Monday, January 30, 2012

அழுத்தத்திற்கு ஆட்படல் – மதிகண்ணன்

தேவைகளின் விரட்டலில்
சாசனம் தந்து அடிமையான நான்கில்

பயில்வான் சுழியில்
முதலாவதாய்ச் செத்துப்போன
நான்காவது

அடுத்தடுத்த சுழிகளின் நீரில்
அகப்பட்டு அமிழ்ந்துபோன
இரண்டாவது

சுழிகள் தீண்டா உயரத்தில்
நின்றபோதும் மாண்டுபோன
மூன்றாவது

ஒன்றின்மேலொன்றாய் அடுக்கிய பிணங்கள்மேல்
ஆவிகளின் அழுத்தச் சுமைதாங்கி
முதலாவது

(2012 ஜனவரி 30)

Sunday, January 29, 2012

காதலர்கள் - சி.மதிவாணன்


இந்தக் கதையை துண்டு துண்டாகத்தான் சொல்ல முடியும். நீள் கோட்டில் சொல்வது சாத்தியமில்லை. ஒரு வேளை லாஜிக் இடிக்கலாம். என்ன செய்வது? எனக்குச் சாத்தியம் இல்லை. நானே உடைந்து துண்டுகளாக இருக்கும்போது, எத்தனையைத்தான் ஒட்ட வைப்பது?
நான் முதலில் பார்த்தது அவளை இல்லை. அவளின் கால் ஒன்றை. வெள்ளையான கால். கொலுசு ஒன்று தழுவிக்கொண்டிருந்தது.
நான் அந்த ரைஸ் மில்லில் தங்கிக் கொண்டு படித்து வந்தேன். காலையில் 10 அல்லது 11 வரை அறவை இருக்கும். அப்புறம் மாலையில்தான். நான் கல்லூரி செல்லும்போது விஸ்வம் வந்துவிடுவார். மற்ற நேரமெல்லாம் ரைஸ் மில் மாமரத்தடியில், கிணற்றடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருப்பேன். அல்லது கீரை பாத்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருப்பேன். அல்லது ஆடாது அசையாது மாமரக்கிளையில் படுத்து தூங்கிவிடுவேன்.
அதற்கு அந்தப்பக்கம் ஒரு பொட்டல் காடு. கொஞ்சநாளில் அங்கு ஓர் வீடு வந்தது. யாரோ பெங்களூரில் இருந்து வருகிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள். சுவற்றை எழுப்பிவிட்டு, என்ன ஆனதோ, கீற்றுக்கூறை போட்டுவிட்டார்கள். அப்புறம் ஓர் குடும்பம் குடிவந்தது. அவர்கள் கிருத்துவர்கள். அதிலும் கிருத்துவ உடையார் சாதி.
அந்த வீட்டின் பெண்தான் அன்று வாசல் வரண்டாவில் படுத்திருந்திருக்கிறாள். சற்று நீண்டிருந்த அவள் கால்தான் என் கவனத்தை இழுத்தது. யார் இந்த காலின் சொந்தக்காரி என்று காத்திருந்து பார்த்தேன். முட்டை வடிவ நீள முகம். ஆண்கள் போல இடதுபக்கம் வாகெடுத்து சீவியிருந்தாள். நீள முடி. அவள் எழுந்த போது தெரிந்த முகம் இப்போதும் என் மனதில் இருக்கிறது. சோம்பல் முறித்த அழகு என் கண்ணில் இருக்கிறது. அவள் என்னைக் கவனிக்கவில்லை. அதற்கப்புறம் அவளைக் கவனிப்பதைத் தவிர எனக்கு வேறு வேலை இல்லை என்றானது.
அப்புறம் ஓர் நாள் அவளது அப்பா என்னை அழைத்தார். ஏதோ ஓர் உதவி கேட்டார். உதவி என்ன என்பது இப்போது முக்கியமில்லை. கதவிடுக்கில் தெரிந்த அவள் கண்தான் முக்கியம். 2 இஞ்சுக்குக் கதவு திறந்திருக்க அவளின் ஒற்றைக் கண் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது, என்னோடு பேசிக்கொண்டிருந்த அப்பாவுக்கு அது தெரியவில்லை. அவர் கேட்ட உதவியை செய்வதாக ஒப்புக்கொண்டேன். இன்னொரு முறை அவளின் வீட்டில் அமர்ந்து அந்தக் கண்ணைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமல்லவா?
இப்படியாக எத்தனை நாள் ஓடியது என்று எனக்குத் தெரியாது. சில மாதங்கள்? வருடங்கள்? ஆனால், நாங்கள் சைகையில் பேசிக்கொண்டது நினைவிருக்கிறது. பாடப்புத்தகத்தைப் படிப்பதாக அவள் நடித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தபோது மனதில் தைத்த கண் நினைவில் இருக்கிறது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவள் கல்லூரிக்கு வந்துவிட்டாள் என்பது நினைவில் இருக்கிறது.
அவளும் நானும் ஏறக்குறைய ஒரே நேரம்தான் கல்லூரிக்குப் புறப்பட வேண்டும். அவள் பெண்கள் கல்லூரி. என்னுடையதோ ஆண்-பெண் கல்லூரி. அவள் சைக்கிள் பின்தான் நான் செல்வேன். அவள் பெடலை மிதிக்க மிதிக்க இடுப்பின் கீழே சற்று இறங்கிய அவளின் ஒற்றைச் சடை அசைந்தாடுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.
ஆனால், அவள் இந்த இரகசியத்தை எப்படிக் கண்டுபிடித்தாள் என்று தெரியவில்லை. ஒரு நாள் சட்டென்று திரும்பியவள் என்னைப் பார்த்துவிட்டு சடையை எடுத்து முன்பக்கம் போட்டுக்கொண்டாள். நான் அதற்கென்று ஓர் கவிதை எழுதினேன் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.
மறுநாளிலிருந்து இரட்டை சடைதான். அதனையும் மடித்து தூக்கிக்கட்டிக்கொண்டிருந்தாள். நான் அவள் கண்ணைப் பார்த்தபோது ஓர் நக்கல் சிரிப்பிருந்தது. யார் சொன்னார்கள், ஒரு மனதைப் புரிந்துகொள்ள  வார்த்தைகள் வேண்டுமென்று?
இப்படி எத்தனை நாள் போனதென்று தெரியாது. ஏன் தெரியவேண்டும்? வாழ்வதுதான், மகிழ்ந்து வாழ்வதுதான் முக்கியமில்லையா?
அப்புறம் ஒரு நாள் அதிர்ச்சி. என் நண்பி வழியாக வந்தது. நித்யா கேட்டாள், ’ஒனக்கு மரியா மீது லவ்வா? அவ ஒத்துகிட்டாளா?’
நான் பதில்சொல்லவில்லை. இவளுக்கு எப்படித் தெரியும்?
‘தெரியும்’ என்றாள் நித்தியா. ‘நான் வேணும்னா கேட்டு சொல்லட்டுமா’ என்றாள் பரிவோடு.
’கேள்.. ஆனா… சொல்ல வேணாம். எனக்குத் தெரியும்’ என்றேன்.
நித்யா நக்கலாகவும் மகிழ்வாகவும் சிரித்தாள். நித்யாவும் மரியாவும் ஒரே கல்லூரியில் படிப்பவர்கள். . நித்யா எம்ஏ. அவள் பிஏ.
இரண்டு நாள் எனக்குத் தூக்கம் வரவில்லை. பதில் தெரியும்தான். ஆனால், ஒரு வேளை வேறு மாதிரியாக இருந்தால்?
ஒரு வழியாக அந்த ஞாயிறு வந்து சேர்ந்தது. நித்யா வீட்டுக்குச் சென்று அவளைப் பார்த்தேன். அவள் எனக்குப் பிடித்த இட்லியுடன் கார சட்டினி கொடுத்தாள். அவள் அம்மா வாங்கிக் கொடுத்த புடவையைக் காட்டினாள். பொருளாதாரப் பாடம் ஒன்றில் சந்தேகம் கேட்டாள்.
நான் வெறுப்பில் கொதித்துப்போன சமயத்தில் சொன்னாள், ‘நான் மரியாவிடம் கேட்டேன். அவள் பதிலே சொல்லவில்லை. ரொம்ப நேரம்’
’கண்டேன் சீதையை’ என்பது பற்றி தமிழாசிரியர் கொடுத்த விரிவுரை நினைவுக்கு வந்தது. நித்யா விடுவதாக இல்லை. ‘அவள் உன்னைக் காதலிக்க.. ஊகும் அப்படி சொல்லக்கூடாது… நீ இல்லையென்றாள் அவள் செத்துப்போவாளாம்‘
நான் எப்படி உணர்ந்தேன் என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நித்யா முகம் தெரியவில்லை. அவள் பேசியது கேட்கவில்லை. நான் எப்படி திரும்பினேன் என்பது நினைவில் இல்லை.
அப்புறம் அடுத்த முறை நித்யாவைப் பார்த்தபோது அவள் கேட்டாள், ‘நான் ஏன் மரியாவிடம் கேட்கிறேன் என்று சொன்னேன் தெரியுமா?‘
நான் அவள் முகத்தையை பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் என்ன நினைத்தாள் என்று எனக்கு எப்படித் தெரியும்?
அவள் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள். அப்புறம் வெடுக்கென்று சொன்னாள், ‘அவர் நினைப்பது போல நான் அவரைக் காதலிக்கவில்லை என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தேன்.’
நான் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.
நித்யா தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு விலகினாள் என்பது எனக்குத் தெரிந்தது.
அப்புறம் பலமுறை எனக்கும் மரியாவிற்கும் இடையில் தூது சென்றிருக்கிறாள்… நானும் மரியாவும் கடற்கரையில் சந்தித்தபோது குடும்பம் போல காட்சியளிப்பதற்காக எங்களுடன் வந்திருக்கிறாள். நானும் மரியாவும் பிரிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அவள் தூது சென்றிருக்கிறாள்.
நானும் மரியாவும் பிரிந்தது எங்களின் பிரச்சனையால் இல்லை. அவர்கள் கிருத்துவர்கள். அதுவும் ராயல் பேமிலி… ராயல் பேமிலி என்பது மரியாவின் அப்பாவுடைய வார்த்தைகள். நான் ராயல் பேமிலி இல்லை. சரியாகச் சொன்னால்… இல்லை… என் அம்மாவின் வார்த்தையில் சொன்னால்… கம்னாட்டி வளர்த்த கழிசடை..
ஒருநாள் நித்யாவைக் கேட்டேன். ‘உனக்கு இது… இப்படி தூது போவது கஷ்டமாக இல்லியா?’
‘கஷ்டம்தான், ஆனால் உன்னோட சந்தோஷம்தான் எனக்கு வேணும்’
இதனை என்னவென்று சொல்வது? இள வயதின் முட்டாள் தனமா?
எனக்கு நித்யாவைப் பிடிக்கும். பள்ளியில் எட்டாவது படிக்கும்போதுதான் நான் அவளை முதலில் பார்த்தேன். அப்போதுதான் எங்கள் பள்ளியில் சேர்ந்திருந்தாள்.
ஆனால், அவள் எனக்கு ஒரு வகையில் மாமா மகள். எனது அப்பாவிற்கும் அவள் அப்பாவிற்கும் சண்டை வந்து ஒருவருக்கொருவர் பல வருடங்களாகப் பேசிக்கொள்வதில்லை என்பதால் நான் அவளை இதற்கு முன்பு பார்த்ததில்லை.
எங்கள் பள்ளியின் சிங்கமான அறிவியல் ஆசிரியர் துரைசாமி சேரில் ஆடிக்கொண்டிருந்து விழுந்தபோது கேட்ட ஒற்றை சிரிப்பு அவளுடையதுதான். யாருக்கும் பயப்படமாட்டாள்.
பள்ளி காலை 7 மணிக்குத் துவங்கும் என்ற அறிவிப்பு வந்தபோது என்னோடு சேர்ந்துகொண்டு ஸ்டிரைக்கை அமைப்பாக்கியது அவள்தான். நானும் அவளும் 5 நிமிட நடையில் பள்ளிக்கு வந்துவிடுவோம், ஆனால், 8 கி.மீட்டருக்கு ஒரே உயர்நிலைப்பள்ளி, அந்தக் காலத்தில்.. கடைகோடி மீனவ கிராமத்தில் வாழும் சந்திரனும் வழியானும் எப்படி பள்ளிக்கு வருவார்கள்?..
நாங்கள் பூம்புகாருக்கு கல்விச் சுற்றுலா சென்றபோது எனக்குப் பிடித்த இட்லியும் மிளகாய் பொடியும் கொண்டுவந்தது அவள்தான். அந்த மிளகாய் பொடி சுவையை நான் இதுநாள் வரை மீண்டும் சுவைக்கவில்லை. சுவைத்தது மிளகாய் பொடியா? நித்யாவின் அன்பா? தெரியவில்லை.
