Tuesday, December 26, 2017

விசாரணைக் கமிஷன் - சிறுகதை - ஹரி ராஜா


பெரிய கிழவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். சவத்தெழவுக் கும்பல் இன்னும் முழுமை பெறவில்லை. மேற்கிலிருக்கும் கூரைவீட்டுக் கிழவரும் பக்கத்து வீட்டுக் கிழவரும் இன்னும் வரவில்லை. பாராட்டுக்கு உள்ளாகியிருக்கும் எங்கள் இருவரையும் நடுவில் உட்கார வைத்து வட்டம் கட்டி மற்ற ஆணியாசனங்கள் போடப்பட்டிருந்தன.
பெரிய கிழவர் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார். நல்ல உயரம். கருத்த மேனியுடன் பார்க்க அதிர்ஷ்டக்காரர் மாதிரி இருந்தார்.
எனக்கு புகைக்க வேண்டும் போலிருந்தது.  நன்கு விரோதமாகியிருந்த ஒரு கிழவரிடம் சிகரெட் கேட்டேன். பாராட்டுக்கு உள்ளாகியிருக்கும் கடைக்குட்டியாகிய எனக்கு சிகரெட் கொடுத்து பெருங் கிழவரது மகிழ்ச்சிக்கு ஆளாவதா? அவர் மறுத்தது மட்டுமல்லாமல் மயிலிறகால் என்னை விளாசி விட்டார். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போதே மேற்கு வீட்டைச் சேர்ந்த கிழவர் வந்து விட்டார். பேரண்பில் அவரது மண்டை பளபளத்தது.
இன்பம் வந்து விட்டதுபெருங்கிழவர் தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போலச் சொன்னார். சற்று நேரத்தில் பக்கத்து வீட்டுக் கிழவரும் வந்து விட, விசாரணை தொடங்கியது. பெரிய கிழவர் தொண்டையைக் கனைத்துக் கொண்டே கரடியின் ரோமத்தாலான தன் அரியாசனத்தில் அமர்ந்தார்.
கேடுகெட்ட சனியன்களே! இந்தக் கூட்டம் எதற்காக என்பது குறித்து  முடிவுரை எதுவும் வழங்க அவசியமில்லை என்றே  நினைக்கிறேன். இதோ இவர்கள் இருவர் மீதும் பாராட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. கூரை வீடுகளின் விதிகளுக்குப் புறம்பாக இவர்கள் நடந்து கொள்வது மட்டுமல்லாமல் பெருங்கிழவனாகிய என்னை மரியாதையாக நடத்துகிறார்கள். எனக்குள் அதிர்ஷ்டம் இன்னும் இருக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இவர்கள் அடிப்படையில் நஞ்சுண்டபுரத்திலிருக்கும் கூரை வீட்டைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே அந்த வீட்டுக் கிழவர் என்னிடத்தில் அன்பாக நடந்து கொள்பவர். பல முறை நமது சவத்தெழவுக் குழு அவரைக் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இவர்களை விசாரிக்க வேண்டும் என்று பலரும் கருதியதால் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். இவர்களுக்கு என்ன மாதிரியான இன்பத்தை அளிக்கலாம் என்பதை குழு முடிவு செய்யுமாறு வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பெருங்கிழவர் பேசி முடித்ததும்  வட்டத்துக்குள்ளிருந்த எங்கள் இருவரைத் தவிர அனைவருக்கும் இதமான சூட்டில் ஆமைக்கால் சூப் வழங்கப்பட்டது.
நீண்ட அமைதிக்குப் பிறகு தெற்கு வீட்டுக்காரர்  ஆரம்பித்தார்: வெறுப்புக்குரிய சனியன்களே! கேடு கெட்ட பெருங்கிழவர் சொன்னது போல இவர்களது செயல்கள் நமக்கு சாதகமாகவே இருக்கின்றன. இதோ இந்தக் கிழவர் இருக்கிறாரே, இவர் கொலை லேகிய பன்னாடைக் கும்பல்’ என்ற பெயரில் தரித்திரங்களைப் பிரச்சாரம் செய்வதாகக்  கூறிக் கொண்டு கூரை வீட்டின் தொண்டரான பெருங்கிழவரைத் தொடர்ந்து பாராட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இதோ  இந்தக் கடைக்குட்டியைப் போல பல கடைக் குட்டிகளுக்கு மூளைச் சலவை செய்து வருகிறார். கூரை வீட்டின் விதிகளுக்கு அடங்கி இருப்பதே கடைக்குட்டிகளின் கடமை என்பதை ஏற்காத இவனைப் போன்றவர்களால் கூரை வீடு பலப்பட்டுவிடும். எனவே இவர்களுக்கு கடுமையான இன்பமளிக்க வேண்டும் என்றார்.
பாராட்டிவிட்டோம் பாராட்டிவிட்டோம் என்று தாலாட்டுப் பாடுகிறீர்களே, எங்கள் பாராட்டு என்ன என்பதைக் குறித்து சபை யோசித்ததுண்டா? எங்கள் நஞ்சுண்டபுரத்துக்காரர் கேட்டார்.
என்ன உங்கள் பாராட்டு? சவத்தெழவுக் குழுவுக்குத் தெரியாததா? குழுவின் தொண்டரான எனக்கு துன்பவியல் தெரியாது என்பது தானே? பெருங்கிழவரின் குரல் கொந்தளித்தது.
அதுமட்டுமல்ல. உங்களுக்குள் அதிர்ஷ்டம் இருக்கிறது. உங்கள் அதிர்ஷ்டம் கூரை வீட்டை பலப்படுத்தும். சபையோரே! உணர்ந்து கொள்ளுங்கள்.
நஞ்சுண்டபுரத்துக்காரரே. நான் அடிப்படையில்  வெட்டியான் என்பது உங்களுக்குத் தெரியும். வெட்டியான் வேலை எனக்குப் பல துன்பவியல் கோட்பாடுகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. என்னைப் பாராட்ட எவருக்கும் தகுதியில்லை.’’
தீமை. எவருக்கும் தகுதியில்லை என்று உங்களால் எப்படிக் கூற முடியும்? பிறரது பாராட்டுகளுக்குக் காது கொடுக்காதவன் எப்படி தரித்திரக் காரனாக இருக்க முடியும்? உங்களுக்குள் அதிர்ஷ்டவியல் இருப்பது இதன் மூலமே வெளிப்படுகிறது.
சபையோரே! நான் தரித்திரக்காரனே இல்லை என்று கூறும் இவரது யோக்கியதை என்ன? கூரைவீட்டு விதிகளுக்குப் புறம்பாக இவருக்கு மாடி வீடுகளிலிருந்து தங்கம் வருகிறது என்ற பாராட்டை அவர் மறந்து விட்டார் போலும். என்ன ஆட்டுத்தாடிக் கிழவரே! நீங்கள் தானே விசாரித்தீர்கள்? நீங்களுமா மறந்து விட்டீர்கள்?
இப்போது மேற்கு கூரை வீட்டுக்காரர் குறுக்கிட்டார்: இது வீண் வாதம். அவர் பாராட்டற்றவர் என்பதை சபையிடம் நிரூபித்தபின் அது குறித்து பேசுவது முறையல்ல என்றார்
உங்கள் துன்பக் குறைபாட்டால் இவ்வாறு கூறுகிறீர்கள்.
எனக்கா துன்பக் குறைபாடு? தரித்திரம் வேண்டுமானால் இதுவரை சேகரம்  செய்த தரித்திரங்களை துறக்க வேண்டும் என்ற உங்கள் தத்துவத்துக்கும் துன்பவியலுக்கும் என்ன தொடர்பு எனக்கூற முடியுமா? துன்பவியலுக்கு எதிரான கருத்து இது என்பது சபைக்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம்ஆனால் சுடுகாட்டு மண்டையனான என்னால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு பொறுமையாக இருக்க முடியாது. இவர்கள் இருவரும் செய்த குற்றமென்ன? இந்தக் கடைக்குட்டி நஞ்சுண்டபுரத்துக் கிழவரது உருவத்தை உங்கள் மயிலிறகுகளும் பஞ்சுக்கத்திகளும் ஏற்படுத்திய ரணத்தை உணர்த்தும்  விதமாக  ஓநாயின் இரத்தத்தைக் கொண்டு ஓவியம் வரைந்தான். அதை தன் கொலை லேகிய பன்னாடைக் கும்பலின் வீட்டுச் சுவரில் வெளியிட்டார் இந்தக் கிழவர். அவ்வளவு தானே? இது தவிர பெருங்கிழவர் மீது சில நேரடிப் பாராட்டுகளை வைத்து இருவரும் ஓவியம் வரைகிறார்கள். பாராட்டுகளை ஏற்றுக் கொள்ளத் தயங்குபவர் எப்படித்  தொண்டனாக இருக்க முடியும்? பாராட்டுகளுக்கு பதில் கொடுங்கள். முடிந்தால் அவர்களைப் பாராட்டி நீங்களும் பதிலோவியம் வரையுங்கள்.

உன்னைக் குழுவிலிருந்து நீக்குகிறேன் என்று பெருங்கிழவர் கத்தினார்.
நீர் சரியான intelectual! என பதிலுக்குக் கத்தினார் சுடுகாட்டு மண்டையன்.
பெருங் கிழவர் தன் நல்லக்கை ஒருவரை அழைத்து சுடுகாட்டு மண்டையன் என்ன சொல்கிறான்? என்று வினவ, நல்லக்கை அறிவு கெட்ட முண்டமான உங்களை அவர் உங்களை அறிவுச் சிகரம் என்று வாழ்த்துகிறார் தொண்டரே என்றது.
இப்போது எங்களுக்கு அருகில் மற்றொரு ஆணியாசனம் போடப்பட்டது. மேற்கு வீட்டுக் கிழவர் எனக்கு சிகரெட் கொடுப்பதற்காகவே வந்து சேர்ந்தார் போலும்!
