Monday, January 9, 2012

தொடரும் உரையாடல்களின் வழி உதிரும் சொற்பிம்பங்களின் நிஜங்கள் - மதிகண்ணன்

முக்கித் தக்கிச் சொன்ன முதல் வார்த்தையான அம்மாதொடங்கி, திக்கித் திணறிச் சொல்லும் கடைசி வார்த்தையான அம்மாவரையிலும் இடைநிலையில் நாம் பயன்படுத்திய வார்த்தைகள் அனைத்தையும் பொருள் புரிந்துதான் பயன்படுத்தியிருக்கிறோமா? இந்தக் கேள்விக்கு ஆம்என பதில் சொல்வதில் யாருக்குமே சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. சொற்கள் பொருள் பொதிந்தவை. நாம் அவற்றை ஏதோ ஒரு பொருளில் பயன்படுத்துகிறோம். நாம் நினைக்கின்ற ஒன்றை வெளிப்படுத்துவதற்காக ஏதோ ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். அது சில நேரங்களில் நாம் நினைத்த பொருளை வெளிப்படுத்தாமல் போகலாம். நினைத்ததற்கு எதிரான பொருளையும்கூட வெளிப்படுத்தலாம். அது பொருள் பொதிந்த சொல்லின் பிழையல்ல. சொல்லுக்குள் எப்படி தனியாக பொருள் பொதியும் என சிலர் வரிந்து கட்டிக் கொண்ட பேனாவைத் திறப்பது (கீபோர்டில் கைவைப்பது) தெரிகிறது. பொருள் பொதிந்த சொல் என்ற பதப்பயன்பாடு நாம் முன்னரே நிறைய பொருள்களை பொதிய வைத்த சொல்என்ற புரிதலில்தான். மொத்தத்தில் சொற்கள் அனைத்துமே வெறும் பிம்பங்கள்தான். பயன்பாடு தொடர்பானதே அவற்றின் அர்த்தச் செரிவு. தொடரும் உரையாடல்களின் வழி உதிரும் சொற்பிம்பங்களின் நிஜங்கள் நமக்குத் தெரிந்தால் நாம் சொல்லுகின்ற எந்த விஷயத்திலும் நாம் எதிர்பார்க்காத கோணத்தில் இருந்து பிரச்சனைகள் கிளம்ப வாய்ப்பில்லை. பிம்பங்களில் மயங்கிக் கெட்டவர்கள் நாம். அது வார்த்தை என்றாலும் சரி, வாழ்க்கை என்றாலும் சரி. இருந்தாலும் முயற்சி செய்வோம். நாம் தொடரும் உரையாடல்களின் வழி உதிரும் சொற்பிம்பங்களின் நிஜங்களைத் தெரிந்து கொள்ள.
கடந்த ஆண்டு (2010) செப்டம்பர் 14 ஆம் நாள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கருப்பு எம்ஜிஆர்விஜயகாந்த் நம்ம நாட்டுல எமர்ஜென்சி கொண்டுவந்தாத்தான் எல்லாம் சரியாகும்என்று தன்னுடைய அற்புதமான கருத்துச் செறிவான வார்த்தைகளை உதிர்த்தார். எமர்ஜென்சிக்குக் பின்னதான 1977 பாராளுமன்றத் தேர்தலில் எமர்ஜென்சியைக் கொண்டுவந்த இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைத்து, நேருவின் வாரிசுகான இந்திரா காந்தியும், சஞ்சய் காந்தியும் அவரவர் தொகுதியில் தோற்றபோதும் தென்மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பாராளுமன்ற இடங்களை பெற்றுத் தந்த ஒரிஜினல் சிவப்பு எம்ஜிஆரின் உடன் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் இப்போது விஜய்காந்தின் அரசியல் ஆலோசகராக அவருடனே இருக்கிறார். அவரிடமாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். அது என்ன நெருக்கடிநிலை? எத்தகைய சூழ்நிலையில் ஒரு நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வரப்படும்? இந்தியாவில் எதற்காக எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது?’ அதையெல்லாம் விட்டுவிட்டு நெருக்கடிநிலை தேவைஎன அவசரமாய்ச் சொல்ல வேண்டிய நெருக்கடியானநிலை அவருக்கு ஏன்தான் வந்ததோ?
