Monday, November 10, 2014

கலந்துரையாடல் – கடிதம் 3 - தோழர் மதியின் பாவ புண்ணியம் கடிதத்தைத் தொடர்ந்து … கருப்பு

அன்புத் தோழமைக்கு

வணக்கத்துடன் கருப்பு

இதுபோன்ற பகிர்தலைத்தான் ஒருவருடம் முன்பு முன்வைத்தேன். (அதாவது படித்தவற்றைப் பகிர்வது அல்லது ஒரு தலைப்பின் கீழ் எழுதி அதைப் பகிர்வது) அது சில நடைமுறைச் சிக்கல்களால் இரண்டு கூட்டங்களுடன் நின்று போனது. தற்போது அதைவிட கூர்மையான கேள்விகளுடன் உங்களது (தோழர் மதியின்) கடிதம் கிடைத்தது. இம் முயற்சி தொடரவேண்டும்.

கடிதத்திற்குள்

தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டித்தான் முதலாளிகள் தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர் என்பது நிதர்சன உண்மை. முதலாளிகள் தங்கள் தொழிற்சாலையை மூடிவிட்டால் பட்டினி கிடப்பது தொழிலாளிகள்தானே. அப்படிப்பார்த்தால் முதலாளிகள்தானே வேலை கொடுக்கும் தெய்வம். (இதே கேள்வியை முன்பு ஒரு முறை நான் கேட்டேன். நேரடியான பதில் கடைக்கவில்லை) இதுபோன்ற முதலாளித்துவ உலகில் முதலாளித்துவ பொருளியல் மனப்பான்மையில் எழும்பும் (அவர்களின்) தர்க்கவியலான கேள்விகளுக்கு சரியான பதிலை (அ) ஏற்றுக்கொள்ளும்படியான விளக்கத்தை நாம் முதலில் சிந்திக்க வேண்டும். பொதுவாக முதலாளிகள் சுரண்டுகிறார்கள் என்ற உணர்வே யாவர்க்கும் இல்லை. கடன் தொகைக்கு வட்டி வாங்கி பழக்கப்பட்டவர்களுக்கு, மூலதனம் போட்டவனுக்கு இலாபம், என்ற நடைமுறை சுரண்டலாகத் தெரிய வாய்ப்பில்லை.

பொதுவாக கடவுளை வணங்குபவர்கள் பாவ, புண்ணியங்களுக்கு அஞ்சுபவர்கள். பாவம் செய்யமாட்டார்கள். நிறைய தர்மம் செய்வார்கள். அதனால்தான் நிறைய முதலாளிகள் தங்களை ‘பக்திமான்ஆக காட்டிக் கொள்கிறார்கள். நம் முதலாளி நல்லவர். நம்மை ஏமாற்ற மாட்டார் என்ற எண்ணம் தொழிலாளிகளுக்கும், மற்றவர்களுக்கும் ஏற்பட வேண்டுமென்பதற்க்காக (ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்திக்கெல்லாம் எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா?)

நான் இப்பிறவியில் முதலாளியாகவும், நீ தொழிலாளியாகவும் இருப்பது முன் பிறவியில் செய்த பாவ, புண்ணியம் அடிப்படையில்தான் நீயும் இப்பிறவில் உன் முதலாளிக்கு விசுவாசத்துடன் உழைத்தால் அடுத்த பிறவியில் முதலாளியாகி என்னைப்போல் சொகுசு வாழ்க்கை வாழலாம். அதனால் தனக்குக் கீழே 100 வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் நிலை ஏற்பட அம்பானிகளையும், பில்கேட்சுகளையும் முன்மாதிரிகளாகக் கொள்கின்றனர்.
பாவம், புண்ணியம் பற்றிய மதிப்பீடு நொறுங்கி விழுந்து கொண்டிருக்கிறது என்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. கோயில்களும் சர்ச்களும மசூதிகளும் உள்ளவரை இம்மதிப்பீடுகளும் மாறாது (கடவுள் பெயரைச் சொல்லி கூத்தடிக்கிறானே, இவனை இந்தக் கடவுளே பார்த்துக் கொள்வார் என்று தேற்றிக் கொள்வார்களே தவிர கடவுளே இல்லையென்று எண்ண முன்வரமாட்டார்கள்.)

கடவுள் என்ற ஒன்று உள்ளவரை பாவ, புண்ணியம் தொடர்ந்த செயல்பாடுகள் இருக்கத்தான் செய்யும். பொதுவுடைமை தத்துவத்தை முன் வைப்பவர்கள், இவற்றைக் கடக்கத்தான் வேண்டும். எப்படிக் கடப்பது? அதற்கான மறுவரையறை என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. கணக்கற்ற கேள்விகள் எனக்கும் உண்டு. அவையெல்லாம் பொருளுடையதுதான? சரியா? என்ற குழப்பமும் உண்டு.

தங்கள் கடிதத்தில் இருந்து...

1.        பொருளாதார அதிகாரத்துடன் தொடர்புடையதாக முதலாளித்துவ சமூகம், பாவபுண்ணியத்தை வரையறை செய்துள்ளது.

2.        சுரண்டல் என்பது ஒரு வணிக உத்தி.

3.        இறந்தவர்களைப் பற்றி நல்லதையே பேசவேண்டும் என்ற வரையறையை ஏனோ ஸ்டாலினுக்கும், பெரியாருக்கும் பொருத்திப் பார்க்கக் கற்றுத்தரவில்லை.

என்றென்றும் அன்பு


கருப்பு

No comments:

Post a Comment