Thursday, November 25, 2010

EMSன் பார்வையில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - சுப்புராயுலு

நூல்விமர்சனம்

நூல்    :  இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு
மலையாள மூலம் : E.M.S நம்பூதிரிபாட்
ஆங்கிலவழி தமிழாக்கம் : கி. இலக்குவன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
                         421, அண்ணாசாலை
                         தேனாம்பேட்டை
                         சென்னை – 600 018

                         இப்புவியில் மற்ற உயிரினங்களைப் போல் மனிதனும் நிலப்பரப்பில் தோன்றி படிப்படியாக, குகை மனிதனிலிருந்து வேட்டைச் சமூகமாக, இனக்குழுவாக வளர்ந்து, இன்றைய நிலையை அடைந்து சூழலை தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றான்.

குடும்ப அமைப்பாக்கத்தின் வழியாக சமூக வெளியில் அரசு என்ற அமைப்பை உருவாக்கி, அது பல்வேறு வடிவங்களில் - குறிப்பாக நிலப்பிரப்புத்துவ சமூகத்தில் மன்னராட்சி வடிவமாக, முதலாளித்துவ சமூகத்தில் பாராளுமன்ற ஜனநாயகமாக, பின்னை மானுடத்தளைகளில் இருந்து விடுபடும் சோசலிஸ சமூகமாக உருமாறி வந்ததை நாம் நடைமுறையில் காண்கிறோம்.

மேலை நாடுகளில் குறிப்பாக ஜரோப்பாவில் மறுமலர்ச்சி காலம் தொட்டு, ஓர் வேங்கைப் பாய்ச்சலில் மனித சமூகம் தாண்டி வந்ததை வரலாற்றுப் பக்கங்களில் படித்திருக்கிறோம். அறிவியல் முன்னேற்றத்தைப் பயன்படுத்தி, ஜரோப்பிய நாடுகள் மனித வாழ்வின் தேவைக்கான பொருட்களை உற்பத்தி செய்வதற்க்கு யந்திரங்களை பயன்படுத்திய போது தேவையை விட பெருமளவிலான பொருட்கள் எஞ்சியதால், அவற்றை விற்பதற்கு சந்தையைத் தேடி, பல நாடுகளை, குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை நாடி வணிகம் செய்வதற்கு வந்தார்கள். முதலில் வணிகம் செய்வதற்கு வந்தவர்கள், அந்த நாடுகளின் அரசியல் சூழல் அவர்களுக்கு சாதகமானன நிலையிலிருந்த போது அந்த நாடுகளின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி காலனி நாடுகளாக்கினார்கள். இந்த அடிப்படையில், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள், கடைசியில் வந்த ஆங்கிலேயர்கள் என அவர்களுக்குள் ஏற்பட்ட வணிகப் போட்டியில் இந்திய நிலப்பகுதியிகளைப் படிப்படியாகப் போரிட்டு வெற்றி பெற்றார்கள்.

1757 – பிளாசிப் போருக்குப் பின்பு வட இந்தியாவில் மொகலாயர்களின் பிரதிநிதிகளான நவாபுகளின் ஆளுகையிலிருந்த நிலப்பரப்புகளைக் கைப்பற்றி, அவர்களிடமிருந்து திவானி உரிமை என்ற நிர்வாக அதிகாரத்தைப் பெற்றார்கள். சென்ற காலத்தின் இந்திய நிலப்பகுதியின் வரலாற்றிலிருந்து, ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தியதையும் அதை எதிர்த்து இந்திய மக்கள் பல்வேறு இயக்கங்களை உருவாக்கிப் போராடியதையும் காலவரிசைப்படுத்தி விரிவான ஒரு நூலாக இந்தியக் கம்யூனிஸ்ட் மாக்சிஸ்ட் கட்சியின் முன்னணித்தலைவர்களின் ஒருவரான E.M.S நம்பூதிரிபாட் அவர்கள் எழுதியிருக்கிறார்.

ஏனெனில் E.M.S அவர்களும், ஆங்கிலேயர்களை எதிர்த்த இந்தியவிடுதலைப் போராட்டத்தில் இணைந்து பங்கெடுத்துக் கொண்டவர். இந்தப் போராட்ட வரலாற்றை தனக்கேயுரிய வகையில், தன் பார்வையில், தன் போராட்ட அனுபவங்களூடாக, இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் உருப்பெறுவதையும், அதில் பொதுவுடைமை இயக்கத்தவர்கள் அழுத்தமான தடம் பதித்த வரலாற்று தடயங்களையும் எழுதிச் செல்கிறார். முதலில் இந்த வரலாற்றை 1857-ல் இருந்து 1547-வரையிலான கால கட்டத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை, இயங்கியல் பொருள் முதல்வாத கோட்பாட்டினூடாக விவரித்துச் செல்கிறார்.

1857-ல் நடந்த இந்திய முதல் சுதந்திரப் போரை ஆங்கிலேயர் ‘சிப்பாய்க் கலகம்’ என்றே வரலாற்றில் எழுதிவைத்தனர். அதை மறுத்து, அந்தப் போர் ஒர் உண்மையான சுதந்திரப் போர் தான் என்று நிறுவி, சில வரலாற்று உண்மைகளையும், போர் நடந்ததிற்க்குக் காரணமான சமூகப் பொருளாதாரப் பின்னணிகளையும் சரியான முறையில் தரவுகளைக் கொண்டு விவரிக்கிறார். ஆங்கிலேயர்களுக்கு முன்பு மொகலாயர் ஆட்சியில், நிலவரி வசூலிப்பவர்கள், அவர்களின் பிரதிநிதிகளான நவாபுகளும், தாலுக்தார்களும், மன்சூப்தார்களும். ஆங்கிலேயர்கள் தாங்கள் கைப்பற்றிய திவானி உரிமையை நிலைநாட்டும் விதமாக, மக்களிடம் வரி வசூலிப்பதற்க்கு ஜமீன்தார்கள் என்ற இடைத்தரகர்களை நியமித்தார்கள். இந்த இடைத்தரகர்கள் வரையறை செய்யப்பட்ட தொகைக்கும் அதிகமாக மக்களிடம் வரி வசூலிப்பதில் மிகவும் கொடூர முறையைக் கையாண்டதால் அரசு மீது மக்களுக்கு கோபமும், அதிருப்தியும் பொங்கி எழுந்தது. இந்த முறையினால் ஏற்கனவே சலுகைகளும், அதிகாரமும் பெற்ற தாலுக்தார்களும், மன்சூப்தார்களும், தங்கள் உரிமையையும் சலுகைகளையும் இழந்ததை எண்ணி ஆங்கிலேயர்கள் மேல் பகைமை உணர்வைக் கொண்டனர். ஒரு சமஸ்தானத்து மன்னருக்கு அடுத்து வாரிசு இல்லையென்றால் அந்த மன்னருடைய அரசு ஆங்கிலேயர்களுக்குத்தான் சொந்தம், என்ற சட்டங்களை ஆங்கிலேயர்கள் உருவாக்கியது, அன்றைய வட இந்தியாவில் உள்ள சமஸ்தான மன்னர்களிடையே கோபத்தையும், ஆத்திரத்தையும் உண்டாக்கியது. எனவே வடஇந்தியப் பகுதியில் மன்னர்களும், தாலுக்தார்களும், ஆங்கிலேயரிடம் பணியாற்றிய இந்தியச் சிப்பாய்களும் இணைந்து ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். இதைத்தான் ‘சிப்பாய்க்கலகம்’ என்று வரலாற்றில் ஆங்கிலேயர் எழுதிவைத்தனர். இந்தப் போரை தலைமை தாங்கி நடத்தியது மன்னர்களும், நிலப்பிரபுகளும் தான் என்பதை விவரிக்கிறார். அதே சமயம் நம் இந்தியப் பகுதியில் தெற்கே 1857 க்கு முன்பே அதாவது 1750க்கும் முன்பு, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகப் பகுதிகளில், ரயத்துலாரி முறையை புகுத்தியதும் பலரை அதிருப்திக்குள்ளாக்கியது. ஆங்கிலேயருக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் நாட்டை 72 பாகங்களாக நிர்வாக வசதிக்காக பிரித்து ஆட்சி செய்தனர். பாளையக்காரர்கள் நிலவரி வசூலித்து மன்னர்களுக்கு செலுத்தினார்கள். எனவே ரயதவாரி என்பது தாசில்தார், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் என்ற படித்த அதிகார அமைப்பைப் பெற்ற முறையாகும். இதனால் சலுகைகளையும், அதிகாரத்தையும் நுகர்ந்து இழந்த தென்னாட்டுப் பாளையகாரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்க்கோலம் கொண்ட வரலாற்றுண்மைகளை, தரவுகளோடு விளக்கிச் செல்கிறார்.

1857-ல் ஏற்பட்ட முதலாவது சுதந்திரப் போருக்குப் பிறகு இந்திய நிர்வாகத்தை பிரிட்டிஷ் ராணி தன்னுடைய நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்ததையும், அதற்கு காரணமான வணிக கம்பனியின் நிர்வாகம், கணக்கற்ற வரிகளை மக்கள் மீது சுமத்தி, நிதி நிர்வாகத்தைச் சரிவர நடத்தாமல் ஊழல் மிகுந்ததாக நடத்தியதால், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கடுமையான எதிர்ப்புகளை சமாளிக்கும் விதமாகத்தான் ராணியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வந்த நிகழ்வுகளை காரணகாரியங்களோடு எழுதிச் செல்கிறார். அதாவது கவர்னர் ஜென்ரல் என்ற கம்பெனி நிர்வாகத்தின் பதவியை ராணியின் பிரதிநிதியாக வைஸ்ராய் என்பவரின் கீழ் இந்திய நிர்வாக அமைப்பைக் கொண்டு வந்த பின்னணியை விரிவான விவரணையோடு எழுதிச் செல்கிறார்.

இந்திய வைஸ்ராய்களுக்கு நாட்டை நிர்வாகிப்பதற்க்குரிய கல்வியைப் பரவலாக்குவதற்கான தேவை ஏற்பட்டது. அதனால் ஒரு புதிய ஆங்கில ஜரோப்பியக் கல்வி கற்ற ஒரு புதிய மத்தியதர வர்க்கம் உருவாகியது. இந்த நாட்டை இங்கிலாந்தின் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பதற்கான சந்தையாக மாற்றினார்கள். இந்தியாவில் உள்ள மூலப்பொருட்களை, தங்கள் தொழிற்சாலைகளுக்கு விரைந்து கொண்டு செல்வதற்காக, இரயில் பாதைகளையும், கப்பல் போக்குவரத்திற்காகத் துறைமுகங்களையும் அமைத்தனர். இரும்புப் பாதைகள் உருவாக்க வேண்டிய சூழலும், அதற்க்கேற்ப சிறு தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டிய நிர்பந்தமும் உள்ள நிகழ்வுகளை விரிவாகப் பேசுகிறார். இதனால் படித்த மத்திய தரவர்க்கமும், தொழிற்சாலைகளில் உழைப்பதற்கு தொழிலாளி வர்க்கமும் உருவான சூழலை விவரிக்கிறார்.

இந்த சுழலில் வங்கத்தில் ஆங்கிலக் கல்வி பெற்ற படித்த மத்திய தரவர்க்க அறிவாளிகளிடையே ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. தங்கள் பழைய சமயங்களையும், கலாச்சாரத்தையும் ஓர் புதிய கண்ணோட்டத்துடன் கூடிய மீட்டுருவாக்கம் பெற்றதையும், அதைத் தொடர்ந்து ராஜாராம் மோகன் ராய், கேசலசந்திரசென் போன்றோர் பிரம்ம சமாஜம் இயக்கத்தை தோற்றுவிக்கின்றனர். பஞ்சாபில் சுவாமி தயானந்த சரஸ்வதி தலைமையில், இந்து சமய மறுமலர்ச்சியாக ஆரியசமாஜம் என்ற இயக்கம் கட்டப்படுகிறது. பம்பாயில் பார்சி சமூகத்தாரும், ராஜஸ்தான் மார்வாரிகளும் வணிகத்திலிருந்து யந்திரத் தொழில்களில் முதலீடு செய்வதையும், புதிய இந்திய முதலாளி வர்க்கம் உருப் பெறுவதையும் சொல்கிறார்.

அன்னிய வர்த்தகர்கள் இந்தியாவில் முதலாளித்துவ அடித்தளத்தை அமைத்தனர். இந்தியாவில் இயந்திரத் தொழில்களை உருவாக்கினால், அது ஆளும் ஆங்கிலேயர்களின் சொந்த நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அவர்கள் அறிந்திருந்திருந்தாலும், ரயில் பாதைகள் அமைந்ததனால், அவற்றை பராமரிப்பதற்க்கு இங்கே தொழில் தொடங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தங்கள் தொழில்துறை உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களை இந்தியாவிலிருந்து குறைவான விலைக்கு வாங்கி, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அவர்களுக்கு சாதகமான விலைக்கு விற்பதற்க்கேற்ற சந்தையை உருவாக்கி இந்தியாவைச் சுரண்டுவதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது.

இந்தியாவில் சுயேச்சையான முறையில் தொழில் தொடங்குவதற்க்கு இடையூறாக விளங்கும் காரணி அப்போது இந்தியாவில் நிலவிய சமூக அமைப்பு முறை, பல்வேறு சாதிகளாகப் பிளவுபட்டு, ஒர் நவீன தொழிற்துறை உருவாகி வளர்வதற்கேற்ற புறச் சூழல் சாதகமாக இல்லை.

இந்தச் சூழலில் படித்த மத்தியதர வர்க்க அறிவாளிகளிடையே தேசீய உண்ர்வுகள் மேலோங்கி கல்கத்தாவில், பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேசன், பூனாவில் சர்வஜனிக்சபா, சென்னையின் மதராஸ் மகாஜன சபா போன்ற அமைப்புகள் உருவாகி செயல்பட்டு வந்தன. அவைகள் தங்களுடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கருதி அதற்கான செயல் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தன. இவற்றின் விளைவாக ‘சர் ஆலன் ஆக்சேலியன் ஹியூம்’ என்ற ஆங்கிலேயர் தலைமையில் இந்திய தேசீய காங்கிரஸ் பேரியக்கம் உருவாகி வளர்ந்தது. ஆரம்பத்தில் ஆங்கிலேயர் நலனுக்கான அமைப்பாகத்தான் அதன் செயல்பாடுகள் இருந்தன என்பதை தெளிவுபடுத்துகிறார். 1885ல் துவக்கப்பட்ட இந்தப் பேரியக்கம் ஒவ்வோரு ஆண்டும் மாநாடு நடத்தித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில் சுரேந்தர் நாத் பானர்ஜி, கோகலே போன்றவர்கள் தலைவர்களாக இருந்து வழி நடத்தியதும், பின்னர் இயக்கத்தின் செயல் வழியில் தீவிரவாதம் மிதவாதப் போக்குகள் உருவாகி வந்ததும், அடுத்து திலகர் தலைமையில் தீவிரவாத நிலையெடுத்ததையும், மிகக் கூர்மையாக விளக்குகிறார். குறிப்பாக தீவிரவாத, மிதவாத தலைவர்களின் சிந்தனைப்போக்குகளில் உள்ள நமது மரபான மதம் தழுவிய, பழைமையில் ஊறிய கருத்தியல்களின் வழி அவர்கள் செயல்பட்டதை விளக்குகிறார். குறிப்பாக திலகரின் அரசியல் வழி தீவிரமாக இருந்தாலும், அவருடைய கருத்தியல் போக்குகள் மதவழிபட்ட சனாதனப் போக்குகளாக இருந்ததையும் விவரிக்கிறார். 1919 வரை திலகர் தலைமையில் இருந்த காங்கிரஸ் பேரியக்கம் பின்னர் தென்னாப்பிரிக்காவிலிருந்து ‘மோகன்லால் கரம்சந்த் காந்தி’ இந்தியா வந்து காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து, அதை படிப்படியாக தன்னுடைய ஆளுமைக்குக் கொண்டு வந்ததன் பின்னணியை விவரித்துச் செல்கிறார். தென்னாப்பிரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தன்னுடைய அரசியல் ஆயுதமான அஹிம்சைப் போர் முறையை வெள்ளையர்களை எதிர்த்துப் போரிடுவதற்கான உத்தியாகப் பயன்படுத்துகிறார் காந்தி. காந்தி இயக்கத்திற்கு தலைமை தாங்கியபின் போரிடுவதற்கான அவரின் செயல் திட்டங்கள் நமது நாட்டின் பரந்தளவிலான மக்களின் மனங்களை கவர்ந்து அவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துமளவிற்கு இருந்ததை, அவருடைய ஆளுமையின் பரிமாணங்களை ஆசிரியர் விரிவாக விளக்குச் செல்கிறார். திலகர் சிறந்த தலைவராக இருந்தாலும் காந்தியைப் போல் பரந்த அளவில் மக்களை திரட்டும் ஆற்றல் குறைந்தவராக இருந்ததைச் சொல்கிறார்.

