Thursday, August 18, 2011

இ.க.க. (மா.லெ.) மாநிலச் செயலர் விடுதலை


உருவப்பட எரிப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

அண்ணா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக, பிரதமர் மன்மோகன் சிங்கின் 'திரு உருவ' படத்தை எரித்ததாக, CPI (ML) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வெங்கடேசன் உள்ளிட்ட விழுப்புரத்தில் 17-08-2011 அன்று கைதுசெய்யப்பட்ட கட்சித் தோழர்கள் அன்றிரவு விடுதலை செய்யப்பட்டார்கள்.

தோழர்கள் கைதை ஒட்டி மதுரை மாவட்ட இகக (மா.லெ.) வெளியிட்ட சுவரொட்டி

Wednesday, August 17, 2011

கவிதைகள் – கேகே


வெவ்வேறு காலங்களில்
(நம்) உடைகள்
வெவ்வேறாய் இருக்கின்றன.
விருப்பத்தின் நியதியா?
கிடைப்பருமையா?
மாற்றமா? வளர்ச்சியா?
கவிஞர் விக்ரமாதித்யனும்
தோழர் மதியும்
நிறையச் சொல்லியிருக்கிறார்கள்
உடுத்துவது பற்றி; வெளுத்துப் போகும் நிறம் பற்றி.

இப்போதெல்லாம்
உடுப்புகள் ஆயத்தமாயுள்ளன
தேர்வது அவரவர் தோதுப்படி.
சிலபோது தேர்ந்தெடுத்துத்
தைத்துக் கொள்கிறோம்.
உடுப்பிற்கேற்ப உறுப்புகளை
நெளித்தும் கொள்கிறோம்.

ஒரு செந்நிற
குத்தாலத் துண்டு மட்டும்தான்
தேவைப்படுகிறதெனக்கு
என் கருத்த உடலில் வழிந்தோடும்
வியர்வையைத் துடைக்க.

0

இவரைப் பார்க்கும் போதெல்லாம்
அவர் நினைவு வருவதிலிருந்து
அவரைப் பார்க்கும்போது
இவர் நினைவு வருகிறது.

0

விபத்துச் செய்தியை வாசித்ததன் முடிவில்
முத்தாய்ப்பாகச் சிரிக்கும் வாசிப்பாளினி போல்
தன் வெற்றிச் செய்தியை
அறிவிக்கிறான் கயவன்.

(2011 ஆகஸ்ட் 7ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக‘வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

CPI (ML) மாநிலச் செயலாளர் கைது

அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக, பிரதமர் மன்மோகன் சிங்கின் 'திரு உருவ' படத்தை எரித்ததாக, CPI (ML) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் உள்ளிட்ட கட்சித் தோழர்கள் விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
          அவனவன் கஞ்சி கேட்டு போராடுனா, அவன தீவிரவாதின்னு கவருமென்ட்டு சொல்லும்.  அமைதியா ஒக்காந்து உண்ணாவிரதம் பண்ணா, அவன என்ன சொல்லும்?  எங்கள மாதிரி அப்பாவி மக்களை காப்பாத்த ஆயுதத்த எடுத்தா, அவன் நக்சலய்ட்டாம்... அவங்களுக்கு எதிரா, கவருமென்ட்டு ராணுவத்த அனுப்பும்.  

          லோக் பால்ன்னு என்னவோ ஒருத்தன் கேக்குறான், அவன் உண்ணாவிரதம் இருக்கக்கூடாதுன்னு கவருமென்ட்டு போலீச அனுப்புது.  ஆயுதமும், உண்ணாவிரதமும் இந்த கவருமென்ட்டுக்கு ஒன்னாத் தெரியுது.

          பெரியாசுபத்திரியில நாங்கல்லாம்,  மருந்தில்லாம சிரமப்படுறோம்.  மன்னராட்சி நடக்குற நம்ம நாட்டோட மகாராணி, வெளிநாட்டுல போயி ஆபரேசன் பண்ணுறாங்களாம்.  அந்த மகாராணி இல்லாததால, நம்ம கவருமென்ட்டுல இருக்குறவனுக்கு, உண்ணாவிரதத்த என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கான்...  ஒரு வேள மகாராணி கோபத்துக்கு ஆளாயிட்டா...???

          அகிம்சை, காந்தி, வந்தே மாதரம் அப்படி இப்படின்னு வாய் கிழிய பேசுன காங்கிரசுக்காரன் எல்லாம், அவன் கட்சிக்கூட்டத்துலையும் அடுத்தவன் வேட்டியக்கிழிச்சுக்கிட்டு அடிச்சு விரட்டுறான், அடுத்தவன் உண்ணாவிரதம் இருந்தாலும், அங்கயும் போய் அடிச்சு விரட்டுறான்.  இது என்ன அகிம்சையோ, என்ன எழவோ?

