Monday, January 6, 2020

இப்போதும்கூட – கவிதை - அருணோதயம்


இப்போதும்கூட
யாரேனும் ஒருவர்
காதலைச் சொல்கிறார்
கவிதையின் கையைப் பிடித்தபடி

இப்போதும்கூட
யாரேனும் ஒருவர்
வணக்கம் சொல்கிறார்
எதிர்ப்படும் பழைய வகுப்பாசிரியருக்கு

இப்போதும்கூட
யாரேனும் ஓருவர்
தாமாகவே இருக்கையை
விட்டுக் கொடுக்கிறார்
கைக்குழந்தையுடன் நிற்கும் பெண்ணுக்கு

இப்போதும்கூட
யாரேனும் ஒருவர்
மனம் நொந்துகொள்கிறார்
இளையராஜாவும் வைரமுத்துவும்
பிரிந்ததை நினைத்து.

இப்போதும்கூட
யாரேனும் ஒருவர்
வாக்களிக்க வருகிறார்
விற்கப்படாத ஓட்டோடு.

இப்போதும்கூட
யாரேனும் ஒருவர்
தாய் மண்ணிற்குத் தவிக்கிறார்
இறுதி மூச்சை விட.

இப்போதும்கூட
யாரேனும் ஒருவர்
வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்
வாங்கிய கடனுக்காக

இப்போதும்கூட
யாரேனும் ஒருவர்
கண்டும் காணாததுபோல் இருக்கிறார்
மனைவியின் கள்ளக் காதலை.

இப்போதும்கூட
யாரேனும் ஒருவர்
எழுதிக் கொண்டுதானிருக்கின்றார்
இப்படி ஒரு கவிதையை.

(2020யின் முதல் ஞாயிறு ஜனவரி ஐந்தாம் நாள் மாவிபக’வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment