Monday, January 6, 2020

கவிதைகள் - தமிழ்மணி


சகதி
காய்ந்த இலையின்
முன்னிருந்த நிறமொத்த நீரை
வான்புனல் குழிதோண்டி
சேகரம் செய்திருந்தது
புவனத்தில்!

துரு ஏறிப் போயிருந்த
மக்காடுடன்
நீருள் புகுந்து வெளியேறியது
மிதிவண்டி.

ஸ்கூட்டர்களும்
கார்களும்
லாரிகளும்
மேற்கொண்டு கலக்கிவிட்டுப்
போயிருந்தன.

நாட்கள் கழிந்தொழியவே
தெரிய வந்தது
காணாமல்போன கலங்கல் நீர்
மறைத்து வைத்திருந்தது
பல்வேறு டயர் தடங்கள் கூடிய
துருப்பிடித்த மண்ணை.
0

மீட்பர்
தேங்கியிருக்கும் குட்டையில்
துடித்துக் கொண்டிருக்கின்றன
நீந்தத் தெரியாத
தூறல்கள்
காக்கையின் அலகும்
தெருநாயின் நாவும்
அதன் மீட்பர்

இச்சையின் கூட்டில்
விறைத்து தனித்திருக்கும்
சிசினத்தின்
நரம்பு சொல்கிறது
உனக்கான மீட்பர்
இன்னும் வரவில்லை

பிரம்மச்சாரியத்தின்
குட்டை பல்கி
குளமாகி நதியாகி
சமுத்திரமானது
அலைகளின் ஆர்ப்பரிப்பில்
கணுக்கால்களைகூட
நனைக்க முடியாதபடி
ஆட்டுக் குட்டியோடு
கரையில் அமர்ந்திருந்தார்
ஒரு மீட்பர்
0

சுகத்தின் மோட்சம்
ிரயத்தனத்தின்
பெருவெளியில்
நுரைத்து திரளும்
ஆன்மாவின் கட்டளை
மீச்சிறுவடிவம் எய்துமுன்
களியாட்டம் ஆடிவிடுகிறது
தொங்கும் தோட்டம்

ஊசலிற்கு ஏற்ப
பிரம்மைகளை கூட்டித் திரியும்
பாழ்மனிதர்களின் வன்முறை
வெற்றிடம்

சரீரத்தில்
புல்லரிப்பின் தயவால்
நீண்டிருக்கும் கேசம்
தூண்டல் விளைதலின்
முதற்கட்டம்

இருளுக்குள் ஒளிந்திருக்கும்
ஒளி புறப்பட்ட பிறகே
விடியல் வெளிக்கிட
அலுப்புத்தட்டும் கவசமாய்
காதல்
0

நெருப்பை நெய்பவன்
பவர்லூம் தறிகளின்
ஆதிக்கப் பகுதியில்
மின்சாரத் தடைநேரத்தில
கேட்கிறது
டட்டக் டட்டக் டட்டக்
கைத்தறியோசை

அறுபத்தைந்து வயதொன்று
அறுபதுரக நூலை
நெய்துகொண்டிருக்கிறது

பாவுப்பிணைக்கும்
நாளொன்றில்
பிணமாய்போனது
அந்த அறுபத்தைந்து

மயான எரியூட்டலில்
எந்திரிக்கும் அப்பிணத்தின்
கைக்கு இழுவைக் கயிறும்
காலிற்கு மிதிப்பலகையும்
கொடு வெட்டியானே!

நெருப்பை நெய்து
சாம்பல் சேலை
படைக்கட்டும்!
0
2020யின் முதல் ஞாயிறு ஜனவரி ஐந்தாம் நாள் மாவிபக’வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற தமிழ்மணியின் கவிதைகள்

No comments:

Post a Comment