          கபில் சிபலு, திக்குவிஜய் சிங்கு மாதிரி அரைவேக்காட்டுப் பசங்கள எல்லாம் யாரு அரசவைக் கவிஞர்களா ஆக்குனது?  தினம் தினம் சிரிப்புக் காட்டுறானுகளே...  பேசாம அரசவை பபூன் ஆக்கி இருக்கலாம்.  

          ஆட்டயப்போடலாமாம் இந்த நாட்டுல,  ஆனா அத யாரும் கேக்கக்கூடாதாம்... அதுக்கு தான் இந்த ஆட்டம் போடுறானுங்க பிக்காளிப்பயலுக...  தட்டிக்கேட்டா ஜெயில்ல போடுவான்.  இத தானே பிரிட்டிசுக்காரன் செஞ்சான்.         இந்த ரெண்டு நாதாரிகளும் பொறந்த இடம் ஒன்னு தானே...

          EVKS இளங்கோவன் அப்பிடின்னு ஒரு அறிஞர் இருக்கார்.  அவரு சொல்லுறார், "அண்ணா ஹசாரே முதலில் தன்னை ஒரு நேர்மையாளர் என்று நிரூபிக்கட்டும்.  பிறகு போராட வரட்டும்" அப்டின்னு சொல்லுறார்.  அதாவது, இந்த திருட்டுப்பயளுகள எதித்து யாரு வரணும்மினு இவனுகளே முடிவு பண்ணுவானுகலாம்.  

          சரி, இந்த அல்லக்கைகள விடுங்க...  நம்ம பிரதமருன்னு ஒருத்தர் இருக்காரே, அவரு என்ன சொல்லுறார் கேப்போமா?  

          "அதாகப்பட்டது, இந்த மாதிரி உண்ணாவிரதம் இருந்தெல்லாம் இந்த நாட்டுல இருந்து ஊழல ஒழிக்கமுடியாது"  அப்டின்னு சொல்லுறார் இந்த நாட்டுக்கு பொறுப்பாளர், அதாங்க பிரதமர்.  இப்டி சொன்னதுக்கு மகாராணி கிட்ட பெர்மிசன் வாங்கினாரா தெரியல... 

          ஏய்யா, உலகத்திருடன் எல்லாம் உன் கூட தான் இருக்குறான், அது உனக்குத் தெரியல.  அவன் ஆட்டயப்போட்டு மாட்டுனா, "எனக்கு ஏதும் தெரியாது"னு சொல்லுற.  அதத்தட்டிக்கேட்டு போராட்டம் நடத்துனா, பெர்மிசன் தரமாட்ட.  மீறி பண்ணா போலீச அனுப்புவ.  உண்ணாவிரதம் இருந்து ஊழல ஒழிக்கமுடியாதுனு சொல்லுவ.

          அய்யா சாமி, நீ இந்த நாட்ட நெசமாத்தான் ஆளுறியா?  இல்ல ஆளுற மாதிரி கனவு காணுறியா?  

          நீ ரிசர்வ் பேங்க் கவர்னர் இல்லைய்யா...  இந்த நாட்டோட பிரதமர், அதாவது PRIME MINISTERRRRRRRRRRRRR.... 

          காதுல விழுகுதா இல்லையா? என்ன விழுந்ததோ, என்ன எழவோ போ...
(நன்றி : http://olirumpaadhai.blogspot.com/)

Wednesday, August 10, 2011

மாவிபக‘வின் படைப்பரங்கம்

தோழர்களே...
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின்
அடுத்த படைப்பரங்கம்
2011 செப்டம்பர் 04 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் - புதிதாக கலந்து கொள்பவர்கள் தொடர்பு கொள்ள...
maveepaka@gmail.com

புடைத்துண்ணும் சதுக்கபூதம் - கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி


நாக்கை நீளமாகத் தொங்கவிட்டபடி கிஸ்சு முஸ்சு என்று இழைத்தபடி எப்போதோ வீசப்பட்ட கல்லை நினைவில் சுமந்து, விரட்டாத கல்லுக்காக ஓடிக் கொண்டிருக்கிறது அந்தநாய். சிந்தனைகளில் சிக்கிக் கொண்டு என்னை மறந்து நான் நடந்து கொண்டிருக்கும்போது ‘வள்’ என்று கத்தி என்னைப்பூமியில் கால்பாவச் செய்கிறது. எப்போதும் நாய் துரத்தினால் ஓடவோ வேகமாக ஒதுங்கவோ கூடாது என்பதும் அப்படி செய்யும்போது நாயின் வீரம் பலமடங்கு அதிகரிக்கும் என அறிந்திருந்ததால் “சீ… போ… கழுத…” என்று நின்று முறைத்து வீரவசனம் பேசியதும் அது ஒதுங்கி ஓடத் தொடங்கியது.

இப்படி வாழ்க்கையில் எழுகின்ற பிரச்சனைகளை எல்லாம் நின்று வீரவசனம் பேசி வெற்றி கொண்டுவிட முடிந்தால் எவ்வளவு லகுவாக இருக்கும். ஆனால் உண்மையில் இந்த நாயைப் போலத்தான் நானும் ஓடிக் கொண்டிருக்கிறேன்.

வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள், அவை எழுப்பும் புகைகள் நாசியை மட்டுமல்ல உயிரையும் துளைத்துக் கொண்டிருந்தன. அலையில் சிக்கிய பந்தால் மூழ்கி எப்படி முத்தெடுக்க முடியும் என்பதுபோல்தான் இன்றைய உலகில் வாழ்க்கை என்பது அதளபாதாளத்தில் ஒளிந்து கொண்டுள்ளது. நானோ வெறும் காற்றடைத்த பந்தாக துன்ப அலைகளின் மீது.

எப்படியோ தக்கிமுக்கி தகப்பனின் ஒற்றைச் சொத்தையும் காலியாக்கி வாங்கிய பட்டம். அந்தப் பட்டத்தோடு தெருத்தெருவாய் அலைந்து பெற்ற வேலை. வேலை என்றால் சம்பளம் என்ற ஒன்று உண்டல்லவா? வெள்ளை காகிதத்தில் நான்கு இலக்கங்களில் மாதச் சம்பளம் என அச்சடித்துத் தந்தது அந்த பன்னாட்டுக் கம்பெனி. அதன் குளுகுளுப்பு சென்னையின் வெயிலுக்கு இதமாக இருந்தது.

முதல் மாதம் சென்றது. இரண்டாவது மாதம் சென்றது. மூன்றாவது மாதமும் சென்றது. ஆனால் சம்பளம் மட்டும் வந்தபாடாக இல்லை. ஏன் என்று யாரிடமும் கேட்க முடியவில்லை. ஆனால் வயிறு மட்டும் என்னை கேட்டுக்கொண்டே இருக்கிறது. கண்ணாடி அறைக்குள் இருந்த குளிரைத் தாண்டி என் வயிறு கொதிக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் கணிப்பொறி பளிச்சென ஒளிர்கிறது. என் கண்கள் இருட்டிக் கொண்டு போகின்றன.

தீ எரிந்தால் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்தை எத்தனை முறைதான் பயன்படுத்துவது என் வயிற்றுத் தீக்கு? உயிர் கருகும் வாசனை என் நாசியைத் துளைக்கிறது. எப்படித்தான் ஜடமாக எல்லோரும் வேலை பார்க்கிறார்களோ என்ற ஆச்சரியம் ஒருபுறம்.

கசக்கிப் பிழிந்து எறியப்பட்ட சக்கையாக வீதியில் நடந்து கொண்டிருக்கிறேன். மேன்சன் முழுக்கக் கடன்கள் என் வருகைக்காக காத்துக் கிடக்கும். எங்கு செல்வது, யாரிடம் சொல்வது? ஒன்றும் புரியவில்லை. எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட கல்வித் திட்டத்தில் இதுமாதிரியான நேரத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எந்த தகவலும் இருந்ததில்லை.

கடற்கரையோரம் செய்வதறியாது நடந்து செல்கிறேன். மனிதர்கள் கூட்டம் கூட்டமாய். எல்லோரின் மீதும் ஒரு வலை பின்னப்பட்டிருக்கிறது. தான், தன் குடும்பம், தன் சுகம் என்ற இரும்பு நூல்களால் ஆக்கப்பட்டிருக்கும் வலை அது. ஆங்காங்கே உணவுப் பொருட்கள் கடைகளில் கண்சிமிட்டி பணமுள்ளவர்களை மட்டும் அழைக்கின்றன. தண்ணீர்கூட பாக்கெட்டுகளில் முடக்கப்பட்டு ஊனமாகிப்போன உலகைப் பறைசாற்றுகிறது.

கடலிலிருந்து வெளிவரும் அலை என் கண்களுக்கு அன்பாகத் தெரிகிறது. இந்த இயற்கை மனிதனுக்கு அன்பை மாறிமாறி வழங்குவது போலவும் அதை அவன் பெற மறுப்பதால் மீண்டும் அவை திரும்பி சென்றுவிடுவது போலவும் உணர்கிறேன். இத்தனை நாட்களாக என்னைச் சுற்றி இருந்த இரும்பு நூல்களை ஒவ்வொன்றாக அறுத்தெறியத் தொடங்குகிறேன்.

ஒரு காயசண்டிகை பிச்சைப் பாத்திரத்துடன் என் முன்னே வந்து நிற்கிறாள். அன்னதானத்தில் என் தங்கையுடன் நிற்கும் தாயை நினைவுபடுத்தியபடி மணிமேகலையாய் எல்லோர் பசியையும் அறுத்திடத் துடிக்கிறேன். அமுதசுரபியின் நினைவு வருகிறது. அதைத் தேடிப் பயணப்பட்ட போது சிதைக்க இயலாத சிவப்புநிற அமுதசுரபியை உடைத்துவிட்டதாகக் கூறி அதன் மீது ஓட்டுப் பெட்டியை வைத்து மறைத்திருப்பதைக் காண்கிறேன். களவாடி கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள அமுதசுரபியை மீட்டு ஆதிரை தேடி அலையலாமா என்ற எண்ணம் என்னுள் ஊடாடுகிறது.

