட கன்னத்தில் சம இடைவெளியில் படுக்கை வசமாக மூன்று கீறல்கள் தெரிந்தன. கீறல்களில் ஆங்காங்கே செம்புள்ளிகளாய் இரத்தத் துளிகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. கன்னக் காயத்தில் எரிச்சலை ஆற்ற முடியாதபடி கை பட்ட இடங்களிலெல்லாம் எரிச்சலின் வீரியம் அதிகமானது. அந்தப் பொதுமனிதன் கன்னத்திலிருந்து கைகளை விலக்கி வைத்துக் கொண்டான். வெக்கையின் கொடூரத்தால் தலைக்குள் வியர்ந்து கன்னத்தில் வழிந்த வியர்வைத் துளி கீறலைத் தொட நின்ற நிலையிலேயே அவன் அனலில் விழுந்த அப்பளமாய் சுருண்டு புரண்டான். பதட்டமாக கைகள் இரண்டையும் விரல்கள் உதிர்ந்து விழும்பட உதறிக் கொண்டான். அப்படி உதறும்போது எரிச்சலின் தீவிரம் கட்டுக்குள் இருப்பதாக உணர்ந்தான். தொடர்ந்து பல்வேறு வேகங்களில் கைகளை உதறிக்கொண்டே முதல் முறையாக தான் நின்று கொண்டிருக்கும் இடத்தில் அக்கம் பக்கம் நோட்டம் விட்டான் அந்தப் பொதுமனிதன்.
சாலையின் ஓரத்தில் பூட்டப்பட்ட சிற்றங்காடி ஒன்றின் வாசலில் அவன் நின்று கொண்டிருந்தான். அந்தக் கடையின் பூட்டப்பட்ட இரும்புக் கதவின் அலைஅலையான வளைவுகளில் இது மிகவும் புரட்சிகரமானது என்ற குறிப்புடன் டூத் பிரஸ் ஒன்றின் படம் வரையப்பட்டிருந்தது. அவனுக்கு அந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் ஏனோ குமட்டிக் கொண்டு வந்தது. குமட்டல் வாந்தியாகி விடக்கூடாது என்ற பதைபதைப்பில் தலையை அண்ணாந்தான். கொட்டும் மலையில் சின்ன சிம்மக் குரலோன் நகைக்கடைக்காக புரட்சிக் குடை பிடித்திருந்தது கண்களில் தைத்தது. அடுத்த வினாடி அடக்க நினைத்த வாந்தி வந்துவிட்டது. அடைக்கப்பட்ட புரட்சிகரக் கடையின் வாசலில் அமர்ந்து வாந்தி எடுத்துவிட்டுத் தலையை லேசாக நிமிர்த்தி சலையை நோட்டமிட்டான்.
சாலையில் பலரும் தங்களின் தேவைகளுக்கேற்ப இருபுறமும் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் முகத்தில் வலியும் வேதனையும் சிறுமகிழ்ச்சியும் பெருமிதமும் திருப்தியும் அதிருப்தியும் கோபமும் துவேசமும் குறுநகையும் நிதானமும் கபடமும் கம்பீரமும் கலவையாக அப்பிக் கிடந்தன. தங்களின் தகுதிக்கேற்ற வாகனங்களாலும் கால்நடையாகவும் சாலையை அவர்கள் இயக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் தனக்குள்ளான முணுமுணுப்பும் அருகிலிருப்பவர்களுடனான கமுக்க உரையாடலும் சுற்றுப் புறத்தைப்பற்றி சற்றும் கவலைப்படாத உரத்த பேச்சும் சொல்லித் தீர வேண்டிய விஷயங்களைச் சொல்ல முடியாமல் தவித்தாலும் சொல்ல முயல்வதால் உண்டான குளறலும் தெரியாத விஷயங்களை நன்றாகத் தெரிந்த ஒன்றைப் பேசுவதுபோல் பேசுவதால் உண்டான உளறலும் மிகத் தெளிவாகத் தெரிந்தவற்றையும்கூட தெளிவாகப் பேசமுடியாதபடிக்கு சூழல் தந்த குமைச்சலால் வெளிப்படும் வார்த்தைகளுமாய் சாலை பேரிரைச்சலாய் இருந்தது. வாழ்க்கை துரத்தும் வேகத்திற்கேற்ப தங்களின் பயண வேகத்தையும் தூரத்தையும் தீர்மானித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்னுடைய எரிச்சல் புரிவதற்கு வாய்ப்பில்லை என்பதை அவன் உணர்ந்தான். இப்படி ஓடிக் கொண்டிருக்கையில் அக்கம் பக்கத்தில் வேதனையுடனும் மனஉளைச்சலுடனும் தவித்திருந்த யாரையும் தானும் ஒருபோதும் கண்டு கொண்டதில்லை என்ற குற்ற உணர்ச்சி அவர்களின் மேல் பலிசொல்வதற்கான வாய்ப்பினை அவனுக்கு வழங்கவில்லை.