ஆனால் காந்தியின் சிந்தனைகள், கொள்கைகள், இவற்றின் பின்னே உள்ள உண்மை என்பது இந்திய முதலாளிக்குச் சாதகமான அம்சமாக இருந்தது என்பதும், சாதிகளாகப் பிரிந்திருக்கும் இந்திய சமூகத்தை, நியாயப்ப்டுத்துவதாகவே அவருடைய சிந்தனைகள் விளங்கி வந்தனவென்றும் துல்லியமாகத் திறனாய்வு செய்து விவரிக்கிறார்.

இந்திய தேசீய காங்கிரஸ் என்பது புதிதாக வளர்ந்து வரும் இந்திய பூர்ஷ்வாக்கள் அல்லது முதலாளிகளின் கட்சி என்பதையும்; இந்திய முதலாளிகள் தொழில் தொடங்குவதும், தங்கள் தொழிலுக்கு எதிராக பிரிட்டிஷ் முதலாளிகள் முரணாக இருப்பதும், அதனால் தங்கள் மூலதனம் லாபகரமாக விளங்க வேண்டுமென்றால் வெள்ளையர்களை எதிர்ப்பதுதான் நிதர்சனமான உண்மையென்பதையும் அறிந்து கொண்டு, இந்திய பூர்ஷ்வா/முதலாளி வர்க்கம் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டத்தையும், காங்கிரஸ் பேரியக்கம் உண்மையிலேயே இந்திய முதலாளிகளின் நலனுக்கானதுதான் என்பதையும் தோலுரித்துச் சொல்கிறார்.

காங்கிரஸ் பேரியக்கம் பல்வேறு போராட்டங்களை காந்தியின் தலைமையில் நடத்துகையில், அடுத்தடுத்து மோதிலால் நேரு, படேல், ஜவகர்லால் நேரு, அபுல்கலாம் ஆசாத் போன்ற அடுத்தகட்டத் தலைவர்கள் உருவாகி வருவதையும் அவர்களின் ஆளுமையையும் தெளிவுபடுத்துகிறார்.

இந்தச் சூழலில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிப் போக்கின் வழியே இந்தியாவின் பொதுவுடைமை இயக்கம் உருவாகி வளர்ச்சியுறுவதை கால வரிசைப்படுத்தி விவரிக்கிறார். எம்.என்.ராய் தொடங்கி முஸாபர் அகமது போன்ற தலைவர்கள் பொதுவுடமை இயக்கத்தைக் கட்டமைக்க முயன்றதையும், காங்கிரஸ் அமைப்பிற்க்குள்ளேயே இருந்து (பரந்தளவிலான பொதுமக்கள், தொழிலாளர்கள் போன்றவர்களுக்காக) உள்ளிருந்து கட்டுப்படுத்தி காங்கிரஸ் இயக்கம் சரியான நெறிகளில் செல்வதற்கு முயன்றதையும் விவரிக்கிறார். குறிப்பாக 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் உள்நேக்கங்களை வெளிப்படுத்தும் விதமாகவும் பொதுவுடைமை இயக்கத்தை கொச்சைப்படுத்தும் விதமாக காங்கிரசார் நடந்து கொண்டதையும் அன்றைய நிலையில் சர்வதேச அரசியல் போக்குகளுக்கு இணங்க பொதுவுடைமை இயக்கம் மேற்கொண்ட உத்திகளும் திசைவழியும் நியாமானதுதான் என்பதையும் விரிவாக விளக்கிச் செல்கிறார்.

தெலுங்கானா ஆயுத எழுச்சியின் உண்மையான தன்மையையும், அதன் பல்வேறு விதமான கூறுகளையும் பொதுவுடமை இயக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் அடக்குமுறையைக் கைக்கொண்டதையும் தெளிவுபடுத்துகிறார்.

சைமன் கமிஷன் வருகையை எதிர்த்து பஞ்சாபில் லாலா லஜபதிராய் மக்கள் இயக்கத்தை தலைமை தாங்கி ஊர்வலம் சென்றபோது பிரிட்டிஷ் போலிஸ் அதிகாரி விண்டர்ஸ் ஊர்வலத்தை கலைப்பதற்காக தடியடி நடத்தியதில் லஜபதிராய் காயமடைந்து மரணமடைகிறார். இதைக்கண்ட பஞ்சாப் இளைஞர்கள் வெகுண்டெழுந்து இதற்கு பழி தீர்ப்பதற்காக முயன்று பகத்சிங் தலைமையில், ‘நவ ஜவான் பாரத் சபா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, விண்டர்ஸை சுட்டுக் கொலை செய்கிறார்கள். எனவே அகிம்சைப் போர், ஆயுதங் தாங்கிய போராட்டமாக வடிவெடுக்கும் நிலைக்குச் சென்றது. விழித்துக் கொண்ட ஆங்கில அரசு கடுமையான அடக்கு முறைகளை ஏவியது. பின்னர் டில்லி பார்லிமெண்ட் மேல்சபையில், சுகதேவ், பகத்சிங், ராஜகுரு ஆகிய மூவரும் டம்மி வெடிகுண்டுகளை வீசி துண்டுப் பிரசுரங்களை வீசி வெள்ளையர்களுக்கு ஒர் அச்சுறுத்தலாகவும், எச்சரிக்கை செய்யும் விதமாக விளங்கினர். இந்தச் சம்பவத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர். சதிவழக்கு புனையப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. சிறையிலும் அவர்கள் செயலற்று இருக்கவில்லை, உண்ணவிரதம், ஆர்ப்பட்டம், அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் என பல்வேறு விதமான போராட்ட வடிவங்களை மேற்கொண்டார்கள். சிறைக்கைதிகளை கொடுமை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதமிருந்த வங்கத்து ஜதீந்தாஸ் 45வது நாளில் மரணமடைந்தார். இது நாடு தழுவிய ஒரு பெரிய எதிர்ப்புப் பேரலையை உருவாக்கியது. பகத்சிங் அவர்களுடைய தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று நாடெங்கும் கோரிக்கை குரல்கள் எழுந்தன. அந்த சமயத்தில் இர்வின் பிரபுதான் இந்தியாவின் வைஸ்ராயாக இருக்கிறார் எனவே மரண தண்டனையை நிறைவேற்றும் வகையில் வைஸ்ராய் தேதியை அறிவித்தது நாட்டு மக்களுக்குக் கோபத்தையும், ஆத்திரத்தையும் அதேசமயத்தில் கவலையையும் ஏற்படுத்தியது.

இத்தகைய சூழலில் தான் தீவிரமான சட்ட மறுப்பு இயக்கம் நடந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கும் வெள்ளை அரசாங்காத்திற்குமிடையே ஒரு ரகசிய உடன்பாடு ஏற்பட்டு வருகிறது என்றும், போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்றும் பரவலாக ஒரு கருத்து மக்கள் மத்தியில் உருவாகி வந்தது. 1931 மார்ச் 5ம் தேதி காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்த்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இரண்டு விதமான உணர்வுகள் காங்கிரஸ் தலைவர்களிடையே நிலவி வந்தன. அந்த ஆண்டு மார்ச் இறுதியில் கராச்சியில் நடை பெற்ற மாநாட்டிலும் இதே போன்ற உண்ர்வுகள் வெளிப்பட்டன.

இந்த ஒப்பந்தமானது அறப் போராட்டக்காரர்களை மட்டும் விடுதலை செய்வதற்க்கு வழிவகுத்தது. வெடிகுண்டு அரசியல் மற்றும் கம்யூனிஸ்ட் வழிமுறைகள், தொழிற்சங்கவாதிகள் ஆகியவர்களின் விடுதலையைப் பற்றி இந்த ஒப்பந்தம் தன் வரம்பிற்க்குள் கொண்டுவரவில்லை. பகத்சிங்கின் மரண தண்டனையைக் குறைப்பதற்கு மறுத்துவிட்ட வைஸ்ராயுடன், காந்தி ஒப்பந்தம் செய்து கொண்டதே மக்களின் மன அமைதியைக் குலைத்திருந்தது. காந்தி அவரிடம் பகத்சிங்கின் மரண தண்டனையை நீக்குவது பற்றி எதுவும் பேசவில்லை. உலக வரலாற்றில் ஆயுதமேந்திப் போராடிய போராளிகளின் செயல்கள் சரியானது தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் காந்தியின் இந்த நடவடிக்கையானது நம்மை அடக்கியொடுக்கிய வெள்ளையர்களுக்கு, மறைமுகமான ஆதரவாகத்தான் எண்ண வேண்டியுள்ளது என்பதை ஆசிரியர் இந்த நிகழ்வுகள் வழியாக விவரிக்கிறார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் காந்தியின் அனைத்து விதமான செயல்பாடுகளும், சிந்தனைப் போக்குகளும் உயர்வானது என்ற உன்னதமான இடத்தில் வைத்து ஒரு பெரிய பிம்பமாக வரலாற்றாசிரியர்கள் வடிவமைத்துக் கொண்டதையும், ஒரு பெரிய மனிதன் என்ற முறையில் இந்த பிம்பம் உடையப்பட்டு நொறுங்கிப் போனதயும் காந்தியின் இந்த செயல் மூலம் அம்பலப்பட்டுப் போனது என்பதை ஆசிரியர் விரிவாக விவரிக்கிறார்.

இந்திய விடுதலைக்கு பயன் கருதாது அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்று கட்டமைக்கப்பட்ட ஒரு வடிவத்தின் பின்னே எவ்வளவு கொடூரமான மனம் செயல்பட்டது என்பதையும் நமக்குத் தெரிவிக்கிறார். எனவே காந்தி யார் என்பதும், யாருக்காக உண்மையிலயே செயல்பட்டார் என்பதும், அவருக்குப் பின்னே எத்தகைய சக்திகள் இருந்தன என்பதும் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறார். கராச்சி மாநாடு 29ம் தேதி, மாநாடு நடைபெறும் நேரத்தில் பகத்சிங்கும் அவரது தோழர்களுக்கும் தூக்கிலிடப்பட்டால் காங்கிரசுக்கும் காந்திக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை உணர்ந்திருந்த வைஸ்ராய், மாநாடு முடிவடையும்வரை தூக்குத்தண்டனையை நிறைவேற்றாமல் ஒத்திவைப்புக்கு முனைந்தார். அந்த ஆலோசனையை காந்தி நிராகரித்துவிட்டார். ‘இந்த இளைஞர்களை தூக்கிலிடுவதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகளைத் தான் சந்திப்பதற்க்குத் தயார்’ என்றும், ‘இப்பிரச்சனையில் எத்தகைய சலுகையும் தமக்குத் தேவையில்லை‘ என்றும் கூறியதால், இதனையடுத்து மார்ச் 23ல் பகத் சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்டனர். மாநாடு 25ம் தேதி துவங்கியது.

போராட்டங்கள் என்று நாம் செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் போது, இத்தகைய வடிவங்கள் உருவாவது இயற்கை. அகிம்சைதான் உயர்வானது, பலாத்காரம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற போர்வையில், மகத்தான அரசியல் தலைவர்களாக உருவாகக் கூடிய இளைஞர்களின் (அநியாயமாகப்) பறிக்கப்பட்ட உயிருக்கு ஈடாக எத்தகைய சித்தாந்தத்தை முன்னிருத்தியும் அதை நியாயப்படுத்த முடியாது.

காந்தி, நேரு, ஜின்னா, போஸ் போன்ற தலைவர்களின் தனிப்பட்ட உணர்வுகள் எவ்வாறு சுதந்திரப் போராட்டத்திற்க்கு ஆதரவாகவும், அதே சமயம் எதிராகவும் அமைந்திருந்தது என்பதையும், முதல் உலகப் போருக்குபின் நடந்த ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்ற போராட்டங்களில் மக்களைத் திரட்டியது என்பது இந்தப்போராட்டங்களின் வழி வெள்ளையர்களோடு சமரசம் செய்து கொள்ளுவதற்கான ஓர் உத்தியாகத்தான் இருந்தது என்பதை தெளிவுபடுத்துகின்றன.

காந்தியின் ஆளுமையின் மற்றொரு பரிமாணம் அம்பேத்கர் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத அளவிற்கு உண்ணாவிரதமிருந்து அவரை நிராசைபடவைத்ததிலும் வெளிப்பட்டது. நேரு ஒரு இடதுசாரி என்ற கட்டமைப்பையும், உண்மையில் அவர் யார் பக்கம் என்பதையும் உடைத்துச் சொல்கிறார். கொள்கையில் ஊசலாட்டம் கொண்ட ஆளுமையுடையவர் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதிகாரத்தை வெள்ளையர்கள் நம்மிடையே அளிப்பதற்க்கு நாட்களைத் தள்ளும் வகையில் நம்மிடையே உள்ள இன, மத அடையாளங்களைப் பயன்படுத்தி இந்து-முஸ்லீம் கலவரங்களைத் தூண்டி லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்த சூழலையும், ஜின்னா மற்ற முஸ்லீம் தலைவர்கள், முஸ்லீம் சமூதாயத்தில் உருவான முதலாளிகளின் பிரதிநிதிகள் என்பதையும், எனவே அவர்கள் அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கு முனைப்பாகச் செயல்படும் வழியாகவே இந்தியப் பிரிவினை ஏற்பட்டதையும், நேரு, வல்லபாய் படேல் போன்ற தலைவர்கள் அதிகாரத்தை நுகர்வதற்கு ஆவலாக இருந்ததைப் போல, முஸ்லீம் லீக் தலைவர்களும் அதிகாரப்பசி கொண்டிருப்பதையும் பார்த்த வெள்ளையர் நிர்வாகம், இவர்களிடையே பிளவை ஏற்படுத்தி ஒட்டு மொத்த இந்தியாவின் விடுதலையை தள்ளிப் போடுவதற்கான உத்தியை வகுத்து, அதற்கு இவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தியதை தெளிவுபட விவரிக்கிறார்.

இனம் மதம் போன்ற இயல்பான உணர்வுகளைப் பயன்படுத்தி மானுட உணர்வுகளையும், மானுட வாழ்வின் உன்னதமான விழுமியங்களை தங்களின் அதிகாரப் பசிக்கு உணவாக்கி, லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட சூழலில் தங்கள் அதிகாரம் தான் பெரிது என்று கருதிய பல பெரிய மனிதர்களின் முகங்களுக்குப் பின்னே உள்ள கறைபடிந்த பிம்பங்களை நமக்குத் தெளிவுபடுத்துகிறார்.

இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இந்தக்காலகட்டம் மிகவும் துயரம் வாய்ந்ததாக இருந்தது. அதே சமயம் இக்காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் பின்னே இருந்த தலைவர்களின் சுயநலத்தை எண்ணி ஆத்திரம்தான் ஏற்படுகிறது. எனவே இந்திய விடுதலை என்பது காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தில் மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்களின் குருதி சிந்தப்பட்டதின் மேல்தான் பெறப்பட்டது என்பதும் நமக்கு தெளிவாகிறது. சுபாஸ் போஸ் அவர்களுடைய பங்களிப்பு இந்திய விடுதலைப் போரில் மகத்தானது என்றாலும் இடதுசாரிப் போக்குள்ளவர் என்ற தோற்றம் அவரைப் பற்றிக் கட்டமைத்திருந்தாலும், கடைசியில் நாஜிகளோடும், ஜப்பானியர்களோடும் சேர்ந்து ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவை விடுவிக்கலாம் என்ற அவருடைய கருத்த்மைவும் அதையொட்டிய அவருடைய ராணுவ நடவடிக்கையையும் நம்மால் செரித்துக் கொள்ள முடியாது என்பதை விரிவாக விளக்குகிறார்.

படிப்பதற்க்கு சரளமான நடையில் நூலை தமிழாக்கியவர், கி. இலக்குவன். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி, அதன் தொழிற்சங்க அரங்கிலும் தீவிரமாக உழைத்தவர். மொழிபெயர்ப்பு நிதானமான நீரோட்டம் போன்று வாசிப்பில் உறையப்பட்டாலும் ஒரு சில இடங்களில் சலிப்பைத் தோற்றுவிக்கிறது. இது அவருடய விவரிப்பு மொழியின் தன்மையா? என்பது பரிசீலிக்கப்பட வேண்டியது.

1947-ல் கடற்படை கலகம் பற்றி இதில் விரிவாக விளக்கப்படவில்லை என்றாலும் அப்பொழுது பம்பாய் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், நாடெங்கும் கொந்தளிப்பான உணர்வுகள் மேலோங்கியிருந்ததாலும் இவற்றை ஒருங்கிணைத்துப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்துவதற்கு காங்கிரஸ் பேரியக்கம் தயங்கியதால் அதன் விளைவுகள் பிரிட்டிஷாருக்குத்தான் சாதகமானது என்பதை விரிவாக விளக்கிச் செல்கிறார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை தலைமை தாங்கி காங்கிரஸ்தான் வழி நடத்த வேண்டுமென்று மிகவும் எதிர்பார்த்தனர் என்றும், அப்பொழுது அதை பயன்படுத்தி பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு பொதுவுடமை இயக்கம் வலிமையற்று இருந்தது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இந்தக்கடற்படை கலகம் தான் இந்தியவிடுதலையை துரிதப்படுத்தியது என்ற உண்மையை விளக்குகிறார். நமது விடுதலைப் போராட்டத்தில் காந்தியை பற்றிய பொய்யான பிம்பங்களைதான் மற்ற ஆசிரியர்கள் கட்டமைத்திருந்தார்கள். ஆனால் நூலில் ஆசிரியர் எந்த விதமான பக்கச்சாய்வில்லாமல் காந்தி போன்றவர்களுடைய ஆளுமையின் இருண்ட பகுதியை வெளிச்சப்படுத்திக் காட்டியிருக்கிறார்.

சிறந்த வடிவமைப்பும், அச்சுப் பிழைகளற்றும் பாரதி பதிப்பகம் சிறந்த முறையில் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது, ஒரு தகவல் பிழையைத் தவிர.

இன்றைய காங்கிரஸ் கலாச்சரம் என்பது, அதிகார வெறி, கோஷ்டிப் பூசல், தன்னை மையப்படுத்துதல், போன்ற தலைமைப் பண்புகளுக்கு மாறான, குணங்களின் வேர்கள், அன்றைய காங்கிரஸ் பேரியக்கத்தில், மிக ஆழமான முறையில் வேரோடிப் போயிருப்பதையும், இந்நூல் மூலமாக தெரிந்து கொள்கிறோம்.

மானுட வாழ்வின் உன்னதமான விழுமியங்கள், நெறிமுறைகள் ஆகியவற்றைச் சிதைத்து, அதன் விளைவான வகுப்புக் கலவரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பலியானதைக் கண்டும், அதைப் பற்றி எந்தவித உறுத்தலற்றும், குற்ற உணர்வற்றும், பதவியைக் கைப்பற்றி அதிகாரத்தை நுகர்வதற்க்கு ஆவலாய் பறந்த வரலாற்றின் துயரம் கலந்த நிகழ்வு தான் இது என்பதை நாம் உணரலாம். இதை E.M.S. தான் பங்கெடுத்துக்கொண்டதால் தன் பார்வையில் நிகழ்வுகளை ஒரு வரலாற்றாளரைப் போல் விவரித்து காந்தி கொலையான நாள் 1948 நிகழ்வோடு முடிக்கிறார்.

இத்தகைய அரசியல் விடுதலை பெற்ற நாம் அதை சரியாக பயன்படுத்தி மக்களை சரியான வழியில் நெறிபடுத்தி வருகிறோமா? என்ற கேள்விகளை இந்நூல் எழுப்புகிறது.

(2010 நவம்பர் 7 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ‘மதிப்பு’ கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)

Tuesday, November 16, 2010

இரத்தப் படலம் XIII ஐ முன்வைத்து - கேகே


          ஒரு வழியாக வந்துவிட்டது ‘இரத்தப்படலம்’. சுமார் 2 ஆண்டுகள் வாசகர்களைக் காக்கவைத்தபிறகு மகா ‘மெகா’ சைஸில் வந்தேவிட்டது லயன் காமிக்ஸின் இரத்தப்படலம். 858 பக்க தடிமனான அந்த காமிக்ஸ் புத்தகத்தை கையில் ஏந்தும் எந்தவொரு காமிக்ஸ் வாசகனும் சிலிர்த்துத்தான் போவான். காமிக்ஸ் உலகில் நிச்சயமாய் இது குறிப்பிடத்தக்க முயற்சிதான்.

          காமிக்ஸ் எனப்படுகின்ற சித்திரக்கதை அல்லது படக்கதைகளை - வாசிக்கும் பழக்கம் கொண்ட - அனைவரும் கடந்துதான் வந்திருப்போம். குறைந்த பட்சம் ‘கன்னித்தீவின்’ கரைப்பக்கமாவது ஒதுங்கியிருப்போம்.

          சில நாளிதழ்களில் தினமுமோ, வாரச் சிறப்பிதழ்களிலோ அல்லது வார இதழ்களிலோ 3,4 படங்களில் படத்துடன் ஒரு கதையும் இடம் பெற்றிருந்தன சுமார் பத்தாண்டுகளுக்கு முன்புவரை. இன்றைக்கும் சில ஆங்கில நாளிதழ்களிலும் சில தமிழ் நாளிதழ்களிலும் தொடர்கின்றன. குமுதம், ஆனந்த விகடன் போன்ற வெகுஜன ரசனை மட்டத்தில் இயங்கும் சில (வணிக) இதழ்கள் காமிக்ஸைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. ‘பிளாஷ்கார்டன் காமிக்ஸ்’ - குமுதத்தில் 90களில் தொடராக வந்தது இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது. 50,60-களில் நிறைய நகைச்சுவைப் படத்தொடர்கள் (துப்பறியும் சாம்பு...), துப்பறியும் தொடர்கள் வந்நதுள்ளன. தற்போதும் அரசியல் நிகழ்வுகளை நையாண்டி செய்வதற்கு இந்த காமிக்ஸ் வடிவம் ஒரு நல்ல வசதியாய் இருக்கிறது.

காமிக்ஸ் அல்லது படக்கதை என்றால் என்ன?

ஒரு கதையோ அல்லது ஒரு சிறு நிகழ்வையோ நிறைய படங்களுடன் மட்டுமோ, தேவையான குறைந்தளவு விவரணைகள், உரையாடல்களுடனோ கூறுவது படக்கதை எனலாம். இங்கு படமே பிரதானம். சுருக்கமாகச் சொன்னால் அதிகபட்ச சாத்தியங்களுடனான படங்களுடன் ஒரு கதையை/நிகழ்வைக் கூறுவது படக்கதை எனலாம்.

          இங்கு இயல்பாய் ஒரு கேள்வி எழும். படங்களுடன் கதை சொல்வது எனில் கார்ட்டூன், கேரிகேச்சர், காமிக்ஸ் (Cartoon, Caricature. Comics) இவையெல்லாம் ஒன்றா...? கேரிகேச்சர் என்பது கேலிச் சித்திரம். குறிப்பிட்ட கதா பாத்திரங்களின் - நபர்களின் அங்க அசைவுகளை, நடவடிக்கைகளை, குணாதிசயங்களை கேலியான பாவனையில் வரைந்து வெளிப்படுத்துவது கேலிச்சித்திரம். ஒரு கருத்தையோ, கதையையோ, நிகழ்வையோ படங்களுடன் விளக்குவது கார்ட்டூன் எனப்படும் படத்தொடர். (நிறைய கார்டூன்களுக்கு உரையாடல், விவரணைகள் தேவைப்படுவது இல்லை. ஒற்றைப் பட கார்டூன்களும் இப்பொழுது நிறைய வருகின்றன) நகைச்சுவை இழையோடும் கேலியான படங்கள் இதன் சிறப்பம்சம். மனிதனையே வரைந்தாலும் சற்றேனும் மிகையான அல்லது கேலியாக - ஒல்லிக் கால்கள், பூசணித்தலை, குண்டு உடம்பு, முட்டைக் கண்கள், யானைக் காதுகள் வரையப்படும். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், இன்றைய நாளிதழ்களின் மதி, மதன் கார்டூன் வரை நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

          இந்த கார்டூன்களை அப்படியே திரையில் நொடிக்கு 24 பிரேம்கள் வீதம் ஓடவிட்டால் அதுதான் கார்டூன் படங்கள். டாம் அண்ட் ஜெர்ரி, பாபே (Popeye) டோரா போன்றவை. இவை புத்தக வடிவிலும் திரை வடிவிலும் வருகின்றன.

          இந்தக் கார்டூன்களையும், உள்ளடக்கியதாய் நகைச்சுவை மட்டுமன்றி காதல், சோகம், வீரசாகசம், திகில் என பல்வேறு உணர்வு தளத்தில் கதைக் களங்களைக் கொண்டது காமிக்ஸ் எனப்படும் படக்கதைகள். ஆனால் பொதுவாய் காமிக்ஸ் என்றவுடன் நாம் நகைச் சுவைக் கதைகள் என்றே நினைக்கிறோம். ‘காமிக்’ என்றாலே நகைச்சுவை என்றுதான் அர்த்தம். ஆனால் சூப்பர் மேன், டார்ஜான், XIII போன்றோரும் காமிக்ஸ் கதைகளில் வலம் வருகிறார்கள் என்பதிலிருந்தே காமிக்ஸை நாம் பிரித்தறிய முடியும்.

          Cartoon, Caricature, Comics strip, Comics story என இவற்றைப் பற்றி வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் நிறைய தகவல்கள் கிடைக்கின்ற நிலையில் காமிக்ஸைப் பற்றிய சில விஷயங்களை தமிழில் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

காமிக்ஸ்

          காமிக்ஸ்களை - கதை உருவாக்கப்படுமிடங்கள் (கதை தயாரிப்பாளர்கள் - கதாசிரியர் உட்பட) கதைக்களங்கள், கதை நிழும் சூழல், கதை மாந்தர்கள், கதைகளின் உள்ளடக்கம் இவற்றைப் பொறுத்து வகைப்படுத்தலாம்.

          1. அதீத சக்தி கொண்ட அசாத்திய வீரர்களைக் கதைநாயகர்களாகக் கொண்டவை. அதிவீர சாகசமே இக்கதைகளின் மையம். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஹி மேன் (எல்லாம் மேன்கள்தாம். பின்னாளில் போனால் போகிறதென்று பென்டாஸ்டிக் ஃபோர் போன்றவற்றில் குழுவில் ஒருவராக ஒரு பெண் வருவார்) இந்த வீரர்களின் எதிரிகள் பராக்கிரமசாலிகளாக (வேற்றுலகவாசிகளாக) இருப்பார்கள். பெரும்பாலும் உலகைக் காக்கும் பணியில் ஈடுபடுவார்கள். ஆக்ஷன் காமிக்ஸின் சூப்பர்மேன் நிறைய மேன்களுக்கு இரத்தினக் கம்பளம் விரித்து வைத்தார்.

          2. யதார்த்தமான மனிதர்களைக் கொண்ட நடைமுறை வாழ்விலிருந்து கதைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. வீரம், காதல், புத்தி சாதுர்யம், செயல்வேகம் என ரொமான்டிச பாணியில் அமைந்த கதைகள் ஒரு வகை. இக்கதை மாந்தர்கள் சாதாரணமானவர்கள். உணர்ச்சிவயமிக்கவர்கள். உடல் ஆற்றல், மனஉறுதி படைத்தவர்கள். டார்ஜான், பேண்டம், ஷீனா போன்றவர்கள். வியத்தகு உடலாற்றல் பெற்றவர்கள். அதிரடி சண்டைகள் நிறைந்த கௌ-பாய் கதைகளும் இதிலடங்கும்; காதலும், சோகமும் பொங்கும் காதல் கதைகளை மட்டுமே வெளியிடும் காமிக்ஸ் நிறுவனங்களும் உள்ளன.

          3.காமிக்ஸ் கதைகளில் குறிப்பிடத்தகுந்த அளவிலானவை துப்பறியும் கதைகள்தாம். 60,70 களில் உலகமெங்கும் இந்தப் பாணியிலான கதைகள்தாம் நிறைய வந்தன. மர்மங்களை அவிழ்ப்பது, குற்றங்களைப் புலனாய்வு செய்வதான பாணியில் விறுவிறுப்பான தன்மையில் கதை சொல்லப்பட்டிருக்கும். ஜேம்ஸ்பாண்ட், ரிப்கெர்பி, காரிகன், இந்தியாவில் இன்ஸ்பெக்டர் கருடா, சங்கர்லால் போன்றோர் புகழ்பெற்ற நாயகர்கள். துப்பறியும் மேதை எனப்புகழ்பெற்ற ஷெர்ல்லாக் ஹோம்ஸ் காமிக்ஸ் வடிவில் பெரிதும் எடுபடவில்லை என்பது வியப்பான விஷயம்தான். இக்கதைகளில் போதுமான அளவு திடீர் திருப்பங்களும், விறுவிறுப்பும் இல்லை என்பது தோல்விக்கு ஒரு முக்கிய காரணம். இவை தவிர யுத்தங்களை மையமாய் வைத்து உளவாளிகள், இராணுவ தளவாடங்கள், பீரங்கிகள் என யுத்த மேகங்கள் சூழ்ந்த கதைகளுக்கு குறிப்பிட்ட வாசகர் வட்டம் உலகெங்கிலும் உண்டு. இவை தவிர திகில் கதைகள், பேய்க்கதைகளும் கணிசமாக வெளிவருகின்றன.

          4. அறிவியல் புனைகதைகள் என்ற பெயரில் புருடாக்களை அள்ளிவிடும் கதைகள் ஒருவகை. அநேகமாக சைன்ஸ் ஃபிக்சன் என்று சொல்லப்படும் கதைக் கருக்களை என்றைக்கோ கடந்துவிட்டன இந்தவகைக் கதைகள். மர்ம மனிதன் மார்டின், விண்வெளி வீரர் ஃபிளாஷ்கார்டன், யந்திர மனிதன் ஆர்ச்சி இன்னும் வேற்று கிரகவாசிகள் பற்றிய கதைகள் நிறைய. ‘கன்னா-பின்னா’ வென்று தொழில்நுட்பம் வளர்ந்ததாகக் காட்டும் ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி போன்ற அறிவியல் இல்லாத (அறிவியல்) தொழில்நுட்பக் கதைகள் ஏராளம். இதில் கம்ப்யூட்டர், ரோபோட், எல்லாம் ‘ENIAC’ காலத்திலேயே. ஆர்தர் சி.கிளார்க், ஐசக் அஸிமோவ், ஹெச்.ஜி.வெல்ஸ் இவர்களை மிஞ்சுமளவிற்கு கதைக்கப்பட்ட கதைகள் இவை. ‘அறிவியல் விநோதங்க’ளை விட ‘விநோத அறிவியலு’க்கு முக்கியத்துவம் தந்தன இவ்வகை காமிக்ஸ் கதைகள்.

