Tuesday, September 20, 2011

வெள்ளித்திரை விழுங்கிய பண்பாட்டு விழுமியங்கள் - மு.பழனிக்குமார்


              இன்றைய தமிழ்ச்சூழலில் பண்பாடு என்கிற சொல்லை காலாவதியாகிவிட்டதோ என்றென்னும் காலநிலையில், இருப்பதாய் நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற எச்ச சொச்சங்களையும் ஆழிப்பேரலையாய் வந்து நித்தம் கபளீகரம் செய்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறது வெள்ளித்திரை.
ஆரம்ப காலங்களில் புராணங்களையும், கடவுளர் கதைகளையும், மன்னர்களையும் சாகசக்காரர்களையும் மட்டுமே கொடுத்து வந்த திரைத்துறை கொஞ்சம் மாறி அல்லல்படும் குடும்பக்கதை, அண்ணன் தங்கை, அண்ணன் தம்பி, தாய் மகன் எனப் பாசக்கதைகளாய் பரிணாமம் பெற்றது. பின்னர் கல்லூரி என்ற பெயரில் பெண்களைக் கேலி செய்வது மட்டுமே கல்லூரிப் படிப்பெனவும், கல்லூரியில் படிக்கும் அனைத்துப் பெண்களும் டைட்டான உடையணிந்து தலைக்கணம் பிடித்தவர்களாக மட்டுமே காட்ட முடிவெடுத்தது. இந்தமுறை சமீபகாலம் வரை நீட்டித்துத் தொடர்கிறது.
அதற்கடுத்து பழிவாங்கல் கதைகள். ஒரு வில்லன், அவனுக்கு ஒருகூட்டம் சில வில்லன்களின் கூட்டணி, ஒரு கூட்டம், கதாநாயகனின் பெற்றோரைக் கொலை செய்தல், சகோதரியைப் பலாத்காரம் செய்தல் என முரட்டு மீசை, தடித்த கேரா, பரட்டைத் தலை, ஆஜானபாகு உடலோடு கூடிய வில்லன்கள், பலிவாங்கும் கதாநாயகன் என காலம் உருண்டோடியது.
இதற்கிடையே இயக்குநர் சிகரங்கள் தோன்றி முக்கோணக் காதல் கதைகளில் காதல் ரசம் எடுத்து பண்பாட்டுச் சூழலில் விஷம் கலக்கினர். முறையற்ற உறவுகள் முறைப்படுத்தப்பட்டது. தவறு செய்பவரின் குற்றஉணர்வுகள் குறைக்கப்பட்டு நல்ல குடிமகனாக சித்தரிக்கப்பட்டனர். அப்படங்கள் அனைத்திலும் ஆண் பரிசுத்தமானவனாகவும் சூழ்நிலையால் ஒரு சிறு தவறு செய்தவனாகவும் காட்டிய அதே வேளையில் பெண்ணை வேசியாகவும், கீழ்த்தரமாகவும் காட்டின.
அதற்கு அடுத்த நிலையில் கொள்ளைக்கூட்ட ‘பாஸ்’ கதைகள் ஆரம்பமாகின்றன. வில்லன் கொள்ளைக்கூட்டத் தலைவனாக இருந்த காலம் போய் கதாநாயகனே இன்னுமொரு கொள்ளைக் கூட்டத் தலைவனாகி ஸ்டைல், சாகசங்கள் புரிந்து கைதட்டல் வாங்கிக் கலக்கினார்கள். இங்கே கொள்ளையடிப்பது, திருடுவது நன்மைக்கென்றால் அது தவறல்ல என்ற கருத்து நிலை உருவாக்கப்பட்டு தற்போதைய படங்கள் வரை தொடர்கிறது. இந்த வரிசையில் பில்லா, ரங்கா, தாய்வீடு அதற்கு முந்தைய கங்கா எல்லாம் சக்கை போடு போட்ட படங்கள். இது மட்டுமில்லாமல் இப்படங்கள் அனைத்திலும் ஒரு காபரே அல்லது கிளப் டான்ஸ் எனப்படும் கவர்ச்சி நடனம் இருக்கவேண்டுமென்பது கட்டாய சட்டமாக்கப்பட்டு, அப்பாடல்களுக்கான பிரத்யோக வடிவமைப்புகள், செட்டுகள் என படத்தின் பாதி பட்ஜெட் ஒதுக்கப்பட்டது.
கவர்ச்சி நடிகைகளின் அணிவகுப்புகள் ஆரம்பமாகின. சில திரையரங்குகளில் அப்பாடல்கள் படம் முடிந்ததும் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டன. ‘கனவுக் கன்னி’ என்ற புதிய வார்த்தை இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்ட காலகட்டம் அது.