தேநீர்க்கடைகளில் பலநேரங்களில் தொடரும் உரையாடல்களின் ஊடே வடை விலை ஒரு ரூபாய் கூடியதற்காக வெள்ளைக்காரன் மறுபடி வந்தால்தான் எல்லாம் சரியாய் வரும்என்ற அடிவருடி வார்த்தைகளையும், தேநீர் விலை ஐம்பது காசு கூடியதற்காக ராணுவ ஆட்சி வந்தால்தான் எல்லாம் சரிப்பட்டு வரும்என்ற அதிரடி வார்த்தைகளையும் ‘தேசிய பானம்‘ தேநீரை சாலையோரக் கடைகளில் குடிக்கும் யாரும் பலமுறை கேட்டிருக்கலாம்.
எப்படிப்பட்ட அடக்கு முறை வந்தாலும் எனக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது. நான் அடக்குமுறை அதிகாரத்திற்கு விசுவாசமான அடிமையாக இருப்பேன்என்கிற மனோபாவம்தான் இப்படியான தேநீர்க்கடைத் தொண்டர்களின் வார்த்தைகளுக்கும், தேமுதிகவிற்கு மட்டுமல்லாது (நாம் கொண்ட கோபத்தின் பலனால்) இன்று சட்ட மன்ற எதிர்க்கட்சிக்கும் தலைவராகவும் இருக்கக்கூடிய விஜய்காந்தின் வார்த்தைகளுக்கும் காரணம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?’
பொதுவாக உலகின் எல்லா நாடுகளிலும் நெருக்கடிநிலையை நடைமுறைப்படுத்துவதற்கென்றே அந்தந்த நாடுகளில் அரசியலமைப்பில் சட்டரீதியான சில ஒழுங்குகள் உள்ளன. அந்நிய ஆக்கிரமிப்பினால் ஏற்படுகின்ற போர்ச்சூழல் மற்றும் நடைமுறை; சுனாமி, புயல், உள்நாட்டுப் போர் போன்ற பேரிடர்களால் அதீத அழிவுகளை நாடு சந்திக்கின்ற சூழல்... போன்ற தேசிய ஆபத்துள்ள சூழல்களில் உள்நாட்டுக் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக, நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படுவதே நெருக்கடிநிலைஅல்லது அவசரநிலை’. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்காகவென்றே விதி உள்ளது. மேதகு குடியரசுத்தலைவர் இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி எண் 352ன்படி நெருக்கடிநிலையை அறிவிப்பார்.
அப்படிப்பட்ட சூழல் நிலவிய இந்திய சீனப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 1962ஆம் ஆண்டிலும், இந்திய பாகிஸ்தான் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த 1971ஆம் ஆண்டிலும் போர்முடிகின்ற காலம் வரையிலும் முழு இந்தியாவிற்குமாக நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது. இந்த இரண்டு காலங்களிலும் அறிவிக்கப்பட்டிருந்த, நடைமுறைப்படுத்தப்பட்ட நெருக்கடிநிலைபற்றிப் பொதுவாக எந்தச் சர்ச்சையும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எழுந்ததில்லை. இந்தியாவில் நெருக்கடிநிலை காலம் என்றால் அது 1975ல் இந்திராகாந்தி நடைமுறைப்படுத்திய நெருக்கடிகாலம்தான். இந்த நெருக்கடிநிலை அறிவிப்பைச் செய்தவர் ஐந்தாவது குடியரசுத் தலைவராக அன்றிருந்த பக்ருதீன் அலி அகமது அவர்கள். சட்டத்திற்கு உட்பட்டு அன்றைய அமைச்சரவையின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலோடு ஆறுமாதங்களுக்கு அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை அதன்பின்னர் பாராளுமன்ற ஒப்புதலுடன் ஆறு ஆறு மாதங்களுக்காக மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. வழக்கமான நெருக்கடி நிலை காலத்தில் உள்ளதுபோல் மக்களின் அடிப்படை உரிமைகள் இந்த நெருக்கடி நிலைகாலத்திலும் இல்லாதிருந்தன. ஆனால் வழக்கத்திற்கு மாறாக மக்களின் உயிர் வாழ்வதற்கான உரிமையும்கூட இந்த நெருக்கடிநிலை காலகட்டத்தில் பறிக்கப்பட்டது.