          5. உலகின் உன்னதமான இலக்கியங்களை காமிக்ஸ் வடிவில் எளிமையாக குழந்தைகளுக்கும், பாமரருக்கும் கொண்டு சேர்த்தவை ஒரு வகை. அழியாக் காவியங்களை இப்படிச் சுருக்கி மடித்துத் தருவது உவப்பான விஷயமில்லைதான் எனினும் இளஞ்சிறார்க்கான ஓர் எளிய அறிமுகமாக இம்முயற்சியை ஏற்றுக் கொள்ளலாம். அவ்வகையில் ஷேக்ஸ்பியரின் சில குறிப்பிட்ட படைப்புகள், ஜேன் ஆஸ்டினின் மேன்மையான நாவல்கள், செர்வாண்டிஸின் ‘டான் க்விஸாட்’ ரூப்யார்ட் கிப்ளிங்கின் ‘ஜங்கிள் புக்’ போன்ற கதைகள், கிரேக்க புராணங்கள், இந்திய இதிகாசக் கதைகள் போன்றவை காமிக்ஸ் வடிவில் வெளிவந்து இளம்பருவ வாசிப்பினை பரந்த தளத்தில் எடுத்துச் செல்கின்றன. அதே நேரத்தில் மதம் சார்ந்த ‘பைபிள் கதைகள்’ ‘இந்து கடவுளர் கதைகள்’ மற்றும் பிற மதக்கதைகளும் வெளிவந்து மதரீதியான சிந்தனைகளை உருவாக்கவும் செய்தன.

          6. குறிப்பிடத்தகுந்த ஒரு முக்கியமான வகை குழந்தைகளுக்கான காமிக்ஸ். குழந்தைகளுக்கான காமிக்ஸா? அப்படியானால் மற்ற காமிக்ஸ் கதைகள்? உண்மையில் காமிக்ஸ் என்றாலே குழந்தைகளுக்கானவை என்னுமளவிற்கு காமிக்ஸ் உலகில் குழந்தைகளும், குழந்தைகள் உலகில் காமிக்ஸும் உலாவுகின்றனர். காமிக்ஸ் படிப்பவர்கள் பல்வேறு வயதினராய் இருந்தபோதிலும் குழந்தைகளுக்கான - குறிப்பாய் நகைச் சுவைக்கதைகளே நிறைய வெளிவருகின்றன. விலங்குகள், பறவைகள், தாவரங்கள், பூச்சிகள் இவற்றோடு (அதிசய) மனிதர்கள் பற்றிய கதைகள், பல்வேறு நாடுகளின் நாடோடிக் கதைகள், தேவதைக் கதைகள் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. சிண்ட்ரெல்லா, மிக்கி மௌஸ், லயன் கிங், பீர்பால், தெனாலியின் நகைச்சுவைக் கதைகள் போன்றவை நல்ல உதாரணங்கள். எல்லா காமிக்ஸ் கதைகளையும் இந்த வகைமைச் சட்டத்திற்குள் நிறுத்திவிடலாம்.

          சூப்பர் மேன், ஸ்பைடர் மேன்... இன்னும் நிறைய மேன்கள், டின்-டின், ஆர்ச்சி, ஆஸ்ட்ரிக்ஸ் ஒபிலிக்ஸ், XIII, ரிப்கெர்பி, ஜேம்ஸ் பாண்ட், மிக்கி மௌஸ் போன்றவை (இன்னும் நிறையவே உள்ளன) உலகப் புகழ் பெற்றவை.

          இந்திய அளவில் பைகோ, சம்பக் (PAICO, CHAMPAK) போன்றவை புகழ் பெற்றவை. மேலும் பல்வேறு மாநில மொழிகளிலும் குறிப்பிடத்தகுந்தளவில் காமிக்ஸ்கள் வெளிவருகின்றன.

          என்னைப் பொறுத்தவரை தமிழில் காமிக்ஸின் பொற்காலம் என்றால் நான் எழுதப் படிக்கக் கற்று வளர்ந்த 80கள்தாம் என்பேன். 70களின் இறுதியிலிருந்து 90களின் மத்திமம் வரை காமிக்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

          அணில், பாலமித்ரா, அம்புலிமாமா, ரத்னபாலா, பூந்தளிர், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், இராணி காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், மேகலா காமிக்ஸ், அமர் சித்திரக் கதைகள், பார்வதி சித்திரக் கதைகள், தினமணி, தினமலரின் சிறுவர் இதழ்கள், கோகுலம் என திகட்டத் திகட்ட சிறுவர் இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்த காலமி(ம)து.

          இவற்றுள் பாலமித்ரா, அம்புலிமாமா போன்றவை காமிக்ஸ் இல்லாத சிறுவர் இதழ்கள். கோகுலம், பூந்தளிர் போன்ற இதழ்கள் காமிக்ஸ் கதைகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. இதில் ‘பூந்தளிர்’ வட இந்திய சம்பக், பைகோவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நிறைய படக்கதைகளைப் பயன்படுத்திக் கொண்டது. காக்கை காளி, வேட்டைக்கார சாம்பு, கபீஷ், நாடோடிக்கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள் போன்றவை குறிப்பிடத்தகுந்தன. பின்னாட்களில் நான் படித்த உலக நாடோடிக் கதைகள் பலவும் அதில் வந்திருந்தன. மலையாளத்திலும் ‘பாலரமா’ என்ற பெயரில் ஒரு பல்சுவை சிறுவர் இதழ் (கோகுலம் போல்) இன்னமும் வந்து கொண்டிருக்கிறது. இன்று தமிழில் ‘சுட்டி விகடன்’ பரவலான கவனிப்பைப் பெற்ற போதிலும் குழந்தைகளின் உலகினை சுட்டிவிகடனால் சரியாய்ப் புரிந்து கொள்ள முடியவில்லையோ எனத் தோன்றுகிறது.

          70-களின் இறுதியில் துவங்கப்பட்ட முத்து காமிக்ஸ் தமிழக காமிக்ஸ் வரலாற்றில் மிகப் பெரிய மாறுதலைச் செய்தது. ‘இரும்புக்கை மாயாவி’ என்று அந்த காமிக்ஸ் அறிமுகப்படுத்திய ஓர் அசாத்திய வீரனின் சாகசங்கள் நம்பமுடியாதவை. ஆனால் கிளர்ச்சியூட்டுபவை. இன்னமும் பேட் மேன் போன்ற அமானுஷ்ய கதைகளை நிறைய வெளியிட்டது முத்து காமிக்ஸ்.

முத்து காமிக்ஸைத் தொடர்ந்து 80களில் லயன் காமிக்ஸ், மினிலயன், காமிக்ஸ் கிளாஸிக்ஸ், திகில் காமிக்ஸ் என வகைவகையாய் காமிக்ஸ்கள் வெளிவந்தன. அதிரடி சண்டைகள், சாகசம், திகில், அமானுஷ்யம், அறிவியல் கற்பனைகள், கௌபாய் கதைகள், நகைச்சுவைக் கதைகள் என ஏகப்பட்ட கதைகள் வழியே டெக்ஸ் வில்லர் (பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல) கேப்டன் டைகர், லக்கிலூக், சிக்பில், ப்ரின்ஸ், ஜானி, ஜார்ஜ், ஆர்ச்சி, ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி, மாண்ட்ரேக், மாடஸ்டி பிளைஸி, நார்மன், கறுப்புக்கிழவி போன்ற வகை வகையான அருமையான கதாபாத்திரங்களை தமிழ் காமிக்ஸிற்கு அறிமுகப்படுத்தினார்கள். இக்கதைகளை வெளிநாட்டு (காமிக்ஸ்) நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். (லயன்காமிக்ஸ் அச்சிடமான சிவகாசியில் லயன்காமிக்ஸ் என்று கேட்டால் நிறையப் பேருக்குத் தெரியவில்லை - படித்தவர்களுக்கும்)

          பொன்னி, மேகலா, கண்மணி என சில காமிக்ஸ் இதழ்கள் வெளிவந்த போதிலும் தரமான கதைகள் படங்கள் இல்லாததால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ராணி காமிக்ஸ் ஜேம்ஸ்பாண்ட், முகமூடி வீரர் மாயாவி (புகழ் பெற்ற பேண்ட்டம் - முன்பே வேதாளம் என்ற பெயரிலும் வந்திருக்கிறது) கதைகளை நிறைய வெளியிட்டது. ஆனால் தற்போது தரமற்ற கதை-படங்களுடன் (பெரும்பாலானவை ஏனோ-தானோ ரகம்) பொலிவிழந்து நிற்கிறது. தற்போதைக்கு காமிக்ஸ் என்ற அளவில் லயன், முத்து காமிக்ஸ் மட்டும்தான் ஓரளவு தாக்குப்பிடித்து நிற்கிறது. அதுவும் குறைந்த எண்ணிக்கையிலான காமிக்ஸ் ‘காதலர்’களால். வெளிநாட்டுக் கதைகளை இறக்குமதி செய்யும்போது மிக அதிக செலவாகிறது. (அங்கு படைப்பாளிக்கான ராயல்டி அதிகம்) உலகளவில் புகழ் பெற்ற ‘டின்-டின், ஆஸ்டிரிக்ஸ்’ காமிக்ஸ் கதைகள் பெரிய அளவில் கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன் ‘வழுவழு’ காகிதத்தில் வெளிவருகின்றன. விலையும் அதற்கேற்ப நம்மூர் மதிப்பில் 200 ரூபாயில்தான் தொடங்கும். இந்தியாவில்-தமிழ்நாட்டில் அது சாத்தியமில்லை 20 ரூபாய் என்பதே சில நேரங்களில் அதிகமென்பதால் ஒரு காமிக்ஸ் வெளிவருவது பெரும்பாடாகி விடுகிறது. அந்த சந்தை விலைக்கேற்பத்தான் காமிக்ஸ் தயாரிப்பும் (தரமற்ற காகிதம், சுமாரான அச்சு) அமைகிறது. காமிக்ஸ் கதைகளை வண்ணத்தில் படிப்பது தமிழ் வாசகனுக்கு நிறைவேறாக் கனவுதானே. (லக்கி லூக்கின் சில கதைகளை வண்ணத்தில் பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது) வெளிநாட்டுக் கதைகளைத் தவிர்த்து உள்ளூர்க் கதைகளை வெளியிடலாமென்றால் அரதப் பழசான கதைகள், உயிரோட்டமற்ற படங்கள் (வில்லியம் வான்ஸின் படங்களைப் பாருங்கள். உயிரோட்டம் என்றால் என்னவென்று தெரியும்.) சேர்ந்து பெரும் சொதப்பலாய் அமைகின்றன.

          குழந்தையாயிருக்கும்போது காமிக்ஸ் படித்தவர்கள்தாம் இன்று(னு)ம் படிக்கிறார்கள். புதிதாய்ப் படிப்பவர்கள் குறைவு. Comics Stripகளை வேகமாகத் திரையில் ஓட்டினால் அதுதான் கார்ட்டூன் தொடர். டி.வி,யில் 24 மணிநேர கார்ட்டூன் சேனல்களே நிறைய வந்துவிட்டன. பின் எந்தக் குழந்தை நிதானமாய் காமிக்ஸ் படிக்கும்...?

          ஆனாலும் லக்கிலூக் காமிக்ஸ் படிக்கும்போது ஏற்பட்ட நகைச்சுவை உணர்வும், மகிழ்ச்சியும் சுட்டி டி.வி.யில் ‘டெலக்ஸ் பாண்டி’யாகப் பார்த்தபோது... ‘சகிக்கவில்லை’ என்பதுதான் உண்மை.

          எந்த ஒரு ஊடகத்தையும் போலவே காமிக்ஸ் கதைகளும் வாசகனை குறிப்பிட்ட விதத்தில் பாதிக்கின்றன. காமிக்ஸ் வாசகனை ஒரு அமானுஷ்ய வெளிக்கு இழுத்துச் செல்கிறது. கற்பனை உலகில் சஞ்சரிக்க வைக்கிறது. விநோத உருவங்கள், பறக்கும் தட்டுகள் என மெய்மறக்கச் செய்கின்றது. ‘இரும்புக்கை மாயாவி’யின் வாசகனுக்கும் இரும்புக்கை வந்துவிடுகிறது. தன் (கற்பனை) எதிரிகளை வீழ்த்த ரிவால்வரையும், வின்செஸ்டரையும் உபயோகப்படுத்தத் தூண்டுகிறது. பழுதேற்பட்டு வீழும் விமானத்தை விரைந்து தாங்கிக் காப்பாற்றச் செய்கிறது. கானகக் கோட்டையைக் காவல் காக்கும் கொரில்லாவுடன் சண்டைபுரியச் செய்கிறது.

          இப்படி ஒட்டு மொத்தமாக வாசிப்பவனை கற்பனை உலகில் இருத்தி வைத்துவிடும் (எதிர்மறை) ஆற்றல் காமிக்ஸ் கதைகளுக்கு இருக்கத்தான் செய்கிறது. சில கௌபாய் கதைகள் செவ்விந்தியர்களுக்கெதிரான வகையில் அமைக்கப்பட்டிருக்கும். மதரீதியான காமிக்ஸ் கதைகள் இளம் சிறார்களை கடிவாளம் போட்ட குதிரைகள் போல் வளர்க்கின்றன.இப்படி தனிப்பட்ட எதிர்(மறை) விளைவுகள் உண்டெனினும் கவனமாக, பக்குவமாகப் பயன்படுத்தினால் காமிக்ஸ் கதைகள் வாசிப்பவரின் மனஉறுதியினை வலுப்படுத்துகின்றன. தளராமல் முயற்சி செய்யும் பக்குவத்தைத் தருகின்றன. நிதானமாக ஆனால் விரைந்து முடிவெடுக்கும் திறமையைத் தருகின்றன. கூர்ந்து நோக்கும் திறன், செயல்வேகம் போன்றவற்றை வலுப்படுத்துகின்றன. முக்கியமாய் வரம்பிலா கற்பனைத் திறனை அளிக்கின்றன. உண்மையில் 6-16 வயதுள்ள குழந்தைகளுக்கு இந்த கற்பனை உலகம் அவரவர்கேற்ற அளவில் அவசியம் என்கிறது குழந்தை உளவியல்.

          இது ஒருபுறமிருக்க குழந்தைகளின் கல்வி சார்ந்த செயற்பாடுகளில் காமிக்ஸை பயன்படுத்துவது மிகப் பெரிய பலனளிக்கும் என்பது தெரிந்தும் நம் கல்வியாளர்கள் இவ்விஷயத்தில் மிகவும் பின்தங்கியே உள்ளனர். குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்கள் இம்முயற்சியை மேற்கொண்டிருப்பது வரவேற்கத் தகுந்த விஷயம். தொடக்கக் கல்வித் துறையில் ‘காமிக்ஸ் பாடங்கள்’ ஒரு முயற்சி என்ற அளவில் நிற்கிறது. நிறைய புராண, இதிகாசக் கதைகள் காமிக்ஸ் கதை வடிவில் குழந்தைகளை எளிதில் எட்டியிருக்கின்றன எனும்போது பாடப் பொருளை குறிப்பாய் அறிவியல் பாடங்களை இம்முறையில் மிக எளிதில் கற்பிக்க இயலும்.

          இங்கு எனக்கு பூந்தளிரின் நினைவு வருகிறது. நிறைய அறிவியல் செய்திகளை காமிக்ஸ் வடிவில் சொல்லியிருப்பார்கள். ‘ஜுராஸிக் பார்க்’ படத்தில் ‘மீண்டும் டைனோசர்’ என்னும் நம்பமுடியாத விஷயத்தின் அறிவியல் விளக்கத்தை கார்ட்டூன் வடிவில் விளக்குவார்கள்... பாருங்கள். போரடித்துவிடக் கூடாது. ஆனால் படத்தில் அதுதான் மிக முக்கியமான விஷயம். யோசித்துப் பாருங்கள்... ஒரு கொசுவின் கதைதான் ‘ஜுராஸிக் பார்க்’ என்றால்... எப்படி...? (கார்ட்டூன்) காமிக்ஸின் பலம்?
          பூந்தளிரில் இப்படி நிறைய அறிவியல் தகவல்கள், பல்வேறு கலாச்சாரங்கள் பற்றி காமிக்ஸ் வடிவில் தருவார்கள். பூந்தளிர் போன்ற இதழ்கள் மூலம் கதைகளின் ஊடே, விளையாட்டின் ஊடே நிறையக் கற்க முடிந்த- அறிவியலை, சமூகத்தை, மனிதர்களை, வாழ்க்கையை, தாவர-விலங்கு உலகத்தைக் கண்ணுற முடிந்தது. நான் சேகரித்து வைத்திருக்கும் ‘பூந்தளிர்’ இதழ்களை நினைத்துப் பார்த்தால் மனதிற்கு இதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
          இன்னமும் பல்வேறு வகையான காமிக்ஸ்களை வாசிக்கிறேன். எனது வாசிப்பின் வளர்ச்சி நிலையின் ஒரு கட்டத்தில் காமிக்ஸ் மீது சற்றுத் திகட்டல் வந்தது. அனால் அது சிறு தேக்கம்தான். இப்பொழுது காமிக்ஸ் நிறைய மாறியிருக்கிறது. ஜப்பானியர்களின் அலட்சியமான கோட்டுப் படங்கள், மேற்கத்திய பாணியில் வித்தியாசமான கோணங்களில் படங்கள், வேறுபட்ட பார்வைகளில் கதை கூறுதல், முப்பரிமாண கோணத்தில் படங்கள் என நிறைய மாற்றங்களுக்கு வாசகர்கள் பழகிக் கொள்ள வேண்டியிருக்கிறது. வெற்றியடையும் (ஹாலிவுட்) திரைப்படங்களின் தொடர்ச்சியாக, வெற்றி பெற்ற நடிகர்களை நாயகர்களாகக் கொண்ட கதைகள் வெளிவருவது இப்பொழுது தொடர்கிறது. முன்பு ரோஜர் மூர், புரூஸ் லீ. இப்பொழுது கரீபியன் கடற் கொள்ளையன், ஏலியன், ஜாக்கிஜான் என கதைகள் வருகின்றன. இந்த மாற்றங்களை உள்வாங்கியதால் காமிக்ஸ்களை இப்போது தரம்பிரிக்க முடிகிறது என்னால். தயாரிப்பு முறை, உள்ளடக்கம், படங்கள், படங்களின் கோணங்கள் பற்றியெல்லாம் கூட கவனித்து நிறைய இரசனையோடு காமிக்ஸ் படிக்கிறேன்.