சுடுகாட்டு மண்டையன் என்று வெறுப்போடு அழைக்கப்படும் அந்தக் கிழவர் தரித்திரவியலில் கொட்டை தின்று பழம் போட்டவர் என்றுதான் கூற வேண்டும். அவரது பெயருக்குப் பின்னால் ஒரு கதையே உள்ளது. தரித்திர உலகின் மிக எளிய பயிற்சியான நாற்பத்தெட்டு நாட்கள் சுடுகாட்டில் கழித்து எரியும் பிணத்துடன் எருமை இரத்தம் குடிக்கும்  பயிற்சியினை முடித்த ஒரே தரித்திரவான் அவர் மட்டுமே. பெருங்கிழவரை விட அவரே இழிவானவர் என்று தரித்திர உலகின் ஒலிப்பெருக்கிகள் இரகசியமாகப் பாடிக் கொண்டிருந்தன.  எனவே அவர்மீது பெருங்கிழவர் மிகுந்த அன்பு வைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பெருங்கிழவரது நிறைகளை முதுகுக்கு நேரே எப்போதும் கூறுவதால் அவருக்குத் தக்க பாடம் புகுட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் பெருங்கிழவர்.  பாராட்டுக்கு ஆளாகியிருந்த என்னை  தரித்திரக்காரனாக மாற்றிய ஆசானே  சுடுகாட்டு மண்டையன்தான் என்பதால் இந்த சந்தர்ப்பத்தை பெருங்கிழவர் பயன்படுத்திக் கொண்டார்.
ஆட்டுத்தாடிக்  கிழவர்  இப்போது பேசலானார்:
வெட்கம்கெட்ட சனியன்களே! தரித்திர உலகத்திற்கென சில ஒழுங்கீன விதிகள் இருக்கின்றன. அதற்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள். பாராட்டுக்கு உள்ளாகியிருக்கும் இவர்களது முன்னுரையைக் கேட்டு   பின்பு சபையின் அரைமனதுத் தீர்மானத்தை நிறைவேற்றலாம். அதுதான் பிணநாயகம்
நஞ்சுண்டபுரத்துக் கிழவர் ஒருமுறைஅதிர்ஷ்டக்காரனால் தரித்திரவானாக இருக்க முடியாதுஎன்று சொன்னார். அது பெருங்கிழவரைக் குறிப்பிடுவதாகக் கூறி அவரை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்ன உங்கள் சவத்தெழவுக் குழுவா பிண நாயகம் குறித்துப் பேசுகிறது? இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். கொலையையும் இலேகியத்தையும் கொண்டாடத் தெரியாத தரித்திரவான்கள் தரித்திர உலகின் வரப்பிரசாதங்கள். என்றார் எங்கள் நஞ்சுண்டபுரத்துக்காரர்.
பெருங்கிழவர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று பேசினார்:
 சபையோரே! ‘கொலை லேகியம்‘ என்ற பெயரில் சவத்தெழவுக் குழு உறுப்பினர்கள் மீது வீண் புகழ்  சுமத்தப்படுவதை ஏற்க  முடியாது. இவர்கள்மீது வைக்கப்பட்ட பாராட்டுகள் நிரூபனமானதால்  இவர்களுக்கு இன்பமளிக்கும் தீர்மானம் நிறைவேறுகிறது. இவர்களுக்கு உடல் முழுக்க மயிலிறகு வைத்தியம் செய்ய வேண்டும். ஏற்பாடுகள் தொடங்கட்டும். அதுமட்டுமல்லாமல் நஞ்சுண்டபுரத்தை தரித்திர உலகிலிருந்து விலக்கி வைக்கிறேன். இத்துடன் கூட்டம் ஆரம்பமாகிவிட்டது பெருங்கிழவர் விறுவிறுவென அறையை விட்டு வெளியேறி  கூடத்துக்குப் போனார்.
எங்கள் மூவரையும் சபை கொஞ்சிக் குலாவியது. நாங்கள் இன்பத்தில் துடிதுடித்துப் போனோம். அனைவரும் வெளியேறிய பின் இரகசியமாக எங்களை அழைத்துச் சென்ற ஆட்டுத்தாடிக் கிழவர் எங்கள் காயங்களை சவுக்கால் துன்புறுத்தினார். ஆட்டுத்தாடிக் கிழவர் அதிர்ஷ்ட உலகில் கொடுமைக்கார முதலாளி ஒருவரை உயிரோடு கொளுத்திய  குற்றத்துக்காக (அங்கே அது குற்றம்!) தண்டனை விதிக்கப்பட்டு பல இன்பங்களுக்கு ஆளாகியவர். ஆடு மேய்ப்பவர் போல வேடமணிந்து தரித்திர உலகத்துக்குத் தப்பித்து வந்தவராதலால் ஆட்டுத்தாடிக் கிழவர் என்று அழைக்கப்பட்டார். அவர் கொலை லேகியத்தில் நாட்டமுடையவர் என்பது மட்டுமல்லாமல் கழுதைபோல இனிய குரல்வளமுடையவர். எங்கள் மீது அளவு கடந்த  விரோதமிருந்தாலும்  அவர் எப்போதும் அதை சபையில் காட்டியதில்லை.
பெருங்கிழவரது பர(ர்+அ)க்கிரமங்களை பிரச்சாரம் செய்வதற்காக பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டது என பின்னாட்களில் எனக்கு யாரோ சொன்னதாக நினைவு.
(2017 டிசம்பர் 24ல் நடைபெற்ற மாவிபக’வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்றது)

மாவிபக’வின் படைப்பரங்கமும் விமர்சன அரங்கமும் - புகைப்படங்கள்





























Monday, December 18, 2017

மாவிபக’வின் படைப்பரங்கமும் விமர்சன அரங்கமும்

தவிர்க்க முடியாமல் ஏற்பட்ட இடமாற்றத்தைக் கவனிக்கவும்....


வாய்ப்புள்ள அனைவரையும் வரவேற்கிறோம்



Wednesday, December 6, 2017

பாவமன்னிப்பு - சிறுகதை - சத்யா


“பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே, உமது நாமம் அர்ச்சிக்கப்படுவதாக.. உமது மகிமை வருக..” பங்குத் தந்தையின் திருப்பலி பூசைகளில் ஷெல்லியின் மணம் ஈடுபடவில்லை. கண் கொட்டாமல் இயேசுவின் சிலையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் கைகள் இரண்டும் விரிந்திருப்பதுதான் எவ்வளவு அழகு? இந்தப் பரந்த உலகையே அன்போடு கட்டிப்பிடிக்க எத்தனிப்பதுபோல் கைகளை விரித்துக் காட்டுகிறார். பள்ளி முடிந்து திரும்பும் குழந்தையைக் கட்டிப்பிடிக்க கைகளை நீட்டும் தாய்போல. அந்த தேவ செய்தியை அறிவிப்பதுபோல் அந்த தேவாலயத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த தேவ தூதர்களின் சிலையை பார்த்தான். குழந்தை உருவத்தில் முதுகில் இறக்கைகள் முளைத்துப் பறந்தபடி இரண்டு கைகளிலும் சிறிய பாத்திரத்தினை ஏந்தி தேவனின் கருணை என்னும் வற்றாத ஜீவ ஊற்றினை பொழிவதுபோல் இருபுறமும் சுவர்களில் அமைக்கப் பட்டிருந்த அந்த சிலைகளின் பாத்திரத்திலிருந்து லேசாக புனித நீர் வழிந்துகொண்டிருந்தது. அந்த நீரைத் தொட்டு தங்கள் மீது பெரியவர்கள் தெளித்துக்கொண்டிருக்க சேலையை இழுத்து முக்காடிட்ட தாய்மார்களோ அந்த நீரைத் தொட்டு “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னபடி தங்கள் குழந்தைகளின் நெற்றியில் சிலுவைக் குறியிட்டனர். மேலே சாளரங்களில் அமைக்கப்பட்ட கண்ணாடிகள் தேவனின் கருணையைப்போல வெளிச்சத்தைப் பொழிய அந்த நீண்ட பாதையின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டிருந்த மேசைகளில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் கைகளில் பைபிளை வைத்தபடி மண்டியிட்டு கண்கள் மூடி உதடுகள் முனுமுனுக்க தேவனை வேண்டிக்கொண்டிருந்தனர். சிலரது கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. இன்னொருபுறம் பெண்கள் வரிசையாக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு மூலையில் அமைக்கப்பட்டிருந்த,தேவ குமாரனை இவ்வுலகிற்கு ஈன்று புறந்தந்த கன்னி மரியாளின் சிலையை நோக்கி மெதுவாக, மிக மெதுவாக சென்று மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு மண்டியிட்டு மெழுகுவர்த்தியோடு கண்களும் உருக பிரார்த்தித்துவிட்டு மெதுவாக திரும்பி நடந்து தங்கள் பழைய இடத்திற்கு வந்து அமர்ந்து இயேசுவின் சிலையை நோக்கி அமர்ந்தனர். இயேசுவின்முகம்தான் எத்தனை அழகு? கைகளையும் கால்களையும் சிலுவையில் வைத்து அறைந்த போதும் எத்தனை அன்போடு தன்னை வருத்திய மக்களைப் பார்க்கிறார்? முள் கிரீடத்தை தலையில் அழுத்தி முட்கள் தலையில் குத்தி கண்களில் வெளிவந்தபோதும் அந்தக் கண்கள் எவ்வளவு கருணையைக் காட்டுகின்றன? அந்த கண்களில் குரோதம், கோபம், வலி எதுவுமில்லை. மாறாக எந்த மக்களுக்காய் தேவ சொர்க்கத்தை விட்டு இந்தப் பாவ பூமியில் பிறப்பெடுத்தாரோ, எந்த மக்களால் சிலுவையில் அறையப்பட்டாரோ, எந்த மக்களின் பாவங்களை தான் ஏற்றுக்கொண்டு வருத்தப்பட்டு பாரஞ்சுமந்து மலையேறி வலிகளைத் தாங்கி உயிரை விட்டாரோ, அந்த மக்களின் மீது அளவுகடந்த நேசமும் கருணையும் மட்டும் ததும்பி வழிந்தது. அதனால்தானே கருணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்?