சாலையின் எதிர்சாரியில் சிலர் தனியாகவும் சிற்சிலராகவும் நின்றபடி எம்பி எம்பி முஷ்டி தூக்கி முழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வலதுகாலை முன்டுக் கற்கள் மீதும் இடதுகாலை ஒற்றையான அல்லது அடுக்கப்பட்ட செங்கல்களின் மீதும் வைத்து நின்று கொண்டிருந்தார்கள். அப்படி நிற்பதே மிகவும் சிரமம் என்றாலும் அவர்கள் தங்களின் சமநிலை காத்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் நிற்கும் நிலையில் இருந்து சமநிலை தகர்ந்தால் விழவேண்டிய இடமாக நெடுநாட்களாகச் சுத்தம் செய்யப்டாத பெருஞ்சாக்கடைக் குழியாக இருந்தது. அப்படி விழுபவர்களை வாரி அணைத்துத் தங்களவராக்கிக் கொள்ளும் ஆர்வத்துடன் சில சாக்கடைப் பெருச்சாலிகள் பெருங்குழியருகே அமைதிகாத்து, காத்து நிற்றுகொண்டிருக்கின்றன. அவர்கள் ஒவ்வொரு அணியும் வெவ்வேறு விஷயங்கள் குறித்து முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்குள் ஏதோ ஒற்றுமை இருப்பதுபோல் அவனுக்குத் தெரிந்தது. அவர்களில் சிலர் அருகில் முழங்குபவர்களைக் கைகாட்டி முழங்குவதாகவும் தெரிந்தது. அவர்களின் முழக்கத்தின் தீவிரம் முகங்களில் தெரிந்தது. நம்பகத் தன்மை முழக்கத்தின் தொனியில் தெரிந்தது. தாங்கள் நம்புகின்ற விஷயங்களில் அவர்களுக்கத் துளியும் ஐயமில்லை என்பதை அவர்களின் செயல்கள் நிரூபித்தன. ஆனால் அவர்களின் குரலில் முன்வைக்கும் எந்த ஒரு விஷயமும் அவனை வந்தடைய முடியாதபடிக்கு சாலையின் பேரிரைச்சலும் கன்ன எரிச்சலும் தடுத்தன. அவர்களும் பல்வேறு விதமான முழங்கங்களை ஒரே நேரத்தில் முன்வைப்பதால் எதுவும் பிடிபடவில்லை. காதில் விழுந்தவரை அவர்கள் முன்வைக்கும் விஷயங்களும்கூட இவனுக்கு மிகவும் அன்னியமானதாக அவன் உணர்ந்தான். பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற கவிஞரான இன்குலாப்பின் பெயரை அவர்கள் அடிக்கடி தங்கள் முழக்கதினிடையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். “பாவம் அவருக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்னவோ?” என்று அவன் நினைத்துக் கொண்டான்.