நெருக்கடி நிலை காலகட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த மாணவர் ராஜன் காணாமல் போய் ஆள் கொணர் மனுமூலமாக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தபோது, தலைமை நீதிபதி ஹான்ஸ் ராஜ் கண்ணா அவர்களின் அரசியலமைப்புச் சட்டம் 21ல் குறிப்பிடப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமையையும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல் என்ற நெருக்கடிநிலைக் காலத்திற்கு அரசு நீட்டிக்கிறதா?’ என்ற கேள்விக்கு சட்டத்திற்குப் புறம்பாக உயிர்பறிக்கப்பட்டாலும், நீதிமன்றங்கள் உதவமுடியாதுஎன்ற அட்டர்னி ஜெனரலின் பதில் அன்றைய நிலையை நமக்கு உணர்த்தும். ராஜன் கொலை பற்றிய விபரங்கள் அவரது தந்தையால் ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்என்ற நூலாக (மொழிபெயர்க்கப்பட்டு தமிழிலும்) வந்துள்ளது.
நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட 1975 ஜூன் (25ஆம்நாள், புதன்கிழமை இரவு) 26 ஆம் நாள் முதல் அது நடைமுறையில் திரும்பப்பெறப்பட்ட 1977 மார்ச் 23 ஆம் நாள், புதன்கிழமை வரை ஒட்டு மொத்த இந்தியாவும் இந்திராவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் கடைசி இரண்டு மாதங்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலம் என்பதால் சிறிது மாற்றம் இருந்தது. நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட மறுநாள் தலைநகர் டெல்லியில் தேசிய முதலாளிகளான டாட்டாவும்- பிர்லாவும், டால்மியாவும்- சிந்தியாவும், சிங்கரேணிகளும் என ஒட்டுமொத்த முதலாளிகளும் ஊர்வலமாகச் சென்று திருமதி இந்திராவுக்கு நன்றி செலுத்தினார்கள். முதலாளிகளின் இந்த ஊர்வலமே நமக்கு உணர்த்தும் இந்த நெருக்கடிநிலை யாருக்குச் சாதகமானது என்பதை.
நெருக்கடிநிலையின் அவலங்கள் வெளித்தெரியாதிருப்பதற்காக பள்ளி மாணவர்கள் தொடங்கி பல்கலைக் கழக மாணவர்கள் வரை அனைவருக்கும் இந்திராவின் 20 அம்சத்திட்டத்தின் சிறப்புகளை விவரிக்கும் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்திராவின் இருபது அம்சத் திட்டம் பற்றிய நாடகங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களால் நடத்த(வைக்கப்)ப்பட்டன. அப்படிப்பட்ட நாடகங்களில் நானும் என்னுடன் இன்றிருக்கும் தோழர்களில் சிலரும்கூட நடித்திருக்கிறோம் என்பதைச் சொல்வதில் எங்களுக்கு எந்தக் கூச்சமுமில்லை. சிறுவயதில் நடிப்பு ஆர்வத்திலும் ஆசிரியருக்கு நெருக்கமாக இருப்பதற்காகவும் மட்டுமே அந்த நாடகங்களில் நடித்தோம். எங்களுடைய கருத்துக்களைச் சொல்வதற்காக அல்ல. அந்த வயதில் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொள்ளும்படியாக அப்படி எந்தக் கருத்தும் எங்களைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்பதும்கூட கருத்துச் சொல்லாததற்கான காரணம். சொந்தக் கருத்துகள் அற்ற நாங்கள் எங்கள் ஆசிரியரின் கருத்துக்கு அடிபணிந்தோம். சொந்தக் கருத்துக்கள் இல்லாத (அப்படி ஏதும் இருந்தாலும் - வெளியிட வகையில்லா நெருக்கடிநிலையில்) எங்கள் ஆசிரியர்களும், பள்ளியும் அரசாங்கத்தின் கருத்திற்கு அடிபணிந்தார்கள். நெருக்கடிநிலையை உலகஅரங்கில் நியாயப்படுத்தும் முயற்சியை இந்திராவின் இருபது அம்சத்திட்டம் செய்தது.