சுண்டல் விற்கும் சிறுவன் ஒருவன் என் பயணத்தைத் தடைசெய்து பூமிக்கு அழைத்து வருகிறான். வழியில் கண்டெடுத்த அரித்த சத்திய சோதனை புத்தகத்தை அவனுக்குக் கொடுக்கிறேன். படிப்பான் என்று எதிர்நோக்கிய என் விழிகளுக்கு எதிரிலேயே சரக் சரக்கென எல்லாப் பக்கங்களையும் கிழித்து சுண்டல் மடிக்க வைத்துக் கொள்கிறான்.

பசி மறந்து லயித்திருந்த நேரத்தில் மீண்டும் நாக்கைத் தொங்கப் போட்டபடி அந்த நாய் என்னை நோக்கி ஓடி வருகிறது. நான் எழுந்து ஓடத் தொடங்குகிறேன். அப்போது எதிரில் என்னைப் போல் இன்னொருவன் ஓடி வருகிறான். இருவரும் எதிரெதிரே நின்று ஒருவரை ஒருவர் பார்க்கிறோம். சுற்றிலும் பார்க்கிறேன் பல இளைஞர்களையும் பல நாட்டு நாய்கள் துரத்திக் கொண்டிருக்கின்றன.

ஒரு இளைஞன் தன் விரல்களை வெட்டி அதன் பசிக்குத் கொடுக்கிறான். ஒருவன் இனி ஓட வலுவில்லை என்பதால் கால்களைக் கழற்றிக் கொடுக்கிறான். ஒருவன் தன் மூளையைக் கையில் எடுத்து அதன் முன்வைத்து மண்டியிட்டு மன்றாடுகிறான். ஒருவன் கண்களை என்று ஒவ்வொருவரும் தங்கள் அவயங்களை நாய்களுக்கு அளித்து சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இருந்து வழியும் ரத்தங்கள் எல்லாம் கடலில் கலந்து கப்பல் ஏறி கழுகுகளின் தேசத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றன.

அந்த இன்னொருவனின் தலையில் இருந்த ராணுவத் தொப்பியில் பனித்துளிகள் மின்னிக் கொண்டிருக்கின்றன. என்னையாவது நாய் துரத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அவனையோ சிங்கம் துரத்துகிறது. அதுவும் நான்கு தலையுள்ள சிங்கம். என்னிடம் உதவியாகத் தன்னை எப்படியாவது சிங்கத்திடமிருந்து காப்பாற்றும்படி கெஞ்சி வேண்டுகிறான். நான் எனக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கும் நாயை அவனிடம் காட்டுகிறேன்.

எனக்காக இரக்கப்படவோ வருத்தப்படவோ ஆற்றப்படுத்தவோ வழியில்லாமல் என்னைக் கீழே தள்ளிவிட்டு தன் அவயங்களைக் காத்துக் கொள்ள அவன் ஓடத் தொடங்குகிறான். எனக்குள் சிரிப்பு எழுகிறது. ஏன் எதற்கு என்று தெரியாமல் யாருடைய இலாபத்திற்போ துப்பாக்கி தூக்கி வனங்களில் திரிந்து தன் மக்கள் மீதும் என் சோதரர்கள் மீதும் குண்டு பொழிந்து திரிபவன்தானே இவன் என்று தெரிந்தபோது என் சிரிப்பு அதிகரிக்கிறது. என் சிரிப்பும் சேர்ந்து அவனைத் துரத்துகிறது. தலைதெறிக்க ஓடுகிறான்.

கீழே விழுந்த என்னைக் கடித்துக் குதற அந்த நாய் வெறியோடு என் அருகே வருகிறது. அப்போது திடீரென அங்கு வருகின்ற ஓநாயைக் கண்டதும் விரட்டிய நாய் ஓநாயின் காதுகளில் வேதம் ஓதி புரிந்துணர்பு ஒப்பந்தம் ஒன்றை இட்டு ஒதுங்கிக் கொள்கிறது.

என் கண்களில் பயத்தைவிட பசியே அதிகம் இருப்பதைக் கண்டதும் எனக்கு இலவசமாக உணவை வழங்குகிறது அந்த ஓநாய். கிராமத்தில் வயிற்றோடு சண்டையிடும் என் குடும்பத்திற்கும் தான்தான் உணவளித்திருப்பதாக என்னிடம் தன்பெருமை கூறி காலரை உயர்த்திக கொள்கிறது ஓநாய். எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பக் பக் என்று சாப்பிடத் தொடங்குகிறேன். அந்த ஓநாய் என் அருகிலேயே சவுகரியமாக உட்கார்ந்து கொள்கிறது.