          காமிக்ஸ் எனக்கென்று ஓர் தனி உலகத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. என் பள்ளிக் காலங்களில் கேப்டன் டைகர், டெக்ஸ் வில்லர், லக்கிலூக்குடன் சேர்ந்து நிறைய பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். நெவேடா பாலைவனமும் மிஸிஸிபி நதியும் நான் பிரியமாய் உலாவுமிடங்கள். எனது வலது கை இரும்பினால் ஆனது. சுட்டுவிரலை நீட்டினால் சிறு சிறு குண்டுகள் பாயும். ஹிட்லரின் நாஜி படைகளை ஊடுருவி அவர்களை எதிர்த்துச் சண்டை போடுவேன். வேற்று கிரக எதிரிகள் பூமியைத் தாக்க வரும்போது ஹெலிகாரில் பறந்து எ¢ந்திரமனிதன் ஆர்ச்சியின் துணையோடு எதிரிகளைத் துரத்தியடிப்பேன். நயவஞ்சகமிக்க மாஃபியா கும்பலை தோழி மாடஸ்டி பிளைஸியோடு சேர்ந்து வீழ்த்துவேன். வேட்டைக்காரன் தோப்பையாவிடமிருந்து யானை பந்திலாவை பத்திரமாயக் காப்பாற்றுவேன். எந்த ஈட்டியையும் தாங்கும் கேடயத்தையும் எந்தக் கேடயத்தையும் சிதைக்கும் ஓட்டியையும் விற்கும் வியாபாரியிடம் அவனது ஈட்டியையும், கேடயத்தையும் மோதச் செய்யக் கோருவேன். இப்படியாக எனக்கென்று ஓர் உலகம் இருந்தது. இருக்கிறது (சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு)

          என் அடிமனதின் ஆழத்தில் ஓர் ஆசை (சின்ன வயதிலிருந்தே) புதைந்திருக்கிறது. பின்னாளில் எந்தத் துறையில் என்னை ஈடுபடுத்திக் கொண்ட போதிலும் ‘பூந்தளிர்’ போன்று ஓர் இதழை நடத்த வேண்டுமென்பதுதானது. என் அடிமன ஆழத்து உணர்வு அது. குறைந்த பட்சம் சிறிய/பெரிய அளவில் ஓரிரு சிறப்பிதழ்களையாவது கொண்டுவந்துவிட வேண்டும். இ¢ல்லையென்றால் அடிமனத்தின் அந்த ஆவல் சித்ரவதை செய்துவிடும் என்னைக் கனவிலும் நனவிலும்.

(2010 நவம்பர் 7 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ‘மதிப்பு’ கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)

தேசிய அடையாளம் வேண்டுகின்ற கம்யூனிஸ்ட்களின் தொகுப்பு (பகுதி 2) - மதிகண்ணன்


கோபர்ட் கான்டியின் நெருக்கடி முற்றுகிறது : உலகைக் குலுக்கும் பெருந்திரள் மக்கள் வெடிப்புகள்

          தொடர்ந்து இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கோபர்ட் கான்டி அரவிந்தன் என்ற புனை பெயரில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் ‘நெருக்கடி முற்றுகிறது : உலகைக் குலுக்கும் பெருந்திரள் மக்கள் வெடிப்புகள்’

கோபர்ட் சுட்டிக் காட்டும் சூழல்

          தொழிலாளி வர்க்கம் லே-ஆஃப்கள், ஊதிய வெட்டுக்கள், கட்டாயப்படுத்தப்பட்ட நீண்ட வேலை நேரம், அதிகரித்த வேலை, பாதுகாப்பின்மை ஆகியவற்றால் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர். பெரும் பெரும் நிறுவனங்களும், அமெரிக்காவில் இரண்டு மாநில அரசுகளும்கூட திவாலை நோக்கி நடைபோடுகின்றன. அனைத்து பொருளாதாரக் குறியீடுகளும் சரிவு தொடர்வதைக் குறிப்பிடுகின்றன. உலக அளவில் இது போன்ற சூழல் நிலவுகிறது. இந்திய சூழலின் அவலம் - ஒட்டு மொத்த (கடந்த) தேர்தல் பிரச்சாரத்தில் மக்களின் வாழ்க்கை மீது நெருக்கடியின் தாக்கம் பற்றியும், கறாரான தீர்வு நடவடிக்கைகள் பற்றியும் ஒரு கட்சியும் பேசவில்லை. ஏழைகள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினால் மேலும் கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேலை இழப்புகள் இப்போது அமைப்புசாரா துறைகளில் மட்டுமல்லாமல் தகவல் தொழில் நுட்பத் துறையையும் சூழ்ந்து கொள்கின்றன. பங்குச் சந்தை மதிப்பு மேலே போய்க்கொண்டிருந்தாலும் இது பொருளாதாரத்தில் எல்லா நிலைகளிலும் பிரதிபலிக்கவில்லை. இப்படி நாட்டில் வளர்ந்து வரக்கூடிய அல்லல்தரும் வறுமை பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் ஒரு சில தொழில் குடும்பங்களும் அவர்களின் அரசியல் சகாக்களும் வளர்ந்த நாடுகளில்கூட காணப்படாத அளவில் செல்வத்தைக் குவித்துள்ளனர். ஆசியா முழுவதும் ஆப்கானிஸ்தானை மையப்படுத்திய அரசியல் அணிதிரட்டல்களை வளர்ந்த நாடுகள் செய்து வருகின்றன.

சூழல் நிர்ணயித்த பெருந்திரள் மக்கள் வெடிப்புகள்

          இப்படியான சூழ்நிலையில் பிரான்சில் 75 விழுக்காடு மக்கள் ஆதரவுடன் ஜனவரியிலும் மார்ச்சிலும் என குறைந்த இடைவெளியில் வெற்றிகரமாக நடத்தப்பெற்ற இரண்டு பொது வேலைநிறுத்தங்கள், அதே பிரான்சில் குடி, கூலி, வாகனம் என எதையும் எதிர்பார்க்காமல் தாங்களாகவே மக்கள் 20 லட்சம் எண்ணிக்கையில் கலந்துகொண்ட உண்மையிலேயே மாபெரும் ஆர்ப்பாட்டம், தாய்லாந்தில் மக்கள் எழுச்சியால் நடைபெற முடியாமல் போன சர்வதேச வணிகம் பற்றிய பேச்சு வார்த்தைக்கான சந்திப்பு, சந்திப்பின் பிரதிநிதிகளைக் காப்பதற்காக விமானங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலையிலான வெகுமக்கள் எழுச்சி, பங்களாதேஷ் துணை ராணுவப் படையில் ஏற்பட்ட பெரும் கலவரம், 15 வயதுச் சிறுவன் போலீசாரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து கிரீஸில் தொடங்கி ஐரோப்பா முழுவதும் பரவிய வெகுமக்கள் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் என உலகந்தோறும் மக்கள் திரள் எழுச்சியும் கலகங்களும் நடைபெற்று வருகின்றன.

இன்னும் இருந்திருக்க வேண்டியவை

          தனது கருத்துக்களை நிறைய நம்பத்தகுந்த புள்ளி விபரங்களுடன் முன்வைக்கும் கோபர்ட் கான்டி இப்படியான சர்வதேசிய சூழலில் இந்தியக் கம்யூனிஸ்ட்களின் கடமை என்னவாக இருக்க வேண்டும்? அந்தத் தேவையை ஈடுசெய்யும்பொருட்டு பிற கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மாவோயிஸ்ட் கட்சி எந்தவிதமான ஊடாடலை நிகழ்த்தி வருகிறது? கம்யூனிசத்தின் இன்றைய தேவை என்ன? என்பதைப்பற்றியெல்லாம் ஒரு வரியிலும் முன்வைக்கவில்லை. ஏன்?

          சீன வழியில் இந்திய விடுதலை என்ற முழக்கத்தைக் கொண்டிருக்கும் இந்திய மாவோயிஸ்ட்கள் இடம், நேரம் போன்ற தனித்தன்மை வாய்ந்த பின்னணியை மறந்து விடுகிறார்கள். இந்திய மற்றும் சீன நிலைமைகளில் உள்ள மிகப் பெரிய வேறுபாடுகளைக் காணத்தவறுகிறார்கள். குறிப்பானதை பொதுவானதாக ஆக்குகிறார்கள். மாவோ சொன்ன பாடங்களில் ஒரு பகுதியை உயர்த்திப் பிடித்து, முழுமையானதாக்கி (அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழல்களில் இருந்து பிறக்கிறது) அதை மற்ற பகுதிகளில் இருந்து தனித்து நிறுத்தி மொத்த விஷயத்தையும் தலைகீழானதாக ஆக்கி விடுகிறார்கள்.

          கடுமையான இழப்புகள் ஏற்பட்ட பிறகும், சீன நிலைமைகளில் ரஷ்ய முன்மாதிரியை கண்மூடித்தனமாக பொறுத்துவதில் விடாப்பிடியாக இருந்த சீன வறட்டுவாதிகளுடன் மாவோ உறுதியான போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இந்தத் போராட்டத்தினூடேதான் மார்க்சிய லெனினியத்தின் அனைத்தும் தழுவிய உண்மையை சீனாவின் ஸ்தூலமான நிலைமைகளோடு இணைப்பது என்ற பிரபலமான கூற்று உருவானது. நமது நாட்டிலும் மாவோயிஸ்ட்டுகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு எதிராக மா சே துங் சிந்தனையை, இந்தியாவின் ஸ்தூலமான நிலைமைகளோடு இணைக்க உண்மையான முயற்சி செய்பவர்கள், மாவோ வறட்டுவாதிகளுக்கு எதிராக நடத்திய அதே போன்றதொரு போராட்டம் நடத்த வேண்டியுள்ளது; நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

          பீகாரிலும் ஜார்கண்ட்டிலும் ஒரிசாவிலும் கிழக்கு உத்திரப்பிரதேசத்திலும் மேற்கு வங்கத்திலும் இன்றைய மாவோயிஸ்ட் கட்சியும் சரி, இணைப்புக்கு முந்தைய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் தொட்டு கட்சி ஐக்கியம் வரையிலான பல்வேறு மாவோயிச அமைப்புகளும்சரி - பிற (புரட்சிகர/புரட்சிகரமில்லாத) கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறை எப்படியான பெருந்திரள் மக்கள் வெடிப்புகளைக் கட்டமைப்பதற்கான செயல்திட்டம் என்பதையும்கூட அவர் விளக்கியிருக்கலாம். 2009 ஜூன் 22 ஆம் நாள் வெளியான மின்ட் பத்திரிக்கையில் வெளியான மாவோயிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிமல் அவர்களின் பேட்டியில்

மின்ட் : நிறைய குடிமக்கள் இந்தப் போரில் உயிரிழக்கக் கூடும். அப்படி கொல்லப்பட்டவர்களுக்கு தார்மீக ரீதியாக நீங்கள் பொறுப்பாக மாட்டீர்களா?

பிமல் : ஒரு போரில் குடிமக்கள் என்று யாரும் இல்லை. உங்களை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள். அல்லது உங்களை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

என்று கூறுகிறார். இப்படியான போராட்டங்கள் நடப்பதே தெரியாத மக்கள் (பொருளாதார, சமூக, அரசியல் அளவீடுகளின்படி) அனைத்துத் தரப்பிலும் இருக்கிறார்கள். அவர்களும்கூட ஆதரிப்பவர்கள் அல்லது எதிரப்பவர்கள் என்கிற வகைமைப்படுத்தலின் கீழ் வருகிறார்களா? சரி... அவர்கள் ஆதரிப்பதற்கான நியாயங்கள் அவர்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டனவா என்பதையும்கூட தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.

          இந்திரா காந்தியின் அரசியல் படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் வன்முறையில் ஏறக்குறைய 4000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுபற்றிய கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த நவபாரதத்தை உருவாக்க நவீனமாக உதித்த ஒரு இளந்தலைவர் ‘ஆலமரம் வீழு¢ம்போது அடிமரத்தில் இருக்கும் சிறு தாவரங்கள் அழியத்தான் செய்யும்.’ என்றார். இரண்டு பதில்களின் பொருளும் ஒன்றுதானா? ‘நாம் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது’ என்பதுதானே? அல்லது இரண்டும் வேறு வேறா? என்பதையும் கோபர்ட் சுட்டிக் காட்டியிருக்கலாம்.

          தாங்கள் உருவான இடமாக மாவோயிஸ்ட்கள் சொல்லிக் கொள்ளும் நக்சல்பாரி கிராமத்தில் எழுச்சிக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான சாரு மஜூம்தார் ‘திரிபுவாதத்தின் ஸ்தூலமான வெளிப்பாடுகளுக்கு எதிரான போராட்டம்’ என்ற கட்டுரையில் இப்படி எழுதுகிறார்.

          தலைவர் மாவோ குறிப்பிட்டார் : ‘ஒரு போரில் ஆயுதங்கள் ஒரு முக்கியமான காரணிதான். ஆனால் அது தீர்மானிக்கும் காரணி அல்ல. மக்கள்தான் தீர்மானிக்கும் சக்தி. பொருட்கள் அல்ல. ஒடுக்கப்பட்ட தண்டிக்கப்பட்ட விவசாயிகள், ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, வெற்றுக் கரங்களுடனோ அல்லது அவர்களிடம் என்ன இருக்கிறதோ அவற்றுடனோ தங்கள் போராட்டத்தை துவங்குகிறார்கள். போராட்டப் போக்கினூடே, தேவை ஏற்படும்போது, முன்னேறுகிற புரட்சியின் நிர்பந்தங்கள் ஆணையிடும்போது, ஆளும் வர்க்கங்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க, கைப்பற்ற துவங்குகிறார்கள். இப்படித்தான் மக்களின் ஆயுதப் படைகள் உருவாகின்றன.’ வெளியில் இருந்து ஆயுதங்களைக் கொண்டுவருவதன் மூலம் ஒரு புரட்சிகரப் போரை நடத்துவது சாத்தியமற்றது. ஏனென்றால், தலைவர் மாவோ நமக்குப் போதித்தது போல், புரட்சிகரப் போர் என்பது வெகுமக்களின் போர். இது மக்களை அணிதிரட்டுவதன் மூலம், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் மட்டுமே நடைபெறும்.

