Wednesday, November 12, 2014

கலந்துரையாடல் – கடிதம் 6 - தோழர் மதியின் பாவ புண்ணியம் கடிதத்தைத் தொடர்ந்து … செல்வா

அன்புத் தோழமைக்கு அன்புடன் செல்வா
-    பாவ புண்ணியம்
-    தலைப்பைப் பார்த்தவுடனே பயந்துட்டேன்...
-    எங்க கண்ணதாசன் மாதிரி ஏதும் எழுத ஆரம்பிச்சுட்டீங்களோன்னு நினைச்சுட்டேன்.
-     
பாவ புண்ணியம் பத்தி கவலைப்படும் இறை நம்பிக்கையாளனுக்கு எது சரின்னு ஒரு ‘பைபிள்‘ இருக்கு. எந்தப் பாவம் செஞ்சாலும் அதுக்கு ஒரு பரிகாரமும் வைத்திருப்பார்கள். இறை நம்பிக்கை இல்லாதவனுக்கு பரிகாரத்துக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது போங்க...

இந்தப் பாவபுண்ணிய கருத்துக்களை யார் உருவாக்குகிறார்கள்?
இது என்ன கேள்வின்னு புரியலை... அதிகார வர்க்கம் அல்லது உயர்சாதியாக கருதப்பட்டவர்களின் நலன்களைக் காக்கும் கருத்துகள்தான் அவை அனைத்துமே. அவர்களால்... அவர்களுக்கு... அவர்களே... உருவாக்கியதுதான் இவையெல்லாம். யாருக்குப் பலன் இருக்கிறதோ அவர்களால்தானே அந்தக் கருத்துக்கள் உருவாக்கப்படும்.

கடவுள், பாவம், புண்ணியம்ன்னு யோசிக்கும்போது எங்கோ எப்போதோ படித்த ஒரு சிரிப்புக் கவிதைதான் ஞாபகம் வருகிறது.

‘கடவுள் ஆக
நீ மற்றவர்களிடம் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும்.
அது தலைப்பாகையாக இருக்கலாம்.
அல்லது
வித்தியாசமான சின்னமாகவும் இருக்கலாம்.
அதிகமாக கேள்வி கேட்பவனை சீடனாக வைத்துக்கொள்ளக் கூடாது.‘

இதுபோலத் தொடரும் அந்தக் கவிதை... கவிதைக்கான வரிகள்தான் எனக்கு மறந்துவிட்டது.
இன்றைக்கும் நான் எப்போதாவது கட்டாயத்தின் பேரில் கோவிலுக்குப் போகும்போது...
-    நல்லா படிக்கணும்
-    நல்ல அறிவைக் கொடு
-    தப்பு பண்ணக் கூடாது
-    கோபம் வரக்கூடாது
-    பொறுமையா இருக்கணும்
இது எல்லாமே என்னோட தாத்தா திரும்பத் திரும்ப எனக்குச் சொல்லிக் கொடுத்தது.

இன்றைக்கும் நான் வேண்டினால் இந்தவரிகள்தான் முதலில் வரும். இதே வரிசையில்தான் வரும். அப்படித்தானே சொல்லிக் கொடுத்தார்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் சிறுவயதில் இருந்தே திணிக்கப்பட்ட ஒன்று. அதற்கான வழிகள் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் அனைத்தையும் ஒரு சிறு எண்ணிக்கையில் சொல்லிவிடலாம்.

டாக்டர், இன்ஜினியர், வக்கீல், அரசாங்க உத்யோகம் இதுபோல...
‘இப்படிச் சம்பாதிப்பவர்கள் சொகுசான வாழ்க்கை வாழ்கிறார்கள். மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைமுறை மிகச்சிறந்தது‘ என்ற எண்ணம் தோற்றுவிக்கப்படுகிறது.

அந்த எண்ணம்தான் அவர்களை ஒரு முன்மாதிரியாக ஏற்க வைக்கிறது. கடவுள், பாவ புண்ணியங்களைத் தாண்டி அங்கு பணம்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில் பணம்படைத்தவன் முன்மாதிரியாவது சாத்தியமானதே. அவனைப் புனிதனாகக் காட்டுவதன் வழியாகவும் அவன் மேலும் முன்நிலைப்படுத்தப்படுகிறான்.

புனித(?) பூமியான இந்தியாவில் கடவுளாக சித்தரிக்கப்படும் அனைவரும் ஒரு கதையின் கதாப்பாத்திரங்களாகத்தான் இருக்கிறார்கள். இப்போதும்கூட பணம்படைத்தவர்களின் வரலாறுகள் புத்தகமாவதை நாம் பார்க்கலாம். அங்கும் நமக்கு கதைதான் சொல்லப்படுகிறது. நீங்கள் சொல்வதைப்போல எழுதுகிறவர்கள் அல்லது எழுதுகிறவர்களை கவனிப்பவர்கள் அங்கு முன்னிலைப்படுத்தப் படுத்தப்படுவதும், மற்றவர்கள் அங்கு இல்லாமல் இருப்பதும் சாதாரணமான உண்மையாகி விடுகிறது. அவர்களின் பாவ, புண்ணிய வரையறை அவர்களின் சமூகத்திற்கானதாகத்தான் இருக்கும்.

என்றென்றும் தோழமையுடன்

செல்வா (துபாயிலிருந்து)

No comments:

Post a Comment