அந்த ஓநாயை மேன்சனுக்கு அழைத்துச் செல்கிறேன். ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு ஓநாய் புதிதாக வந்துள்ளது தெரிகிறது. ஆனால் எப்போதும் இல்லாத ரத்தவாடை இப்போது அங்கு வியாபித்திருக்கிறது. என் அறைக்குச் சென்று பார்க்கிறேன். ஓநாயின் தயவால் கண்ணைக்கவரும் ஒரு தொலைக்காட்சி என்னை வரவேற்கிறது. வயிற்றுப் பசி அறுத்ததால் முட்டுப்பசி எழுகிறது. மனதை மயக்கும் காமங்கள் எல்லாம் ஓருருவாய் அந்தப் பெட்டிக்குள் இருந்து விஸ்வரூபம் எடுத்து என்னை முழுமையாக ஆட்கொள்கின்றன.

என்னை மறந்து உறங்கி காலையில் எழுகிறேன். அறையெங்கும் ரத்தம் சிதறிக் கிடக்கிறது. தற்செயலாக ஓநாயின் வாயைப் பார்க்கிறேன். என்னைப் பார்த்து நட்புடன் அது சிரிக்கிறது. அதன் பற்கள் எங்கும் இரத்தம். குளியலறைக்குள் சென்று குளிக்கும்போதுதான் எனக்கு காயடிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. மேலும் முதுகில் ஒரு சிறுவலி தென்பட்டதால் தடவிப் பார்க்கிறேன். அங்கே சிறு ஓட்டை இருப்பதையும் அதிலிருந்து இலசோக பிசுபிசுவென இரத்தம் வழிந்திருப்பதையும் உணர்கிறேன்.

இவைபெய்லலாம் எப்போது நடந்தது. எப்படி நடந்தது என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை. மீண்டும் எனக்கு உணவு கொடுக்கிறது ஓநாய். சந்தோசமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். எதிரிலிருந்த கண்ணாடியை எதெச்கையாக பார்த்தபோது அதிர்ந்து போகிறேன். என் முதுகு பின்னால் உட்கார்ந்து அந்த ஓநாய் ஒரு ஸ்ட்ராவால் என் முதுகு ஓட்டைக்குள் இருந்து இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கிறது. சுவரிலிருந்த எந்த கடவுளின் ஆயுதமும் எனக்காக பாய்ந்து வராமல் தேமே என்று உள்ளன.

படக்கென எழுந்து வெளியில் ஓடுகிறேன். ஒவ்வொரு அறையிலும் ஓநாய்கள் மேன்சன்சாரர்களின் இரத்தத்தை அவர்களே அறியா வண்ணம் உறிந்து கொண்டிருக்கின்றன.

அப்போது கணக்கெடுப்பிற்கு வயிறு பெருத்த தொத்தடிமைகள் இருவர் கைகளில் பூணப்பட்ட தங்க விலங்குகளுடன் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கைகளில் இரத்தம் தோய்ந்த கத்தி இருக்கிறது. ஒவ்வொருவரிடமும் இருக்கும் ஆள்காட்டி விரலை ஜனநாயக சாட்சியாக வெட்டி எடுத்து பையில் போட்டு கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னைக் கண்டதும் என் ஆட்காட்டி விரலையும் நீட்டச் சொல்கிறார்கள். “ஏன். எதற்கு? எப்போதும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறைதானே. பெயரும் தகவலும் மட்டும் கேட்பீர்கள். ஜாதிவாரியாக என்று கூறினார்கள். இப்போது இது என்ன புதுமுறை?” என்ற என் கேள்வியைக் கேட்டு அவர்கள், “அதிகம் பேசுகிறான். இவன் கண்காணிப்பிற்கு உரியவன். இவனுக்கு கண்காணி தேவை” என்று தங்களது குறிப்பில் என்னைப் பற்றிக் குறித்துக் கொள்கிறார்கள்.

“ஒவ்வொரு முறையும் பொத்தானை அழுத்தவும் கரும்புள்ளி வைப்பதற்கும் விரல்கள் மட்டும் போதும் என பாராளுமன்றம் முடிவு செய்துள்ளது தெரியாதா?” என்று கூறியபடி என் விரலை வெட்டி எடுக்கிறார்கள். அதன் மீதும் என் நெற்றியிலும் ஒரு எண்ணைப் பச்சை குத்துகிறார்கள்.

இந்த கொடுமைகளுக்கெல்லாம் முடிவு கட்டிவிட ஊருக்குள் இருந்த காவல்நிலையம் நோக்கி ஓடுகிறேன். காவல்நிலைய வாசலில் விழுந்து கிடந்த இருதயங்களில் கால் இடறி கீழே விழுந்தேன்.

அங்கு உள்ளே நுழைபவர்களை ஆய்வு செய்யக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் தாள் உள்ளவர்களுக்கு மட்டுமே அதன் கதவு திறந்து மூடுகிறது.

நாயாகவோ ஓநாயாகவோ மாற முடிந்தவர்கள் மட்டும் மகிழ்ச்சியைத் தங்கள் தோள் மீது தூக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். கரடி விடத் தெரிந்தவர்கள் எல்லாம் கார்களில் பறந்து கொண்டிருக்கிறார்கள். என்னால் சகிக்க முடியவில்லை.

