Monday, July 25, 2011

மௌனம் பேசும் வார்த்தைகள் - செண்பகராஜன்



குளிர் காலத்தின் இரவொன்றில்
நீ எனக்குப் போர்த்திய போர்வையில்
உன் பிரியத்தின்
கதகதப்பை உணர்ந்தேன்.

மழைக்காலத்தின்
மாலை நேரத்தில்
நீ தந்த தேநீரைவிட
சுவையாக இருந்தது
உனது அன்பான முத்தம்.

அறை முழுக்க
மின்விளக்குகள் ஒளிர்ந்தாலும்
நீ இல்லாத அறை
இருண்மையை எனக்குள் தடம் பதித்தது.

‘வான்கா’வின் நவீன ஓவியத்தைப் போன்று
என் உணர்வுகளைப்
புரிந்துகொள்ளாமல்,
உதிர்க்கும் வசைக் சொல்
உன் மனதின் வன்மத்தை எதிரொலித்தது.

சண்டைக்குப் பிறகு
சங்கீதமாய் ஒலிக்கும்
உனது சமாதான முயற்சி
மெல்லிய குரலில்
ஆயிரம் அதிர்வலைகளைப் பிரசவிக்கும்.

தனிமையில் நான் இருக்கும் தருணத்தில்
உன் புகைப்படத்தின் வழியே கசியும்
மௌனம் பேசும் வார்த்தைகளை
யாரால் கவிதையாக மொழிபெயர்க்க முடியும்?

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

No comments:

Post a Comment