ஆனால், என்னால், நித்யாவை, நாங்கள் கல்லூரி சென்ற காலத்திலும் காதலிக்க முடியவில்லை. அருகே இருக்கும் பொருள் கண்ணுக்குத் தெரியாது என்பதாலா? அல்லது மரியாவின் மீது கொண்ட காதலாலா? அல்லது அதற்கு அப்பால் ஏதும் இரகசியம் இருக்கிறதா?
கல்லூரி முடிந்து, நான் மரியாவைப் பிரிந்து… இல்லை சரியாகச் சொல்லப்போனால், மரியாவை அவள் அப்பா பாண்டிச்சேரிக்குக் கடத்திக்கொண்டு சென்ற பின்னர் நான் ஊரைவிட்டு வெளியேறிவிட்டேன்.
அந்தக் கடத்தலைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். அவர்கள் பாண்டிக்குக் குடிபெயர்கிறார்கள் என்று தெரிய வந்தது. காரணம் நான்தான் என்றும் தெரிய வந்தது.
அவருக்கு விஸ்வம் வழியாக செய்தி அனுப்பினேன். நான் மரியாவோடு பேச வேண்டும். இல்லையென்றால் அமெரிக்கா சென்றாலும் தப்பிக்க முடியாது.
அவர் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்தார். சென்றேன். வராண்டாவில் அமர்ந்தேன். நான் அவள் காலைக் கண்ட அதே வராண்டா..
அவளை அவள் அம்மா தள்ளிக்கொண்டு வந்தார். அவள் குனிந்தபடியிருந்தாள்…
‘சொல்லுடி’ என்றார் அம்மா.
அவள் நிமிந்து என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை.. அதே பார்வை. ‘நலமா?’ என்று கேட்கும் பார்வை. நெடுநாள் பார்க்காத என்னைப் பார்க்கும் பார்வை.
‘எனக்கு… ஒங்கள கல்யாணம் செஞ்சிக்க முடியாது’ என்றாள். திரும்பி நடந்தாள்.
நான் எழுந்து நடந்தேன். என் கால்களின் கீழே உலகம் இல்லை. முதன் முதலாக பாரதி வீதி சென்று பீர் குடித்தேன். பீரில் போதையில்லை. தூக்கம் வரவில்லை. வாழ்க்கையில் பொருள் இல்லை. வேலை வெட்டியற்ற நான் அவளைக் கடத்துவதிலும் பொருள் இல்லை.
மரியாவும் அவள் குடும்பத்தினரும் பாண்டிக்குச் சென்ற அன்று காலை 5.30 மணிக்கு ரைஸ் மில் வாசலில் நின்றிருந்தேன். லட்சுமி பஸ் ஜன்னலில் இருந்து நீண்ட அவள் கை என்னை நோக்கி  அசைந்தது…
அப்புறம் நான் ஊரை விட்டு வெளியேறிவிட்டேன்.
அந்த மாமரம், மாதாகோவில், நான் அவளின் பின் பயணித்த பாரதி வீதி எதுவும் வேண்டாம் என்று வெளியேறிவிட்டேன்.
ஒரு நாள் நான் ஊரிலிருந்து சென்னை திரும்பியபோது அப்போதைய திருவள்ளுவர் பேருந்தில் மரியா அமர்ந்திருந்தாள். பக்கத்தில் ஓர் குழந்தை. அது மூளை வளர்ச்சிக் குறைவான குழந்தை என்பது தெரிந்தது. நான் ஓரக்கண்ணில் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவளும்தான்..
அப்போதெல்லாம் பேருந்தில் புகைக்கத் தடையில்லை. நான் நிறைய புகைத்தேன். என் மரியாவுக்கு நிகழ்ந்தது எண்ணி புகைத்தேன்…. என் காதலை எண்ணி புகைத்தேன்.. எங்கள் ஊரில் எப்போதும் மதுவிலக்கில்லை. பாரதி வீதி பாரில் உட்கார்ந்து நான் குடித்த மதுவின் மணம் மறைக்க வேண்டும் என்றும் புகைத்தேன்.
பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோழ என் அருகில் வந்தாள். அவள், பழைய நாட்களில் செய்தது போல, என் முகத்தை கையால் பிடித்து நிமிர்த்தினாள்.
‘இவ்வளவு சிகெரெட் ஆகாது.. எதுக்கு சிகெரெட் பிடிக்கிறிங்க..?
நான் உறைந்திருந்தேன்.
’நா ஒங்களுக்கு செஞ்ச பாவம்தான் இந்த குழந்தை’
எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
‘அப்புடி யோசிக்கக் கூடாது, மரியா... உன் மகனுக்கு என்ன பிரச்சனைன்னு பார்க்கணும். உன் வீட்டுகாரர் எங்கே?’
அவள் ஏளனமாகச் சிரித்தாள். அந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாதோ?
சட்டென்று, ’போறேன்’ என்றவள் இறங்கிவிட்டாள்.
அப்புறம் நித்யாவைத் தூது அனுப்பியபோதுதான் தெரிந்தது, அவள் கணவன் மரியாவின்… இல்லை.. எங்கள் காதல் தெரிந்து விலக்கிவைத்துவிட்டானாம். ராயல் அப்பா செத்துப்போனாராம்.. மகனோடு அவள் வாழ்க்கை நரகத்தில். ஆனால், மரியா தெளிவாக சொல்லியிருக்கிறாள்.. ‘எம்புள்ளைக்காகத்தான் வாழ்க்கையே..’ அதுமட்டுமல்லாமல், எந்த காலத்திலும் முறிந்த காதல் துளிர்க்காது. ஆனால், அப்படியே இருக்கும் என்றும் சொன்னாளாம்.
அது எப்படி அப்படியே இருக்கும்?
வெகுநாள் கழித்து, நான் திருச்சியில் நித்யாவைச் சந்தித்தேன். அவள் கணவன் தனியார் கம்பெனி அதிகாரி. திருச்சிக்கு மாற்றலாகி வந்திருந்தனர். என் அக்காவைப் பிடித்து என் முகவரி வாங்கியிருந்தாள். என்ன ஆச்சரியேமோ அவள் என் வீட்டுக்கு வருவதற்கு முன்பு மத்திய பேருந்து நிலைய நகரப்பேருந்து நிறுத்தத்தில் அவளைச் சந்தித்தேன். என் வீட்டுக்கு வரச்சொன்னேன். வந்தாள். என் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தேன், என்னுடைய பெஸ்ட் பிரெண்ட் என்று.
என் அக்கா பின்னர் ஓர் நாள் சொன்னார்.. ’ஒனக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னவுடனே அவ மொகம் கருத்துடிச்சி’
ஒரு நாள் என் வீட்டுக்கு காலை 11 மணிக்கு நித்யா வந்தாள். என் மனைவி வேலைக்குப் போயிருப்பாள் என்று தெரிந்துதான் வந்திருக்க வேண்டும். நான் அந்த நாட்களில் வேலையிழந்து வீட்டில் அடைகாத்துக்கொண்டிருந்தேன்.
நித்யா பட்டுப் புடவையில் இருந்தாள். ‘ஒன்னோட கல்யாணப்புடவையா?’ என்று கேட்டேன்.
சிரித்தபடி ‘இல்லை.. ஆனால்.. ஆமாம்’ என்றாள்.
பெண்கள் குழப்புகிறார்கள் என்று சொன்னால் பிரச்சனையாகும். நான் குழம்பினேன் என்று சொல்வதுதான் பாதுகாப்பு.
அந்த கணத்தில் நான் விழித்த பேய் முழியைக் கண்ட நித்யா, ‘எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் நடந்த கல்யாணத்தின் போது எடுத்ததில்லை. ஆனா, உன்ன இன்னிக்குப் பார்க்க வந்ததுக்காக எடுத்தது’ என்றாள்.
’என்ன பார்க்க வர்ரதுக்கு எதுக்கு பட்டுப் புடவை?’
‘இன்னிக்கு என் மனசுக்குப் பிடிச்சமாதிரி கல்யாணம்.. ஒனக்கும் எனக்கும். ஆனா, எல்லாம எங்கன்டிஷன்படிதான்’, என்றாள்.
என்னை நெருங்கி வந்தாள். நான் பின்வாங்கி சுவற்றில் சாய என் மார்பில் சாய்ந்தாள். அழுதாள்.
அதற்கு மேல் பொறுக்க முடியாத நான் அவளை அணைத்துக்கொண்டேன். குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டேன். பசித்துக்கிடந்தவள் போல என்னைச் சுவைத்தாள். மயங்கி அவள் மார்பில் சரிந்தேன்.
ஆனால், என்னால் முடியவில்லை. அவளின் ஏக்கம் புரிந்தது. அன்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்? கொஞ்சம்தான். ஆனால், என்ன விதியோ வாழ்க்கை எங்கெங்கோ தறிகெட்டு ஓடிவிட்டது…
அவளை விலக்கினேன்.
சதையில் இரத்தம் வடிய தோலைப் பிரிப்பது போல அவளை விலக்கிப் பிரித்தேன். அவள் பார்வையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.
திரும்பிக்கொண்டேன். ‘என்னை நேசிக்கும் உன்னை நானும் நேசிக்கிறேன்.. அது எனக்குப் புரியமலேயே போய்விட்டது.. ஆனா, அன்னிக்கு மரியா குறுக்கே இருந்தாள்… இன்னிக்கு ரெண்டு பேர்.. உன்  வீட்டுக்காரனும்.. என் வீட்டுக்காரியும்’
நித்யாவிடமிருந்து சப்தம் இல்லை.
‘குற்ற உணர்ச்சியோடு வாழ்க்கையைத் தொடர முடியுமா நித்யா?’ என்றவாறு திரும்பினேன்.
அவள் விலகி நடந்தாள்.
வாசலில் நின்றாள். 12 மணி வெய்யிலின் பின்புலத்தில், அவள் கருத்த முகம் மேலும் கருப்பாகி அவளின் முக பாவம் தெரியவில்லை.
’போறேன், இனி இப்படி வரமாட்டேன்’ என்றாள்.
’நித்யா’ எனது குரலின் உணர்வு எனக்குப் புரியவில்லை. வெட்டுப்பட்ட புழுவின் குரல் என்று சொல்லலாம்
‘மனசாட்சிப்படி வாழ முடியாதுன்னா, பிரிஞ்சே போகணும். செத்தே போயிட்டோம்ன்னு பிரிஞ்சே போயிடணும். பார்க்க கூடாது. கஷ்டம்தான், ஆனால் உன்னோட சந்தோஷம்தான் எனக்கு வேணும்’
என் பதிலை எதிர்பார்க்காமல் அவள் கேட் கதவைத் திறந்துகொண்டு விலகி நடந்தாள்.
அப்புறம் நான் அவளைப் பார்க்கவில்லை.
சில ஆண்டுகள் கழித்து, அக்காவைப் பார்க்க ஊருக்கு சென்ற போது அக்கா சொன்னார், ‘ஒனக்குத் தெரியுமா.. நித்யா செத்துட்டா?’
இந்த வயதிலா? கல் போல நான் சுற்றித் திரிய அந்த… இல்லை… என்… ம். இல்லை.. நித்யா ஏன் செத்துப்போனாள்?
உள்ளுக்குள் இடி விழுந்ததைக் காட்டாமல், ‘ஏன்?’ என்றேன். என்னால் என் அறிவார்ந்த ஆண் என்ற திமிறை விட்டுக்கொடுக்க முடியவில்லை.
’தெரியல. செத்துட்டா’ என்று அக்கா என் முகத்தைப் பார்த்தார். ‘நீ அவ வீட்டுக்குப் போனா தெரிஞ்சிடும்’
நான் அவள் வீட்டுக்குப் போகவில்லை. எப்படி போவேன்? அவள் கைரேகையை நான்  பார்த்த வீட்டுக்கு? மரியாவின் காதலை அவள் உறுதி செய்த வீட்டுக்கு? ‘ஏன் கேட்கிறேன்னு சொன்னேன் தெரியுமா?’ என்று அவள் கேட்ட வீட்டுக்கு..?
’சரி.. நந்தா என்ன ஆனான்?’ என்று பேச்சை மாற்றினேன். என் முகத்தை மறைத்துக்கொண்டேன்.  அக்காவுக்கு நான் தப்பிக்கிறேன் என்று தெரிந்ததால் விட்டுவிட்டார். அக்கா… என்னை.. எங்களை அறிந்த அக்கா…
நான் எங்கள் ஊரைவிட்டு விலகி நடந்தேன். உண்மையிலேதான். பேருந்து பயணமில்லை, நடந்தே நண்டலாற்றைக் கடந்து பொரையாற்றில் பஸ் பிடித்தேன். நடையாக நடத்து யோசித்தேன். அசைபோட்டேன்.. யோசித்தேன்.
என்ன யோசித்தேன் என்று உங்களுக்கு சொல்வது  சாத்தியமில்லை. எனக்குத் தெளிவிருந்தால்தானே உங்களிடம் சொல்ல முடியும்?
ஆனால், எனக்கு ஒன்று புரிந்தது. ஆணும் பெண்ணும்… ஆணும் பெண்ணுமாக உறவு கொள்வது சாத்தியமில்லை.
அதற்குக் காரணம் என்னவென்று இன்று வரை எனக்குப் புரியவில்லை.