மசூதி, சர்ச், கோவில் வாசல்களில் கிடக்கும் மூளைகளை எல்லாம் மிதித்து விடாமல் தாண்டிச் செல்வது சற்றுக் கடினமாக இருக்கிறது. இப்போதுதான் எனது மூளை குறித்த கவனம் எனக்கு வருகிறது. கீழே கிடக்கும் மூளைகளை எல்லாம் எடுத்து எனக்குப் பொருத்திப் பார்க்கிறேன். ஒன்றும் சேரவில்லை சட்டென ஞாபகம் வந்ததும் மூளை தொலைத்த இடம் தேடி ஓடுகிறேன்.

முனகல் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும் ஆசிரமம் ஒன்றினுள் நுழைகிறேன். அங்கிருக்கும் சாமியாரின் கையில் இருக்கும் தட்டில் என் மூளை இருக்கிறது. அதன் மீது உப்பும், மிளகுப் பொடியும் தூவி உண்ணத் தயார் ஆகிக் கொண்டிருக்கிறார் அந்தச் சாமியார்.

சாமியார் மூளையைத் திண்ணும் முன் அவரிடமிருந்து பிடுங்கி என் மண்டைக்குள் போட்டுக் கொள்கிறேன்.  என் உடலின் நிறம் கருப்பாகியது. “அவனை விரட்டுங்கள்” என்றதும், சாதுக்கள் எல்லாம் சூலங்களோடு என்னைத் துரத்துகிறார்கள். அங்கிருந்து வெளியேறி ஓடுகிறேன்.

மனிதர்கள் அற்ற உலகில் வாழ மனது துடிக்கிறது. அவர்களிடமிருந்து தப்பி சாலைக்குள் புகுந்தபோது மீண்டும் நாயும் ஓநாயும் என்னைத் துரத்தத் தொடங்குகின்றன. சடக்கென ஒரு சந்தில் திரும்பி ஒரு கட்டடத்திற்குள் ஒளிந்து கொள்ள நுழைகிறேன். அங்கு புத்தகங்கள் இறைந்து கிடைக்கின்றன. ஒருவித புத்தகநெடி என்னைச் சங்கடப்பட வைக்கிறது. யாருமே நுழையாத நூலகம். உள்ளே நுழைகிறேன்.

அங்கே ஒரு தாடிக்காரக் கிழவர் உட்கார்ந்திருக்கிறார். அவரிடம் “ஏதாவது வழி இருக்கிறதா?” என்று கேட்கிறேன். அப்போது ஒரு இளைஞன் கையில் வெடிகுண்டுடன் தன் நண்பர்களுடன் விளையாடியபடி தூக்குக் கயிறு ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான். தலைப்பாகையுடன் இருந்த மீசைக்காரன் ஒருவன் கவிதை புனைந்து கொண்டிருக்கிறான். அவர்களைப் பார்த்துச் சிரித்தபடி அந்தக் கிழவர் என்னிடம் தனது நாற்பதாண்டு உழைப்பின் காரணமாக தான் கண்டறிந்த விசயங்கள் எழுதப்பட்ட நூல் ஒன்றைக் கையில் கொடுக்கிறார். கொஞ்சம் நம்பிக்கை வருகிறது.

ஊன் மறந்து உறக்கம் மறந்து புத்தகத்திற்குள் வெள்ளிப் பூச்சியாகி மாறி தின்று மேய்கிறேன். கருப்பான என் மேனி கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பாக மாறத் தொடங்குகிறது. எல்லாவற்றின் ஆரம்பம், எல்லாவற்றின் இலக்கு, எல்லாவற்றின் செயல்பாடு என என் முன்னே எல்லாமே தன்னைத்தானே அவிழ்த்துக் காட்டத் தொடங்குகின்றன. வரலாறுகள் வரிசை கட்டி வரத் தொடங்குகின்றன. அப்போதுதான் பொம்மைகள் கைகளில் நம்மை ஆளக் கொடுத்த விசயமும், ஜனநாயகப் பூக்சியை அலகில் சுமந்தபடி எல்லாவற்றையும் கொத்தித் திங்க எப்போதும் வானத்தில் பறக்கும் பருந்தும், அதன் பிடரியில் சுகமாக அமர்ந்து அதை ஆட்டுவித்து வழிநடத்தும் ஆயுத வியாபரிகளும் தெரியத் தொடங்குகிறார்கள்.

அங்கிருந்து நான் வெளியேறுகிறேன். எனக்குள் நிகழும் நிறமாற்றம் புதிய உருமாற்றம் கொள்ளச் செய்கிறது. இப்போது நான் வடிவற்ற, உள்ளீடற்ற உருவமாக மாறத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக சதுக்கப் பூதமாகிறேன். என் வாய்க்குள் நாய்களும், ஓநாய்களும், கரடிகளும், பருந்துகளும் உள்ளே போகத் தொடங்குகின்றன. அவைகள் எல்லாம் ஒன்றாக குரலெடுத்துக் கத்துகின்றன “வன்முறை தவறானது. தீவிரவாதத்தை ஒழிப்போம்” என்று.