          கட்டுரையின் எந்தப் பகுதியிலும் இந்தியாவில் கோபார்ட் கான்டி முன்வைத்த இழிநிலைகளைக் களைவதற்கு அவர் சார்ந்திருக்கும் இந்திய மாவோயிஸ்ட் கட்சி என்ன விதமான - மக்கள் அணிதிரட்டலுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது / நாடு தழுவிய மக்கள் திரள் எழுச்சியினைக் கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்பவற்றைப் பற்றி எதைவும் பேசவில்லை. கோபர்ட் கான்டியின் கட்டுரையை வாசித்து முடித்ததும் வழக்கமான வழக்கம்போல் தொடர்புடைய நிறைய விஷயங்களை வாசிக்க நேர்ந்தது. தத்துவங்கள், சித்தாந்தங்கள், சிந்தனைகள், கோட்பாடுகள் அல்லது எம்.ஜி.சுரேஷின் அனுமானங்கள் இவை யாவும் புனைவிலக்கிய வடிவம் பெறும்போது சொல்ல வந்த கருத்தைச் சரியாகச் சொல்கின்றனவா? சரிபார்க்கத் தேடி வாசித்தவற்றில் - குறிப்பாகத் தேர்ந்தெடுத்து வாசித்த ஆல்பர்ட் காம்யூவின் ‘நியாயவாதிகள்’ நாடகத்தில் இருந்து ஒரு பகுதி...

இருத்தலியல்வாதியின் நியாயவாதிகள்

          (க்ராண்ட் ட்யூக்கை அழித்தொழிப்பதற்காக அனுப்பப்பட்ட யானக் என்ற கலியயேவ், க்ராண்ட் ட்யூக்குடன் குழந்தைகள் இருந்ததால் குழந்தைகளைக் கொல்ல மனமின்றி இரண்டுமாத காலம் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அழித்தொழிப்பில் இருந்து பின் வாங்கித் திரும்பி வந்துவிடுகிறான். நடந்து முடிந்த சரி/தவறின் மீதான விவாதத்தில் அழித்தொழிப்பு அணியில் உள்ளவர்களிடையே நடக்கும் உரையாடல்)

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

அனெகாவ் : டோரா நீ என்ன சொல்கிறாய்?

டோரா : (மிகவும் உணர்ச்சி வசப்பட்டு) யானெக்கைப் போலவே நான் பின்னடைந்திருக்கக் கூடும். என்னால் செய்ய முடியாதென்கிறபோது எப்படி பிறரைச் சொல்ல முடியும்?

ஸ்டீபன் : எப்படிப்பட்ட முடிவு இது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? இரண்டு மாத காலம் வேவு பார்த்தது, மயிரிழையில் பலமுறை தப்பித்தது... இரண்டு மாதகாலமும் வீணாகிவிட்டது. யெகார் கைது செய்யப்பட்டான் - வீணாய்ப் போய்விட்டது. ரிகாவ் தூக்கிலிடப்பட்டான் - வீணாய்ப் போய் விட்டது. மறுபடி நாம் எல்லாவற்றையும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமா? வாரக் கணக்கில் தொடர்ந்த காத்திருத்தல்கள், உறங்காத இரவுகள்... திட்டமும், செயல்பாடும், இதேபோல இன்னொரு சந்தர்ப்பம் கிடைப்பதற்கு முன்னால்... உங்கள் எல்லாருடைய புத்தியும் பேதலித்துவிட்டதா?

அனெகாவ் : இன்னமும் இரண்டே நாட்களில் க்ராண்ட் ட்யூக் மறுபடி தியேட்டருக்குப் போகிறானென்று உனக்கே நன்றாகத் தெரியும்.

ஸ்டீபன் : இரண்டு நாட்கள்... எந்த நேரமும் அகப்பட்டுக் கொள்கிற அபாயம் இருக்கிறதே. இதை நீ முன்னமேயே சொல்லியிருக்கிறாய்.

கலியயேவ் : நான் போகிறேன்.

டோரா : இல்லை, சற்று பொறு... ஸ்டீபன், உன் கண்களைத் திறந்து கொண்டு ஒரு குழந்தையின் மீது உன்னால் நேரடியாகச் சுட முடியுமா?

ஸ்டீபன் : நான் சுடுவேன் - ஸ்தாபனம் எனக்குக் கட்டளையிட்டிருந்தால்...

டோரா : பின் எதற்காக உன் கண்களை மூடிக் கொண்டாய்?

ஸ்டீபன் : என்ன? என் கண்களை நான் மூடிக் கொண்டேனா?

டோரா : ஆமாம்.

ஸ்டீபன் : என் பதில் உண்மையானதாய் இருக்க வேண்டுமென்பதற்காக அந்தக் காட்சியை என் கண்முன் தெளிவாகக் கொண்டுவர நினைத்தேன்.

டோரா : உன் கண்களைத் திற ஸ்டீபன். குழந்தைகள் தூள் தூளாக குண்டால் சிதறடிக்கப்படுவதை ஒரே ஒரு கணம் ஸ்தாபனம் ஒத்துக் கொண்டாலும், அது தன் பலத்தையும் செல்வாக்கையும் இழந்து போகும்.

ஸ்டீபன் : நான் இளகிய மனதுடையவனல்ல. குழந்தைகளைப் பற்றி அநாவசிய உணர்ச்சி வசப்படுவதை என்று நாம் நிறுத்திக் கொள்கிறோமோ அன்றுதான் புரட்சி வெற்றி பெறும். அன்று நாம் இவ்வுலகை வென்றவர்களாவோம்.

டோரா : அப்படிப்பட்ட நாள் வரும்போது, மனித குலம் முழுவதுமே அந்தப் புரட்சியை வெறுக்க நேரும்.

ஸ்டீபன் மனித குலத்தை அதன் அழிவிலிருந்து காப்பாற்ற, அதன் மீது நமது புரட்சியைப் பிரயோகிக்கும் அளவுக்கு அதனை நேசிக்கிறோம்...

டோரா : முழு மனித இனமுமே புரட்சியை மறுக்கிறது என்று வைத்துக் கொண்டால்?... எந்த மக்களுக்காக நீ போராடுகிறாயோ அவர்களே தங்கள் குழந்தைகள் கொலை செய்யப்படுவதை விரும்பவில்லையென்றால் அவர்களோடும் மோதுவாயா?

ஸ்டீபன் : ஆமாம், அதுவும் அவசியமானால் மோதுவேன். அவர்கள் புரிந்து கொள்ளும்வரை அவர்களோடு நான் மோதிக் கொண்டே இருப்பேன். நானும் மக்களை நேசிக்கிறேன்.

டோரா : அது அன்பாகாது.

ஸ்டீபன் : யார் சொன்னது அது அன்பு இல்லையென்று.

டோரா : நான் சொல்கிறேன்.

ஸ்டீபன் : நீ ஒரு பெண்... அத்துடன் நேசத்தைப் பற்றிய உன் எண்ணம் ஆழமற்றது.

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

டோரா : யானெக் க்ராண்ட் ட்யூக்கைக் கொலை செய்வான். ஏனென்றால் அவன் சாவு, ரஷ்யக் குழந்தைகளின் வேதனை தீரும் நன்னாளை விரைவாகக் கொண்டு வரும் என்பது அவனுக்குத் தெரியும். அதுவே அவனுக்குக் கடினமான காரியந்தான். ஆனால் அந்த இரு குழந்தைகளையும் கொல்வது எந்த ஒரு ஒற்றைக் குழந்தையின் பட்டினிச்சாவையும் தடுத்துவிடப்போவதில்லை. அழிப்பதிலும் சரியானதும் தவறானதுமான இரண்டு வழியுண்டு. அவற்றுக்கு வரையறைகளுமுண்டு...

ஸ்டீபன் : (ஆக்ரோஷத்துடன்) வரையறைகளே கிடையாது. நீங்கள் புரட்சியை நம்பவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது (அவர்கள் எல்லோரும் சட்டென்று எழுந்துவிடுகிறார்கள் - கலியயேவைத் தவிர) இல்லை. நீங்கள் நம்பவேயில்லை - உங்களில் ஒருவர்கூட நம்பவில்லை. முழுமனதுடன் நீங்கள் ஈடுபடுவீர்களானால், நமது தியாகங்களும் வெற்றிகளும் கொடுங்கோலிலிருந்து விடுபட்ட புதிய ரஷ்யாவிற்கு அடிகோலுமென்பதில் நீங்கள் நிச்சயமாயிருந்தால்... உலகம் முழுவதும் சுதந்திர பூமி மெல்லப் பரவி விரியும். அதற்குப் பிறகு... அதற்குப் பிறகு மட்டும்தான் கொடுங்கோல் மற்றும் மூட நம்பிக்கைகளிலிருந்து மனிதன் விடுபடுவான். கடைசியில் தானே ஒரு பெருஞ்சக்தியாக தனக்கே உரியதான பரந்த வானத்தை நோக்குவான். இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களானால், இரு குழந்தைகளின் சாவு எப்படி இடிக்கப்பட்ட ஒரு நம்பிக்கையுடன் ஈடாக்கப்பட முடியும்? நிச்சயமாக, அந்த நாளை அருகில் கொண்டு வருவதற்காக எந்தச் செய்கையையும் செய்வதிலும் நியாயத்தைக் காணமுடியும்... அந்த இரண்டு குழந்தைகளை நீங்கள் கொல்லப் போவதில்லையென்றால் உங்கள் செய்கை நியாயமானதென்பதில் உங்களுக்கு நிச்சயமில்லை என்றுதான் ஆகும். அப்படியானால் புரட்சியின் மீதே உங்களுக்கு நம்பிக்கையில்லை.

(அமைதி)

கலியயேவ் : (எழுந்திருந்து) என்னைப் பார்த்து நானே வெட்கப் படுகிறேன். ஸ்டீபன், இனி நீ மேலே பேச நான்விட மாட்டேன். கொடுங்கோலைக் கவிழ்த்தெறிவதற்காக நான் கொலை செய்யத் தயார். ஆனால் உன் வார்த்தைகளின் பின்னால் இன்னொரு விதமான கொடுங்கோன்மையின் பயமுறுத்தலை நான் பார்க்கிறேன். உன் வார்த்தைகள் என்னைக் கொலைகாரனாகத்தான் ஆக்கும்... நாம் போராட முயல்வதெல்லாம் நியாயத்திற்காகத்தான்.

ஸ்டீபன் : நியாயம் வந்துவிட்ட பிறகு, நீங்கள் நியாயத்திற்காகவும் போராடினாலென்ன அல்லது கொலைகாரர்களானால் தானென்ன? நீயும் நானும் ஒரு பொருட்டல்ல..,

கலியயேல் : இல்லை, அப்படியில்லை. அது உனக்குத் தெரியும். உன்னுடைய பெருமிதம்தான் இப்படிச் சொல்ல வைக்கிறது.

ஸ்டீபன் : என்னுடைய பெருமிதம் எனக்கு மட்டுமானதுதான். ஆனால் மனிதனின் பெருமிதம்... எதிர்ப்புக்கான அவனுடைய கலகங்கள், அவனுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதி... இவை நம் எல்லோர் சம்பந்தப்பட்டதும்தான்.

கலியயேவ் : மனிதன் நியாயத்தால் மட்டுமே வாழ்பவனல்ல...

ஸ்டீபன் : அவனுடைய ரொட்டி பறிக்கப்படுகிறபோது, வேறெதைக் கொண்டுதான் அவன் வாழப்போகிறான்?

கலியயேவ் : நியாயத்தாலும், குற்றமற்ற தன்மையானாலும்தான் வாழப்போகிறான்.

ஸ்டீபன் : குற்றமற்ற தன்மையா? நான் அதை நிச்சயமாக உணர்ந்திருக்கிறேன்... ஆனால் இவற்றைக் காணாமல் இருப்பதையே நான் விரும்புகிறேன்... மற்றவர்களும் இவற்றைக் காணாமல் இருப்பதையே விரும்புகிறேன்... அதற்கு அப்போது உலகளாவிய ஒரு அர்த்தமும் கிடைத்துவிடும்...

கலியயேவ் : ஒருவனை வாழ விரும்ப வைக்கும் எல்லாவற்றையுமே ஒருவன் மறுப்பானானால் அப்படிப்பட்ட நாள் வருமென்பதில் அவன் திடமான நிச்சயத்துடனிருக்க வேண்டும்.

ஸ்டீபன் : கட்டாயம் அந்தநாள் வரத்தான் போகிறது.

கலியயேவ் : அவ்வளவு நிச்சயமாக நீ சொல்லவே முடியாது. நம்மில் யார் சரி என்பது தெரிவதற்குள் ஒரு வேளை மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக உயிர்ப்பலி கொடுக்க வேண்டியிருக்கும்.... பல போர்களும், ரத்தம் சிந்தும் புரட்சிகளும் நிகழும், அத்தனை ரத்தமும் பூமியில் ஊறிவிடும்போது நாம் எப்போதோ மக்கி மண்ணாகிப் போயிருப்போம்.

ஸ்டீபன் : அப்போது மற்றவர்கள் எல்லாம் வருவார்கள். அவர்களை நான் சகோதரர்களாக வாழ்த்தி அழைப்பேன்.

கலியயேவ் : (கத்துகிறான்) மற்றவர்களா... ஆமாம் வருவார்கள்தான்... ஆனால் நான் இன்று உயிரோடிருக்கும் மனிதர்களேயே நேசிக்கிறேன்... அவர்கள் இதே பூமியில் என்னோடு நடமாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்காகத்தான் என் உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருக்கிறேன். கனவாகவே தொலைதூரத்தில் இன்னமுமிருக்கும் யாருமேயறியாத ஒரு வாழ்வுக்காக நான் என்னுடைய சகோதரர்களை நேரடியாகத் தாக்க மாட்டேன்... ஒரு செத்துப்போன நியாயத்துக்காக என்னைச் சுற்றி வாழ்ந்துகொண்டிருக்கும் அநியாயத்துடன் மேலும் அநியாயத்தைச் சேர்க்க மாட்டேன்... (இன்னும் நிதானமாக, அழுத்தத்துடன்) எளிய விவசாயிக்கும் தெரியும் ஒன்றை உனக்குச் சொல்ல விரும்புகிறேன். குழந்தைகளைக் கொல்வதென்பது ஒரு மனித கௌரவத்திற்கே எதிரான பெருங்குற்றம், கௌரவத்திலிருந்தே விலகி ஒரு புரட்சி நடக்குமானால்... நான் அப்படிப்பட்ட புரட்சியிலிருந்தே விலகி விட வேண்டும். நான் அதை செய்தே தீரவேண்டுமென்று நீங்கள் முடிவெடுத்தால் அவர்கள் தியேட்டரிலிருந்து வரும்வரை வெளியே காத்திருக்கத் தயார்... ஆனால் நான் குதிரைகளின் கால்களடியில் என்னை வீழ்த்திக் கொள்வேன்.

ஸ்டீபன் : கௌரவம் என்பது வண்டிகளில் பவனி வருபவர்களுக்கே உரியதான சுகபோகம்.

கலியயேவ் : இல்லை. ஏழைகளிடம் மீதமிருக்கிற ஒரே செல்வம் அதுதான். உனக்கு இது தெரியும். அத்துடன் புரட்சிக்கு அதற்கேயான ஒரு கௌரவம் உண்டென்பதும் உனக்குத் தெரியும். அதற்காகத்தான் நாம் உயிர் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்...

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

ஸ்டீபன் : ... ... நாம் கொலைகாரர்கள். கொலைகாரர்களாக இருக்கவே நாம் முடிவு கட்டியிருக்கிறோம்.

கலியயேவ் : (அடக்க முடியாத ஆத்திரத்துடன்) இல்லை. உலகில் கொலை முடிசூடுவதைத் தடுக்கவே நான் சாவைத் தேர்ந்தெடுத்தேன்... நான் குற்றமற்றவனாக இருக்கவே சாவைத் தேர்ந்தெடுத்தேன்.

அனெகாவ் : யானெக், ஸ்டீபன், போதும் நிறுத்துங்கள். இந்தக் குழந்தைகளைக் கொல்வது ஒன்றுக்கும் உதவாது என்று நாம் தீர்மானித்திருக்கிறோம் முதலிலிருந்து நாம் மறுபடி ஆரம்பித்தாக வேண்டும். இரண்டே நாட்களில் மறுபடி முயற்சி செய்ய தயாராக இருங்கள்.

ஸ்டீபன் : மறுபடியும் அந்தக் குழந்தைகள் அங்கிருந்தால்?

கலியயேவ் : அதற்கடுத்த சந்தர்ப்பத்திற்குக் காத்திருப்போம்.