Tuesday, January 24, 2012

கொல கொலயா முந்திரிக்கா... கருத்தரங்க/படைப்பரங்க நிழற்படப் பதிவு

2012 ஜனவரி 22 ஆம் நாள் நடைபெற்ற கொல கொலயா முந்திரிக்கா கருத்தரங்கம் மற்றும் படைப்பரங்கில் எடுக்கப்பெற்ற நிழற்படங்களில் சில இங்கு...
கருத்தரங்கிற்கு தலைமை வகித்த தோழர் சுப்புராயுலு...

வரவேற்புரையாற்றிய தோழர் ஜெயகணேஷ்
கொல கொலயா முந்திரிக்கா என்ற தலைப்பில் தோழர் மதிகண்ணன்

படைப்பரங்கை ஒருங்கிணைத்த தோழர் கேகே

கவிதை வாசித்த தோழர் ராஜேந்திரன்

கவிதை வாசித்த தோழர் செல்வா

கவிதை வாசித்த தோழர் சுப்புராயுலு

நிழற்படக் காலைஞன் அஸ்ரஃப் - தன் படைப்புகளுடன்

கலந்துரையாடலில்...
 
தோழர் பழனிக்குமார்

தோழர் தங்கராஜ்

தோழர்அஸ்ரஃப் 

நன்றிகூறிய தோழர் மணிகண்டன் 




Monday, January 23, 2012

அதே பழைய கதி - மதிவாணன்

          சுகந்திக்குத் தூக்கம் வரவில்லை. இது ஏதோ இன்றைய பிரச்சனையில்லை. வெகுநாளாக இதுதான் நிலை. எதிரே அவள் கனவனின் படம் இருந்தது. மின்விளக்கொன்று அகல் விளக்குப் போல நடித்துக்கொண்டிருந்தது. சற்றே பழைய படத்தை ஸ்டுடியோவில் கொடுத்து மெருகேற்றியிருந்தனர்.
கணவனை நினைக்கும் போது அவளுக்கு இரண்டு அம்சங்கள்தான் நினைவுக்கு வரும். ஒன்று அடி.. மற்றது அரவணைப்பு. இரண்டுக்கும் அவள் பல ஆண்டுகளாகப் பழகியிருந்தாள். இவளுக்கு 36 வயது துவங்கி சில நாட்களின் அவன் இல்லாமல் போய்விட்டான்.
சிறுநீரகத்தில் கல் என்றார்கள். மதுரையில் பணக்கார மருத்துவமனை சென்று பார்த்தார்கள் பணம் கரைந்தது. கல் கரையவில்லை. அப்புறம் கிட்னி பழுது என்றார்கள். அப்புறம் அவன் எழுந்திருக்கவில்லை. வங்கியின் சேமிப்பு கரைந்திருந்தது. அவர்களின் மின்சார பொருள் கடை கடனில் திணறிக்கொண்டிருந்தது.
சுகந்திக்குக் கல்யாணம் ஆகும் போது 16 வயது. பெரியாறு பாசனம் உள்ள திண்டுக்கல் மாவட்ட கிராமம். அப்பா போலீஸ் வேலையில் இருந்தார். அம்மா இல்லத்தரசி. 11வது படிக்கப்போகும் நிலையில் திருமண பேச்செடுத்தார்கள். அவளின் சாதியில் 16ல் கல்யாணம் செய்துவிடுவார்கள்.
அப்போதுதான் சுகந்தி தான் ஒரு பெண் என்பதை உணர்ந்திருந்தாள். பள்ளிக்குப் போகும்போது பையன்கள் அடிக்கும் கிண்டலை இரசிக்க ஆரம்பித்திருந்தாள்.
அவளுக்கு அவள் உடல் பற்றி ஒரே கவலை. அம்மாவிடம் சொன்னாள். அம்மாவுக்குப் புரியவில்லை. ‘அங்கே’ கட்டி வந்திருக்கிறது என்று அம்மாவிடம் சொன்னதும் அம்மா கலங்கிவிட்டாள். லேடி டாக்டரிடம் போனார்கள். அந்த டாக்டர் பரிசோதனை செய்யும்போது சுகந்திக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இப்படியெல்லாமா செய்வார்கள்?
அப்புறம் லேடி டாக்டர் வகுப்பெடுத்தாள். ‘உன் மாரு வளருதுல்ல’. சுகந்தி குனிந்து பார்த்துக்கொண்டு வெட்கத்துடன் ‘ம்’ என்றாள்.
அதுபோல ‘அது‘வும் வளர்கிறது என்று ஆரம்பித்து அந்த டாக்டர் ஓர் படத்தைக் காட்டி நிறை விளக்கி, ‘அது கட்டியில்ல, வளர்ச்சி’ என்று சொன்னார். சுகந்திக்குப் புரிந்தது போலவும் இருந்தது. வெட்கமாகவும் இருந்தது.
‘இந்த வளர்ச்சி முழுமையாகனும். அதுக்கு சில வருஷம் ஆகும், அதுக்கப்புறம் கல்யாணம் பன்னிக்க, இன்னும் நிறைய புரியும்’ என்று சொல்லி அந்த லேடி டாக்டர் அனுப்பிவைத்தார்.
அம்மாவுக்குப் ஒன்றும் புரியவில்லை. ஸ்கேன் வேணாமா என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அம்மாவுக்கும் ஒன்றும் புரியவில்லை என்பது அவளின் அடுத்த நடவடிக்கையில் புரிந்தது. ஒன்றும் பிரச்சனையில்லை என்றதும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இவள் முனகிப் பார்த்தாள், முக்கிப் பார்த்தாள். ஒன்றும் நடக்கவில்லை. காலேஜ் படிக்க  வேண்டும் என்பது அவளின் ஆசை.
அவளுக்கு மேட்டுத்தெரு கார்த்திக்கைப் பிடிக்கும்.   இவளை விட 5வயது பெரியவன் கார்த்திக். காய்ந்து கிடக்கும் கண்மாயில் நடக்கும் கிரிக்கெட்டில் கார்த்திக்தான் தண்டுல்கர். அவனின் தீவிர இரசிகை சுகந்தி. இவள் பத்தாவது படிக்கும்போது அவன் காலேஜ் சென்றுகொண்டிருந்தான். அவன் வேலை கிடைத்து சென்னை சென்று வந்தபின்னர் ஒரு நாள் பேருந்து நிறுத்தத்தில் பார்த்தாள். பளிச்சென்றிருந்தான். ஷூ போட்டிருந்தான். அவனோடு கல்யாணம் ஆகி சென்னைக்குப் போய்விட்டால் எப்படியிருக்கும் என்று யோசித்தாள். உடம்பு குப்பென்று ஆனது போல மகிழ்ச்சி பரவியது. ஆனால், அவளுக்குத் தெரியும் அது நடக்காது. அவன் வேறு சாதி, அதுவும் கீழ்ச்சாதி.
அவளைப் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையை அவள் பார்த்தபோது கார்த்திக்கின் அடையாளத்தைத் தேடிப்பார்த்தாள். இல்லை. வேட்டி சட்டையில் முறுக்கிய மீசையுடன் அவன் இருந்தான். நிறம் பரவாயில்லை. ஆனால், சரியான கிராமத்து ஆள் என்று தோன்றியது.
இவள் என்ன நினைத்தாள் என்று யாரும் கேட்கவில்லை. மாப்பிள்ளைக்குப் பிடித்துப்போய்விட்டதாம். ஆறடிக்கு நெருங்கும் உயரத்தில் திமு திமுவென்ற வளர்ந்துகொண்டிருக்கும் பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது.
கல்யாணம் ஆகி சில மாதங்கள் நன்றாக இருந்தது. முதல் கர்ப்பம் கலைந்துப்போனதால் மாமனார் வீட்டில் பிரச்சனை ஆனது. அப்புறம் டாக்டரின் ஆலோசனையையெல்லாம் புறந்தள்ளிவிட்டு முதல் மகள் அடுத்த வருஷமே பிறந்தாள்.
திவ்யா என்ற பெயருடைய அந்தப் பெண்தான் இன்று அவளின் பெரும்பிரச்சனை. இவளைப்போலவே மகளும் திமுதிமு என்று வளர்ந்து கொண்டிருந்தாள். அவள் பள்ளிக்குச் செல்லும்போது பின்னே செல்ல பையன்கள் கூட்டமொன்று இருந்தது.
இவளின் காலத்தில் அப்படியில்லை. பையன்கள் அரசபுரசலாகப் பார்ப்பதோடு சரி. சுகந்தியும் எல்லாவற்றையும் கண்டுகொண்டு எதுவும் தெரியாதவள் போல இருப்பாள்.
திவ்யா சரியில்லை என்று சுகந்திக்குத் தோன்றியது. பையன்களுடன் பேசுகிறாள் என்று அவளுக்குத் தெரியவந்தது. என்ன சொல்லியும் கேட்காமல் மீனாட்சியம்மன் கோவில் போகிறேன் என்று போனாள். அவளின் தோழிகளுடன்தான் என்று சொன்னாள். ஆனால், விசாரித்தபோது அது பொய் என்று தெரியவந்தது.