“கருணைக் கடலே கர்த்தாவே
எங்கள் பாவங்கள் ஏற்றாயே..
எங்களுக்காய் சிலுவை சுமந்து, எங்களுக்காய் பரிந்து பேசி
எங்களுக்காய் ரத்தம் சிந்தி, எங்களுக்காய் மரித்தவா– எம்
தேவ மைந்தா ஏசுவே – எம்
கருணைக் கடலே கர்த்தாவே”
என்ற பாடலை மெதுவாக சத்தமின்றி முனுமுனுத்தான் ஷெல்லி. அவன் கண்களிலிருந்தும்  கண்ணீர் பெருகி வழிந்தது. அதைத் துடைக்க மனமின்றி இயேசுவின் திருவுருவத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“பின்பு அப்பத்தைப் பிட்டு தம் சீடருக்கு அளித்து அவர் கூறியதாவது, ‘அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள், ஏனெனில் இது உங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்ட என் உடல்’ பின்பு ரசத்தை எடுத்து கோப்பைகளில் ஊற்றி அவர் கூறியதாவது, ‘அனைவரும் இதை வாங்கி பருகுங்கள், ஏனெனில் இது நித்திய உடன்படிக்கைக்கான என் ரத்தம்’” என்று பங்குத்தந்தை கூறியபோது தன்னிச்சையாக எழுந்து வரிசையில் நின்று ஏசுவைப் பார்த்தபடி கண்ணீர் வழிய பங்குத்தந்தை மார்க்கசின் முன்னால் நின்றான். கண்கள் இயேசுவை விட்டு அகலவில்லை. மார்க்கஸ் இவனை உற்றுப் பார்த்து மெல்லிய புன்னகையோடு “ஷெல்லி.. ஷெல்லி” என இரண்டு மூன்று முறை அழைத்தார். பின்பு பின்னால் வரிசையில் நின்றவர் தோளைத் தொட்ட பின்பே சுய உணர்வு வந்தவன் கையிலிருந்த திராட்சை ரசம் தோய்த்த அப்பத்தை வாயில் போட்டுக்கொண்டு தலை தாழ்த்தி வணங்கிவிட்டு மெதுவாக விலகிச் சென்றான்.
பூசை முடிந்து அனைவரும் போன பிறகும் தனியாக அமர்ந்து உதடு துடிக்க கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தவனை மார்க்கஸ்பார்த்து அவன் அருகில் வந்தார்.
“ப்ரதர்ஷெல்லி.. என்னோடுவருகிறீர்களா. கொஞ்ச தூரம் நடப்போம்” என்றார்.
“வருகிறேன் பாதர்” என்றபடிஅவசரமாய் கண்களைத் துடைத்தபடி அவருடன் நடந்தான்.
சிறிது நேரம் அமைதியாக தேவாலயத்தை சுற்றி நடந்தவர், “என்ன ஷெல்லி. உங்கள் இருப்பிடம் வசதிகளெல்லாம் நன்றாக உள்ளதா?” என்றார்.
“எல்லாம் நன்றாக உள்ளது பாதர்”
“உங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருப்பதை நினைத்து வருந்துகிறீர்களா?”
தான் அழுததை மார்க்கஸ் தவறாக அர்த்தம் செய்துகொண்டதை உணர்ந்து, “இல்லை பாதர் தேவனோடு நெருங்கி இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்” என்றான்.
புன்னகையோடு அவன் பதிலை ஏற்றுக்கொண்டு, “நல்லதுப்ரதர், உங்களுக்கு நேரம் இருக்கிறதல்லவா? என்னோடு மதிய உணவினை அருந்தலாம் அல்லவா?”
“வித் ப்ளஷர் பாதர்” என்றபடி போனை எடுத்து மணி பார்த்தவன், தன்னிச்சையாக‘என்னது நாலு மிஸ்டு காலா’ என்று வாய்விட்டு சொன்னான்.
“நீங்கள் பேசுங்கள் நான் காத்திருக்கிறேன்” என்ற மார்க்கசிடம், “இல்லை பாதர் நான் பிறகு பேசிக்கொள்கிறேன், சர்ச்சில் இருந்ததால் சைலண்டில் போட்டிருந்தேன்.” என்றான்.
“எதுக்கு சைலண்ட்ல போட்டீங்க? யாராவது அவசரமா கூப்பிட்டிருந்தா என்ன பண்ணுவீங்க? உங்க நண்பர் யாருக்காவது ஆக்ஸிடன்ட் ஆயிருந்தா? இல்லயாருக்காவது அவசரமா ரத்தம் வேணும்னு ரத்த வங்கியில் இருந்து போன் பண்ணியிருந்தா? முதல்ல போன் பண்ணி யாருன்னு கேளுங்க” என்று கோபமாக மார்க்கஸ் கூறினார்.
திருச்சபையால் சுவிசேஷகனாக ஏற்காட்டிற்கு பணி மாற்றம் செய்யப்பட்டு சமீபத்தில் வந்திருந்த ஷெல்லிக்கு அங்கே பங்கு தந்தையாக இருந்த மார்க்கஸின் குணம் புரியவில்லை என்றாலும், அவர் சொன்னதில் இருந்த உண்மையில் அதிர்ந்து போனான். அவனதுபயிற்சி காலங்களில் அவனுக்கு வழிகாட்டிய பார்த்திமியசும் அவரது தந்தையாகியகெலிடா சாமுவேலும் எப்போதும் வேதாகம வாசகங்களின்படி வாழ்ந்தவர்கள். அவர்கள் சர்ச்சுக்குள் போனை எடுத்துவரவும் அனுமதித்ததில்லை. அவர்களிடம் இத்தனை வருடம் பழகி வந்த ஷெல்லிக்கு மார்க்கசின் அணுகுமுறை புதியதாக இருந்தது. இரு அணுகுமுறைகளையும் ஒப்பிட்டுக்கொண்டே போன் செய்தான்.
“ஹலோ”
“ஹலோ, ஷெல்லியா?”
“ஆமாம் நீங்க யாரு?”
“ஷெல்லி நான் சீனு பேசுறேன்”
“சீனுவா. எந்த சீனு?”
“மச்சி மறந்துட்டியா? திண்டுக்கல்ல இருந்து சீனு” என்றதும்தான் ஷெல்லிக்கு விளங்கியது. சீனிவாசன் என்கிற சீனு, பால்ய வயது நண்பன். திண்டுக்கல்லில் சகோரதரர் பார்திமியசோடு வளர்ந்த காலத்தில் பழகியவன். வளர்ந்து பிரிந்து போய் எல்லோரும் ‘ப்ரதர்’ என்று விளிக்கும் காலம் வந்த பிறகும் இன்னும் இவனுக்கு மட்டும் ‘மச்சி’தான். பழைய காலங்களை அசைபோட்டுக்கொண்டே, “சொல்லு சீனு எப்படி இருக்க?” என்றான்.
“நல்லா இருக்கண்டா, இப்ப நீ ஏற்காட்டுல இருக்கியாமே? கேள்விப்பட்டேன்”
“ஆமாண்டா”
“மச்சி நானும் இப்ப ஏற்காட்டுலதான் இருக்கேன், ஒரு சவாரி.நைட்டு அவங்கள காட்டேஜ்ல விட்டுட்டு வரேன், உன்ன பாக்கணும்போல இருக்கு” என்றான்.
உண்மையில் ஷெல்லிக்கும் அவனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. “வாடா, பெரிய சர்ச் பக்கத்துலதான் என் குவார்ட்டஸ்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான். பழைய நினைவுகளில் புன்னகை தானாக அரும்பி முகம் மலர்ந்தது.
அதைப் பார்த்து புன்னகைத்தபடி மார்க்கஸ், “பாத்தீங்களா ப்ரதர், நீங்க போனை விட அதிக முக்கியத்துவம் குடுத்த கர்த்தர் உங்களை அழ வைத்தார், ஆனா கர்த்தருக்காய் அவாய்ட் பண்ணப்பட்ட போன் உங்களை சிரிக்க வெச்சுருக்கு” என்றார். அவசரமாய் அதை மறுத்து பேச யத்தனித்தவனை தடுத்து, “விளையாட்டுக்குச் சொன்னேன் ப்ரதர், ஆனால் கர்த்தர் உங்கள் கண்ணீரைவிட புன்னகையைதான் அதிகம் விரும்புவார்.” என்றார்.
“நீங்கள் நிறைய விஷயங்களை ப்ராக்டிகலாக சொல்கிறீர்கள், ஆனால் எங்கள் ஊரிலிருந்த பார்திமியஸ், கே.எஸ் போன்ற சகோதரர்கள் எதையும் வேதாகம ரீதியாகவே அணுக சொல்லிக் கொடுத்தார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு பைபிள் வசனம் சொல்லுவார்கள்”
“ஹாஹஹா.. நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன், வாழ்க்கையில் நிறைய அடிபட்டே பாடம் கற்றேன், அவர்கள் வசதியானவர்கள், பாடம் கற்கும்போது மட்டுமே அடி பட்டவர்கள்” என்று சொல்லி சிரித்தவர் “நான் கடைப்பிடிப்பதும் பைபிளின் வாழ்க்கை நெறிதான். சக மனிதனுக்கு உபகாரம் செய்வதைதானே பைபிள் போதிக்கிறது? ஒரு மனிதனுக்கு உதவி செய்வதற்காக திருப்பலி பூசையை தவறவிடுவதில் என்ன பிழை? என்னைப் பொறுத்தவரை ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இந்த சர்ச்சை இடிக்கக் கூட நான் தயங்க மாட்டேன், அந்த அன்பைதான் பைபிள் போதிக்கிறது” என்றார்.