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

... ... ... ... ... ...


நமது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு

          1906 ல் ரஷ்யத் தலைநகரான மாஸ்கோவில் நடைபெறுவதாக நவீன இலக்கியத்தில் கவனத்திற்குரியவரும், இருத்தலியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கவருமான ஆல்பர்ட் காம்யூவால் எழுதப்பெற்றது. மனுக்கொடுக்கச் சென்றதற்கே பல்லாயிரக்கணக்கானோரைச் சுட்டுக் கொன்ற கொடூரன் ஜாருக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களிலும்கூட நிலவிய மனிதாபிமானத்தையும், ஜனநாயகத் தன்மையை இந்நாடகம் சிறப்பாக முன்வைக்கிறது. இன்றைய இந்திய மாவோயிஸ்ட் குழுக்களிடம் மட்டுமல்ல பல்வேறு மாநில அரசாங்களிடமும் மத்திய அரசாங்கத்திடமும் நாம் குறைந்தபட்சம் எதிர்பார்ப்பதும்கூட இவற்றைத்தான்.

(நவம்பர் 7 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ‘மதிப்பு’ கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)

(மேலும்...)

தேசிய அடையாளம் வேண்டுகின்ற கம்யூனிஸ்ட்களின் தொகுப்பு (பகுதி 1) - மதிகண்ணன்

நூல் மதிப்புரை


நூல்              தேசியம் அடையாளம் கம்யூனிசம்


வெளியீடு அசை (பிரான்ஸ்)
                       ASAI, RUE DU POTEALI
                       75018, PARIS
                       FRANCE
                       TEL 0033 1426 33176
                       ashokyogan @hotmail.com
விலை        ரூ 80


          ‘தேசியம் அடையாளம் கம்யூனிசம்’ என்ற இத் தொகுப்பு ‘அசை’யின் மூன்றாவது தொகுப்பு. ஜென்னி டிஸ்கியின் ‘மார்க்ஸ் எனும் மானுடன்’ தொடங்கி, இமயவரம்பனின் ‘மார்க்சியத்தின் போதாமைகள் பற்றி’ 24 கட்டுரைகளும் தொகுப்பிற்குப் பன்னிரெண்டு வீதம் இரண்டு தொகுப்புகளாக முன்னரே வந்துள்ளன.

          ‘தேசியம் அடையாளம் கம்யூனிசம்’ என்ற இத்தொகுப்பில் உலகஅளவில் பேசப்படுகின்ற அலைன் பதியு, பெனடிக்ட் ஆன்டர்ஸன், ஜேம்ஸ் பெட்ராஸ், நீல் டேவிட்சன், லென்னி பிரன்னர் போன்றவர்களின் சிந்தனைகளும் அவர்களின் சிந்தனைகளை அடியொற்றிய தமிழ்ச் சூழலுக்கு முன்னமே அறிமுகமான இலங்கையின் சபா நாவலன், சி.சிவசேகரம், பெங்களூர் வாழ் தமிழவன் மற்றும் கதிப் அன்சாரி என்ற பெயரில் (மக்களிடையே நமது பணிகள் - நூல் - கீழைக்காற்று வெளியீட்டகம்) தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமான இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கோபர்ட் கான்டி, ‘அரவிந்தன்’ என்ற பெயரில் எழுதிய கட்டுரையும் என பத்துக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது.

          (சில) கட்டுரைகளை மொழிபெயர்த்த ஆர்.பாலகிருஷ்ணன், பாஸ்கர், எச்.பீர்முஹமது, வி.உதயகுமார் ஆகியோரும் அலைன் பதியு-வை அறிமுகப்படுத்திய யமுனா ராஜேந்திரனும் தொகுப்பிற்கு முன்வைப்புரை தந்த அசை - பிரான்ஸின் ஒருங்கிணைப்பாளர் அசோக் யோகனும் ஓரளவிற்கு அனைவரும் புரிந்து கொள்ளும்படியான தமிழ்நடையைத் தேர்ந்தெடுத்ததற்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். பொதுவாக இப்படியான தொகுப்புகளில் கையாளப்படுகின்ற அதி அறிவு ஜீவித்தனமான நடை திகட்டிக் குமட்டும் அளவிற்கு நயம் வாய்ந்தது. ‘அசையில் நான்காவது தொகுப்பு நூலுடன் இன்னும் ஆறு மாதங்களில் சந்திப்போம்’ அசோக் யோகனின் வார்த்தைகளின் தொடர்ச்சியாக நூல் முழுவதும் தேடியும்கூட தொகுப்பின் வெளியீட்டுக்காலம் (நாள்) தெரியவில்லை. ‘புலிகளுக்குப் பின்னரான அரசியல் - தன்னார்வக் குழுக்களின் பொற்காலம்’ போன்ற கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பில் வெளியீட்டு நாள் மறக்கக்கூடாத ஒன்று.

அலைன் பதியுவின் கம்யூனிசக் கருதுகோள்

          1937ல் மொராக்கோவில் பிறந்த மார்க்சியக் கோட்பாட்டாளரான அலைன் பதியு அல்தூசரின் அமைப்பியல் மார்க்சியத்தாலும் லக்கானின் உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டினாலும் அதிகம் பாதிப்புற்றவர் எனினும் பின்நவீனத்துவத்திற்கு எதிரான சிந்தனையாளர் என அறியப்படுபவர். அவருடைய கட்டுரையான ‘மார்க்சிய கருதுகோள்’ இததொகுப்பின் முதல்கட்டுரை.

தேர்தலும் அச்சமும்

          பொதுவாக தேர்தல்முறை குடிமக்களிடமும், வேறுவேறு வர்க்கத்தினரிடமும் உருவாக்கும் அச்சம் குறித்துப் பேசும் அலைன் பதியு, வெகுமக்களிடம் உருவாகும் இந்த அச்ச உணர்வை முதலாளித்துவ வர்க்கத்தினர் எவ்வாறு அந்நியர்கள் குறித்த பயமாக உருவாக்கி, தேசபக்தியைக் கட்டி எழுப்பி, தங்கள் நோக்கங்களுக்காகப் பாவிக்கிறார்கள் என்பதை கட்டுரையின் முதல்பகுதியில் சுட்டிக் காட்டுகிறார்.

          பிரான்சில் 2007ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சர்கோசி வெற்றி பெற்றதால் உருவான சாதக-பாதகங்களை அலசும் அலைன் பதியு, ‘அல்தூசர் சித்தாந்தவாத அரசு எந்திரம் என அழைத்த ஊடகங்கள் குறித்து நாம் குறைத்து மதிப்பிடலாகாது. இன்று ஊடகங்கள் எவ்வாறு உள்ளன? தொலைக்காட்சி, வானொலி முதலியவை இவ்உணர்வுகளை எவ்வாறு வெளியிடுகின்றன? வாக்களிப்பு முறையில் ஓர் அச்ச உணர்வை நாம் காண இயலும். அது எதார்த்தத்தைவிட வலுவானது. புராதன காலம் சார்ந்த அச்ச உணர்வைக் காட்டிலும் தீவிரமான அச்சம் அது. அதனால் எதிர்மறையான விளைவுகள்தான் கிட்டும். நாம் எதார்த்த நிலைமைகளுக்கு எதிர்வினை புரியக் கூடியவர்கள். அச்சம் குறித்த அச்ச உணர்வு, அந்த அளவீட்டை விழுங்கி நம்மை இன்னும் எதார்த்தத்தில் இருந்து தொலை தூரத்திற்குத் தூக்கியெறியக் கூடியது’ என்கிறார். இவ்வார்த்தைகள் இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு மிகவும் நெருக்கமானதாக நம்மால் உணர முடிகிறது. இந்தக் கட்டுரையினை வாசிக்கையில் நோம் சோம்ஸ்கி சொன்ன வரிகள்தான் நினைவில் வந்தன - ‘உலகில் இரண்டே பேரரசுகள்தான் இருக்கின்றன. ஒன்று அமெரிக்கா. இன்னொன்று ஊடகங்கள்’ - உண்மைதான். பேரரசு என ஒன்றை நிறுவுவதும்கூட இன்னொரு பேரரசான ஊடகங்கள்தானே. பிரான்ஸ் நிலைமையில் தமிழகமும் உள்ளது என பெருமைப்பட்டுக் கொள்ள உடன்பிறந்த தழிழர்களுக்கு ‘இந்த நிலை’ மிகவும் உவப்பானதாக இருக்கும். அதற்கும் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தலாம் - இடையில் பாராட்டுக் கூட்டங்கள் நடைபெறாத ஏதாவது நாட்கள் மீதமிருந்தால்.

          ‘சாதாரண மக்களை வாக்களிப்பதில் இருந்து தடை செய்தால், அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் எழுச்சி பெற்ற அரசியல் உணர்வை அடைவர்’ என்கிறார் அலைன் பதியு. தடைசெய்வதல்ல அவர்கள் விரும்பினாலும் வாக்களிக்காமல் இருந்துவிடக் கூடாது என்பதற்காக கட்டாய வாக்களிப்புச் சட்ட உருவாக்கம் பற்றி இந்திய/தமிழக (முதலாளித்துவ) அரசுகள் அவ்வப்போது பயமுறுத்தி வருகின்றன. அரசியல் கட்சியில் உறுப்பினராக இருந்தாலோ, அரசியல் சார்புடன் இருந்தாலோ (இங்கு அரசியல் கட்சி என்பது சுத்தமான கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டுமே குறிக்கும்) பணி நீக்கத்திற்கான சட்ட சலுகை/அங்கீகாரம் பெற்ற அரசுத் துறைப் பணியாளர்களை கட்சி அரசியல் அடிப்படையில் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கும்படி எப்படி கட்டாயப்படுத்துவது என்பதுதான் நமக்குப் புரியவே இல்லை. அதற்கும் வெளிமாநில/வெளிநாட்டு தகவல்களும் தரவுகளும் கொடுக்க முடியாதா என்ன?

மார்ஷல் பெடைனும் பெடைனிசமும்


          தன்னுடைய கட்டுரையில் சர்கோசியின் பெயரால் இயங்கிக் கொண்டிருக்கும் தேசிய வரலாற்று ஆதாரங்கள் பெடைனிசத்தின் உருவரையைப் பிரதிபலிக்கின்றன என்கிறார். பெடைனிசம் என்கிற பதப்பயன்பாடும் அதன் தொடர்ச்சியாக புதிய பெடைனிசக் கூறுகள் என்ற பதச் சேர்க்கைகளும் அலைன் பதியு தவிர்த்த மற்ற எவராலும் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் நவீன பிரான்சில் பெடைனிசம் என்கிற வார்த்தை ‘விடுதலைக்கு எதிரான, சர்வாதிகார’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. பெடைனிச காலம் என ‘ஹென்றி பிலிப் பெனானி ஓமர் ஜோசப் பெடைன்’ (Hendri Phillipe Benoni Omar Joship Petain - 24-04-1856 to 23-07-1951) பிரான்சின் அரசுத் தலைமைப் பொறுப்பில் இருந்த 1940 முதல் 1944 வரையிலான காலக்கட்டத்தைக் குறிப்பிடுகின்றனர். பிலிப் பெடைன் என்றும் மார்ஷல் பெடைன் என்றும் பிரான்ஸ் மக்களால் அழைக்கப் பெற்ற ஹென்றி பிலிப் பெனானி ஓமர் ஜோசப் பெடைன் முதலாம் உலகப்போர் காலத்தில் பிரான்சின் இராணுவ ஜெனரலாக இருந்தவர். அந்தக் காலக்கட்டத்தில் பிரான்சின் நாயகனாக விளங்கிய அவருக்கு ‘மார்ஷல் ஆஃப் பிரான்ஸ்’ பட்டம் பிரான்ஸ் பாராளுமன்றத்தால் வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிரான்சைக் காத்தவர் இவர்தான் என பிரான்ஸ் வெகுமக்களால் நம்பப்படுபவர். முதலாம் உலகப் போர்வரை ராணுவம், போர் என மூழ்கியிருந்த மார்ஷல் பெடைன் தன்னுடைய 64 ஆம் வயதில் 1920ல் திருமணம் செய்து கொண்டார். பிரான்ஸ் ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த மார்ஷல் பெடைன் 1940ல்அரசின் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


          பதவிக்கு வந்தபின் முதலாவதாக ‘பிரான்சைக் காத்தல்’ என்ற பெயரில் புதிய ஆக்கம், மறு உருவாக்கம் என்றெல்லாம் கூறி 1940ல் ஹிட்லருடன் கீழ்ப்படிதலுள்ள ஓர் அடிமைத்தனமான உடன்பாட்டிற்கு வந்தார். இரண்டாவதாக பிரான்ஸ் குடியரசின் உலகப் புகழ்பெற்ற முழக்கமாக / குறிக்கோளாக இருந்த ‘விடுதலை, சமாதானம், சகோதரத்துவம்’ என்பதை ‘பணி, குடும்பம், தந்தையர் நிலம் (நாடு)’ என மாற்றியதுடன், பிரான்சைத் தன் முழு ஆளுகைக்கு உட்பட்ட அரசாக மாற்றினார். (Republic to State). மூன்றாவதாக தேச ஒழுக்கத்தை வலியுறுத்தியதுடன், தேச ஒழுக்கத்திற்கான எடுத்துக் காட்டுகளாக முசோலினியின் இத்தாலியையும், ஹிட்லரின் ஜெர்மனையும் முன்னிருத்தினார். நான்காவதாக தற்காலச் சிக்கல்களுக்கு கடந்தகாலத் தவறுகளே காரணம் என விடுதலைக்குப் பிந்தைய தமிழக / இந்திய ஆட்சியாளர்களைப் போல் முந்தைய குடியரசு ஆட்சியாளர்களைக் குற்றம் சாட்டினார்.

          மேற்கண்ட விஷயங்களைச் செயல்படுத்துவதற்காகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிறிய அளவினதென்றாலும் மக்கள் இயக்கங்களுக்கு எதிராக பெடைன் நின்றார். அரசுப் பணியாளர் பணிநீக்கம், எதிர்ப்பாளர்களையும், அகதிகளையும் சிறையிலடைப்பது, புதிய நிர்வாகக் கட்டமைப்புகளை நிறுவி ராணுவ நடைமுறையின் கீழ் நாட்டை ஆள்வது என முசோலினி, ஹிட்லரின் வாரிசாக மார்ஷல் பெடைன் மாறினார்.

          நடைமுறைச் சிக்கல்கள் முற்றிய சூழலில் மார்ஷல் பெடைன் தன் சகாக்களுடன் ஜெர்மனுக்குச் சென்றார். ஜெர்மனின் சிக்மேரின்கனில் (Sigmaringen) தேசம் கடந்த அரசு (Government-in-exile) ஒன்றை 1944 செப்டம்பர் 7ல் உருவாக்கி பிரான்சை ஆண்டார். இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் செஞ்சேனையிடம் தோற்று, ஜெர்மனுக்கான சிக்கல் முற்றிய சூழ்நிலையில், ஹிட்லரின் தற்கொலைச் சாவுக்கு 23 நாட்கள் முன்னதாக 1945 ஏப்ரல் 7 ஆம் நாள் மார்ஷல் பெடைன் ஜெர்மனை விட்டு வெளியேறி மீண்டும் பிரான்ஸை அடைந்தார். அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்த முசோலினி, ஹிட்லரின் மரணத்தைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போர், உலகப்போர் என்ற நிலையில் ஒரு முடிவிற்கு வந்தது.
பிரான்சில் உருவான புதிய அரசு பல்வேறு விசாரணைகளைத் தொடர்ந்து ‘மார்ஷல்’ பெடைனை பாராளுமன்றத்தால் தனிப்பட்ட சட்டம் உருவாக்கி அளிக்கப்பட்ட மார்ஷல் பட்டம் தவிர்த்த அனைத்தையும் அவரிடம் இருந்து பறித்துக் கொண்டதுடன் 1945 ஆகஸ்ட் 15 ஆம் நாள் அவரைச் சுட்டுக் கொல்லும்படி தீர்ப்பளித்தது. அன்றைய பிரான்ஸ் குடியரசின் தற்காலிக அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த சார்லஸ் டி கௌலே (Charles de Gaulle) பெடைனின் வயதையும் முதல் உலகப் போரில் அவரது பங்களிப்பையும் முன்னிட்டு மரணதண்டனையை ஆயுட் தண்டனையாக மாற்றினார். 1945 ஆகஸ்ட் 15 முதல் நவம்பர் 16 வரை பைர்னஸ் ராணுவ சிறையிலும், பின்னர் லிடிய்யூ என்ற அட்லாண்டிக் தீவிலும் சிறை வைக்கப்பட்டார். அங்கு அவர் முழுமையாக நோய்வாய்ப்பட்டு நிரந்தர தாதிச் சேவை தேவைப்படுபவராக இருந்தார். தன்னுடைய 95 ஆம் வயதில் 1951 ஜூலை 23 இல் இறந்த அவருடைய உடல் சிறைக்கு அருகில் உள்ள மேரின் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது.