அடுத்ததாக பூ ஒன்று புயலானது என்ற தெலுங்கு டப்பிங் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மக்கள் போர்க்குழு செல்வாக்குப் பெற்றிருந்த பகுதியான ஆந்திராவில் இருந்து அதிரடி அரசியல் படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு வந்து சேர்ந்தன. போலி அரசியல்வாதிகளையும் கொடூரம் புரியும் அரசியல் வாதிகளையும் பழிவாங்கும் கதைகளாக அவை அமைந்தன. மக்களுக்குள் இருந்த அனைத்துக் கோபமும் வழிந்தோடும் வடிகாலாய் அமைந்தன அப்படங்கள். அப்போது நான் +2 படித்துக் கொண்டிருந்தேன். அரசியல்வாதிகள் மேல் எனக்குள் வெறுப்பு தோன்ற ஆரம்பித்த பருவம். உண்மையைச் சொன்னால் எனக்குள்ளேயும் போலி அரசியல்வாதிகளைப் பழிவாங்க வேண்டும் என்ற அந்த வெறி இருந்தது. இப்படியான அரசியல் படங்கள் வந்தபின்தான் திரையில் ‘வன்முறைக் கோட்பாடு’ மிக வேகமாய் பரவத் தொடங்கியது. அரசியல் வாதிகளை மிகவும் கொடூரமான மனிதர்களாகக் காட்டுவதற்கு எனக் காரணம் சொல்லி சினிமா மிகமோசமான காட்சிப் பதிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. அருவருக்த்தக்க வன்முறைக் காட்சிகளும், வசனங்களும் முகம் சுளிக்க வைத்தன. மட்டுமல்லாமல் மக்களை மனோவியாதிக்காரர்களாக மாற்ற முயற்சி செய்தன.
அவற்றைத் தொடர்ந்து அதேபோல் நிறையப் படங்கள் தமிழில் எடுக்கப்பட்டு வீர்யம் குறைந்தபோது அக்கால கட்டத்தில் வெளியான கோமல் சாமிநாதனின் நாடகமான ‘தண்ணீர் தண்ணீர்’ பேச வேண்டிய படமாக, பேசப்படும் படமாக திரைக்கு வந்தது. அதன் பாதில் உருவான ‘ஒரு இந்தியக் கனவு’ ... ... போன்ற கதையைக் கதாநாயகனாகக் கொண்ட படங்கள் வரத் தொடங்கி விரைவில் ஒரு முடிவுக்கு வந்தன.
தொடர்ந்து கேமராமேன்களின் காலம் தொடங்கி அண்டா குண்டாவிற்கெல்லாம் செமி போகஸ் லைட் போட்டு ‘கேமரா சூப்பர்’ என்ற சொல்லாடலைக் கொண்டு வந்தது. (பாலுமகேந்திரா, ஸ்ரீராம்... ...) பிறகு மெல்லப் பேசும் பண்பாட்டை மணிரத்னம் இறக்குமதி செய்தார். அழகானவர்கள், உயர்தட்டு வகுப்பினரின் மொழி என்பதை உறுதிப்படுத்தி மெல்லப் பேசவைத்து எத்தனை முறை உற்றுக்கேட்டாலும் கேளாத மொழியைப் படைத்தளித்தார்.
தற்போது மையம் கொண்டிருக்கும் புயல்காதல்இந்தச் சொல்லை படுத்தும் பாடும், அலைக்கழிக்கும் விதமும் சொல்லி மாளாது. உயிரைக் கொடுப்பது, உயிரை எடுப்பது, உயிரை விடுவது என சமூகப் பிரச்சனைகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி முன்னே துருத்திக் கொண்டிருக்கிறது இது.
எதற்காகவும் காதலை விட்டுக் கொடுக்காதே
எல்லாவற்றையும் காதலுக்காக விட்டுக்கொடு
என்று உலகத்தில் வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதுபோல ஒரு தனிமனிதனின் காதல் மிகவும் முக்கியமானதாகவும் பெரிதாக்கப்பட்டு ஒரு திரைப்படம் முழுவதும் அதுபற்றி மட்டுமே பேசுவது, நம்மைத் தியேட்டருக்குப் போக அச்சுற வைக்கிறது. அதுவும் சமீபத்திய விஜய் படங்கள், ஓவர் பில்டப்புகள், ஹாரிபார்ட்டரின் மாயஜாலக் கதைகளையெல்லாம் மிஞ்சி, காட்டூன் கதைகளைப்போலஇல்லை இல்லை இவற்றை அவற்றோடு ஒப்பிடக் கூடாது. அவை பார்க்கும்படி இருக்கும்.
சமீபத்திய படங்களும் நெஞ்சைத் தொட்டனவா? என்ற கேள்விக்கு நாம் சில காட்சிகளை மட்டுமே சொல்ல முடியும். மொத்தப் படத்தையும் சொல்ல முடியாது. பொதுவில் குழந்தைகளோடு அமர்ந்து ஒரு படம் பார்க்க முடியுமா?
1.        இன்று காதல் ரசம் சொட்டாத படங்கள் இல்லை. (குழந்தைகளுக்கான படம், ஒரு குழந்தையின் படம் என்று சொல்லிக் கொள்ளும்தெய்வத் திருமகள்படத்திலும் ஒரு அருமையான (கொடுமையான) பாடல் காட்சி தொட்டவுடன் ஷாக் அடிக்கிறது) குழந்தைகளுட்ன் பார்க்கும் நமக்கும் ஷாக் அடிக்கிறது. மனம் படபடக்கிறது.