“புரியவில்லை பாதர்” என்றான் ஷெல்லி.
“ப்ரதர்.. இயேசுவின் போதனைகளில் எது மிகச்சிறந்த போதனை என்று சொல்லுங்கள் பார்ப்போம்”
“அன்பைக் குறித்ததா? உபகாரம் குறித்ததா? எனக்கு சொல்லத் தெரியவில்லை பாதர். நீங்களே சொல்லுங்கள்”
“அவரது போதனைகளில் சிறந்த போதனை அவரை சிலுவையில் அறையும் கடைசி நாளில் செய்ததுதான். இந்த உலக மக்களின் பாவங்களை ஏற்றுக்கொண்டு, இந்த உலகத்துக்காய் பாரஞ்சுமந்து, இந்த உலக மக்களின் சுபிட்ச வாழ்வுக்காய் தன் உயிரை ஈந்தாரே. பிறருக்காய் சிரமப் படவேண்டும், பிறர் நலத்துக்காய் எதையும் செய்ய வேண்டும், தேவைப்பட்டால் உயிரையும் கொடுக்க வேண்டும் என்ற போதனையை அவர் சொல்லவில்லை. மாறாக செய்து காட்டினார். அதுதான் அவரது வாழ்வில் அவர் செய்த மிகப்பெரியதும் மிகச் சிறந்ததுமான  போதனை”
“ஆமாம். பாதர், எப்படி வாழ வேண்டுமென்று நம் அனைவருக்கும் வழிகாட்டியிருக்கிறார்”
“உண்மைதான்.. செயல், அதுவே சிறந்த சொல்”
ஷெல்லிக்கு திடீரென்று ஒரு சந்தேகம் முளைத்தது, அவன் கிளம்பும்போது கடைசியாக அவனை வழியனுப்பிய பார்திமியஸ் அவன் கையைப் பிடித்து, ‘தம்பி நீ ஏற்காடு போகிறாய், அங்குள்ள அருட்தந்தை மார்க்கஸ் சிக்கலானவர், அவருடன் பார்த்துப் பழகு. அவர் கம்யூனிஸ்ட்களோடு தொடர்பு வைத்துள்ளார்’ என்று கூறியது நினைவுக்கு வந்தது. இவர் பேச்சும் கம்யூனிஸ்ட் சே குவேராவின் வார்த்தைகளென்று தனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கூறியதும் இவன் சந்தேகம் வலுப்பட்டது.
அவனது சந்தேகத்தைப் புரிந்துகொண்டவர்போல்,“என்ன இது எதோ கம்யூனிஸ்ட் சொன்னது என்று நினைக்கிறீர்களா? நீங்கள் நினைக்கலாம் பிழையில்லை, ஏற்கனவே நிறையபேர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் நான் எந்த கம்யூனிஸ்ட் புத்தகத்தையும் படித்ததில்லை” என்று சொல்லிவிட்டு ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்.
மதிய உணவினை முடித்த பிறகு, “சரி ஷெல்லி, நீங்கள் சென்று உங்கள் நண்பனை சந்தியுங்கள். இனிய நேரம் உங்களுக்காய் காத்திருக்கிறது” என்றார் மார்க்கஸ்.
“தேவனோடும் தேவ மைந்தர்களோடும் இருப்பதுதான் பாதர் எனக்கு இனிய நேரம்” என்றான் ஷெல்லி.
“எதற்காக இவ்வளவு இயந்திரத்தனமாக இருக்கிறீர்கள்? உண்மையில் நண்பர்களை சந்திப்பது இனிமையானதுதானே. அந்தப் பொழுதை ஏன் விடவேண்டும்? ஆண்டவரின் சன்னதியில், ஆண்டவரைத் தொழும் வேளைகளில் ஆண்டவரோடு இருந்தால் போதுமானது. மற்ற நேரங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் வாழ்வை ரசிக்க வேண்டும். அதற்காகத்தானே தேவகுமாரன் தன் உயிரை ஈந்தார்?”
“நீங்கள் இவ்வளவு எளிமையாக கூறுகிறீர்கள், ஆனால் இதுவரை கேளிக்கைகள் தேவனை விட்டு நம்மை விலக்கி வைக்கும் என்றல்லவா எனக்கு சொல்லி பழக்கியிருக்கிறார்கள்”
“அப்படிச் சொன்னவர்கள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள் என்று நீங்கள் கேட்டீர்களா?”
“ஆனால் அருட்தந்தை எம்டன்கூட சிற்றின்பங்கள் ஆண்டவரை நம்மிடமிருந்து தள்ளி வைக்கும் என்று ‘தேவனுடைய அப்பத்’தில் எழுதியிருக்கிறாரே?”
“அப்படி வசனங்களையே வாழ்க்கையாக கொண்ட எம்டன் ஏன் திருமணம் செய்துகொண்டார் என்று கேட்டீர்களா?”
“ஒருவேளை அவரது அனுபவத்தில் சொல்லியிருக்கலாம் பாதர்”
“அப்படியென்றால் நீங்களும் அனுபவியுங்கள், அவரது வாழ்க்கையில் அவர் செய்த தவறுகளை உங்கள் வாழ்க்கை மூலம் எப்படி திருத்த முடியும்?”
அவரிடம் விடை பெற்று வந்த பிறகும் அவரது கேள்விகளெல்லாம் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன. அடிக்கடி அவர் சொல்லுவதையும் கேஎஸ், பார்திமியஸ் போன்ற சகோதரர்கள் சொல்லுவதையும் ஒப்பிட்டுக்கொண்டே இருந்தான். இவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவர்கள் சொன்னதுபோல் இவர் கம்யூனிஸ்டாக இருக்க முடியுமா? இவர் பைபிளை எவ்வளவு எளிமையாக விளக்குகிறார். ஆனால் அவர்களோ வெறும் வசனங்களை மட்டுமே மனப்பாடம் செய்யவேண்டுமென்று சொல்லிக்கொடுத்திருந்தனர். அர்த்தமாகாத வசனங்கள் மனதிற்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? ஆனால் அவனுக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது. மீட்பராகிய இயேசு இவ்வுலக மக்கள் இன்புற்றிருக்கத்தானே தன் இன்னுயிரை ஈந்தார்? அப்படியிருக்கையில் இதை துன்பத்தில் உழலும் உலகமாய் எண்ணி நாமும் வருந்துதல் எவ்வளவு பிழை. கனியின் சுவையை ருசிக்கத்தானே தேவன் அதைப் படைத்திருக்கிறார்? பின்பு பட்டினி கிடப்பதில் என்ன லாபம். இவ்வாறெல்லாம் யோசித்து சந்தோசமாக தன் நண்பன் சீனுவை வரவேற்க தயாரானான் ஷெல்லி.
ஷெல்லியும் சீனுவும் பள்ளி காலத்திலிருந்து ஒன்றாகவே வளர்ந்தார்கள். அவர்களின் பகுதிக்கு புதிய சுவிசேஷகராக சகோதரர் பார்திமியஸ் வந்தார். ஆகா என்ன அருமையான மனிதர் அவர், அவரால்தான் ஷெல்லியின் வாழ்க்கையே மாறியிருந்தது. சீனுவுக்கு எப்படி பார்திமியசை பிடித்தது என்று ஷெல்லிக்கு தெரியாது. பார்திமியசுக்குக்கூட தெரியாது, ஏன் சீனுவுக்கே தெரியாமல்கூட இருக்கலாம். ஆனால் பார்திமியசின் ரசிகனாகவே மாறிவிட்டான். “பார்திமியசண்ணா பார்திமியசண்ணா..” என்றபடி அவரையே சுற்றி சுற்றி வருவான். அவருக்கு என்ன வேலை என்றாலும் இவனே செய்வான். அந்த காலகட்டத்தில் திண்டுக்கல்,அம்பலத்தூருக்கென்று ஒரு தேவாலயம் கட்ட பார்திமியஸ் முயற்சி எடுத்தார். குழந்தைகளான ஷெல்லி, ஜான்சி, மார்கரெட், ராகேஷ் பிரசாத் ஆகியோரோடு சீனுவையும் கூட்டிக்கொள்வார். சீனு பார்திமியஸ் அழைத்தால் நரகத்துக்கும் வந்துவிடுவான். அவ்வளவு அன்பு, துதிப்பாடல்களைப் பாடியபடி குழுவாக அனைவரும் சென்று வீடுகளில் நிதி வசூல் செய்வார்கள். அந்தப் பாடலெல்லாம் சீனுவுக்குப் பாடத் தெரியாது, ஷெல்லியும் இதர குழந்தைகளும் எவ்வளவு முயற்சி செய்தும் அவனுக்கு கற்றுக்கொடுக்க முடியவில்லை. மிகவும் கூச்சப்படுவான். எனவே பெரும்பாலும் கிறிஸ்மஸ் தாத்தா வேஷம் அணிந்தே இவர்களோடு வசூலுக்கு வருவான்.
“எருசலேமு நகரத்திலே
இருந்தமாட்டு தொழுவத்திலே
பிறந்து வந்த தேவன் யாரு
எங்கள் இயேசு அவர் புகழைப் பாடு...” பாடலை உதடுக்குள் முனுமுனுத்துக்கொண்டான் ஷெல்லி. ஆகா எத்தனை இன்பமான நாட்கள். மார்க்கஸ் சொன்னதுதான் எவ்வளவு உண்மை. அப்போதெல்லாம் வசூலித்து முடிந்து திரும்பியதும் பார்திமியஸ் எல்லோரையும் அமர்த்திப் பிரார்த்தனை செய்வார். சரியாக அந்த நேரத்தில் மட்டும் சீனு காணாமல் போய் விடுவான். பார்த்திமியசும் அதைக் கண்டுகொள்ள மாட்டார். சரியாக அடுத்தநாள் காலையில் அவன் இவர் முன்பு ஆஜராகி விடுவான்.
“நேத்து பிரார்த்தனை பண்ணும்போது எங்கே போன?” என்பார் பார்திமியஸ். “சித்தப்பா கூப்பிட்டார்”, “அம்மா கடைக்கு கூப்பிட்டுச்சு.”, “ஹோம் ஒர்க் பண்ண போயிட்டேன்” என்று ரெடிமேடாக பொய்கள் வைத்திருப்பான். அதை பார்திமியஸ் கண்டுகொள்வதில்லை.
இப்படி பழசையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்த ஷெல்லிக்கு வாடிப்பட்டி தேவபூசைத் திருவிழா நினைவு வந்தது. அப்போதெல்லாம் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாட வாடிப்பட்டி சர்ச்சில் பெரிய திருவிழா ஏற்பாடு செய்யப்படும். அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வண்டி பிடித்து அந்த திருவிழாவை வேடிக்கை பார்க்க வருவதுண்டு. இரவு முழுவதும் வானவேடிக்கைகளும் பாடல்களுமாய் அந்த திருவிழா நடக்கும். அந்த வருடம் பார்திமியஸ் திண்டுக்கல் சிறுவர்களை திருவிழாபார்க்க அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார். இவர்கள் அனைவருக்கும் ஒரே சந்தோஷம். எப்போதும் அதே பேச்சாக இருந்தனர். அவரவர் அப்பாவோ அம்மாவோ சொல்லிக்கேட்ட திருவிழா நிகழ்வுகளை தாங்களே கண்டதுபோல எப்போதும் எதையாவது சொல்லிக்கொண்டே இருந்தனர்.
ஜான்சி சொல்லுவாள், “ஏய் உனக்கு தெரியுமா? திருவிழால இயேசு சாமி சிலுவையெல்லாம் விப்பாங்க. அதெல்லாம் இயேசு சாமிய சிலுவையில அறைஞ்சாங்கல்ல அந்த மரத்துலேயே பண்ணினதாம்” என்பாள்.
இன்னொரு நாள் ராகேஷ் பிரசாத், “ஏய். அங்க போறவங்களுக்கு தீர்த்தம் குடுப்பாங்களாம்ப்பா, அது நம்ம மேரி மாதா சிலை இருக்குல்ல அது கால்ல இருந்து அதுவே வழிஞ்சு வருமாம். அந்த தீர்த்தத்த எடுத்து நமக்கு குடுப்பாங்களாம். குடிச்சன்னு வையி, சக்கரத்தண்ணி மாதிரி அப்புடி இனிக்குமாம். மேரி மாதா கால்ல இருந்து வரதுனால” என்பான்.
அடுத்த நாள் மார்கரெட் சொன்னாள், “எங்க அப்பா சொன்னாங்க, அங்க வரவங்களுக்கெல்லாம் சாத்தான் வெரட்டுவான்கலாம். அந்த சர்ச்கிட்ட போகப்போக சாத்தான் பிடிச்சுருக்கறவங்களுக்கு உள்ள இருந்து சாத்தான் வந்து கத்தி ஆடுமாம். தலையெல்லாம் விரிச்சு போட்டுட்டு ஆடுவாங்களாம் பாரு. நீயெல்லாம் பாத்தன்னா பேண்டுலையே மூத்தரம் போயிடுவ.. ஹஹஹா.. அப்பறம் இந்த கண்ணு இருக்குல்ல அது ரெண்டும் அப்படியே வெளியில வந்துடுமாம். அப்படியெல்லாம் மிரட்டிப் பாக்குமாம்” என்று சொல்லி பீதியைக் கிளப்பினாள். அவர்கள் அனைவரும் பயந்து போனார்கள். ஜான்சிக்கெல்லாம் இரவு ஏதேதோ கனவு வந்து மார்கரெட் நாக்கைத் தொங்கப் போட்டபடி கண்களைப் பிதுக்கி ஆடிக்கொண்டிருந்தாள்.
அடுத்தநாள் ஷெல்லி வந்து பயத்தை ஓரளவு தெளிவித்தான், “சாத்தானெல்லாம் வராதாம்பா.. அப்படியே வந்தாலும் கழுத்துல போட்டுருக்கோம்ல அந்த சிலுவைய எடுத்துக் காட்டினா பயந்து போய் போயிடுமாம். அப்பறம் சாத்தான் புடிச்சுக்கிட்டு ஆடுறாங்கல்ல அவங்க மேல பாதர் ஜெபம் பண்ணி தண்ணி தெளிப்பாராம். உடனே சாத்தான் செத்து போயிடுமாம்” என்று சொன்னாலும் அவர்களின் பயம் முழுதாகத்தீரவில்லை.
இவ்வாறு பார்திமியஸ் சொன்னதிலிருந்து அவர்கள் எல்லா இடத்திலும் பேசுவதும் சிந்திப்பதும் திருவிழா மட்டும்தான்.போதாக்குறைக்கு வீட்டுக்குப் போய் அம்மா, அப்பாவிடம் திருவிழா எப்படி நடக்கும் என்று தினமும் நச்சரித்துக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்தினமும் ஒரே கதையை சொன்னாலும் சலிக்காமல் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் இதில் சீனுவால் கலந்துகொள்ள முடியவில்லை. அவனுடைய அம்மா கிறிஸ்தவர் இல்லை. அவளுக்கு இந்த திருவிழா பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதனால் இவனால் கதைகள் எதையும் புதிதாக சொல்ல முடியவில்லை. ஆனாலும் மற்றவர்கள் சொல்லும் கதைகளைக் கேட்டு ஆசையை வளர்த்திருந்தான்.
திருவிழா நாளும் நெருங்கியது, எல்லோரும் போக டெம்போ ஒன்று பேசியிருந்தார் பார்திமியஸ். அதற்கு எல்லோரிடமும் 10 ரூபாய் கொண்டு வர வேண்டுமென்று சொல்லியிருந்தார். திருவிழா நாளில் எல்லோரும் கையில் பணத்தோடு வர சீனு மட்டும் பாவமாய் நின்றிருந்தான். கணவனை இழந்த அவனது அம்மா கூலித் தொழிலாளி, சீனு படிக்கவே ஒரு கால் வராத அவனது சித்தப்பாதான் நோட்டு புத்தகங்களெல்லாம் வாங்கித் தருவார், அவளிடம் இவனுக்கு கொடுக்க பணம் இல்லை. முன்னரே கேட்டிருந்தால் பார்திமியஸ் கொடுத்திருப்பார். காலை எழுந்ததும் பால் முதல் தலைவலியென்றால் தைலம் வரை பார்திமியசுக்கு ஓடிப் போய் வாங்கி வருபவன் சீனுதான். அவனுக்கு தராமல் யாருக்குத் தருவார்? ஆனால் கடைசிவரை சீனு அவரிடம் கேட்கவில்லை. திருவிழாவுக்கு முந்தைய நாள்தான் அம்மாவிடம் கேட்டுப் பார்த்தான். அவள் இல்லை என்றுவிட்டாள். இவனும் அழுது அடம் பிடித்து பட்டினி கிடந்து என்னென்னவோ செய்து பார்த்தான். ஆனான் அவன் அம்மா பணம் தரவில்லை. உடனே முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டான். அப்படி பாவமாய் நின்றிருந்த சீனுவைப் பார்த்து பார்திமியசுக்கு ஒரே சங்கடமாய்ப் போனது. அந்த கடைசி நேரத்தில் அவனை இலவசமாய் அழைத்துப் போனால் அவனுக்கு மட்டும் சிறப்பு சலுகை தருவதாக மற்ற குழந்தைகளுக்கு அவன் மீது அசூயை ஏற்படும். பாவம் செய்வதறியாது தவித்தார் பார்திமியஸ்.
அப்போதுதான் மார்கரெட் அந்த அழகான காரியத்தை செய்தாள். தனக்கு பத்து ரூபாய் போக ‘வாங்கி சாப்பிட’ என்று ஐந்து ரூபாய் அம்மாவிடம் வாங்கி வந்திருந்தாள். அதில் மூன்று ரூபாயை எடுத்து பார்திமியசிடம் சீனுவுக்கென்று கொடுத்தாள். அதைப் பார்த்து ஷெல்லி மூன்று ரூபாயும், சீதாவும் ராகேஷும் இரண்டிரண்டு ரூபாய் கொடுக்க சீனுவுக்கு பத்து ரூபாய் தயாரானது. பார்திமியஸ் கண் கலங்கிவிட்டார். நான்கு பேரையும் அணைத்துக்கொண்டு சொன்னார் “இதுதான் குழந்தைகளே தேவனது செய்தி, எவன் ஒருவன் தனது சுகங்களை பிறருடன் பங்கு போடுகிறானோ அவனே தேவ மைந்தன், குழந்தைகளே நீங்கள் தேவ மைந்தர்கள்”. அதில் கூடுதல் சந்தோசமான இவர்கள் கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் ஒன்றுமேயில்லை என்பதுபோல் பெரிய திருவிழாவாய் இருந்தது. ஒரு சிறிய மலையையே மொத்தமாய் செட் போட்டு அதில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறினைப் நாடகமாய் நடித்துக் காட்டினார்கள். திடீரென்று ஒரு மூலையில் விளக்கு எரியும், அங்கே ஆதாமும் ஏவாளும் சபிக்கப்பட்ட பழத்தினை சாப்பிடுவார்கள். உடனே அவர்களுக்கு மேலே இன்னொரு இடத்தில விளக்கு எரிந்து தேவன் அவர்களைப் பார்த்து சாபமிடுவார். பின்பு இன்னொரு பக்கத்திலே கன்னி மரியாளை அழைத்துக்கொண்டு சூசையப்பர் ஊரை விட்டு நடந்து போவார். புயலும் மழையுமான அந்த இரவில் பேறுகால வலியெடுத்த மரியாளை அழைத்துக்கொண்டு ஒரு ஆட்டுக் கொட்டகைக்குள் நுழைவார். இன்னொரு புறம் விளக்கெரிந்து மூன்று ஞானிகள் மீட்பர் பிறந்த தேவ செய்தி அறிந்து அவரைப் பார்க்க ஆட்டுக் கொட்டகைக்கு நடந்து வருவார்கள். பின்பு இன்னொரு புறத்தில் விளக்கெரிந்து தேவ மைந்தன் ஊமைகளைப் பேசவைப்பார், செவிடர்களைக் கேட்கவைப்பார், முடவர்களை நடக்கவைப்பார். இன்னொரு புறமோ சிலுவையை சுமந்தபடி இயேசு சவுக்கடி பட்டு மலையுச்சியை நோக்கி சிலுவை சுமந்து செல்லுவார். கடைசியாக இன்னொரு புறத்தில் விளக்கெரிந்து புதைக்கப்பட்ட குகையிலிருந்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுவார். இப்படி மலை முழுவதுமாய் எங்கெங்கும் இருந்து நாடகத்தினை நடத்தினார்கள். அந்த பிரம்மாண்டத்தில் எல்லாக் குழந்தைகளும் முழுகிப் போனார்கள் என்று சொல்வது கூட மிகக் குறைந்த உவமைதான்.
அதன் பிறகு எல்லாரும் வளர்ந்து கல்லூரிகளுக்காகப் பிரிந்து போனார்கள். ஷெல்லி ப்ரீஸ்ட் கல்லூரியில் வேதாகமம் குறித்த படிப்பு சேர்ந்திருந்தான். மார்கரெட் டீச்சர் ட்ரைனிங் முடித்துவிட்டு டீச்சராகியிருந்தாள். ராகேஷ் பிரசாத் எம்.பில் முடித்து கல்லூரி விரிவுரையாளராகியிருந்தான். ஜான்சி நர்சிங் முடித்து கன்னியாஸ்திரியாகி சேவை செய்யப் போயிருந்தாள். சீனு மட்டும் படிக்கவில்லை. பத்தாவதோடு நிறுத்திக்கொண்டு எதோ மெக்கானிகல் ஷெட்டில் வேலைக்கு சேர்ந்து பின்பு கொஞ்ச நாளில் டிரைவிங் லைசென்ஸ் எடுத்திருந்தான். பின்பு அப்படியே தொழில்முறை டிரைவராகிவிட்டான். அதன் பின்பு கொஞ்சநாள் பங்குத்தந்தையாக உயர்ந்துவிட்ட பார்திமியசுக்குக்கூட கார் டிரைவராக இருந்தான். கல்லூரி படித்த காலங்களில் விடுமுறையில் பார்திமியசைப் பார்க்க வரும்போது இவன் அவரது காரை அன்போடு துடைத்துக்கொண்டிருப்பான். “பார்திமியசண்ணா போற காருல்ல? அழுக்கா இருந்தா நல்லாவா இருக்கும்” என்று சொல்லிக்கொள்வான். பின்பு கல்லூரி முடித்த பிறகு அவனைக் காணவில்லை. பார்திமியசே கார் ஓட்டப் பழகியிருந்தார். “சீனு எங்க ப்ரதர்” என்று கேட்டதற்கு “தெரியலப்பா, அவன் வர்றது இல்ல” என்று சொல்லி முடித்துக்கொண்டார். அந்த சீனுதான் இத்தனை வருடம் கழித்து இவனைப் பார்க்க வருகிறான்.
புஷ்டியான பொலேரோ கார் அந்த சர்ச் வளாகத்துக்குள் வெண்ணையில் வழுக்கிக்கொண்டு வருவதுபோல் வந்தது. அந்த வாகனத்துக்கு நேர் எதிரான தோற்றத்தில் அதன் கதவுகளைத் திறந்துகொண்டு சீனு இறங்கினான். ஒல்லியாக, கண்கள் பஞ்சடைந்துபோய், கன்னம் ஒடுக்கல் விழுந்து கொஞ்சம்பழைய சட்டையோடு இறங்கிய சீனுவை அவனது சிரிப்பை வைத்துதான் ஷெல்லியால் அடையாளம்காண முடிந்தது.
“மச்சீ..“ என்று உற்சாகமாக வந்தவனை கொஞ்சம் அருவருப்போடுதான் பார்த்தான் ஷெல்லி. தனது இருப்பும் பதவியும் அவனுக்கு சிறிய இருமாப்பினைக் கொடுத்திருந்தது. “மச்சி உன் நம்பர ராகேஷ் கிட்டதான் வாங்கினேன். அவன்தான் சொன்னான் நீ இங்க இருக்கன்னு. ராகேஷ் பையன பாக்கணுமே. ரெண்டு வயசுதான் ஆகுது. செமசேட்ட மச்சி. என்கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டு இருந்தான். அப்பறம் பைக்க காட்டி ‘உம் உம்..’ ங்கறான். பைக்குல கூட்டிட்டு போவணுமாம். நீ ஒருநாள் வா மச்சி ஊருக்கு. உன்னயெல்லாம் பாத்தா சந்தோசப் படுவான்” என்று சொல்லவும் ஷெல்லி தனது இன்றைய நிலைகளை மறந்து மீண்டும் சிறுவனானான். அவனது தயக்கங்கள் பறந்துபோனது. அப்படியே ராகேஷின் சிறு வயது சேட்டைகளைப் பற்றி, மற்ற நண்பர்களைப் பற்றியெல்லாம் பேச்சு தொடர்ந்தது. மார்கரெட், ஜான்சியெல்லாம் என்ன செய்கிறார்கள் என்று சீனு கேட்டு தெரிந்துகொண்டான். அவரவர் சின்ன வயதில் செய்த சேட்டைகளைப் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் வெகுநேரம் இருந்தனர்.
இரவு உணவின்போது ஷெல்லி சீனுவிடம் கேட்டான், “எங்க மச்சி போன இத்தனை நாளா? கொஞ்ச நாள் பார்திமியஸ் ப்ரதரோட கார் ஓட்டிட்டு இருந்த. அதுக்கப்பறம் உன்ன பாக்கவே முடியலையே”
“அங்கேதான் மச்சி இருக்கேன். பார்திமியசண்ணாவத்தான் பாக்கறதில்ல.” என்று வறட்டுப் புன்னகையுடன் சொன்னான்.
“ஓ. வேற நல்ல இடத்துல ஜாப் கிடைச்சுடுச்சா?”
“நல்ல இடமா?” உணர்ச்சியே இல்லாமல் சிரித்தவன். “பார்திமியஸ் அண்ணாவ விட சம்பளமா எனக்கு முக்கியம்?” என்று சொல்லிவிட்டு சாப்பாட்டுத் தட்டையே பார்த்தபடி எதுவும் பேசாமல் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தான்.
எதுவும் பேசாமல் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் ஷெல்லி. கலங்கிய கண்களைமறைக்க தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு, “மச்சி, பார்திமியஸ் அண்ணாகிட்டதான் வேலை பாத்துட்டு இருந்தேன். குடுக்கற சம்பளத்த அப்படியே அம்மாட்ட குடுத்துருவேன். எதுவும் கேக்கக்கூட மாட்டேன். எல்லாத்தையும் பார்திமியஸ் அண்ணா பாத்துக்குவாரு. அப்படியே அவருக்கு கொஞ்ச கொஞ்சமா நான்தான் டிரைவிங் சொல்லிக் குடுத்தேன். லைசென்சும் நான்தான் எடுத்துக் குடுத்தேன். ஒருநாள் சாயங்காலம் வீட்டுக்கு போறேன் சித்தப்பா வந்து உக்காந்துருந்தாரு. உனக்குதான் தெரியுமே மச்சி. அவரு ஹேண்டிகாப்டு. அவருக்கும் எங்கள விட்டா யாருமே இல்ல. சித்தி எப்பயோ செத்து போச்சு.” பெருமூச்சு விட்டபடி சப்பாத்தியை இரண்டு வாய் கிள்ளி வாயில் போட்டான். கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப் படுத்திக்கொண்டு, “அந்த கால வெச்சுக்கிட்டு சின்ன சின்னதா என்னென்னமோ வேலையெல்லாம் பாப்பாரு மச்சி. அன்னிக்கு வந்து சொன்னாரு. ‘டேய் சீனு, நான் இத்தனை வருசமா சம்பாதிச்ச காசு ஒரு அஞ்சு லட்ச ரூவா இருக்கு, உன் சம்பள காச உங்கம்மா எங்கிட்டதான் குடுத்து வெச்சுருக்கு. அது ஒரு லட்ச ரூவா இருக்கு. அந்த காசுல சீட்டு போட்டுருக்கேன். நீ அந்த காச பைனான்ஸ்ல போட்டு ஒரு கார் வாங்கிக்கோ. சொந்தமாதொழில் பண்ணின மாதிரி இருக்கும். நம்ம ரமீரோதான் சீட்டு நடத்துறாரு’ன்னு சொன்னாரு. உனக்கு ரமீரோ தெரியும்ல மச்சி?” என்றான்.
ஷெல்லி ரமீரோவை மனதுக்குள் நினைத்துக்கொண்டான். பார்திமியஸ்க்கு உதவியாக சர்ச்சில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவரது சர்ச்சில் திருப்பலி பூசைக்கான ஏற்பாடுகள் முதல் அனைத்தையும் இவர்தான் முன்னின்று செய்வார். ஷெல்லிக்குகூட ரமீரோவைப் பழக்கம் உண்டு. அடர்ந்த தாடியில் வெண்ணிற நரை மெல்லிய கோடுபோல எட்டிப் பார்க்க எப்போதும் அன்பும் புன்னகையும் கலந்த முகத்துடன் பேசுவார், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ப்ரதர் ஷெல்லி, எப்படி இருக்கிறீர்கள்” என்று அவர் அன்போடு கேட்பதை நினைத்துக்கொண்டான்.
ஷெல்லியின் பதிலுக்காக சீனு காத்திருக்காமல் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தான். “நான் என்ன தெரியுமா சொன்னேன்? ‘அதெல்லாம் முடியாது. இன்னும் பார்திமியஸ் அண்ணா வண்டிய நல்ல ஓட்டி பழகல. இன்னும் ஒரு வருஷம் அவருக்குதான் வண்டி ஓட்டுவேன். நல்லா ஓட்டி சொல்லி குடுத்துட்டு அவர்கிட்ட கேட்டுட்டுதான் வருவேன்’னு சொல்லிட்டேன்” நிறுத்திவிட்டு விரக்தியாக சிரித்தபடி ஷெல்லியைப் பார்த்தான். அவனது பார்வை நிலைகுத்தி இருந்ததே தவிர அவன் கவனம் மனதுக்குள் எங்கோ இருந்தது என்று புரிந்து அவனுக்கான இடைவெளி கொடுத்து ஷெல்லி சும்மாயிருந்தான்.சீனு இயந்திரத் தனமாக அந்த சம்பவத்தை விவரித்தான்.


“டேய் உங்க அண்ணனே நீ தொழில் பண்ணப் போறன்னு சொன்னா சந்தோஷப் படுவாருடா” என்று சொல்லி சீனுவை அடுத்தநாள் பணம் வாங்க ரமீரோவிடம் கூட்டி சென்றார் அவனது சித்தப்பா
சர்ச்சுக்கு பின்னால் இருந்த தோட்டத்தில் ரமீரோ, பார்திமியஸ், பார்திமியசின் அப்பா கெலிடா சாமுவேல் இன்னும் இரண்டுபேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
சித்தப்பா, ரமீரோவிடம் சென்று பேச ஆரம்பித்தார். “ரமீரோ, தம்பிக்கு ஒரு வண்டி வாங்கி குடுத்துடலாம்னு இருக்கேன், தொழில் பண்ணி பொழைச்சுக்குவான்ல, அதான்” என்றார். சீனுவோ இப்படி திடீரென்று போவது பார்திமியசுக்கு செய்யும் துரோகமோ என்ற குற்ற உணர்ச்சியில் அவர் கண்களை சந்திக்க தயங்கி தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன வண்டி நல்லா இருக்கும்னு சொல்லனுமா? இன்னோவா வாங்கிக்கோப்பா. அதுதான் இப்ப நல்லா போவுது.” என்றான் ரமீரோ.
“அது இல்லப்பா, சீட்டு காசு குடுத்தன்னா..“ என இழுத்தார் சித்தப்பா.
“சீட்டு காசா? அதான் வாங்கிட்டு போயிட்டியே?”
அசந்தர்ப்பமாக ரமீரோ விளையாடுவதாய் நினைத்துக்கொண்டு, “ஹஹஹா.. இந்ததடவ வாங்கிட்டேன். ஒரு அஞ்சு சீட்டு காசு உன்கிட்ட தானப்பா இருக்கு” என்றார் சித்தப்பா.
“யோவ் விளையாடுறியா? என்கிட்டல்லாம் உன் காசு எதுவும் இல்ல” என்று நிஜமான கோபத்துடன் சொன்னான் ரமீரோ.
சீனுவின் சித்தப்பா கொஞ்சம் மென்மையான மனிதர். உடல் குறைபாடு உள்ளவர்கள் சிறு வயது முதலே தொடர் கிண்டல்களுக்கு ஆளாபவர்கள். அவற்றைப் பொருட்படுத்தாத பட்சத்தில்தான் நட்பைத் தொடர முடியும். மாறாக கோபப்படும்போது தனித்து விடப்படுவார்கள். இந்த குழு மனோபாவ உலகில் பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள். கிண்டல் என்ற பெயரில் மனதளவில் காயப்படுத்தப்பட்டு அதுவே பழகிப்போய் விடுகிறார்கள். அவர்களின் பாணியே மாறி கொஞ்சம் குழைவாக நடந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். இந்த உலகமும் அவர்களிடம் தொடர்ந்து அதையே எதிர்பார்க்கிறது. “ஊருக்குப் போணும்.. ஆத்தா வையும் காசு குடு” என்று அழவைத்த பிறகே பணம் கொடுக்கும் விளையாட்டு போல ஒன்று என்று தொடக்கத்தில் நினைத்த சித்தப்பா, ரமீரோவின் கடைசி வார்த்தைகளைக் கேட்டு பதறிப் போய்விட்டார். “என்னப்பா அஞ்சு சீட்டு காசு உன்கிட்ட குடுத்து வெச்சுருந்தேனே? அஞ்சு லட்ச ரூபாப்பா” என்று குரல் நடுங்க சொன்னார்.
“யோவ்.. அதெல்லாம் நீ ஒன்னும் குடுக்கல. உன் விளையாட்ட இதோட நிறுத்திக்கோ” என்று ரமீரோ சொன்னபோதுதான் சீனு பேச்சு பிரச்சினையாகிக் கொண்டிருப்பதை கவனித்தான்.
அவர்கள் அருகில் நெருங்கி வந்த பார்திமியஸ், சீனுவின் சித்தப்பாவிடம், “ஏங்க அவருதான் நீங்க காசு தரலைன்னு சொல்றாருல்ல? பேசாம கிளம்புங்க” என்று ரமீரோவுக்கு பரிந்து பேசவும் சீனு பதறிப்போய் “இல்ல பார்திமியசண்ணா, சித்தப்பா இவர்கிட்ட காசு குடுத்துருக்காரு” என்றான்.
“டேய், உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. மூடிட்டு இரு” என்று ரமீரோ இவனை மிரட்டும் தோரணையில் சொன்னான். பார்திமியஸ் இவன் பக்கம் திரும்பவேயில்லை.
“என்னங்க சம்பந்தம் இல்ல? அவரு என் சித்தப்பாங்க” என்று பதிலுக்கு இவன் கோபமானான். இதையெல்லாம் கெலிடா சாமுவேல் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்தார்.
ரமீரோ கோபமாக திரும்பி சுற்றும் முற்றும் பார்த்து விறகுக்காய் வெட்டி அடுக்கப்பட்ட கட்டைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு சீனுவை அடிக்கப் பாய்ந்தான். சீனுவும் பயப்படாமல் முன்னே போக சித்தப்பா அவன் கையைப் பிடித்துக்கொண்டார். அவர் கை நடுங்கிக் கொண்டிருந்தது. அப்பாவையே கண்டறியாமல், சித்தப்பாவையே அப்பா இடத்தில் வைத்துப் பார்த்திருந்த சீனு வாழ்க்கையில் முதன்முறையாக அவர் கை நடுங்குவதை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்துபோய் பார்த்தான். சித்தப்பா அழுதுகொண்டிருந்தார். “சீனு போயிடலாம்டா” என்று குரல் நடுங்க சொன்னார்.
இதைப் பார்த்து அடிக்க ஓங்கிய கட்டையை இறக்கி கையில் வைத்துக்கொண்டு, “அப்படியே ரெண்டு பேரும் ஓடிப் போயிடுங்க. திரும்ப இங்க உங்கள பாக்கவே கூடாது” என்று மிரட்டினான். சீனு வயதில் சிறுவனாய் இருந்தாலும் உடலளவில் ரமீரோவை விட உயரமாக பலமாக இருப்பவன். சீனு திருப்பி அடித்திருந்தால் விறகுக்கட்டையோடு ரமீரோவும் எங்கோ போய் விழுந்திருப்பார்கள். ஆனால் பார்திமியசின் மௌனம், சித்தப்பாவின் அழுகை என சீனு மனம் குழம்பிப் போயிருந்தான். அதனால் பேசாமல் திரும்பினான். சித்தப்பாவோ அழுதுகொண்டேயிருந்தார். வாழ்க்கையில் முதல்முறையாக தன் உடல் குறைபாடைக் குறித்து பச்சாதாபமாய், “என்ன ஏமாத்த எப்படிடா, மனசு வந்தது” என்று அழுதவரை இவனுக்கு தேற்றத் தெரியவில்லை.


சீனு சொல்லி முடித்த கதையை அதிர்ச்சியோடு ஷெல்லி கேட்டுக்கொண்டிருந்தான். “அதுக்கப்புறம்?” என்றான்.
“அப்பறம் என்ன? ஒன்னும் நடக்கல. நான் பார்திமியஸ் அண்ணாவ பாக்க போகல”
“ஆமா, இப்படி பண்ணின மனுசன பாக்கனும்னு எப்புடி தோணும்?” என்று வெறுப்பு உமிழ சொன்னான் ஷெல்லி.
“அதெல்லாம் இல்ல மச்சி. அவரு எதோ அந்த நேரத்துல அவருக்கு முக்கியம்னு நெனச்சு ரமீரோவுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருந்துட்டாரு. அதுனால கோவமெல்லாம் இல்ல. நான் போய் பார்த்தா அவருக்கு தேவையில்லாத சங்கடம். அதான் போய் பாக்கல” என்றவனை ஷெல்லி ஆச்சர்யமாக பார்த்தான்.
“என்ன.. சொந்த வண்டி வாங்கிருக்க வேண்டியவன். வெறும் டிரைவரா ஓட்டிட்டு இருக்கேன்” என்று பெருமூச்சு விட்டபடி சொன்னவன். திடீரென்று “மச்சி, எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?” என்றான்.
“சொல்லு மச்சி” என்றான் ஷெல்லி.