அக்கம் பக்கம் வேடிக்கை பார்த்து ஒவ்வொன்றைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தாலும் கன்னத்தின் எரிச்சல் சற்றும் குறையவில்லை. இப்போது அவனை நோக்கி சிலர் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவர்கள் அவனை மிகவும் பரிதாபத்துடன் பார்த்தார்கள். “அடடா இப்படி ஆக்கிட்டானுகளே” “இவனுகள இந்த ஊருலயே இல்லாம ஆக்கினாத்தான் சரியா வரும்” சிலர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒருவன் அவன் கன்னத்தின் காயத்திற்கு காற்று வேண்டுமென வாயால் ஊதிக் கொண்டிருந்தான். காற்று பட்டவுடன் கீறல் விழுந்த இடத்தில் கொஞ்சம் எரிச்சல் குறைந்ததுபோல் தெரிந்தது. ஆனால் ஊதுகிறவனின் வாய் பிண நாற்றம் அடித்தது.  ஊதுகின்றபோது இவன் மூச்சு விடுவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டான். அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். “நீங்க அங்க போயிருக்கக் கூடாது” “உங்க பேர் என்ன?” என்ற அவர்களின் கேள்விக்கு “சுதேசி” என்றான். உடனே அவர்கள் மிகமிக மகிழ்ச்சியாக “அட நம்ம ஆளு” என்றார்கள். ஊதுபவனும் குஷியாகி வேகமாக ஊதினான். இவனுக்கு மூச்ச வாங்கியது. இவன் கன்னத்தில் இருந்த சோப்பு நுரை ஏற்கனவே காற்றில் கரைந்திருந்தாலும் சோப்பின் பிசுபிசுப்பு மட்டும் அப்படியே இருந்தது. அவர்கள் சுதேசியின் கன்னத்தில் இருந்த பிசுபிசுப்பை துடைக்க முயல்கையில் இவனுக்கு சுரீர் என ஏதோ குத்தியது. “ஆ…” என்றான். “ஒன்னுமில்லை. ஒன்னுமில்லை. சும்மா துடைச்சு சுத்தம் பண்ணுனோம்.” “எப்படி இருந்த சுதேசிய இப்படி  ஆக்கிட்டாங்களே” என்று ஆதங்கப்பட்டவர்கள். “பரம்பரை சுதேச முடிதிருத்தகம் சரியா வராது, பாரம்பரிய சுதேச முடிதிருத்தகம்தான் சரியா வரும்ன்றத ஏன்தான் பொது மக்கள் இன்னும் புரிஞ்சுக்க மாட்டேன்றாங்களோ?” “கொஞ்சம் இப்படி நம்ம கடைக்கு வாங்க. எல்லாத்தையும் சரிபண்ணிரலாம். அவங்களையும் ஒரு கை பாத்திரலாம். தரமில்லாத தயாரிப்புகளாலதான் இப்படி கீறல் விழுது. நம்மகிட்ட கீறல்ன்ற பேச்சுக்கே இடமில்லை. வாங்க… வாங்க…” என்றபடி கைத்தாங்கலாக சுதேசியை அழைத்துச் செல்கின்றார்கள். கன்னத்தில் மட்டுமே கீறல்பட்டிருந்த சுதேசியும் அவர்கள் கைபட்டதும், கைகால் விளங்காதவனைப்போல் அவர்களின் ஆதரவுடன் தடுமாறித் தடுமாறி உடன் சென்றான். ‘பாரம்பரிய சுதேச முடிதிருத்தகம்’ என்ற ஒற்றை வண்ணம் பூசப்பட்ட அந்தக் கடைக்குள் நுழைந்தாகி விட்டது. அந்த முடி திருத்தகத்தில் பல்வேறு விதமான பங்காளித் தகறாறுகளுக்கு மத்தியில் தன்னை நிர்வாகியாக நிலைநிறத்திக் கொண்ட அரைகுறையாய் முடிதிருத்திக் கொண்ட அந்த நாயகர் இருந்தார். கடைக்குப் பெயர்தான் பராம்பரிய சுதேச முடிதிருத்தகம். நாயகர் வெளிநாட்டு நாவிதர்களைப்போல் தொழிற்கவசஉடை  (apron) போன்ற உடை அணிந்திருந்தார். அந்த உடையும்கூட வெளிநாட்டு நிபுணரால் வடிவமைக்கப்பட்டதாக இருக்கலாம்.
உள்ளே நுழைந்தவர்களை கோபக்குறிப்பு காட்டும் புன்னகையுடன் நாயகர் தலையசைத்து வரவேற்றார். வந்தவர்கள் சற்றே விலகி நிற்க ‘சுதேசி’ சுழல் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். அவருக்கு முன்னே இருந்த கண்ணாடியில் அவர் நேர்முகம், புறமுதுகு என வரிசை காட்டி அமர்ந்திருந்தது தெரிந்தது. கண்ணாடிக்கு மேலே ‘இங்கே ஆக்கு’ ‘இங்கே நீக்கு’ என்று ஒளிர்ந்தது. ‘MAKE HERE’ ‘CLEAN HERE’ என்ற ஆங்கிலப் பதங்களும் இடையிடைய அதே இடத்தில் ஒளிர்ந்து மறைந்தன. சுழல் நாற்காலியில் அமர்த்தப்பட்டதும், சுதேசி பெரிய முரட்டுப் போர்வை ஒன்றால் நாற்காலியுடன் சேர்த்துக் கட்டப்பட்டான். போர்வை மிகவும் பாரம்பரியமானது போலும். படிந்திருந்த அழுக்கே அரை அங்குலம் இருக்கலாம். சுதேசிக்கு உள்ளுக்குள் நமநமக்கத் தொடங்கியது. எதிர்பாராத நேரத்தில் பின்னால் நின்றிருந்த நாயகர் சுதேசியின் இரண்டு கன்னங்களிலும் உள்ளங்கையால் ‘சப் சப்’ என நான்கைந்து முறை தட்டினார். கீறல் விழுந்த கன்னத்தில் அடி சுரீர் என விழுந்ததும் சுதேசி நாற்காலிக்குள்ளேயே குதித்தான். தட்டும் கைகளைத் தட்டிவிட முடியாதபடி கைகள் போர்வைக்குள் சிக்கிக் கொண்டன. வலியால் “ஆ… …” எனக் கத்தினான். சுதேசியின் அலறல் கேட்ட மறுவினாடி எங்கிருந்தோ அவனது மடியில் குதித்தது ஒரு கொழுத்த பூனை. சுதேசி தன்னுடைய அலறலை மீண்டுமொரு முறை எதிரொலித்தான். இதுவரை அந்தப் பூனை எங்கிருந்தது எனத்தெரியவில்லை. அது மென்மையாகத்தான் கத்தியது. பூனை கத்தியதும் நாயகர் பதட்டமானார். பூனையைத் தூக்கி மெதுவாகத் தடவிக் கொடுத்தார். அதனைத் தன் முகத்தருகில் தூக்கிப் பிடித்தார். பூனை ‘மியாவ்… மிய்யா..வ்… மி…ய்ய்யா…வ்…’ என உடம்பை அஷ்ட்ட கோணலாக்கி மெதுவாகத் கத்தியது. அதன் முனகலுக்குச் செவிசாய்த்துத் தலையாட்டிய நாயகர் தன்னுடைய வேலைகளை அப்படியே போட்டுவிட்டு, சுதேசியின் காதில் இருந்த ஒற்றைக்காதுக் கடுக்கனைக் கழற்றினார். கடுக்கனை கழற்றிக் கொண்டு பூனையைத் தூக்கிக் கொண்டு நாயகர் வெளியேறினார்.
சுதேசி சுற்றி நின்றவர்களிடம் “என்னாச்சு?” என்றார்.
அவர்கள் “ம்… பூனை அழுவுது… அதுக்கு ஆயி வருது. அதான் அவரு அதக் கூட்டிக்கிட்டு ‘ஆஸ்திரேலியா கார்டன்’ போயிருக்காரு. அங்க ஒரு குழி தோண்டி அதுல அது ஆயி போகும்”
“என்னோட கடுக்கனை எதுக்குக் கழற்றிட்டுப் போறாரு?”
“அது ஆயி போக காசு வேணுமில்ல”
“உங்க பூனை ஆயி போக நான் ஏன் என் கடுக்கனைக் கொடுக்கணும்?”
“யோவ்… அது என்ன சாதாரனப் பூனையா. புணுகுப் பூனை. அது ஆயி போனாத்தான் அதத் தடவி உன்னோட முகத்தை மணக்க வைக்க முடியும். அப்ப நீதானே பணம் குடுக்கணும்?”
“நல்லா மணத்துச்சு போங்க… இப்ப என்னமோ நானு நாறிப்போயிக் கிடக்கிறு மாதிரியில்ல பேசுறீங்க?”
அவர்கள் எந்தப் பதிலும் சொல்வதாக இல்லை. சுதேசிக்கு ஒன்றும் புரிந்தபாடில்லை. உள்ளுக்குள் நமநமத்தது. உடம்பெல்லாம் அரிப்பெடுப்பது போல் இருந்தது. போர்வையின் உள்ளுக்குள் சொறிந்து கொண்டான். இதற்குள் நாயகர் பூனையின் ஆய் போகும் வைபவத்தை முடித்து வெற்றிகரமாகத் திரும்பியிருந்தார். இறக்கி விடப்பட்ட பூனை மகிழ்ச்சியாக கடை முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தது. நாயகர் என்னுடைய முகத்தைப் பார்த்தபடி தன்னுடைய வேலையைத் தொடங்கினார். கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த பாரம்பரியமிக்க தோல் பட்டையில் மழிப்பதற்கான நவீன கத்தியை ‘சர் சர்’ என தீட்டத் தொடங்கினார். சுதேசிக்குத் தெரிந்து பிளேடு மாட்டும் ஹோல்டரை தீட்டுற முதல் ஆள் இவராத்தான் இருப்பார். ஒன்றும் சொல்லும்படியாக இல்லை. நடப்பது நடக்கட்டும் என அமைதியாக இருந்தான். கைகள் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் நாயகரின் கண்கள் என்னவோ சுதேசியின் முகத்திலேயே நிலை குத்தி நின்றன. தீட்டல் முடிந்த ஹோல்டரை அருகில் இருந்தவரிடம் கொடுத்ததும் அவர் அதை எச்சில் துப்பிப் பதமாக்கி அதில் வெளிநாட்டு பிளேடு ஒன்றை மாட்டி வேலைக்கு ஆயத்தமாக்கினார்.