2.        முத்தக் காட்சிகள் இல்லாத படங்கள் இல்லை. ஆங்கிலப் படங்களை முன்பு இதற்காகவே பார்க்கப் போன கூட்டம் ஒன்று இருந்தது. இப்போது அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள்.

3.        வன்முறைக் காட்சிகள் இல்லாத படங்கள் இல்லை. இரத்தம் சொட்டும் அரிவாள்கள். குண்டு பட்டுத் தெறித்து துளைத்துச் செல்லும் காட்சி.

4.        கொச்சையான வார்த்தைகள் ஏதேனும் பேசவேண்டும் என்பது அனைத்துப் படங்களுலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

5.        வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிறஆடை மூர்த்தி இப்போ, சந்தானம். இந்தப் பட்டியலைப் பார்த்தாலே புரியும். இவர்களது பாணி என்னவென்று. இரட்டை அர்த்த வசனங்களைப் பேசிக் கொல்லுவார்கள்.

6.        ரவுடிகள், பொறுக்கிகள், போக்கிரிகள் இவர்களை நல்லவர்களாய்க் காட்டும் படங்கள்.
அதில் அழகிய, வசதியான, படித்த கதாநாயகிகள் அவர்களை விரட்டி விரட்டி காதலிப்பதாகக் காட்டப்படுகின்றனர். நிஜவாழ்க்கையில் இதேபோல மேற்கூறியவர்களைப் போன்றவர்களை நம்பி அவனுக்குள் இருக்கும் நல்லவனைக் கண்டு கொண்டதாய்க் கூறி ஏமாந்து வாழ்க்கையைப் பறி கொடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கையை இவர்கள் பெருக்கிக் கொண்டே போகிறார்கள்.
ஒரு தகப்பன் என்ற முறையிலும் ஒரு ஆசிரியர் என்ற முறையிலும் இவைகள் மிக்க கலையளிப்பதாய் உள்ளன. கல்லுக்குள் ஈரம் தேடுகிறார்களாம். இங்கே நெல்லுக்குள்ளேயே அரிசி இல்லையே. அனைத்தும் பொக்காய்க் கிடக்கிறது. இவற்றிற்கிடையில் வித்தியாசமான கிளைமாக்ஸ் என்பதற்காக மெனக்கெட்டு எதை எதையோ செய்வது இன்னும் ஆத்திரத்தைக் கூட்டுகிறது.
கண்டந்துண்டமாய் வெட்டுவது, காணாப் பொணமாய் வீசுவது, மனம் பதற வைப்பது போன்றவை தவிர்த்து ஒரு மகிழ்வான அல்லது ஒது நெகிழ்வன, கொஞ்சம் கனமான, முண்டும் அசைபோடு வண்ணம் இதை இப்படிச் சொல்லியிருந்தால் என்று சிந்திக்க வைக்கிற எந்தக் கதையும் இல்லை.
கேள்விகள்
1.    வன்முறைக் காட்சிகளை தினந்தோறும் பார்க்கும் குழந்தைகளின் / இளைஞர்களின் மனநிலை எப்படி இருக்கும்.

2.   ரவுடியாய் இருப்பது, நாகரீகமில்லாமல் இருப்பது, அழுக்காய் இருப்பது, அசிங்கமாய் இருப்பது, அதையும் கதாநாயகிகள் ரசிப்பதெனக் காட்டும் காட்சிகளைப் பார்ப்பவர்களின் மனநிலை என்னவாகும்.

3.   விளிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசும் படங்கள் என்று சொல்லிக் கொண்டு கொச்சையான வசனங்கள், செயல்கள், மோசமான சூழல் இவற்றைக் காட்டி அம்மக்களின் மீது அருவருப்பைத் தூண்டுகின்ற காட்சிகளைப் பார்ப்பவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்.

4.   கட்டிப் பிடித்து, முத்தமிட்டு ரொமான்ஸ் காட்சிகள் வரும் படங்களையும் பாடல்களையும் பார்ப்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும்.

5.   பேருந்துகளில் அனைத்து மக்களுக்கும் பொதுவாகப் போடும் குத்துப்பாடல்களையும், கிரங்கும் பாடல்களையும் என்னவென்று சொல்வது.

6.   எந்தக் கொள்கையும் வேண்டாம், கோட்பாடும் வேண்டாம், நல்லவனாய் இருக்க வேண்டாம், தனிமனித முன்னேற்றம் மட்டுமே முக்கியம் எனப் போய்க்கொண்டிருக்கும் தமிழகச் சூழலை இன்னும் அதிகமாய் பண்பாட்டு விழுமியங்களை உள்ளிழுத்து விழுங்கிக் கொண்டிருக்கிறதுவெள்ளித்திரைஇல்லையில்லைகொள்ளித்திரை
(2011 செப்டம்பர் 04ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை)

1 comment:

  1. விளிம்பு நிலை மக்களைப் பற்றி =

    இச்சொற்றொடர் என்னை உறுத்தவோ வறுத்தவோ செய்கிறது பழனி.

    =சங்கர் ஆறுமுகம்

    ReplyDelete