Tuesday, October 27, 2015

எட்டுக்காலியும் இருகாலியும் – பாண்டூ

எட்டுக்காலியும் இருகாலியும்
ஒருவகையில் ஒன்றுதான்!

இருவரின் இருத்தல்
ஏதோ ஒரு மூலை விளிம்பில்
தொங்கியபடி!

எட்டுக்காலியின் இருத்தல்
எச்சிலால்!
இருகாலியின் இருத்தல்
வியர்வையால்!

அதன் இருப்பை
வலை என்றும்
இதன் இருப்பை
நிலை என்றும்
விளிக்கின்றனர்
ஒதுக்கியவர்கள்!
ஒடுக்கியவர்கள்!

புனிதமென்றும்
தூய்மையென்றும்
இவற்றினைத் துடைத்தெறிவதாய்
நீள்கிறது துடைப்பைகள்!

நோய் பரப்பும் பூச்சிகள்
சுதந்திரமாய்ச் சுற்றித் திரிய
இவைகளின் சுதந்திரத்துள்
மூக்கை நுழைத்து
அத்துமீறுகின்றன
தடிகள்!

தன்னினும் பெரி…ய
பூச்சியொன்றை
உணவாக்கிக் கொண்டிருக்கும்
எட்டுக்காலியைப் பார்க்கும்
ஏதோவொரு தருணத்தில்…

தன்னையுணர்ந்து
மீண்டெழலாம்
இருகாலியும்

கோடிக்காலியாய்! ! !

No comments:

Post a Comment