மக்கள் பயத்தில் குங்குமம் அப்பிய பூசணிகளை சதுக்கங்களில் பூதத்திற்கு பலி கொடுத்து சாந்தி செய்ய முயலுகிறார்கள். “உங்கள் பலியிடல்களால் என்னை சாந்தி செய்ய இயலாது- நாய்களையும், ஓநாய்களையும், கரடிகளையும், பருந்துகளையும், கழுகுகளையும் இனம் கண்டு நீங்கள் பலியிடும்போதுதான் எனக்கு சாந்தி” என்று கூக்குரலிடுகிறது புடைத்துண்ணும் சதுக்கபூதம்.

(2011 ஆகஸ்ட் 7 ஆம் நாள் – மாவிபக’வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற சிறுகதை)

Monday, August 8, 2011

நடுகல் – கருப்பு


உயிரனைய மண்ணைத்
தொலைத்த புற்கள்
வெட்டி எறியப்படுகின்றன
நான்கு வழிச்சாலையில்.

தூளியில் உறங்கும்
குழந்தையை
சுவற்றில் மோதிக் கொல்வதைப் போல
பயிர்களை அழிக்கின்றன
கரன்ஸிவாசம் பிடித்த கைகள்.
முதன்முறையாக ஒரு உவமை
துன்புறுகிறது…

மத்திமமான இடம்
பேருந்து வசதி
குழந்தைகள் விளையாட பார்க்
பத்திரச் செலவு இலவசம்
நடுகற்களை கூவி
விற்கிறாள் சின்னத்திரை யுவதி.

வீரத்தை பறைசாற்ற
நடப்பட்டவை
இன்று ரியல் எஸ்டேட்களின்
பிளாட்டுகளுக்கு
காவல் தெய்வங்களாய்

ஓய்ந்த கலவரத்திற்குப் பின்
காட்சியுறும் வெளியென
மனம் விக்கித்துத் திரிகிறது
தனக்கான நடுகல்லைத் தேடி…

(2011 ஆகஸ்ட் 7ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக‘வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

யதார்த்த கவிதைகள் – ரமேஷ்


நூல்         : கவிதைகள் வாழும் தெரு
ஆசிரியர்     : தேவ. பிரபாகரன்
வெளியீடு    : உலா பதிப்பகம்
               39/23, ஜெ.எம்.வளாகம்
               சின்னக்கடை வீதி
               திருச்சி - 620 002
               98431 10709 - 94438 15933
               ulapathippagam@gmail.com
பக்கங்கள்    : 56
விலை       : ரூ. 40


கவிதை
அழவைக்க வேண்டும்
இல்லையெனில்
எழவைக்க வேண்டும்
-    அழகுபாரதி
இதைவிட சிறப்பான முறையில் கவிதை என்ன? என்பதை கூறமுடியாது. ஆசிரியர் தேவ.பிரபாகரனின் கவிதைகள் இதைச் செய்ய முயலுகின்றன. சமூகத்தின் வலிகளை சிக்கல் சிடுக்குகளற்ற வார்த்தைகளால் படிமம், குறியீடு, மிகைப்படுத்திக் கூறல் என எவ்வித அலட்டிக்கொள்ளலும் இன்றி வாசகனுக்குப் புரியும் வண்ணம் நேரடியாக முன்வைத்துள்ளார். இவருடைய கவிதைகள் பல தளங்களில் இயங்குகின்றன.

பொலிவான முகம்
மலிவான விளம்பரம்
விற்பனைக்கா பெண். - பெண்ணின் உடலையும், உடல் மொழியையும் ஏகாதிபத்தியம் சந்தைப் படுத்துகிறது என்பதையும்

புகுந்தவீட்டில்,
வாழா வெட்டியாய்
மனைவி.
வெளிநாட்டில் கணவன். – மேல்தட்டு வர்க்கத்தில் கணவனோடு பெண்ணும் வெளிநாட்டில் வசிக்க குடியுரிமை பெற்றுவிடுகிறாள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் பெண்கள் வாழ்வில் இது போன்ற சூழல்தான் நிலவுகிறது என்பதை நினைவுகூற இக்கவிதை தூண்டுகிறது. மேலும் இக்கவிதைகள் வழியாக பெண்ணியம் பேச விழைகிறார் ஆசிரியர்.

சுறுசுறுப்பாக
விளையாடித் திரியும்
வயதில்
வெடியும் திரியும்
கையில் – முதலாளியின் லாபநோக்கத்திற்காக குழந்தைகளின் எதிர்காலம் பாழ்படுவதையும் எண்ணி வருந்துகிறார்.