இன்று அவள் தூங்கும்போது அவளின் கைப் பையைச் சோதனை செய்தாள். அந்த புதிய மொபைல் கிடைத்தது. இன்றைய தூக்கமின்மைக்கு அதுதான் காரணம். மொபைலில் இதயம் படம் இருந்தது. பட்டனைத் தொட்டால் ஸ்கிரீன் உயிர்பெற சிவப்பாக சுழன்றது. அழைத்த நம்பர்களைப் பார்த்தாள். எல்லாம் ஒரே எண்ணுக்கு அல்லது எண்ணிலிருந்து என்று தெரிந்தது. நெடுநேரம் யோசித்த பின்னர், ‘நாயை கையும் களவுமாகப் பிடிக்கலாம்’ என்று முடிவு செய்து மகளின் பையில் மொபைலை வைத்துவிட்டு வந்து படுத்தாள். தலைக்கு மேல் மின்விசிறி விறுக் விறுக்கென்று ஒடிக்கொண்டிருந்தது.
தூங்கிக்கொண்டிருந்தவளின் அருகே கார்த்திக் வந்து படுத்தான். அவளைப் புரட்டி நெஞ்சில் சாய்த்துக்கொண்டான். பெரிய அகண்ட மார்பு. அந்த சாதி ஆண்களுக்கே உள்ள மார்பு. ‘ஏண்டா என்ன நீ காதலிச்சியா?’ என்று கேட்டபடி அவன் நெஞ்சில்  சரிந்தாள்…
என்ன ஆயிற்று? எழுந்து பார்த்தவளுக்கு தான் கட்டிலில் இருந்து விழுந்துவிட்டது தெரிந்தது.
என்ன இது? என் கனவில் ஏன் கார்த்திக் வந்தான்? என்ன வயது எனக்கு? என் மகளே காதலிக்கும் வயதில் ஏன் இந்த அடங்காத உணர்வு? மறுபடியும் தூக்கம் வரவில்லை. பேரூராட்சியின் 5 மணி சங்கும் பக்கத்து வீட்டு நாயும் சேர்ந்து ஊளையிடும் வரையில் அவள் தூங்கவில்லை.
காலையில் 7 மணிக்கே தண்ணீர் வந்துவிட்டது. திவ்யாவுக்கு ஏதோ நல்ல குணம் போல, தங்கைக்கு டிபன் சென்து அனுப்பிவைத்துக்கொண்டிருந்தாள். இவள் பானையை எடுத்துக்கொண்டு ஓடி, இரண்டு நாளுக்குத் தேவையான நீரை நிரப்பிவைத்துவிட்டு குளித்துவிட்டு கடைக்கு ஒடினாள். சாப்பிட நேரமில்லை.
இன்றைக்கு ரொம்ப முக்கியமான வேலை. அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும். அவள் கணவன் இறுதிப் படுக்கையில் இருந்தபோது வாங்கிய கடன். ஒன்றறை லட்சம் ரூபாய். கடையின் பேரில் வாங்கியது. கொடுத்தது ஒரு வகையில் பார்த்தால் அவள் கணவனின் ஒன்றுவிட்ட அண்ணன்தான். ஆனால், அவர் ரொம்பவும் மோசமாகப் பேசிவிட்டார். வேறு வழியில்லை சீட்டுப் பணம், பஞ்சாயத்துகளுக்கு மோட்டார் சப்ளை செய்த செக்கில் கிடைத்த பணம் எல்லாவற்றையும் பணமாக்கி வைத்திருந்தாள். விக்கிரமனிடம் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மதுரைக்குப் புறப்பட்டாள். அவனை இவள் விக்கி என்றுதான் கூப்பிடுவாள்.
அவள் கணவன் கடையை நடத்திக்கொண்டிருந்தபோது கடையில் சிறுவனாக வேலைக்குச் சேர்ந்தவன். எலெக்டிரிக் வேலையில் கில்லாடி. குழாய் வேலைகளும் அத்துபடி. இவள் கணவனுக்குச் மதியச் சாப்பாடு கொண்டு செல்வாள். சாப்பிட்டுவிட்டு கணவன் பின்புர அறையில் சற்று நேரம் தூங்கும்போது அவன்தான் கடையைக் கவனித்துக்கொள்வான். அவனிடம்தான் சுகந்தி வியாபாரத்தைப் படித்தது. அப்படி பழகியிருக்கவில்லை என்றான் இன்று நடுத்தெருவிற்கு வந்திருப்போம் என்று நினைத்துக்கொண்டாள்.
மேற்கு மாசிவீதியில் உள்ள அந்த எலெக்டிரிக் கடையில் படியேறியபோது, கல்லாவின் அவர் இல்லை என்பது தெரிந்தது. கடை மானேஜர் ‘வாங்க வாங்க’, என்றார்.
‘மாமா இல்லியா?’
’அவர் வெளியே போயிருக்கிறார். நீ வந்தவுடன் போன் போடச் சொன்னார்’ என்றார் அந்தப் பெரியவர். இரண்டு குடும்பங்களுக்கும் வெகு நாள் பழக்கமானவர். கடை வாசலில் நின்று மொபைலில் மாமாவைக் கூப்பிட்டாள். அவர் திருப்பரங்குன்றத்திற்கு அப்பால் கூத்தியார்குண்டில் இருந்த பண்ணை வீட்டில் இருக்கிறாராம். கடையில் சொல்லி காரை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்.
இவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடையில் காசைகொடுத்துவிடலாம். ஆனால், கொடுத்தோம் என்று ஆகுமா என்று யோசித்தாள். ‘சரி மாமா.. வரேன்..’ என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள். சற்று நேரம் யோசித்தவள் விறுவிறுவென்று நடந்தாள் பெரியாருக்கு.
நகரப் பேருந்தில் திரும்பிக்கொண்டிருக்கும்போது மாமா அழைத்தார். ’என்ன நீ புறப்பட்டிட்டியாம்..?’
”ஆமா மாமா.. அவ்வளவு தூரம் வர நேரமில்லை.’
என்ன நேரமில்ல.. கடன அடைக்க வேணாமா?
’அதுதான் மாமா.. அரும்பாடு பட்டு பொரட்டி கொண்டாந்தேன்’
’சரி இங்க வந்து கொடுத்திட்டு போகலாமுல்ல?’
’அங்கெல்லாம் சரிப்பட்டு வராது மாமா’
’ஏன் நீ சம்பாதிக்கப்பட்ட அரும்பாட்ட, எங்கிட்ட படலாமுல்ல’
சுகந்திக்கு காதில் தேள் கொட்டியது போல இருந்தது. ச்சே என்றிருந்தது. அடுத்து அவர் பேசியதை பேருந்தின் ஹாரன் ஓசை அழித்துவிட்டது. இவள் மொபைலை அணைத்து கைப்பைக்குள் வைப்பதாகக் குனிந்து அருகாமை இருக்கைப் பெண்ணிற்குத் தெரியாமல் அழுதாள். நிமிர்ந்து நிற்கும் அவள் உடலின் மீது அவளுக்கே வெறுப்பு வந்தது. என்ன மாதிரி பேசிவிட்டார், செத்துத் தொலையலாம் என்று வந்தது. பெரியவளும் சின்னவளும் கண்ணுக்குள் வந்து நின்றார்கள். கண்கணைத் துடைத்தபடி நிமிர்ந்தாள்.
பெரியவள் செய்யும் அழும்புதான்அவளால் சகிக்க முடியவில்லை. பத்து முடிக்கவில்லை. மார்க்கெல்லாம் 40தைத் தாண்டவில்லை. டியூஷன் வைத்தாள். அங்கேயும் பிரச்சனை. அப்புறம் ஏதோ ஒர் பையனைக் காதலிப்பதாகப் பிரச்சனை. போலீஸ் ஸ்டேஷன் வரை போனது. எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தார்கள். இவள் செய்யாத வேலையெல்லாம் பெரியவள் செய்கிறாள்.
இரவு வீட்டுக்குப் போனபோது இரண்டும் தூங்கியிருந்தன.மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலையில் பேசிக்கொள்ளலாம் என்று படுக்கப் போனாள். சாப்பாடு பிடிக்கவில்லை. அரை டம்பளர் பால் கூட பிடிக்கவில்லை. என்ன மாதிரி மாமா கேட்டுவிட்டார்? நான் இப்படித்தான் சம்பாதிக்கிறேன் என்று நினைக்கிறாரா? உடல் அழுகிப்போனால் நல்லது என்று தோன்றியது.
காலையில் எழுந்தவுடன் பிரச்சனை துவங்கியது. திவ்யா எங்கோ புறப்பட்டுக்கொண்டிருந்தாள்.
‘எங்கடி..?‘
’அழகர்கோவில் போறோம், நானும் திலகாவும்..எல்லாரும்’
’பொய் சொல்லாதடி..’ என்று சுகந்தி சீற, திவ்யா பயந்துவிட்டாள். ’மதுரைக்கி யாரோட போன? அவளையெல்லாம் கேட்டேன். ஒருத்தியும் மதுரை போகலங்கறாளுக’.
ஆனாலும், திவ்யா அடங்குவதாக இல்லை. ‘இப்ப நான் போவே.. என்ன செய்வ?’
இப்படித் துவங்கிய சண்டை தீவிரமாகியது. திவ்யா சமையலறையில் நுழைந்து பாத்திரங்களை உருட்டிவிட்டாள். பீரோவைத் திறந்து துணியையெல்லாம் எடுத்துவீசினாள்.
சுகந்திக்குக் கடும் கோபம் வந்தது. திவ்யாவின் பையை எடுத்துத் திறந்து மொபைலை எடுத்து ‘இத எவங் கொடுத்தான்?’ என்று கத்தினாள். திவ்யா அப்புறம் கொஞ்சம் அடங்கினாள். ஆனாலும் அன்று முழுவதும் வீடு இறுக்கமாக இருந்தது.
சுகந்தி வழக்கமாக ஞாயிறும் கடைக்குச் செல்வாள். பக்கத்தில் உள்ள கடைக்காரருக்கும் இவளின் கடைக்கும் பலத்த போட்டி. ‘ஒரு பொம்பள முன்னேறுறா…’ என்ற எரிச்சல் அவருக்கு. விக்கியை அழைத்து கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பாத்திரத்தையெல்லாம் அடுக்கி துணையையெல்லாம் மடித்துவைத்து என்று வேலையை ஆரம்பித்தாள். திவ்யா மதியம் சாப்பிடவில்லை. இவளும் கேட்கவில்லை.
மாலை ஆறு மணியிருக்கும். திவ்யாவின் மொபைலில் அழைப்பு வந்தது. இவளை ஓர் பார்வை பார்த்துவிட்டு செல்லை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றாள். இவளும் பொறுமையாக இருந்தாள். அரை மணி நேரம் ஆயிற்று.. திவ்யா கீழே வரவில்லை. இவள் மொட்டை மாடிக்குச் சென்றாள்.  
இவளைக் கண்டபின் திவ்யா ‘சரி.. பார்க்கலாம்’ என்று முடித்துக்கொண்டாள்.
’யாரவன். யார் ஒனக்கு போன் வாங்கிக்கொடுத்தது’
‘சொல்றேன்’ என்றபடி திவ்யா கீழிறங்கினாள். இவளுக்கு வெறி வந்தது. அவளை மறித்து போனை பிடுங்கி கீழே வீசினாள். மாடிப்படியில் விழுந்து எகிறி தெருவில் விழுந்து மூன்றாகப் பிளந்தது. திவ்யா வெறிபிடித்தவள் போனாள்.. படிகளில் தாவி இறங்கி வீட்டுக்குள் நுழைந்தாள்.
‘ரொம்பவும் தப்பு செய்கிறோமோ’ என்று யோசித்தபடியே இவளும் பின்தொடர்ந்தாள். திவ்யா வாசலை மறித்துக்கொண்டாள்.
’நீ என்ன ஒழுங்கா? நீ என்ன ஒழுங்கா’ என்று அடித்தொண்டையில் கத்தினாள்.  எதிர்த்த வீட்டு அண்ணன் எட்டிப் பார்த்தார். பக்கத்து வீட்டு முருகேஸ்வரி வெளியில் வந்தாள்..
சுகந்தி, திவ்யாவைத் தள்ளிக்கொண்டு சென்று கதவை அடித்து மூடினாள். திவ்யா பத்திரகாளி போல நின்றாள். ’நீ விக்கிய வச்சில்லியா? அப்பா செத்தப்புரம் நீ விக்கியோட அடிச்ச கூத்து எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? நான் ஹாஸ்டல்ல இருந்தாலும் குட்டி இங்கதான இருக்கா.. அவ பார்தாளாம்….சொன்னா.. நீ..’
சுகந்திக்கு தலையில் இடியிறங்கியது போல இருந்தது. அப்படியே சரிந்தாள். திவ்யா நிறுத்துவதாக இல்லை. அரை மயக்கம்போல சுகந்தி சரிந்து கிடந்தாள். ’ஒடம்பு அழுகிப்போகனும்’ என்று மறுபடியும் தோன்றியது.
‘சொல்லுடி… ஒங்கம்மா கதைய சொல்லு’ என்று குட்டியைப் பிடித்து இழுத்து வந்தாள். குட்டி பயந்துபோயிருந்தாள். கோழிக்குஞ்சு போல சுருங்கிப்போயிருந்தாள்.
சுகந்திக்கு வெறி வந்தது. எழுந்தாள். ஓங்கி ஒரே அறை. திவ்யா மிரண்டு போனாள். வெறிவந்தது போல வாயைத் திறந்து அடித்தொண்டையில் கத்தினாள். என்னவென்று புரியாத கத்தல். கதவைத் திறந்தவள் வெளியே ஓடினாள். இவள் தெருவில் இறங்கிப் பார்க்கும் போது வாழைத்தோப்புக்குள் திவ்யா இறங்கி மறைவது தெரிந்தது. வாழை மரங்களுக்கு மேல் பௌர்ணமி நிலா பெரிதாகத் தெரிந்தது.
எதிர்த்த வீட்டுக் கிரில் கதவைத் தட்டினாள். அலறிக்கொண்டே தட்டினாள். ‘அண்ணே’ என்று அடித்தொண்டையில் அலறினாள். அவர் எழுந்து வந்தார். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார் போலும்.
‘நீங்க இருங்கம்மா.. நா அழைச்சிட்டு வாரேன்’ என்று தெருமுனை சென்று வாழைத் தோப்பில் இறங்கி நடந்தார்.
இந்த அண்ணனை அவளுக்குப் பிடிக்காது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த பேய் வீட்டுக்கு வாடகைக்கு வந்திருந்தார். வெகு நாட்கள் பூட்டிக்கிடந்த வீடு அது.  அவர் ஏதோ ஓர் கம்யூனிஸ்டுக் கட்சிக்காரர். யாரோடும் பேசமாட்டார். அவரைப் பார்க்க கிராமத்து ஜனங்கள் வருவார்கள். பேசிக்கொண்டேயிருப்பார். மற்றபடி சிகெரெட் வாங்க கடைகளுக்குச் செல்வார். எல்லோரையும் அவர் பார்ப்பது போலத் தோன்றினாலும் யாரையும் பார்க்க மாட்டார். வாயைத் திறப்பதற்கு காசு கேட்பார் போல. அவளுக்கு கம்யூனிஸ்ட் என்றாலே பிடிக்காது. அவளுடைய அப்பா, தாத்தா எல்லோரும் காங்கிரஸ்காரர்கள்.
பத்து பதினைந்து நிமிடம் ஆனது. இவளுக்கு காலம் நின்று விட்டது போலத் தெரிந்தது. வாழைத் தோப்பில் பாம்பு இருக்குமே என்று பயம் வந்தது. இந்த சனியன் பம்பு செட் கிணற்றுக்குச் சென்றுவிட்டதோ என்று பயந்தாள். வெளியே செல்லவும் பயம். ‘அத்தனை பொம்பளைகளும் கேள்வி கேட்பாளுங்க’ என்ற பயம். அவள் அந்தத் தெருவில் யாருடனும் பேசுவதில்லை. சண்டை. இவளை அவர்கள் யாரும் மதிப்பதில்லை. தாலியறுத்துவிட்டு மினுக்கித் திரிபவள் என்று அவர்களுக்கு அபிப்ராயம்.
பௌணர்மி வெளிச்சத்தில் அவர்கள் வருவது தெரிந்தது. அண்ணன் திவ்யாவை அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்குள் சென்று விட்டார். இவளும் அவர் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது, ‘இரும்மா, நான் பேசிட்டு கூப்பிடுறேன்’ என்றார்.
மறுபடியும் நேரம் சென்றுகொண்டிருந்தது. திவ்யா கிணற்றில் விழுந்திருந்தாள் என்ன ஆகும்? அந்த மாமா பண்ணை வீட்டுக்கு வரச்சொன்னாரே.. இனி என்ன செய்வார்.. வெளியில் எப்படி தலைகாட்டுவது என்றொல்லாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் மனசு ஓடியது.
10 மணியிருக்கும். திவ்யா உள்ளே வந்தாள். எதிர்த்த வீட்டு அண்ணன் வாசலில் நின்றிருந்தார். ‘எல்லாம் சரியாயிடும். காலைல நாம பேசலாம்’ என்று திரும்பி நடந்தார். கையில் சிகெரெட் புகைந்துகொண்டிருந்தது.
இவள் திவ்யாவைப் பார்த்தாள். திவ்யா அமைதியாக இருந்தாள். தலைகுனிந்தபடியிருந்தாள். ’என்ன சொன்னாரு?’
திவ்யா நிமிர்ந்து தீர்க்கமாகப் பார்த்தாள். அவளுக்கும் இவளைப்போலவே பெரிய கண்கள். ‘ஒங்க அம்மாவும் பொம்பளதான்னு சொன்னாரு’ என்றாள். இவளுக்குப் புரியவில்லை.
திவ்யா சமையலறை சென்று அவளுக்கும் இவளுக்குமாக சாப்பாடு போட்டுக்கொண்டு வந்தாள். இவளுக்கு அவளின் மாற்றம் புரியவில்லை. ’சாப்பிடும்மா’ என்றபடி அமர்ந்தாள். இவளும் அவளுமாக சாப்பிட்டார்கள். இப்படி சாப்பிட்டு வெகு நாளாயிற்று. ஆனால், இரண்டு பேரும் பேசிக்கொள்ளவில்லை.
இவள் படுக்கையில் படுத்தபோது, வராண்டாவில் படுத்திருந்த திவ்யா எழுந்துவந்து மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டாள். அனைத்து குழப்பங்களுக்கு இடையிலும் சுகந்தி அன்று சற்று தூங்கினாள்.
காலையில் எழுந்தபோது எதிர்வீட்டுக் கதவு திறக்கவில்லை. அண்ணன் எப்போதும் லேட்டாகத்தான் எழுந்திருப்பார். அவர் எழுந்திருக்கக் காத்திருந்தாள். அவர் எழுந்து வாழைத் தோப்பு வழியே டீ கடைக்குச் சென்று வந்தபின்பு, அவர் வீட்டு வாசலில் நின்று ‘அண்ணே’ என்றாள்.
‘உள்ள வாம்மா’ என்று குரல் வந்தது. அண்ணன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். இவள் தரையில் உட்காரப்போக, அவர் தடுத்து நாற்காலியைக் காட்டி, ‘,இங்க எல்லாரும் சமம். பெண்ணுன்னா சேர்லல உட்காரக் கூடாதா, ஆணுக்குச் சமமா?’ என்றார். இவள் வீட்டில் அவள் ஒரு நாளும் எந்த ஆணுக்குச் சமமாகவும் உட்கார்ந்ததில்லை. கடையில்தான் முதலாளி சேரில் உட்கார்ந்திருக்கிறாள்.
அண்ணன் வெகுநேரம் மௌனமாக இருந்தார். எங்கே எப்படி ஆரம்பிப்பது என்று யோசிப்பார் போல.
‘திவ்யா சின்ன பொண்ணு. அவளுக்கு உங்க வாழ்க்கைச் சிக்கல் புரியாது. அப்புறம்.. ’ அவர் நிதானமாகப் பேசினார். சுகந்தியின் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசினார். இப்படி ஓர் ஆளை அவள் எதிர்கொள்வது இதுதான் முதல் தடவை.
’அவள ஏதாவது படிக்க அனுப்புங்க. உங்க பொண்ணை நீங்க நம்பனும். ஏதோ காதல்னு சொல்றாளேன்று பயப்படாதீங்க. பெண்களுக்கு ஜாக்கிரதை உணர்வு அதிகம். அவளை நம்புங்க.. ஏதோ படிச்சு அவ வேலைக்குப் போகட்டும். அவ புத்திசாலி’ என்று சொன்னார். அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று அவர் சொல்லவில்லை.
கடைசியாக அண்ணன் சொன்னார், ’விக்கிய வீட்டுக்கு வரச்சொல்லாதீங்க. நீங்க இல்லாதப்ப அவன் இவள கண்டபடி தொடுறான்னும், என்னக் கட்டிக்கன்னு கேட்கிறான்னும் அவ சொல்றா…’
சுகந்தி அதிர்ந்துபோனாள். ‘அந்த நாய’ என்று ஆரம்பித்து மனதுக்குள் திட்டினாள். ’ஆண்களை நம்பாதிங்க’ என்றார் அண்ணன். அவரின் சின்ன கண்களில் சிரிப்பு இருந்தது. ’ஆண்கள் எப்போதும் ஆண்கள்தான்.. தாக்கிவிட்டு தப்பிச்செல்லும் மிருக உணர்வு கொண்டவர்கள்.. பெண்கள்தான் என்றும் பரிதவிப்பவர்கள்’ என்றார்.
இவளுக்குப் புரியவில்லை. அவரின் பின் பக்கத்தில் தாடிக்காரர்கள் இரண்டு பேர் படமிருந்தது. ஒன்று ஏசு என்பது இவளுக்குத் தெரியும். ஆனால், அவர் கடவுள் மாதிரியில்லாமல் மனிதன் போல வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தார். பெரிய தாடிக்காரர் யார் என்று தெரியவில்லை. குடும்பப் படம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள். ஒன்றும் இல்லை. இந்த ஆள் ஏன் தனியே இருக்கிறார் என்று யோசித்தாள்.
’புறப்படும்மா. கடைக்கு வேற போகனும்ல‘ என்றார். இவள் புறப்பட்டாள். திவ்யாவிடம் என்ன பேசினார் என்ற கேள்விமட்டும் மனதில் இருந்தது.
அப்புறம் திவ்யா நிறைய மாறிவிட்டாள். மதுரை கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் படிக்கச் சென்றாள். ஆறு மாதம் இப்படி போனது.  சில நாட்களில் மறுபடியும் கதை திரும்பிவிட்டது. இப்போது வேறு ஓர் பையன். இரண்டு தெரு தள்ளியிருந்த வீட்டில் குடியிருக்கும் ஒற்றை ஆள். யாரோ என்ன சாதியோ, குடிகாரனோ என்னவோ யாருக்குத் தெரியும்.
ஆனால், சுகந்தி தீர்மானித்து விட்டாள். அண்ணன் சொல்வதெல்லாம் உருப்படாது. கல்யாணம்தான் ஒரே வழி. அப்புறம் மாப்பிள்ளை தேடுவது துவங்கியது.
திவ்யா அடம்பிடித்தாள். முடியவே முடியாது என்றாள். ஆனால், இவள் விடுவதாக இல்லை. அண்ணனிடம் கேட்டாள். மறுபடியும் திவ்யாவும் அண்ணனும் உட்கார்ந்தார்கள். என்ன பேசினார்கள் என்பது மறுபடியும் இரகசியமாகவே இருந்தது. அப்புறம் திவ்யா மாடிக்குச் சென்று அந்தப் பையனிடம் போனில் பேசினாள். வரும்போது அழுதுகொண்டே வந்தாள்.
இவள் பதறிப்போய் ’என்னடி?‘ என்றாள். ’அவனைக் கல்யாணம் பன்னிக்கடா என்று கேட்டேன். என்றபடி அழுதாள். அப்புறம் கண்களைத் துடைத்துக்கொண்டு ’மாப்பிள்ளை பாரும்மா’, என்றாள்.
இவளுக்குப் புரியவில்லை. அண்ணனை பார்த்தபோது ‘என்ன பேசினிங்க’ என்று கேட்டாள். அவர் கண்கள் சிரித்தன. ’மொதல்ல நம்பும்படி பேசனும். அப்புறம் ஒவ்வொருத்தரும் தனக்குச் சரின்னு பட்டதத்தான் செய்வாங்க…  புரிஞ்சுக்க அவகாசம் கொடுக்கனும். வாய்ப்பு கொடுக்கனும்.. அவ புரிஞ்சிகிட்டா.. அவ்வளவுதான்’ என்றார்.
இவளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. மகள் தப்பித்ததே போதும் என்று தோன்றியது.  ’சீக்கிரம் கல்யாணம் பண்ணிவைக்கப் போறேன்.’ என்றாள் சுகந்தி. அவர் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே, ’ம்’ என்றார். அந்த ’ம்’முக்கு ’வேற வழி?’ என்பதுபோல பொருள் என்று இவளுக்குத் தோன்றியது.
இரண்டே மாதங்களில் கல்யாணம் முடிந்தது. கல்யாண வேலைகளுக்காக மதுரை அருகே வாழ்ந்த அப்பா வீட்டிலேயே இரண்டு மாதமும் போனது. கல்யாணம் முடிந்து பெண்ணையும் மாப்பிள்ளையும் அனுப்பிவைத்துவிட்டு வீட்டுக்கு வந்தாள்.
இரவு எட்டுமணியிருக்கும். வீடு வெறிச்சோடிக்கிடந்தது. குட்டி வந்தவுடனேயே தூங்கிவிட்டாள். பத்து மணியிருக்கும்போது அண்ணன் வரும் சத்தம் கேட்டது. கிரில் கேட்டைத் திறக்கிறார் என்று தெரிந்தது. இவள் வெளியே சென்று ’அண்ணே’ என அவர் திரும்பினார்.
’ஏன் கல்யாணத்துக்கு வரல?’
’பொதுவா நா கல்யாணங்களுக்குப் போறதில்ல. என்ன மாதிரி ஆளுங்க துன்பத்திலதான் துணையா இருப்போம்’
என்ன இது? என்ன பேசுகிறார் இவர். கல்யாணம் பற்றி பேசினால் துன்பம் பற்றி பேசுகிறார்?
’சரிண்ணே’ என்றபடி திரும்பினாள். இவர் போன்ற மனுசங்க தனியா இருப்பதுதான் சரியென்று தோன்றியது.
கட்டிலில் படுத்தபோது விறுக்விறுக்கென்று தலைக்கு மேல் ஒடிய பேன் அனலைக் கொட்டியது. தூக்கம் வராமல் யோசித்துக்கொண்டேயிருந்தாள். இவளது கல்யாணம் முதல் திவ்யாவின் கல்யாணம் வரை எண்ணம் தறிகெட்டு ஓடியது. அடிப்பதும் அணைப்பதுமாய் இருந்த கணவன் முதல் முதல் குழந்தை களைந்து இரத்தமாய் போனது முதல்.. அழைத்த மாமா வரை, சின்னப் பையன் விக்கி முதல்…
இவளுக்குத் திருமணம் ஆன 16 வயதில்தான் திவ்யாவுக்கும் திருமணமாகியிருக்கிறது.
என்னவாகும் மகளின் திருமணம் என்ற கவலை வந்தது. பெருமூச்சு விட்டாள். எழுந்து தண்ணீர் குடித்தாள். படுத்தாள். தூக்கம் வரவில்லை. தலைக்கு மேல் பேன் விறுக்விறுக்கென்று அதே  பழைய கதியில் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்தபடி அமர்ந்தாள்…

படைப்பரங்கில் முன்வைக்கப்பட்ட காட்சிப் படைப்பு - அஸ்ரப்

அன்புத் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் 2012 ஜனவரி 22 ஆம் நாள் மாவிபக‘வின் படைப்பரங்கில் தோழர் அஸ்ரப் காட்சிக்கு வைத்த நெருக்கப்பார்வை படைப்புகள் இவை. இப்புகைப்படங்களுக்கான படைப்புகளை maveepaka@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு பதிவேற்றத்திற்காகவும், அடுத்த படைப்பரங்கில் பகிர்ந்து கொள்வதற்காகவும் அனுப்பி வைக்கவும்.







படைப்புகளை நோக்கிய எதிர்பார்ப்புகளுடன் உங்களுடன் நானும்...

Sunday, January 22, 2012

நாளை எழுதிய கவிதை (அல்லது) வயலும் வாழ்வும் - மதிகண்ணன்

நினைவுகளின் உரசலில் பிறக்கும் சிந்தனை...
சிந்தனையின் வெளிப்பாடாய் செயல்திட்டம்...
நினைவுகளை உரச வைக்கும் நிகழ்வுகள்...

முதல் நிகழ்வில் தோன்றிய உத்வேகம்
உத்வேகத்தின் விதையாய் செயலுறுதி...
மறுநிகழ்வில் வேர்விட்ட தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையின் விளைச்சலாய் படைப்புகள்...

சிறப்புப் பொது நிகழ்வில்...
இடையிடையே வளர்ந்துவிட்ட களை களைய வேண்டுமென்று -
இலக்குமாறி வளைந்தவற்றை நேராக்கும் முயற்சியென்று -
நன்கு வளர்ந்ததை வெட்டிச் சாய்த்த அரிவாள்கள்,
நேராய் நிமிர்ந்ததை அடித்தொடித்த சுத்தியல்கள்
மனம் மகிழும் நட்சத்திர அறுவடையாய் - பதர்கள்.

பதர்களை விளைச்சலாக்கும் செயல்திட்ட நிகழ்வு குறித்த -
விமர்சனமில்லாதவர்கள் குழுவினர்
அறிந்தவர்கள் குறுங்குழுவினர்
புரிந்தவன் லும்பன்.

யாசிப்பின் வசீகரிப்பில் லயித்து
மடிதடவிப் பிதுக்கிப் பிதுக்கித் தானம் செய்த
நிலவுடமைச் சமூகத்தின், முதலாளித்துவ உற்பத்தி நீங்கள்.

எனக்கு
முடக்கத்தை விளக்கிய இயற்பியலும் புரியவில்லை
இயக்கத்தை விளக்கும் இயங்கியலும் தெரியவில்லை.
என்னை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது?

(2011 டிசம்பர் 25 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

படைப்பரங்கில் வரையப்பட்ட படங்கள் - முனீஸ்

Wednesday, January 18, 2012

கொல கொலயா முந்திரிக்கா... கருத்தரங்க/படைப்பரங்க அழைப்பிதழ்

மாவிபகவின் கருத்தரங்கமும் படைப்பரங்கமும்

22-01-2012 ஞாயிறு காலை 10.00 மணி

ராஜாபிரஸ் மாடி, திருச்சுழி சாலை, அருப்புக்கோட்டை

ஒருங்கிணைப்பு

தோழர் கேகே

கருத்தரங்கம்

கொல கொலயா முந்திரிக்கா...’         