இந்திராவின் இருபது அம்சத் திட்டம் சோசலிசக் கோட்பாடுகளைக் கொண்டது என அன்றைய சோசலிச குடியரசின் அதிபர் பிரஷ்னேவ் அவர்களுக்கு விளக்கப்பட்டு, அவரும் ஆம் இது சோசலிசக் கோட்பாடுகளைக் கொண்டது என்று சொல்ல நமது ரஷ்ய ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சியான இந்திய பொதுவுடமைக் கட்சி இந்திரா காந்தியின் நெருக்கடிக்கு எல்லா நிலையிலும் ஆதரவு தெரிவித்தது. இந்திராவா? இந்தியாவா? என ஒரு கேள்வி வந்தபோது இந்திய பொதுவுடமைக் கட்சி இந்தியாதான் இந்திரா; இந்திராதான் இந்தியாஎன தன் முழு ஆதரவை வெளிப்படுத்தி தன்னுடைய அறிவியல் பார்வையை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டது. இந்திராவை மட்டும் அல்ல, பிரஷ்னேவையும் நம்பியது தவறு என்பதை, காலம் கடந்து, சோசலிசக் குடியரசின் சிதைவுக்குப் பின்னர் இந்திய பொதுவுடமைக் கட்சி புரிந்து கொண்டது என்பது கடந்த கால வரலாறு.
பொதுத்துறைகளை குறிப்பாக தொடர்வண்டித் துறையை சரி செய்ய... விலைவாசியை கட்டுப்படுத்த... பொதுத்துறை அலுவலகங்களைச் சரிப்படுத்த... இந்திய ஜனநாயகத்தை கட்டிக்காக்க என பல்வேறு பொய்க் காரணங்களைச் சொல்லி ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்த இந்திய ஜனநாயகத்தின் கழுத்தை நெருக்கடிநிலையை அறிவித்ததன் வழியாக இரும்புக்கரத்தால் இறுக்கினார் நேருவின் புதல்வி. எப்போதும் ஆளும் வர்க்கத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக நிற்கக்கூடிய அரசியல்வாதிகளையும், முற்போக்கு சக்திகளையும் சிறையிலடைத்தது அவருடைய நெருக்கடி நிலை. காங்கிரசுக்கு எதிரான செயல்திட்டம் கொண்ட, எமர்ஜென்சியை எதிர்த்துக் கேள்வி கேட்ட முதலாளித்துவ கட்சிகளின் தலைவர்களையும், சில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களையும்கூட அவரது நெருக்கடிநிலை விட்டு வைக்கவில்லை. தமிழ்நாட்டில் திரு, திருமிகு-விற்குப் பதிலாக மிசாஎன்று போட்டுக் கொள்ளும் நெருக்கடிநிலைக் கைதிகள் உண்டு, போராட்டத்தின் ஒரு பகுதி சிறையிலடைக்கப்படுதல். அது ஒரு தகுதி அல்ல என்ற உண¢ர்வுடன் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ போட்டுக் கொள்ளாத இன்றும் வாழும் நெருக்கடிநிலைக் கால அரசியல் கைதிகளும் நம்மிடையே நிறைய உண்டு.