மாலை தொடுக்கும் பொழுது
விரல்களால் விடப்பட்ட
உதிரிப் பூக்களா
அனாதைக் குழந்தைகள். – வாசிக்கும் பொழுது, சுனாமியால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளும், அவர்களின் இன்றைய நிலையும், நினைவுக்கு வருகின்றன. தொடர்ந்து ‘குடந்தை தீ’ கவிதையும் குழந்தைகள் மீது கவனம் செலுத்த வாசகனை தூண்டும் என்பதில் ஐயமில்லை.

எப்படி
விலக்கினாலும்
தூக்கத்தில்
எட்டி உதைக்கும்
குழந்தையாய்
உன் நினைவுகள் – மற்றும்

உனக்காக
காத்திருந்து
காத்திருந்து
வருவோர் போவோர்க்கெல்லாம்
மைல் கல்லானேன். - இவ்விரு கவிதைகளிலும் வாசகனை காதல் செய்யச் சொல்லும் அழகியல் கூறுகள் நிறைந்து காணப்படுகின்றன.

கூலியாய்
ஒரு படி அரிசி கேட்டேன்
ஒருபிடி அரிசிகூட கொடுக்க
உருப்படி இல்லாதவன்
மனிதனா? – இக்கவிதை வெண்மணி சம்பவத்தையும் அதன் தொடர்ச்சியாய் இன்றுவரை தொடரும் விவசாய தொழிலாளர்கள் நிலையையும் உணர்த்துகிறது.

மூலதனம் போட்டவன் முதலாளி
முயற்சி செய்தவன் தொழிலாளி
இடையில் எப்படி முதுகு சொரியும்
சில பெருச்சாளி. – என்ற கவிதை வழியாக தரகு முதலாளியையும், ஊகவணிகத்தின் வழியாக உழைப்பு சுரண்டப்படுவதையும், அடிவருடிகளின் உழையா ஊதிய விளைவையும் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறார். தேசத் தலைவர்கள், சட்டம், மலிவு மணிதர்கள், பட்டினிக் கொடிகள், தொகுதி, வாக்குமூலம் போன்ற கவிதைகளும் ஆசிரியரின் சமூக பிரக்ஞையை காட்டுகின்றன.

நான் மூனாவது
படிக்க
மூக்குத்தி அடகு வைத்தவள்…
முதுகலை படிக்க
சமயபுரம் கோயிலுக்கு
பாதயாத்திரை சென்றவள்
என் அம்மா – தாயின் அன்பையும், கல்வி வியாபாரமாவதையும் சுட்டிக்காட்டும் ஆசிரியர் அப்பா ஒரு குடும்பத்தின் அதிகாரக் குறியீடு என்பதையும் உணர்த்துகிறார்.

நீ தூரத்தில்
வரும்போதுகூட
உன் செருப்பின்
ஓசை நயத்தில்
வீடே பயத்தில்.

பறை கவிதையில் பறையின் தோற்றம் குறித்து இயங்கியல் பார்வையோடு அனுகியிருப்பது சிறப்பு. அதே சமயம் ஒடுக்கப்பட்ட இனத்தின் அடையாளமாகவும் இருந்து விடுதலைக்காக கொட்டவும் செய்கிறது. இக்கவிதை தொகுப்பிற்கு கவியாவிய தமிழனின் ஓவியங்கள் பல்வேறு பரிமானங்களுடன் கவிதைக்கு வலுசேர்க்கின்றன. குறிப்பாக பக்கம் 23, 27, 31, 47ல் உள்ள படங்கள்.

தேவ.பிரபாகரனின் கவிதைகள் வாழும் தெரு – பாடுபொருள் மிகச்சிறப்பாக உள்ள வேளையில் விடுதலைக்கான பாதையை காட்டுவதும் அவரின் பொறுப்பு. காத்திரமான வாசகனுக்கு இவருடைய சிலகவிதைகள் ‘வானம்பாடி’ காலகட்டத்து விளி கவிதைகளையும் நினைவுபடுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. ஆதிக்க வேர், விண் சமைப்போம் வருக, எழுத்தாளன், மதுவின் பேச்சு, லட்சியம் மற்றும் இன்னும் சிலகவிதைகளின். கவிதையின் வெளிப்பாட்டு உத்தியில் மாற்றம் தேவை. அதற்கு இன்னும் நிறைய வாசிப்புகளை கைக்கொள்ள வேண்டும். இன்றைய இலக்கிய உலகில் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதுவும் மானுட விடுதலைக்கான படைப்புகளை முன்னெடுக்க வேண்டிய நம்மைப் போன்றவர்கள் அதிக கவனமும், நமக்கான தத்துவத்தையும் இறுக பற்றிக்கொள்ளவும் தொடர்ந்த வாசிப்பு தேவையாய் உள்ளது. அத்தகைய வகையில் முதல் தொகுப்பு வரவேற்கத் தக்கதாயினும், இரண்டாவது தொகுப்பு இன்னும் நேர்த்தியாய் விரைவில் வெளிவர வாழ்த்துக்கள்.

(2011 ஆகஸ்ட் 7ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மாவிபக‘வின் நூல் விமர்சன அரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரை)