Tuesday, September 20, 2011

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) ஆர்ப்பாட்டம்

துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டத்தின்  கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

2011 செப்டம்பர் 16 ஆம் நாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐ எம்எல் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பரமக்குடி, இளையான்குடி மற்றும் மதுரையில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ எம்எல் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மதிவாணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிபிஐ எம்எல் கட்சியின் மாநிலச் செயலாளர் மாற்றம் தந்த மக்களுக்கு மரணம் அளித்த ஜெயலலிதாவின் அரசே திட்டமிட்ட முறையில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியது என்று கூறினார். தாக்குதலுக்குப் பின்பு சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் தலித்துகளின் மீது பழிபோடும் வகையில் அவதூறாகப் பேசியதைச் சட்ட மன்றக் கூட்டக்குறிப்பிலிருந்து நீக்குவதன் மூலம் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தலித்துகள் தங்களின் ஒன்று சேர்வதற்கும் உரிமை கோருவதற்கும், அவர்கள் விரும்பும் தலைவர்கள் பின்னால் அணி திரள்வதற்கும் உரிமை இருக்கிறது. எந்தவித தூண்டலும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. தலித்துகள் அணி திரள்வதைப் பொறுக்க முடியாத அரசின் செயல் ஜனநாயக விரோதமானது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி அமைப்பாளர் சிம்சன், பாமக விவசாயப் பிரிவின் மாநில துணைச் செயலாளர் காதை முருகன் ஆகியோரும் உரையாற்றினர்.


ஆர்ப்பாட்த்தில் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
·         பரமக்குடியிலும் மற்ற பல இடங்களிலும் சாதிய காழ்ப்புணர்ச்சியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தி 7 பேர்களைக் கொன்ற காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்களைப் வன்கொடுமை சட்டத்தின் படி பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிலிருக்கும் நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
·         தலித்துகளை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள், பொது மக்களுக்கு ஆபத்தானவர்கள் என்று அவதூறாகவும் காவல்துறை அத்துமீறல்களை ஆதரித்தும் பேசியுள்ள முதலமைச்சரின் கருத்தை சட்டமன்றத்திலேயேத் திரும்பப் பெற வேண்டும்.
·         பள்ளி மாணவன் பழனிக் குமாரைக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்! தலித்துகளின் பாதையை மறிப்பது (மண்டல மாணிக்கம்) போன்ற வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் வன்கொடுமை சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும்.
·         கைது செய்யப்பட்டுள்ள  தலித் இளைஞர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்! அச்சுறுத்தி அராஜகம் செய்யும் காவல்துறையை தலித் பகுதிகளில் இருந்து திரும்பப்பெற வேண்டும்.
·         கொல்லப் பட்டவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடாக குறைந்த பட்சம் 10 லட்சமும் காயமுற்றவர்களுக்கு குறைந்த பட்சம் 5 லட்சம் வழங்கிடு! அத்துடன் கொல்லப்பட்டவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும்.
(செய்தி  அனுப்பியவர் சி.மதிவாணன் - மாவட்ட செயலாளர்)

No comments:

Post a Comment