Thursday, September 17, 2015

பண்பாடும் மார்க்ஸியமும் - விஜி

அன்புத் தோழர்களுக்கு…
‘பண்பாடு’ ‘மார்க்ஸியம்’ போன்ற சொற்களின் வரையறைகளுக்குள் சென்று மீள்வது சாத்தியமா எனத் தெரியவில்லை. எனினும் மார்க்ஸியத்தை ஒரு சிந்தனா முறையாகக் கொண்டு அதன் அடிப்படையில் பண்பாட்டினையும் அதன் கூறுகளையும் சற்றே ஆராய்ந்து அறிந்து கொள்வது சாத்தியமே.
பண்பாடு என்பது மனிதர்களின் வாழ்வியல் செயல்பாடுகளோடும், எண்ணங்களோடும் தொடர்புடையது. சமூக மற்றும் தனிமனித நடத்தையை பண்பாட்டுக் கூறுகளான மதிப்பீடுகளும் நெறிகளுமே வழிநடத்துகின்றன. தீர்மானிக்கின்றன. மனிதனின் செயல்பாடுகளில் மனதின் ஒத்திசைவை ஏற்படுத்துவது பண்பாட்டின் பிரதான பணியாகும்.
‘சமூக உற்பத்திமுறைதான் எல்லாவகையான சமக உணர்வு நிலைகளையும் தீர்மானிக்கிறது’, ‘மேல்கட்டமைப்பின் சுதந்திரம் சார்பு நிலையானது’ என்ற வரிகள் மார்க்ஸியத்தின் அடிப்படையை எளிமையாய் உணர்த்துகின்றன.
பண்பாடு என்பது மேல்கட்டமைப்பு. இன்றைய சூழலில் உற்பத்தி முறை அல்லது பொருளாதார அமைப்பு என்பது முதலாளித்துவமே. எனவே முதலாளித்துவம் பண்பாட்டுக் கூறுகளை தனக்கேற்ப மாற்றியமைக்கவே விரும்பும். முதலாளித்துவம் தனது அடிப்படையான (தொழிலாளர்களின்) உழைப்பு – சுரண்டல் (முதலாளிகளின்) என்பதை கேள்விக்குட்படுத்தான பண்பாட்டினை தகவமைத்து வளர்க்கவே செய்யும்.
பண்பாடு வாழ்க்கை முறை சார்ந்து அமைவது. இன்றைய சூழலில் மனிதர்களின் வாழ்க்கைமுறை வர்க்க, பால், இன, மத, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாய் பலவித கலவையாய் பிரிந்து அமைந்துள்ளன. ஒற்றை வாழ்க்கைமுறை நிலவவில்லை. பிரிந்து கிடக்கும் மனிதர்களின் வாழ்வைப் போலவே பலவிதப் பண்பாடுக் கூறுகளும் சமூகத்தில் நிலவி வருகின்றன. அவற்றில் தனக்கானவற்றை முதலாளித்துவம் வளர்த்தெடுத்து, தனக்கு எதிரானவற்றை அழித்தொழிக்க தொடர்ந்து முயன்று வருகின்றது.
நேர்மை, நியாயம் போன்ற மதிப்பீடுகளை காலாவதியாக்கி முன்னேற்றம் என்ற பேரில் ஏமாற்றுவதை வாழ்வின் யதார்த்தமாக்கி வருகிறது. ஏமாற்றி வெற்றியை (பணம் சேர்ப்பது, அதிகாரத்தை அடைவது) அடைவது ராஜ தந்திரம் (முதலாளித்துவ சொற்களில் வியாபார தந்திரம்) என போற்றிப் புகழப்படுகிறது.
அம்பானியின் ஏமாற்றுத்தனம், டாடாவின் ஏமாற்றுத்தனம், பெப்ஸி, கொக்கோ-கோலாவின் ஏமாற்றுத்தனம், நோக்கியா, சத்யம், இன்போசிஸ்… என நீண்டு கொண்டே செல்லும் ஏமாற்றுத் தனங்களின் பட்டியல் வெற்றிகள் வரலாறாய், சாதனைகளின் சிகரமாய், சமூகத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது. இந்தப் பாதையில் பெருங்கனவுகளோடு முன்னேறுபவர்களுக்கு இது குற்றமென தோன்றாத நிலையை முதலாளித்துவம் ஏற்படுத்தியுள்ளது. (இப்படியெல்லாம் பேசினால் சண்டைக்கு வருகிறார்கள்) இந்த ஏமாற்றுத்தனங்களை பல்வேறுவித பூச்சுகள் மூலம் மறைத்துக் கொண்டுள்ளது. மேலும் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது.
மக்களின் உணவுப் பழக்கத்தை வீட்டிலிருந்து வெளியேற்றி ஹோட்டல்களிலும், பாஸ்ட் புட் சென்டர்களிலும் தஞ்சமடைய வைத்து தன் வலாபத்தை பெருக்குகிறது. ஆரோக்கியமான உணவு பழக்கத்தை தகர்த்து உடனடி, பாக்கெட் உணவுகளை பரவலாக்கி தன் வணிகத்தை எதிர்ப்பின்றி சந்தைப்படுத்தியுள்ளது. (இளநீரைக்கூட பாக்கெட்டில் அடைத்து விற்கத் தொடங்கியது என்பது சமீபத்திய உதாரணம்.)
மக்களின் அழகியல் உணர்வைத் தூண்டி, பயன்படுத்தி, பாரம்பரிய மஞ்சள் மற்றும் அரைத்த மாவுகளை ஓரங்கட்டி பேசியல் கிரீம், பவுடர், போப் என வகைவகையான வேதிப்பொருட்களை நிலைநிறுத்தி தன் லாபத்தை பெருக்குகிறது முதலாளித்துவம். பேசியல், பிளீச்சிங் என பியூட்டி பார்லர் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி தன் வணிகம் குன்றாமல் பார்த்துக் கொள்கிறது முதலாளித்துவம்.