தோழர் மதிகண்ணன்

படைப்பரங்கம்

வரவேற்க

தோழர் ஜெயகணேஷ்

நன்றிகூற

தோழர் வேல்ராஜன்

அன்புடன் அழைக்கும்

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்

மின்னஞ்சல் maveepaka@gmail.com

Tuesday, January 10, 2012

பீலி பெய் சாகாடும் - ஜெயகணேஷ்


                மனம் ரொம்பவே கனமா இருந்தது. அப்பாவிடம் அப்படி பேசியிருக்க கூடாது. அப்பாவும் அப்படி பேசியிருக்கக் கூடாது. நாளை தானாக சரியாகிவிடும்தான். இருந்தாலும், பழகி விட்டது. அப்பாவின் முகம் வாடியிருந்தால் எந்த வேலையுமே ஓடாது.
                பை யாரோடது. லக்கேஜ் வாங்கணும். யாரு பை - கண்டக்டர் சத்தத்தில் சிதறியிருந்த கவனம் பஸ்சுக்குள் வந்தது.
                அண்ணே. ரிட்டன் போறதுதான்னே. உள்ள வெறும் பைதான்னே. சரக்கு கொஞ்சம்தான்ணே இருக்கு. அதுக்கு லக்கேஜாண்ணே - கொஞ்சம் கெஞ்சுறமாதிரி கேட்டேன்.
                என்ன சரக்கு.
                அண்ணே. ஊருகாய்தான்ணே.
                பதில் பேசாமலேயே நகர்ந்தார் கண்டக்டர். ஏற்கனவே வரும்போதே டிக்கட் லக்கேஜ் எல்லாம் இரண்டு மடங்கா இருந்தது. இந்த லட்சணத்துல ரிட்டனுக்கும் லக்கேஜ் போட்டா அவ்வளவுதான் ஊறுகாய் வித்த காசுல ஊறுகாய்கூட வாங்க முடியாது. இருந்தாலும் அப்பாகிட்ட நான் அப்படி பேசியிருக்கக்கூடாது. சுத்தி சுத்தி மனசு அங்கதான் வருது. கனமாகவே இருந்தது மனசு.
                பப்பப்பப்ப ப பப்பப்ப ப பப்பப்ப ப..... ரிங்டோன் அடிக்க. எடுத்துப் பார்த்தா... வீட்டம்மா.
                “என்னங்க தம்பிய கூப்பிட வந்துருவீங்களா... இல்ல நான் போகவா. ஸ்கூல் விடுற டைம் ஆச்சி“
                “வந்துருவேம்மா... மணி 12 தான் ஆகுது. 12.20க்குள்ள வந்துருவேன். கிளம்பிட்டேன்“
                “சாப்டிங்களா இல்லியா?“
                “சாப்டேன் சாப்டேன்...“
“அப்பா சாப்பிட்டாங்களா?“
                “இல்ல... கம்மங்கஞ்சி குடிச்சிக்கிறேன்னு சொல்லீட்டாங்க... நான் தோசை கொண்டு போனோன். சாப்பிடவே இல்ல...“
“நான்தான் சொன்னேனே... எதுத்து பேசாதீங்க... எதுத்து பேசாதீங்கன்னு. இப்ப பாருங்க.. யாருமே நிம்மதி இல்லாம...
                “அதுக்காக அவரு செல்லம் கொடுத்து, செல்லம் கொடுத்து அவனை சொல்பேச்சு கேக்காதவனா ஆக்குவாரு... போசாம பார்த்துக்கிட்டே இருக்கணுமா?“
                “அய்யோ... அவன் சின்ன பையங்க. ஒண்னாங்கிளாஸ்தான் படிக்கிறான்.. போகப் போக சரியாகிருவான்“
                “ஆமா ஆமா சரியாகிருவான். எல்லாரும் மெச்சிக்கோங்க... நீ போன வை...“
                பக்கத்து சீட்டுல இருந்த குழந்தை, என் முகம் கோபமாவதைப் பார்த்து பயப்பட ஆரம்பிக்க... சிரிப்பை வரவழைத்து கொண்டே எட்டிப் பார்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.
                12.03 ஆச்சி... பஸ் எப்ப ஊருக்குள்ள போயி.... அப்புறம் பஸ்ஸ்டாண்டு போயி. நான் வண்டியெடுத்து... அப்புறம் ஸ்கூலுக்கு போக... தம்பி அதுக்குள்ள ஆளக்காணோம்னு தேடுவானே... பசி நேரம் வேற... லேட்டாகிடக்கூடாதே... இந்த டிரைவர் நிலம புரியாம அசால்ட்டா போய்க்கிட்ருக்காரு. அய்யய்யோ இந்த ஸ்டாப்லயுமா நிப்பாட்டுவாங்க.. அண்ணே லேட்டாச்சுண்ணே.... சே. மனசு புலம்புறது யாருக்கும் கேட்க மாட்டேங்கிதே.
                நடுக்காட்டுல பஸ்ஸ நிப்பாட்டினார் டிரைவர். களை வேளை பார்த்திட்டு நாலு பொம்பளங்க ஏறுனாங்க... காலைல 6 மணி பஸ்ல நான் லயனுக்கு வரும்போது நிறைய பேர் வேலைக்கு வருவாங்க. மணி 12 தான் ஆகுது அதுக்குள்ள முடிச்சிட்டு கிளம்பிட்டாங்க. எப்படியும் 100ரூபா வாங்குவாங்க. இன்னிக்கி வேலைக்காரங்களுக்குதான் நல்ல காசு..
                புலம்பிக்கிட்டிருக்கிறப்பவே கண்ணுலபட்டது கட்டாக மயிலிறகுகள். அந்த களை வேலை பார்க்குற அக்கா ரெண்டு பேரு கையில கட்டாக மயிலிறகு வச்சிருந்தாங்க. பார்க்க பார்க்க ஆசையா இருந்தது.
                அய்யோ என் பொண்ணு ரெம்ப ஆசைப்படுவாளே. அப்பா எனக்கா எனக்கா ன்னு ஆசையா சொல்றது இப்பவே கண்ணுல தெரியுதே. அண்ணணுக்கு ஒன்று எனக்கு ஒண்ணுன்னு  வாங்கும்போதே அழகா வாங்குவாளே... வாங்கனும்னு ஆசையா இருக்கே.
                தருவாங்களா... கேட்டுப்பார்ப்போமா. காசு கேட்பாங்கல்ல.... ஆமா ஆமா காசுகொடுக்காம தருவாங்களா... என் பொண்ணுக்கும் பையனுக்கும் தானே காசு கொடுத்து வாங்கினாத்தான் சந்தோசம்.
               
       ஆனாலும் எவ்வளவு கேட்பாங்க.
                ஒன்னு பத்து ரூபா சொல்லுவாங்களா.
                ஒன்னு வாங்கினா பத்தாதே.
                ரெண்டு... நாலு....
                கட்டாக் கோட்டா எவ்வளவு சொல்லுவாங்க...
                நூறு ரூபா சொல்லுவாங்களோ?
                கையில வாங்கினவுடன் ரெண்டு பேரும் விளையாண்டு பிச்சிருவாங்க. அதுக்கு நூறு ரூபா கொடுக்கணுமா.
                வாங்காம போனாலும் மனசு கேட்காதே
                கீழ கிடக்குறததானே பொறுக்கிட்டு வர்றாங்க. அவ்வளவு காசா கேட்பாங்க. கொஞ்சம் கொறச்சி கேட்டா என்ன.
                காசு கிடக்கும்னுதானே பொறுக்கிட்டு வர்றாங்க... யார்ன்னாலும் காசு கொடுத்து வாங்கிக்குவாங்க... அதனால கொறக்க மாட்டாங்க...
                எதையெல்லாம் காசாக்குறாங்க... கீழ கிடக்குறதெல்லாம் இவங்களுக்கு காசாகுது. நாம எவ்வளவு சுத்தினாலும் போதும்கிற அளவுக்கு வருமானம் கெடக்கிதா?
                மஹால் ஸ்டாப் எல்லாம் எறங்குங்க... பழைய பஸ் ஸ்டாண்டு எல்லாம் எந்திரிச்சிக்கோங்க... கண்டக்டர் சத்தம கேட்டு பக்கத்துல உட்கார்ந்த சார் எந்திரிக்க... வழி விடுறதுக்காக ஒதுங்கினேன். நம்ம உடம்புக்கு ஒதுங்கினா இடம் கிடைக்குமா?
                டக்குன்னு எந்திரிச்சிட்டேன். அப்பவும் அவரு ஒதுங்கி போகுற அளவுக்குதான் இடம் இருந்தது. எதுக்கு சிரமம்னு முன்னால நகர்ந்தேன்.
                மயிலிறகு கையில் உரசியது.
                கேட்டுருவோமா... சரி கேட்டுத்தான் பார்த்துருவோம்.
                எக்கா. இது விக்கிறதுக்காக்கா. எவ்வளவுக்கா
                அக்கா பக்கத்துல பார்த்து சிரிச்சது. ரெண்டு இறக உருவியது.
                நான் வேகமா பைய தடவினேன். இருபது ரூபா வந்தது. எடுத்தேன்
                யே. போப்பா. இதுக்கு போய் காசு கொடுத்துட்டு.
                அதுக்காக சும்மா கொடுப்பாங்களாக்கா. இந்தாங்க
                நீ போப்பா... பேசாம இரு. கீழ கிடந்து எடுத்ததுக்கு போய் ரூபாய கொடுத்துட்டு
                செவிட்டில் அறைந்தது போல் இருந்தது.
                என் பொண்ணு ஆசப்படுவா... அதுக்காகத்தான்
                இன்னொரு அக்கா அவங்க கையில இருந்த கட்டுல பெரிசா இருந்த அஞ்சாரு இறக எடுத்து... இந்தாப்பா இதயும் வச்சிக்க. சின்னப்புள்ளக்கித்தானே...
                மனசு பரபரத்தது. சும்மா வாங்கிட்டுப் போக மனசே இல்ல.
                சரக்கு வச்சிருந்த பைய சீட்டுக்கு அடியில இருந்து இழுத்து ஒரு ஊறுகாய் பாக்கட்ட எடுத்து அக்கா இதையாவது வச்சிக்கோங்க.. சாப்பாட்டுக்கு ஊறுகாய் வாங்குவீங்கள்ல... வச்சிக்கோங்க... என்ற படி அவங்க மடியில ஊறுகாய் பாக்கட்ட வச்சிட்டேன்.
                ஏய் நீ வேறப்பா... பேசாம இரு. பாவம் நீ எம்புட்டு அலஞ்சி வியாபாரம் பாக்குறியோ... முழு பாக்கட்ட சும்மா கொடுத்துக்கிட்டு. பேசாம போப்பா...
                இந்த பயல பாருக்கா... இதுக்கு போயி ஊறுகாய் பாக்கட் கொடுக்குறாப்ல... தள்ளுப்பா பழைய பஸ் ஸ்டாண்டு வந்திருச்சி. இறங்க போறோம். நீ இந்த இறக பத்திரமா கொண்டு போய் புள்ளக்கி கொடுய்யா என்றபடி சீட்டிலிருந்து எந்திரித்து படியில் இறங்குச்சி அந்த அக்கா.
                இறங்கும் போது கையில இருந்த மயிலிறகு மறுபடியும் கையில இடிச்சது. ரெம்ப வலிச்சது மனசு.
                இப்ப மனசு அப்பா, கோபம், வலி, அழுகை, மகன், வீட்டம்மா, பொண்ணு யாருமே மனசுல இல்ல. மயிலிறகு மட்டும் தான் மனசுல இருந்தது. ரெம்ப பாரமாய்.