பாறையைப் புரட்டும் வலிமை
பாகனின் கட்டுக்குள்
நிற்கும் எளிமை.
களிருக்கும் கம்பமாவிற்கும் மட்டுமல்ல
கட்டுக்குள் நிற்கும் மதத்திற்கும் என்றார்கள்
போதக பாகன்கள்.
உச்சத்தில்
ஏறிநின்றது மதயானை.
மருந்திற்காய்க் கேட்டபோது
உச்சானிக் கொப்பின்
குரங்காய் ஆடியது
போதக பாகன்களின் சகலமும்.
மறுத்தார்
குமைந்தார்
கொதித்தார் சிலர்.
பாதகம்
பாரதூரம்
பார்ப்பனீயம்
பாருங்கள் நாம் கருப்பர்கள்
கருப்பசாமிகள்.
மறுத்தார்
குமைந்தார்
கொதித்தார் பிறர்.
பண்ணையம்
பாசிசம்
வெள்ளைத்திமிர்
சேருங்கள் நாம் சிவப்பர்கள்.
செங்கோடன்கள்.
உச்சத்தில் ஏறிநின்றது
மதமற்ற யானைகள்.
உணவிற்காய்க் கேட்டபோதும்
உள்அரங்கில்
உட்கார்த்தி மிரட்டினர்
கருப்பசாமிகளும்
செங்கோடன்களும்
மதயானைகள் கவனமென.
அலைகின்றோம் நாம்
அங்குசம் தேடித் தேடித் தேடித் தேடி… …