உணவே மருந்தாய் கொண்ட மக்களின் ஆரோக்கியத்தை கெடுத்து மருந்தையே உணவாய் கொள்ளும் நிலைக்கு ஆளாக்கி அதிலும் தன் வணிகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உணவுப் பழக்கத்தை மாற்றி, சுற்றுச் சூழலை சீரழித்து பலவித நோய்களை ஏற்பட காரணமாய் அமைந்ததோடு அதன் விளைவாக மருத்துவத்திலும் தன் லாபத்தை பெருக்கி கொழுத்துள்ளது முதலாளித்துவம். உடல் ஆரோக்கியத்துக்கு நவீன மருத்துவம் ஒரு வரப்பிரசாதம் என்று நம்பவம் வைத்துள்ளதே முதலாளித்துவம் பண்பாட்டுத் தளத்தில் பெற்ற வெற்றி.
மக்களின் உறவுநிலைகளைக்கூட உணர்வு நிலையிலிருந்து விலக்கி பணத்தின் அடிப்படையில் தீர்மானிக்க பழக்கப்படுத்துகிறது முதலாளித்துவம். தான் கட்டமைக்கும் வாழ்க்கைமுறை மூலம், சக மனிதன் மீதான உறவு மட்டுமல்லாமல், குடும்பத்திற்குள்ளும்கூட பணமே உறவை, அன்பை அளக்கும் அளவுகோலாக மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவின் அடையாளங்களே பெருகிவரும் முதியோர் இல்லங்கள், சொத்துச் சண்டைகள், சமூக விரோதச் செயல்பாடுகள்.
மக்களின் கல்வி உரிமையைக்கூட கட்டணத்திற்கேற்ப வழங்குகிறது முதலாளித்துவம். கட்டணம் அதிகம் செலுத்துவோருக்கு கன்வெண்ட் பள்ளிப் படிப்பு முதல், கட்டணம் செலுத்த இயலாதோர்க்கு அரசுப்பள்ளிப் படிப்பு ஈறாக  பல்வகையாகத் தரம் பிரித்து (பணத்தின் அடிப்படையில்) வழங்குகிறது முதலாளித்துவம். தன் செயல்பாட்டிற்கேற்பவே பாடத்திட்டமும், ஆங்கிலக் கல்வியும் மற்றனைத்தும். ஏட்டுப் படிப்பும் (முதலாளித்துவத்தின்) வாழ்க்கைக்கு உதவுகிறது.
மக்களின் வழிபாட்டு முறைகளையும்கூட முதலாளித்துவம் தனக்கேற்றவாறு மாற்றி அமைத்துள்ளது. நாட்டார் தெய்வங்களை புறக்கணித்து பெருந்தெய்வ வழிபாட்டினை முன்னிறுத்துகிறது. கோயில்களை சுற்றுலாத் தளங்களாக, வணிகவளாகங்களாக மாற்றி வருகின்றது. கடவுளைக்கூட டிக்கெட் போட்டு திரைப்படம்போலக் காட்டி வருகிறது. கடவுளை தனது ஏஜண்டாக்கி கடவுளின் பெயரைப் பயன்படுத்தி (Brand Name) கல்லா கட்டத் துவங்கியுள்ளது. அக்ஷ்ய திருதியை, பிரதோஷம், யாத்திரை, காணிக்கை, மாலையிடல்… என வகைவகையாக தன் வணிகத்தைப் பெருக்குகிறது. உள்ளூர் சாமிகளைவிட வெளியிட சாமிகளை விளம்பரப்படுத்துகிறது. அற்புதங்களை பரப்பிவிட்டு அதிலும் காசு பார்க்கிறது. பச்சை சேலை, அம்மன் தாலி அறுந்தது என புரளிகள் கிளப்பியும்கூட பணத்தைப் புரள வைத்துக் கொள்கிறது.
யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதனை காசு வாங்கிக்கொண்டு கொடுக்கும் முதலாளித்துவம் மனிதனின் சகல வாழ்க்கைக் கூறுகளிலும் நுகர்வியத்தைத் திணித்து தன் லாபத்தை தொடர்ந்து பெருக்கிக் கொண்டே வளர்கிறது. தன் இருப்பில், இயக்கத்தில் பணத்தை மட்டுமே பிரதானமாய்க் கொண்ட முதலாளித்துவம் விஸ்வரூபம் எடுத்து ஏகாதிபத்தியமாய்த் திரண்டு உலகத்தைத் தன் காலடியில் வைத்துக் கொள்ள விழைகிறது.
இதனை மக்கள் தாமே விரும்பி அங்கீகரித்திட அனைத்து பண்பாட்டுக் கூறுகளையும் தன் வளர்ச்சிக்காக மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. அதில் பெரிதும் வெற்றியடைந்தும் உள்ளது. அதனைத் தகர்த்து முதலாளித்துவத்தின் கோர முகத்தை, அதன் அடிப்படையான உழைப்பு-சுரண்டல் தன்மையை, அம்பலப்படுத்துதலின் முதல்படியாய பண்பாட்டுக் கூறுகளை மார்க்ஸிய சிந்தனையில் நாம் உணர்ந்து கொள்வது பிறருக்கு உணர்த்துவதும் இன்றைய தேவையாக உள்ளது.
தொடர்ந்து விவாதிப்போம்… …
தோழமையுடன்
        விஜி

No comments:

Post a Comment