சுதேசியின் முகத்தில் சோப்பு நுரை தடவப்பட்டது. ஏற்கனவே கீறல் விழுந்த கன்னத்தில் சோப்பு நுரை பட்டதும் எரிச்சல் தாங்கமுடியாததானது. சுதேசி மீண்டும் கத்தத் தொடங்கினான். இவனுடைய கத்தல் சத்தம் கேட்டதும், இலகுவான தள்ளுகதவைத் தள்ளிக் கொண்டு வெளியில் இருந்து சில நாய்கள் ஓடி வந்து சுழல் நாற்காலியைச் சுற்று நின்று கொண்டன. வந்த நாய்கள் நாயகரையும் உடனிருப்பவர்களையும் நன்றியுடன் பார்த்து மகிழ்ச்சியாக வாலாட்டிக் கொண்டிருந்தன. அனைத்தும் வெளிநாட்டு நாய்கள். முதலில் தான் கத்திய போது பூனைக்கு ஆயி வந்தது. இப்ப வெளிநாட்டு நாய்கள் வந்திருக்கு, என்ன நடக்கப்போகுதோ என்ற பதட்டத்தால் ஏற்பட்ட நடுக்கத்துடன் சுதேசி “என்ன இது?” என்றான். நாயகரின் வழக்கமான புன்னகைக்கிடையே இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கென்ற நியமிக்கப்பட்ட உடனிருப்பவர்களில் ஒருவர் “இதெல்லாம் இங்கதான் திரியுது. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. ஆட்களை அனாவசியமாக் கடிக்காது. இடத்தைச் சுத்தமா வைச்சுக்கிற்றதுக்கு ரொம்ப பயன்படும். நம்ம கடையில சவரம் பண்ணும்போது ஒன்னு ரெண்டு கறித்துண்டு கீழ விழுமுல்ல. அதத் தூக்கிக்கிட்டு அதுகபாட்டுக்கப் போயிரும்.” என்று நிதானமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, பின்புறமிருந்த நாயகர் கத்தியுடன் சுதேசியை நெருங்கிக் கொண்டிருப்பது கண்ணாடியில் தெளிவாகத் தெரிந்தது. ஒற்றை நிறத் துணியால் நாற்காலியில் கட்டப்பட்டிருந்த ‘சுதேசி’ திமிறலுடன் கத்தத் தொடங்கியிருந்தான். நாற்காலி இவனது திமிறலில் சுழலத் தொடங்கியது. நாற்காலியைச் சுழலவிடாமல் சுற்றியிருப்பவர்கள் பிடித்துக் கொள்ள நாயகர் தன்னுடைய வேலையைத் தொடங்க ஆயத்தமானார். நாய்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றன. இத்தனையும் தனக்கு நடக்கும் இந்தச் சூழலில்தான் சுதேசியின் காதுகளில் அடைக்கப்பட்ட கதவுகளையும் சாலைப் பேரிரைச்சலையும் மீறி எதிர்சாரியில் செங்கலில் இடக்கால் பதித்து முண்டுக்கல்லில் நின்று முழக்கமிட்டவர்களின் வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவர்களின் முழக்கங்கள் அவனுடைய கன்னக் கதுப்பையும் பாதுகாப்பதற்காகத்தான் என்பதை இப்போதுதான் சுதேசிக்குப் புரிந்தது. சகாக்களின் துணையுடன் நாயகர் தன்னுடைய வேலையைத் தொடங்கியிருந்தார். எதிர்சாரி முழக்கங்களால் உத்வேகம் பெற்ற சுதேசியும், இவர்களின் அடக்கு முறைக்கு எதிரான ‘எதிர்சாரி முழக்கங்கள்’ இந்த நாய்களிடமிருந்து தன்னைக் காக்கும் என்ற நம்பிக்கையுடன்’ தானும் வீறலுடன் திமிறிக் கொண்டிருக்கின்றார்.
(நன்றி : உயிர் எழுத்து - ஆகஸ்ட் 2015)