நெருக்கடிநிலைக் காலத்தில் அரசுக்கு எதிராக இவர்கள் செயல்படலாம் எனக் கருதப்படுகின்ற யாரும் சிறையில் அடைக்கப்படலாம் என்பது சட்டமாக இருந்தது. ஆனந்த மார்க், ஆர்எஸ்எஸ், மேற்கு வங்க நக்சல்பாரி எழுச்சியின் தொடர்ச்சியாக உருவான மார்க்சிய லெனினிய இந்திய பொதுவுடமைக் கட்சிக் குழுக்கள், ஜம்மா-இ-இஸ்லாமி-இ-இந்து உட்பட மத, அரசியல், புரட்சிகர சக்திகள் அவற்றின் உபஅமைப்புகள் என 22 கட்சிகள்/அமைப்புகள் தடைசெய்யப்பட்டிருந்தன. பேரணிகள், சாமிஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எங்கு என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள முடியாதபடி பத்திரிகைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அரசாங்கம் சொல்வதே மக்களுக்கான செய்தியாக இருந்தது. இந்தியாவின் நெருக்கடிகள் அனைத்திற்கும் காரணம் இந்திய மக்கட் தொகைதான் என நேருவின் பேரர், இந்திராவின் புதல்வர், சஞ்சய் காந்தி ஒரு அற்புதமான உலகப் புகழ்பெற்ற கண்டுபிடிப்பை முன்வைத்தார். அதற்குத் தீர்வாக (விருப்ப) குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டாய அறுவைக்கு மக்கள் (காயடிப்புக்கு) உட்படுத்தப்பட்டனர். இந்த அற்புதத் திட்டத்தின் பலனை சில திருமணமாகாத இளையோரும் அனுபவித்து நாட்டிற்குச் சேவை செய்தனர் என்பது கடந்தகால மறைபொருள் வரலாறு. அவர்களில் சிலர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் தங்களுக்கு வாரிசுகள் இல்லையே என்ற வருத்தத்துடன். பசுமைப் புரட்சியும் அறுவை மருத்துவம் இல்லாமலேயே அதைத்தான் செய்தது என்பது இன்னொரு வேதியியல் மறைபொருள் வரலாறு. இத்திட்டத்திற்கான இலட்சினையாக இரண்டு குழந்தைகள் போதும் என்ற முழக்கத்துடன் சிவப்பு முக்கோணம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிவப்பு முக்கோணத்தின் ஒரு பக்கம் ஆண் குழந்தைக்கு; இன்னொரு பக்கம் பெண் குழந்தைக்கு; மூன்றாவது பக்கம் அரசுக்கு; என்ற விளக்கம் தரப்பட்டது. இந்த முக்கோணத்தின் நான்காவது கோணமாக இந்திராவின் நெருக்கடிநிலை இருந்தது என்பதே உண்மை. இப்படியாக இந்தியா முழுவதும் பசுவும் கன்றும் (அன்றைய இந்திரா காங்கிரஸின் தேர்தல் சின்னம் பசுவும் கன்றும்) ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தை இந்தியா கண்டு கழித்தது/கழிந்தது.
மாநிலங்களின் சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்ற பொருளாதார மசோதா உட்பட அனைத்து மசோதாக்களும் பாராளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாநிலச் சட்டமன்றத்தின் செயலாட்சிகள் முடக்கப்பட்டன. பாராளுமன்றத்தால் 66 புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்த 66ல் பலவும் இன்றுவரை நடைமுறையில் உள்ளன. அன்றைய இந்திய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் அதிகப்படியாக ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
அன்றைய பேரரசுகளுள் ஒன்றாக இருந்த சோவியத் குடியரசில் இந்தியாவின் நெருக்கடி நிலைக்காக பிரஷ்னேவின் வார்த்தைகளில் நல்ல பெயர் வாங்கியாகிவிட்டது. இந்தியாவை உருவாக்கி 1858 முதல் 1947 வரை 90 ஆண்டுகள் ஆண்டு வந்த இங்கிலாந்திடமும் நல்ல பெயர் வாங்கி விட்டால் இந்த உலகத்தையே ஜெயித்ததாகப் பொருள் அல்லவா? அதற்காக லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் சல்போர்னை இந்திய அரசு வரவழைத்தது. இந்திய அரசின் செலவில் அவர் நாடுமுழுவதையும் சுற்றிப் பார்த்தார். தாயகம் திரும்பும்போது இந்திய அரசால் அளிக்கப்பட்ட ஒரு மாலை விருந்திலும் பின்னர் லண்டன் பர்மிங்காம் அரங்கிலும் அவர் உரையாற்றினார். பி.கே.பிர்லா, ஆர்.கே.தவன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டங்களில் ஆற்றிய அவருடைய உரையின் ஒரு பகுதி.