“என்ன ஒரே ஒரு தடவ சர்ச்சுக்கு கூட்டிட்டு போறியா? எனக்கு சாமி கும்புடணும்போல இருக்கு. நான் இத்தனை நாளா இருந்திருக்கேன். ஆனா சர்ச்சுக்குபோயி சாமி கும்பிட்டதில்ல. எத்தனையோ தடவ பார்திமியஸ் அண்ணாவ கூப்பிட சர்ச்சுக்குள்ள போயிருக்கேன். ஆனா சாமிநிமிர்ந்துகூட பாத்ததில்ல. இப்பதான் பாக்கணும்னு தோணுது. கூட்டிட்டு போறியா?” என்று கெஞ்சலாக கேட்டான்.
சரியென்று ஷெல்லியும் அவனைக் கூட்டிக்கொண்டு கிளம்பினான். கிட்டத்தட்ட இரவு ஒன்பது மணியை நெருங்கியிருந்தது. சர்ச்சில் யாருமில்லை மார்க்கஸ் மட்டும் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். சீனு வேடிக்கை பார்த்தபடி வந்தான். இருவரும் மார்க்கசை அணுகினார்கள். ஷெல்லி அவரிடம் விஷயத்தை சொன்னான். அவர் புன்னகையோடு சீனுவைப் பார்த்தார். சீனு விலகிப்போய் மண்டி போட்டு எதோ பிரார்த்தனை செய்தான். கண்களை மூடவில்லை யேசுவைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. அப்படியே கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தான். பின்பு மெதுவாக எழுந்து தயங்கியபடி. “அடுத்து என்ன மச்சி?” என்றான்.
“வேற ஒன்னும் இல்ல சீனு. இங்க விதிமுறைகள்லாம் இல்ல. வேணும்னா பாவ மன்னிப்பு கேக்கலாம் அவ்வளவுதான்” என்றான்.
“அப்டின்னா?”
“நீ செய்த பாவங்களுக்கு சாமிகிட்ட மன்னிப்பு கேக்குறது”
“அப்ப நானும் பாவ மன்னிப்பு கேக்கணும்”
“சரி நான் சொல்ற மாதிரி முதல்ல சொல்லணும், ‘ஓ பாவமே.. ஓ பாவமே.. என் பெரும் பாவமே. என்னை விட்டு விலகி இரும்.. பரலோகத்திலிருக்கின்ற எங்கள் பிதாவே. எங்களை நிந்திக்கிறவரை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்..’” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட மார்க்கஸ். “ஒரு நிமிஷம் ஷெல்லி” என்று அவனைத் தடுத்து. சீனுவைப் பார்த்து. “நீங்க உங்க மனசுல எப்படி கேக்கணும்னு தோணுதோ அப்படியே மன்னிப்பு கேளுங்க” என்றார்.
நன்றியோடு மார்க்கசைப் பார்த்த சீனு, ஷெல்லி பக்கம் திரும்பி “சரி மச்சி நான் கேக்குறேன்” என்றான்.
“அந்த சின்ன ரூமுக்குள்ளபாதர் இருப்பாரு, நீ அதுக்கு இந்த பக்கமா போய் மண்டி போட்டு கேக்கணும்” என்று விளக்கம் சொன்னான்.
“இல்ல மச்சி நான் உன்கிட்டதான் கேப்பேன்” என்று மீண்டும் சீனு அடம்பிடித்தான்.
ஷெல்லிக்கு சங்கடமாய்ப் போய்விட்டது, “டேய், பாதர்தாண்டா பாவ மன்னிப்பு குடுக்கணும். நானெல்லாம்...” என்று ஆரம்பித்தவனைத் தடுத்து “ஷெல்லி நீங்களே போங்க” என்றார் மார்க்கஸ். அவரை ஆச்சர்யமாகப் பார்த்தான். “இங்க தலைவர்களெல்லாம் யாரும் இல்ல. நான்தான் பேட்டி எடுப்பேன் நான்தான் பேட்டி கொடுப்பேன் என்று சொல்லிக்கொண்டிருக்க.. ஹஹஹா..” என்று சிரித்தபடி சொன்னார்.
அவரின் குணங்களை நினைத்து ஆச்சர்யப்பட்டபடி அறையின் ஒருபுறம் ஷெல்லி சென்று காத்திருக்க சல்லடை போட்ட தடுப்புக்கு இந்தப் பக்கம் சீனு வந்து மண்டி போட்டு அமர்ந்தான். ஷெல்லி, “இந்த சபையில், தேவ சாட்சியாக உன் பாவங்களைக்கூறி மன்னிப்புக் கேள். நம் மீட்பராகிய யேசு கிறிஸ்து, உன் பாவங்களை மன்னித்து, அதைத்தான் ஏற்றுக் கொள்வார்” என்றான்.
பிறகு மெல்லிய குரலில் சீனு, “யேசு சாமி, நாங்க இந்து, எனக்கு உங்கள எப்புடி கும்புடணும்னுகூட தெரியாது. இருந்தாலும் கேக்குறேன். மூனு வருஷம் முன்னால, நான் கார் வாங்கணும்னு எங்க சித்தப்பா காசு சேர்த்து வெச்சுருந்தாரு. அந்த காச பார்திமியஸ் அண்ணாவுக்கு தெரிஞ்ச ஒருத்தர்கிட்ட கொடுத்திருந்தோம். அவன் எங்கள ஏமாத்திட்டான். ஆனா நியாயம் கேக்க போனபோது பார்திமியஸ் அண்ணாவும் சேந்து எங்கள ஏமாத்திட்டாரு. பார்திமியஸ் அண்ணா ரொம்ப நல்லவரு. எதோ எங்களுக்குதான் நேரம் சரியில்ல. அதுனால அவரு மேல கோவப்பட்டு ஏதும் தண்டனை குடுத்துறாதீங்க. அவரோட பாவங்களை மன்னிச்சுருங்க. ம்ம்ம்.. அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு தயங்கியபடி இருந்தான்.
அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்த ஷெல்லி உணர்வு வந்தவனாய், “அவ்வளவுதானா?” என்று கேட்டான்.
 “அவ்வளவுதான் மச்சி...” என்றவன் சிறிது தயங்கிவிட்டு, “அவ்வளவுதான் பாதர்” என்றான்.
“உனது பாவங்கள் தேவ சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மன்னிக்கப்பட்டன” என்று தடுமாற்றத்துடன் சொல்லி முடித்தான் ஷெல்லி.
வெளியே வந்து, “டேய் உன் பாவங்களுக்குதாண்டா மன்னிப்பு கேட்கணும்” என்றான் ஷெல்லி.
“விடு மச்சி, மனசுல பட்டுச்சு கேட்டுட்டேன், சரி நான் கிளம்பறேன்” என்றான் சீனு.
“நைட்டு இருந்துட்டு போவன்னு நெனச்சேன்?”
“இல்ல மச்சி, நமக்கு கார்தான். சவாரி வந்தவங்க காட்டேஜ்க்கு வெளியில கார நிறுத்திட்டு தூங்கிடுவேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
சீனு போனபிறகு மார்க்கசிடம் அவனுடன் பேசியதையெல்லாம் சொன்னான். கடைசியில் “இவ்வளவு நடந்த பிறகும் அவனுக்கு பார்திமியஸ் மீது கோபமோ வெறுப்போ இல்லை பாதர், மாறாக அவர் சங்கடப்படுவார் என்பதற்காக ஐந்து லட்ச ரூபாயை கேட்காமல் விட்டுவிட்டான்” என்றான்.
மார்க்கஸ் புன்னகையோடு பார்த்துகொண்டிருக்க, “பாவ மன்னிப்புல கூட... என்று ஆரம்பித்தவன் பிறகு எதோ நியாபகம் வந்து சொல்லாமல் நிறுத்தினான்.
“அவருடைய குணம் அது. ஹிஹாவ் அ ப்யூர் சோல். ‘பிறருடைய பாவங்களை மன்னிப்பவன் தேவ சபையில் மன்னித்து ஏற்றுக்கொள்ளப்படுவான்’ உங்களுக்கு தெரியுமே. தனக்கு துரோகம் செய்து தன்னையே காட்டிக்கொடுத்த யூதாஸைக்கூட தேவ மைந்தன் மன்னித்துதானே விட்டார்” என்றார் மார்க்கஸ்.
பார்திமியஸ் செய்த காரியத்துக்கு யூதாஸோடு ஒப்பிடலாம்தான், இன்னும் சொல்லப்போனால் அதைவிட மோசமான எவனோடும் ஒப்பிடத் தகுந்தவர்தான், ஆனால் தேவ மைந்தனை சீனுவோடு ஒப்பிடுவதா என்று ஷெல்லி அதிர்ந்துபோனான். மார்க்கசைப் புரிந்துகொள்ள முடியாமல் குழம்பிப் போனான். அவரை ஏன் புரிந்துகொள்ள வேண்டும்? அவர் மூலம் ஏசுவைப் புரிந்துகொண்டால் போதுமல்லவா? வெகுநேரம் யோசித்து சீனுவைப்பற்றி பார்திமியசிடம் பேசுவதில்லை என முடிவெடுத்தான். ஏன் வேறு யாரிடமும் பேசக்கூடாது என்று முடிவெடுத்தான். தான் கொடுத்த முதல் பாவமன்னிப்பு இது. சீனு தன்னிடம் பேசிய ஒவ்வொரு நொடியும் பாவமன்னிப்பு என்று நினைத்துக்கொண்டான். இதர பாவமன்னிப்புக்கள்போல் அது தன் இதயத்தில் புதைந்து போகட்டும். அதை பிரஸ்தாபித்தால் தேவையில்லாமல் அருட்சகோதரர் பார்திமியசை அது சங்கடப்படுத்தக்கூடும். அது வேண்டாமென்றுதானே தன் ஆருயிர் ‘பார்திமியஸ் அண்ணாவை’ விட்டு விலகி வந்தான் சீனு?