Monday, July 25, 2011

சில கவிதைகள் - அருணோதயம்



இலக்கைச் சரிபார்த்தபடி
சுவர்விட்டு சுவர் தாவுவதும்
அடுக்களைப் பாத்திரங்களின்
அடுக்குகள் கலைத்து
திட்டு வாங்கி அலைவதும்
பொறுப்பான காவலாளிபோல்
வீடெல்லாம் உலவுவதும் கண்காணிப்பதும்
மின் விசிறியின் காற்றனுபவித்தபடி
என் படுக்கையில் உறங்குவதும்
ஊர் சுற்றிக் களைத்து
பதுங்கிப் பதுங்கி பின்வாசல் நுழைவதும்
என் செல்லப் பூனையின் இயல்புகள்
அதனழகுகளில் ரசித்தபடி
நாட்கள் நகர செல்லப் பிராணியோ
செல்லப் பிள்ளை போலானது.
சகுனம் பார்த்துத் திரியும் நீங்களோ
அதன் முகத்தில் விழிக்க
அருகதையற்றவர்களாய்.

0

அப்பா சொல்லி
மறுத்த வேலைகளை
இப்போது
ஒழுங்காகச் செய்கிறேன்
அப்பாவாகி.

0

உன் போன்ற சாயலில்
என்னைக் கடந்து போகிறவர்
தன்னையறியாமல்
எனை காலத்தின் பின் தள்ளுகிறார்.
எதிர்பாரா அத்தருணத்தில்
உன் ஞாபகம்
சுகமான நினைவாய்
நிறம் கொள்கிறது.

0

அதிகாலைப் புல்லில்
ஒட்டியிருந்தன
இரவின் பருக்கைகள்.

0

கடல் நமக்கு
மீன்களைத் தருகிறது.
அக்கரையோ
பிணங்களைத் தருகிறது.
நமது அரசாங்கமோ
இன்னும்
(கண்டன) அறிக்கைகளை மட்டுமே தருகிறது.

0

புற்று முற்றியபின்தான்
கவனத்திற்கு வருகிறது
கரையான்களின் கடுந்தவம்.

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

No comments:

Post a Comment