"பி.கே. பிர்லா அவர்களே, ஆர்.கே.தவான் அவர்களே, இந்திய நாட்டின் செலவில் எங்களை வரவழைத்தீர்கள். கடந்த மூன்றுமாதமும் காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரிவரை சுற்றிப்பார்க்க வாகன வசதி, உண்ண உணவு, தங்குமிடம் கொடுத்து எந்தக்குறைவுமின்றி பாதுகாத்தீர்கள். இந்த நெருக்கடிநிலை சம்பந்தமாக உலக அரங்கில் பேச வாய்ப்பும் அளித்தீர்கள். எங்களை இவ்வளவு நேர்த்தியோடு கவனித்த உங்களிடையே சில உண்மையான செய்திகளை கூறிவிடுவதுதான் எனக்கு சரியென்று படுகிறது. இந்த மாலை விருந்தில் என்னுடைய உரையை கேட்டபின்னால், நான் ஒரு நன்றிகெட்டவன் என்று நீங்கள் கருதுவீர்களேயானால், அதற்கு நான் பொறுப்பாளியல்ல.
இந்தியாவை சுற்றிப்பார்க்கும்போது எங்கும் ஓர் அசாத்தியமான அமைதியே தோன்றுகிறது. அந்த அமைதி மயானங்களில் புதைக்கப்பட்டிருக்கும் பிணங்களிடையே காணப்படும் அமைதியே. இந்திய நாட்டின் சிறைக்கூடங்கள் தேசத் துரோகிகளும், சமூகக் குற்றவாளிகளும் நிறைந்து இருக்கவேண்டியவை. மாறாக இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதிகளும் அவர்தம் இயக்கங்களும் முடக்கப்பட்டு அதன் ஊழியர்கள் பல்லாயிரமானோர் சிறைபட்டிருப்பதை காணமுடிந்தது. சிறையில் இருக்க வேண்டியவர்கள் வெளி உலகிலும், வெளிஉலகில் இருக்க வேண்டியவர்கள், சிறைக்கொட்டடியிலும் இருப்பதை என் கண்ணால் காணமுடிந்தது. இதை நான் சொல்லாமல் இருந்தால் குற்றவாளியாகி விடுவேன்..."
போர் நடைபெற்றுக்கொண்டிருந்த 1962, 1971 காலகட்டத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதற்கான காரணத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 1975ல் எதற்காக நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது? 1967 மேற்குவங்கத்தில் நக்சல்பாரி எழுச்சியின் காரணமாக இந்தியா முழுமைக்கும் ஒரு புரட்சிகரமான சூழல் உருவாவதற்கான அசைவுகளை உணர்ந்த அரசு நக்சல்பாரி எழுச்சிக்குக் காரணமான தலைவர்களையும் தொண்டர்களையும் சட்டப்படியும், சட்டத்திற்குப் புறம்பாகவும் கொலை செய்து ஒழித்துக்கட்டிக் கொண்டிருந்தது. அரசாங்கத்தால் 1970ல் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறுவிவசாயத்தை அழித்தொழித்த பசுமைப்புரட்சியின் நெருக்கடி சிறுவிவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடிய போராட்டங்களை நோக்கி நகர்த்தியது. இப்படியான சூழலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 1971ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி ராணுவ டாங்குகள் வரையிலான அரசாங்கத்தின் ஒட்டு மொத்த சக்தியையும், அதிகாரத்தையும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்று லோக் நாயக் (உலக நாயகன்) என்றழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் பீகாரில் வி.எம்.தார்குன்டேவுடன் இணைந்து அவருக்குத் தெரிந்த காந்திய அஹிம்சை வழியில் சத்யாகிரகப் போராட்டத்தைத் தொடங்கினார். எங்கு தொடங்குவது என்று தெரியாமல் நின்ற சூழலில், தொடங்கப்பெற்ற ஜெ.பி.யின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும், சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், பல்வேறு தொழிலாளர் அமைப்பினரும் திரண்டனர். (இதே காட்சியை நாம் இன்றும் பார்க்கிறோம்) இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அவர் முழுப்புரட்சி என ஒரு திட்டத்தை அறிவிக்க போராட்டப் பொறி மற்ற மாநிலங்களிலும் பறக்கத் தொடங்கியது. (இந்த முழுப்புரட்சிக்கும் லியான் ட்ராட்ஸ்கி முன்வைத்த  நிரந்தர புரட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை)
1971 தேர்தலில் இந்திரா காந்தியை எதிர்த்து நின்று தோற்றுப் போன ராஜ் நரைன் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் அரசு இயந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி இந்திராகாந்தி பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். 1975 ஜூன் 12ஆம் நாள் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜக்மோகன் சின்கா தேர்தலில் அரசு இயந்திரத்தை முறைகேடாகக் பயன்படுத்தியதைக் கண்டித்ததுடன், இந்திராகாந்தியின் வெற்றி செல்லத்தக்கதல்ல என்று தீர்ப்பளித்து, இந்திரா காந்தி இன்னும் 6 ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் நிற்கக் கூடாதெனத் தடைவிதித்தார். நேருவின் மகளுக்கு நெருக்கடி இங்குதான் தொடங்கியது. பிரதமராகத் தொடர்வதில் நெருக்கடி, சஞ்சய் காந்தி பிரதமராவதற்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களின் நெருக்கடி. இன்றைக்குச் இந்தகாந்திக்குக் கிடைத்ததுபோல், அன்றைக்கு அந்தகாந்திக்கு உலகவங்கி ஓய்வூதியம் பெறும் மன்மோகன் போன்ற விசுவாசிகள் கிடைக்காத நெருக்கடி. இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகள். நெருக்கடிகள் எதுவும் இந்தியாவிற்கல்ல, இந்திராவிற்கு. இந்த நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக, நாற்காலியைத் தக்கவைப்பதற்காக இந்திராகாந்தி தினறிக் கொண்டிருக்கையில் அப்போதைய மேற்குவங்கத்தின் முதலமைச்சராக இருந்த சித்தார்த்த சங்கர் ராய் இந்தியாவில் நெருக்கடிநிலையை அறிவிப்பதன் மூலம் இந்த நெருக்கடிநிலைக்கு ஒரு முடிவு கட்டலாம் என ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இந்திராகாந்தியால் கொண்டு வரப்பட்டதுதான் ‘1975 இந்திரா நெருக்கடிநிலைப் பிரகடனம்’.
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைவர்கள் கைது தொடங்குகிறது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜ் நரைன், மொரார்ஜி தேசாய், சரண்சிங், ஜிவட்ராம் கிருபாலனி, அடல்பிகாரி வாஜ்பாய், சத்யேந்திர நாராயண் சின்கா, சென்னை பார்த்தசாரதி போன்றவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அதன் பின்னர் இருந்த நிலைமைகள் எல்லாம் முன்னரே மேலோட்டமாகப் பார்த்தவைதான்.
புரட்சித் தலைவர் என அழைக்கப்பெற்ற (புரட்சித் திலகம் புரட்சித் தலைவராவதற்கு முன்னரே) உலகநாயகன் (லோக் நாயக்) ஜெயப் பிரகாஷ் நாராயணனின் சிறுநீரகக் கோளாறுக்கு, அப்படி எந்தக் கோளாறும் இல்லை எனக்கோளாறாகச் சொல்லி மருத்துவம் மறுத்து அவரை சிறையிலேயே கொலைசெய்யத் திட்டமிட்டது இ.காங்கிரஸ். அதே இ.காங்கிரஸின் பீகார் செய்தித் தொடர்பாளர் மோகன் பிரகாஷ் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல் காந்தி, இளைஞர்களின் நலன், தேவைகள், எதிர்காலம் குறித்து பெரும் கவலையுடனும், அக்கறையுடனும் உள்ளார். ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்குப் பிறகு நாட்டின் இளைஞர்கள் குறித்து அக்கறை காட்டி வரும் ஒரே தலைவர் ராகுல் மட்டுமே. நாட்டின் வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மட்டுமே பேசி வருகிறார். இது பீகார் இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இளைஞர்கள் குறித்து முன்பு ஜெயப்பிரகாஷ் நாராயணன் கவலைப்பட்டார். இப்போது ராகுல் காந்தி அந்த இடத்தை நிரப்பியுள்ளார்என்கிறார். நல்ல வேலையாக ஜெ.பி. இறந்துவிட்டார்.
காந்தியைக் கொலை செய்தவர்கள் காந்திக்கு விழா எடுப்பதும், பகத்சிங்கை தீவிரவாதி என முத்திரை குத்தி அவர் தூக்குக் கயிற்றில் தொங்க ஏற்பாடு செய்தவர்கள் அவருக்கு விழா எடுப்பதும், ஜெ.பி.யைக் கொலை செய்ய முயன்றவர்கள் அவரைப் போன்றவர் எங்கள் தலைவர் என்று சொல்வதும், கணக்குக் கேட்டதற்காக கட்சியை விட்டுத் தூக்கி எறிந்தவரை, அவர் பெயர் சொன்னால் ஓட்டுக் கிடைக்கும் என்ற சூழல் வரும்போது அவர் என் நண்பர் என்று சொல்வதும் முதலாளித்துவ, எண்ணிக்கை விளையாட்டை மையப்படுத்திய தேர்தல் ஜனநாயகத்தில் சர்வசாதாரணம். ஜெ.பி. இறந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னாவிருது (1999) வழங்கப்பட்டது என்பது இங்கு தேவையான ஒரு துணைத் தகவல் என நினைக்கிறேன்.
1977 ஜனவரி 23ல் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. தலைவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். தேர்தல் நடைபெற்று மார்ச் 21ல் ஜனதா கட்சி (மக்கள் கட்சி’) வென்றதாக அறிவிக்கப்பட்டு அது பொறுப்பேற்ற 1977 மார்ச் 23 வரை நெருக்கடிநிலை நடைமுறையில் இருந்தது. இந்த மக்கள் கட்சிஉருவாக்கம், செயல்பாடு, உருக்குலைவு போன்றவை பற்றித் தனியாகப் பேச நிறைய உள்ளது. மிகக்குறிப்பாக ஜெ.பி.யின் முழுப்புரட்சிக்கான போராட்டம் எதனைச் சாதித்ததோ இல்லையோ பாரதிய ஜனதாக் கட்சி என்ற மதவாத அரசியல் கட்சி இந்தியாவில் உருவாக மிகவும் உறுதுணையாக இருந்தது. இப்படியான சூழல், இன்று அன்னா அசாரேயின் போராட்டத்தில் இருப்பதாக நினைப்பவர்கள், அன்றைய நிகழ்வுகளின் தொடர் நிகழ்வுகளைக் கவனத்தில் கொள்வது நல்லது.
நெருக்கடி நிலை பற்றிய சிறு அறிமுகம் மட்டுமே இந்தப் பதிவு, ‘நெருக்கடி நிலையை அறிவித்திருக்காவிட்டால், இந்தியா சோவியத் குடியரசின் காலனியாக மாறியிருக்கும்என்று சிலர் இன்றும் தங்கள் சொந்த வலைத் தளங்களில் புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் நெருக்கடி நிலைக்காலம் என்பது அன்று மட்டுமல்ல இன்று வரையிலும் ஒரு சர்ச்சைக்குரிய காலம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் கட்சி தொடங்குபவர்களுக்கு விடுதலைக்குப் பிந்தைய இந்திய வரலாறு பற்றிய ஒரு தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கட்சி தொடங்க வேண்டும் என்று சொல்லலாமா? அதற்கும் நம்மவர்கள் ஆயத்தமாகத்தான் இருப்பார்கள் எவ்வளவோ செய்யுறோம். இதைச் செய்யமாட்டமா?’ என்ற தெனாவட்டுடன். தொடரும் உரையாடல்களின் வழி உதிரும் சொற்பிம்பங்களின் நிஜங்களைப் புரிந்து கொள்ளாமையும், புரிந்துகொள்ள முயலாமையும்கூட தெனாவட்டின் வெளிப்பாடுகள்தான்.
கொடூரங்களை நடைமுறைப்படுத்துபவர்கள் கொடூரமானவர்கள்.
அத்தகைய கொடூரங்களை சகித்துக் கொண்டு அங்கீகரிப்பவர்கள் மிகக் கொடூரமானவர்கள்.
அவற்றை வேண்டி விரும்பி மீண்டும் கேட்பவர்கள் மிகமிகக் கொடூரமானவர்கள்
(நன்றி:உயிர் எழுத்து டிசம்பர் 2011)

No comments:

Post a Comment