          1940 முதல் 1944 வரை மார்ஷல் பெடைனின் நடவடிக்கைகள் மீது பிரான்ஸ் மக்களுக்கு இருவேறு கருத்துககள் இருந்தாலும் அவர் பிரான்ஸைக் காத்தவர் என்கிற நம்பிக்கை மேலோங்கி இருக்கிறது. முதலாம் உலகப்போர் காலக்கட்டத்தில் தன்னுடைய அகவை 60 களின் தொடக்கத்தில் இருந்த மார்ஷல் பெடைன் வீரராகவும், இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் தன்னுடைய அகவை 80 களின் இறுதியில் இருந்த மார்ஷல் பெடைன் விவேகியாகவும் - பிரான்ஸ் மக்களில் பெரும்பான்மையினரால் இன்றும் மதிக்கப்படுகிறார். இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் 1940 முதல் 1944 வரையிலான மார்ஷல் பெடைனின் அந்நிய அடிமைத்தனமும், சொந்த மக்களின் மீதான அடாவடித்தனமும் பெடைனிசத்தின் உருவரைகள் என அலைன் பதியு முன்வைக்கிறார். இப்படி நடந்து கொண்டதற்கான காரணமாக மார்ஷல் பெடைன் கூறும் வார்த்தைகள் ‘தோல்விக்கான அச்சத்தைவிட போருக்கான அச்சமே தேவையானதாக இருந்தது’ (it was necessary to be more afraid of war than of defeat). அதிக அச்சம் தரக்கூடிய போரைத் தவிர்ப்பதற்காக அடிமை உடன்பாட்டிற்கு வராமல் அனுபவம், அறிவுத்திறம் என்ற பிரச்சாரத்தின் வழியாக பதவியைப் பிடித்த ஒரு 84 வயது மனிதன் வேறு என்னதான் செய்துவிட முடியும்.

          அன்றைக்கு ஜெர்மனுக்கு அடிமையான பெடைனைப் போல் இன்று அமெரிக்க அடிமையாக சர்கோசி இருப்பதாகக் குற்றம் சாட்டும் அலைன் பதியு தொடர்ந்து செயல்தளம் சார்ந்த இணைவு பற்றிப் பேசுகையில் ‘அடையாள மேலுருவாக்கம் இரண்டு தன்மைகள் கொண்டது. முதலாவது எதிர்மறையானது. இதில் நான் என்பது மற்றதல்ல என்பதாகும். இரண்டாவது, ஒரு புதிய சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் அடையாளம். ஒரே ஒரு உலகமே உண்டு என்ற சொல்லாடலின் அரசியல் விளைவாக அடையாளங்கள் பொதுமைப்படுத்தப்படுகின்றன’ போன்ற கருத்து நிலைகளில் நின்று சொந்த நாட்டின் உலகமயச் சூழல் விதைத்த அடையாளத் தனிமை, அடையாள ஒருமை பற்றிப் பேசுகிறார்.
          எடுத்துக்காட்டுகளில் உள்ள புவியிடம் சார்ந்த அடையாளங்கள் தவிர்த்து சாராம்சத்தில் அலைன் பதியுவின் கருத்துக்கள் சர்வதேசத் தன்மை வாய்ந்தவை. இந்திய தமிழகச் சூழலுக்கும் நாம் இவற்றைப் பொருத்திப் பார்க்கலாம்.

மாறாச் சூழலில் மாற்றம் நோக்கி...

இறுதியில் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டில் என்ன கேள்விகளைக் கொண்டு புதுயுகம் பிறந்ததோ அவ்வாறே நாமும் உள்ளோம். வறுமையின் பரப்பு அதிகரித்துள்ளது. சமத்துவமின்மை, அரசியல் என்பது செல்வருக்குப் பணிசெய்தல், இளைஞர் பட்டாளம் எதையும் மறுதலிக்கும் எதிர்வாதம், அறிவுஜீவிகளின் அடிமைத்தனம், உடைந்து நொறுங்கிப்போன சில குழுக்கள் கம்யூனிசத்தை உருவாக்க முனையும் கொள்கை ஆகிய யாவும் பத்தொன்பதாம் நூற்றாண்டு போலவே உள்ளன. இவற்றின் பொருள் கம்யூனிசக் கருதுகோள் நெருக்கடியில் உள்ளது என்பதல்ல. வாழ்நிலையே அவ்வாறு உள்ளது. எதிர்வாத அரங்கேற்றம் நிகழ்ந்துவரும் இக்காலத்தில் நாம் சில இலக்குகளை உருவாக்க வேண்டும். உலகளாவிய சிந்தனைத் தொகுப்புக்களை நாம் கண்டடைய வேண்டும். அரசியல் அனுபவம் தனித்து உள்ளூர் நிலையில் இருந்தாலும் உலகளாவிய அளவில் மாற்றம் பெறத்தக்கதா என்று காணத்தகுந்த கம்யூனிசக் கருதுகோள்களை நாம் உணர்வுகளில் வடிவமைக்க வேண்டும்’ என தன் உணர்வுகளை வெளிப்படுத்திச் செல்கிறார் அலைன் பதியு.
          முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரும் வேகத்தில் கம்யூனிசக் கருதுகோள்களின் செயல் திறம் வளர்ச்சி பெறவில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள மறுத்தால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே பொருள். உலக அளவிலான சிந்தனையும் உள்ளூர் மட்டத்திலான களப்பணியும் அன்றும் இன்றும் என்றும் தேவை என்பதை மனதிலிருத்த வேண்டியது அவசியந்தானே?

(2010 நவம்பர் 7 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ‘மதிப்பு’ கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரையின் பகுதி 1)

(மேலும்...)

Wednesday, November 10, 2010

இளமையின் கீதம் நாவல் ஒரு பார்வை - விஜி


நூல் விமர்சனம்

நூல்                 இளமையின் கீதம் (நாவல்)
சீன மூலம்   யங்மோ
தமிழாக்கம்   மயிலை பாலு
வெளியீடு      அலைகள் வெளியீட்டகம்
                            25, தெற்கு சிவன் கோயில் தெரு,
                            கோடம்பாக்கம்
                             சென்னை - 600 024
தொலைபேசி +9144 2481 5474
விலை               ரூ. 300.00

 
           மாணவப் பருவம் துடிப்பு மிக்கது; இளமை வேகம் மிக்கது; செயலூக்கம் மிக்கது. அத்தகைய செயல் திறனுக்கான ஆக்கப்பூர்வமான லட்சியமோ, திசைவழியோ உணரப்படாதவரை அவை சோம்பிப்போய் தீயவற்றின் பாதையில் திசைமாறிச் சிதறி, சிதைந்து போகின்றன. லட்சிய உரமூட்டப்பட்ட மாணவர்கள் ஒன்றிணையும்போது, அவர்கள் ஒரு மாபெரும் சக்தியாக மாறுகின்றனர். அத்தகைய மாற்றம் எத்தனை மகத்தானது என்பதைப் பல நாடுகளின் வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. நம் கண்முன்னே தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு இதனை தெளிவாக உணர்த்துகிறது. வரலாற்றின் ஒரு பகுதியாக ‘மக்கள் சீனம்’ உருவான புரட்சிப் பாதையில் மாணவர்களின் பங்கேற்பும், போராட்டங்களும் எத்தனை முக்கியமாய் அமைந்தன என்பதை இளமையின் கீதம் என்ற சீன நாவல் உணர்த்துகிறது.

           பழைய சீனத்தின் கிராமப்புற நிலப்பிரபு ஒருவரால் வஞ்சிக்கப்பட்ட ஒரு குடியானவப் பெண்ணின் மகளான ‘லின் டாவோ சிங்’ தனது வாழ்வியல் அனுபவங்களினால் ஒரு கம்யூனிசப் போராளியாக உருமாற்றம் பெறுவதே ‘இளமையின் கீதம்’ என்ற நாவலாய்ப் படைக்கப்பட்டுள்ளது. வாழ்வின் துன்பங்களால் தற்கொலை செய்யத் துணிந்த டாவோசிங், படிப்படியாக தனது வாழ்விற்கு அர்த்தம் உண்டு என உணர்ந்து, கம்யூனிசக் கருத்துக்களால் கவரப்பட்டு, பலவித போராட்டங்கள், அனுபவங்கள் வாயிலாக புரட்சியின் பாதைக்குத் திரும்புகிறாள். கம்யூனிஸ்ட் மாணவர் தலைவர்களால் வழிநடத்தப்பட்டு, தனது சோகங்களை மீறி புரட்சிக்கு தன்னைத் தயார்படுத்தி, பலவித இன்னல்களுக்கு ஆளாகி, சிறை சென்று, இறுதியில் மற்றவர்களை வழிநடத்தும் கம்யூசப் போராளியாக டாவோசிங் வளர்ந்து நிற்பதை நாவல் பேசுகிறது.

           அக உணர்வுகள், மாற்றங்கள் பற்றிப் பேசுவதோடு அதற்குக் காரணமாய் அமைந்த அன்றைய புறச்சூழலைப் பற்றியும், நாவல் விரிவாகப் பேசுகிறது. 1935 காலக்கட்டத்தில் சீனாவில் இருந்த தேசிய நெருக்கடி, ஜப்பானிய ஏகாதிபத்திய அச்சுறுத்தல், ஆளும் கோமிண்டாங் அரசின் சரணாகதி, இவற்றால் பறிபோகும் சீன தேசம், அவற்றை எதிர்த்த போராட்டங்கள், போராட்டங்களின் மீதான அடக்குமுறை என நாடு முழுவதும் இளைஞர்களை, மாணவர்களை கிளர்ந்தெழச் செய்த புறச்சூழல் மிக யதார்த்தமாய் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1935 டிசம்பர் 9ல் பீக்கிங்கில் நடைபெற்ற ஜப்பானிய எதிர்ப்பு மற்றும் தேசிய விடுதலைக்கான இயக்கங்களை தீவிரப்படுத்திய மாணவர் கலகமான ‘டிசம்பர் இயக்கத்தை’ (நமது ஜாலியன் வாலாபாக் படுகொலை எழுச்சிக்கு இணையானது) அடிப்படையாகக் கொண்டு நாவல் தொடர்கிறது.

          லின் டாவோ சிங் என்ற ஒற்றைப் பெண்ணின் வாழ்க்கை சித்தரிப்பாக தொடங்கும் நாவல் படிப்படியாக இயல்பாய் தேச விடுதலை உணர்வின் வழியாக சமூக மாற்றத்திற்கான புரட்சிப் பாதையில் பயணிக்கிறது. தனி மனிதன் தொலைந்து போய் மக்கள் திரள், புரட்சியை நோக்கி நடைபோடும் போராளிகளின் திரளான சமூக எழுச்சியோடு நாவல் முற்றுப் பெறுகிறது. ஒரு தனி மனிதக் கதை அல்ல இது. அந்தச் சூழலில் வாழ்ந்த எந்த ஒரு மாணவனின் கதையாகவும் இதுவே இருக்க முடியும். பழமைச் சமூகத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரு இளம் அறிவு ஜீவியின் கதை இது.

            ‘லின் டாவோ சிங்’ மட்டுமல்ல லட்சிய வீரனாய், புரட்சிகர போராளியாய் போராடி மாண்டு போகும் லூ சியா-சுவான், தன் சுயநலத்திற்காக எதையும் செய்கிற, யாரோடும் சேர்கிற யூங்-சே, போராட்ட வீரனாய்ப் புறப்பட்டு இடையில் திசைமாறி துரோகியாய் - காட்டிக் கொடுப்பவனாய் மாறும் தய்-யூ, நிலப்பிரபுத்துவத்தின் பிரதிநிதியாய் வந்து புரட்சியை அழிக்க முனையும் ஹீமெங்-ஆன், அழுது கொண்டே சிறைக்குள் வந்து அசைக்க முடியாக போராளியாய் பரிணாம வளர்ச்சியடையும் ஷீ-சியூ, பிற்போக்காளரான தந்தையை எதிர்த்து நிற்கும் லோ டா-ஃபாங், தாய்ப்பாசத்தால் புரட்சிப் பாதையில் ஈடுபட முடியாமல் தடுமாறும் சூ-நிங், தேசபக்திப் போராட்டத்தில் ஈடுபட வயது பிரச்சினையில்லை என மாணவர்களின் போராட்டத்தில் தன் மனைவியோடு தன்னையும் இணைத்துக் கொண்ட பேராசிரியர் வாங் என பலவகைப்பட்ட மனிதர்களையும் அவர்களின் வழியே புரட்சிப் போராட்டங்களையும் நாம் சந்திக்கிறோம்.

          எளிய நடையில் 748 பக்கங்கள் விரியும் நாவல் பல இடங்களில் நமக்குள் கேள்விகளையும் சிந்தனைகளையும் விதைத்துக் கொண்டே செல்கிறது. கம்யூனிஸப் புத்தகங்களின் வாசிப்பால் புரட்சிப் பாதைக்குத் திரும்புய ‘டாவோ சிங்’கின் வாழ்வு, புரட்சிப் பயணத்தில் புத்தகங்கள் நம்மை எந்தளவு தகவமைக்கும் என்பதற்குச் சான்றாகும். காதல், பாசம் என்பது புரட்சி என்ற பெருங்கனவிற்கு எதிராக திரும்புகையில் போராளிக்கு ஏற்படும் தடுமாற்றங்கள் பற்றியும், அவற்றிலிருந்து மீண்டு வருவது பற்றியும் நாவல் உணர்வுப்பூர்வமாகப் பதிய வைக்கிறது. தத்துவங்களை நடைமுறைப் படுத்துவதற்கான அறிவை அனுபவங்களே தரும் என்பதை நாவல் எல்லா இடங்களிலும் பறை சாற்றுகிறது. ‘தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல சிறைச்சாலைகளும்கூட கம்யூனிஸப் பள்ளிகள்’தான் என போராளிகளின் வாழ்வு நமக்குக் காட்டுகிறது. சிறைச்சாலை சென்று மீளும் ஒவ்வொரு போராளியும் அதிக வீரியமாய், கிளர்ந்தெழுந்து புரட்சியின் உந்துவிசையாய் மாறும் அற்புதத்தை நாவல் சுட்டிக் காட்டுகிறது. உழைக்கும் வர்க்கத்தினரின் உணர்வுப் பெருக்கை, அனுபவ அறிவை போராளிகள் ஒருங்கிணைக்க வேண்டிய முயற்சியையும் நாவல் நமக்குக் கற்றுத் தருகிறது. நாவல் மீண்டும் மீண்டும் முன்வைக்கும் ஒரே கேள்வி ‘தேசம் பற்றி எரிகின்ற போது நீங்கள் ஒரு பொறுப்பு மிக்க மாணவனாக நூலகத்தில் பாடங்களைப் படித்துக் கொண்டிருப்பீர்களா?’ என்பதுதான். மாணவர்களுக்கு அரசியல் தேவையா? என்ற கேள்வி நாவலில் மட்டுமல்லாமல் இன்றளவும் தேசங்கடந்து உலகம் முழுவதும் முன்வைக்கப்படுகிறது. இதற்கான பதிலை தனது படைப்பின் வழியே அளித்திருக்கிறார்கள் நூலாசிரியர் ‘யங் மோ’வும் மொழி பெயர்ப்பாளர் ‘மயிலை பாலு’வும். இளமையின் கீதத்தை நம்பிக்கையுடன் முன் மொழிவோம்.

(2010 நவம்பர் 7 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ‘மதிப்பு’ கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)