Monday, July 25, 2011

சாமி(யார்)? - பாண்டூ


கடவுளர்களால்(!)
உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் !?

வரம் வாங்குவதே,
சபிக்கத்தான் என்கிறபோது…
இவர்கள் தவங்கள்
கேள்விக்குள்ளாக்கப்படுகிறது!

இவர்கள்…
அவதரிக்கும் போதெல்லாம்,
அதர்மம் தலைதூக்கும்!

ஆசிர்வதிக்கும் போதெல்லாம்,
அஞ்ஞானம் அருளப்படும்!

தலையாட்டினால் பக்தன்…
கேள்வி கேட்டால் பித்தன்…
நல்லதென்றால் அவன் செயல்…
அல்லதென்றால் இவன் விதி…
இவர்கள் பிழைப்பிற்கு,
இதுவே நல்ல வழி ?!

இவர்கள்…
பற்றற்றவர்கள்…
அதனால்தானோ
வரவை மட்டுமே பார்க்கிறார்கள்!

ஏழு சக்கரங்களைப் பற்றி சிலாகித்தாலும்…
இவர்களது இறுதிக்காலம் என்னவோ
சக்கர நாற்காலியில்தான்…

பிராணாயாமா, யோகா, ஜீவ சமாதி என
ஆயிரம் பிதற்றினாலும்…
இவர்களது ஆவி பிரிவதென்னவோ
ஐ.சி.யூ.வில்தான்…

மனிதக் கண்களில்
மிளகாய்ப் பொடித் தூவும் இவர்களால்…
கேமராக் கண்களிலிருந்து
தப்ப முடிவதில்லை!

பக்தர்களே…
கால் கழுவக்கூட
காசு வாங்கும் இவர்களைக்
கை கழுவுங்கள்!

உதிர்ந்த மயிரைக்கூட
இவர்களால் ஒட்ட வைக்க முடியாது
உணருங்கள்!

விழித்திருங்கள்…
இதுவே சிறந்த தியானம்!

இனியாரும் கண்களை மூடச்சொன்னால்…
காதுகளை மூடுங்கள்!
முடிந்தால்…
ஆசிரமங்களையும்!

(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் 2011 ஜூலை 2 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடத்திய தோழர் கு.பா. நினைவுநாள் படைப்பரங்கில் வாசிக்கப் பெற்ற கவிதை)

No comments:

Post a Comment