Monday, July 25, 2011

என்னவாயிற்று - மு.பழனிக் குமார்



இப்போதெல்லாம்
முணுக் முணுக்கென்று
கோபம் வருகிறது.

சொன்னதைக் கேட்கவில்லையென்று
மனைவி குழந்தைகள் மீது
சாட்டையாய், சப்தமாய் வருகிறது வார்த்தைகள்.

சட்டென முகம் சுழித்து, திருப்பி
உட்கார நேர்கிறது.

மிருகத்திலிருந்து மனிதன் என்று
பரிணாம வளர்ச்சி
மனிதனிலிருந்து மிருகம் என
மாறிக் கொண்டிருக்கிறது.

“நாற்பதில் நாய் குணம்
உண்மைதானா?”

ஊர் வேலையெல்லாம்
ஓடோடிச் செய்த காலம் போய்…
“இது என் வேலையில்லை,
என் நேரம் முடிஞ்சு போச்சு”
எப்படி வந்தது இந்த வார்த்தைகள்?

சலவை செய்ய வேண்டும்
எண்ணங்களை, வார்த்தைகளை, செயல்களை.
கறையாய் மாறி
கணக்கும் முன்பு
துடைத்தெறிய வேண்டும்
நெஞ்சின் அழுக்குகளை.

மணிக்கணக்காய், நாட்கணக்காய்,
இரவெல்லாம் பேசிய நாட்களெல்லாம்
என்னவாயிற்று?

இப்போதெல்லாம்
ஒரு நிமிடத்திற்கு மேல் என்ன பேசவென
யோசிக்கிறது மனசு.
‘அப்புறம்’ என்ற வார்த்தை
அடிக்கடி வருகிறது.
‘பார்ப்போம்’ என்ற சொல்
படக்கென வருகிறது.
என்னவாயிற்று?

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

No comments:

Post a Comment