Sunday, April 16, 2017

கலந்துரையாடல் - கடிதம் 11 - மதிகண்ணன்

002-12/10/2011
அன்புத் தோழர்களுக்கு
வணக்கத்துடன் மதிகண்ணன்.
நாம் சந்தித்துக் கொள்வதற்கும், கலந்துரையாடுவதற்கும், விவாதிப்பதற்குமான தேவைகள் அதிகமாக உள்ளன. ஆனால் சூழல் தேவைகளுக்கு எதிராக தன் செயல்திறம் காட்டுகிறது. இப்படியான சூழலில் நாம் மார்க்சிய வழியான ‘அறிவு அரசியல்‘ (Knowledge Politics) தளத்தில் இருந்து விலகி நீட்ஷே வழியிலான, ஃப்ராய்டிய வழியிலான ‘வேட்கை அரசியல்‘ (Desire Politics), ‘உடல் அரசியல்‘ (Body Politics) போன்ற பின்நவீனத்துவ அரசியல் தளங்களை நோக்கி நம்மையுமறியாமல் நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். வேட்கையும், உடலும் அதிகாரத்திற்கு உட்பட்ட தனிநபர் சார்ந்த விஷயங்கள். அவை சமூகத் தளத்தில் இயங்குவது அல்லது அவற்றை சமூகத்தளத்தில் இயக்குவது என்பது இயலாத ஒன்று. மீறி இயக்க நினைத்தால் அது பாலச்சந்தர் திரைப்படக் கதைகளைப்போல் ஆகிவிடும். வேட்கை அரசியலும், உடல் அரசியலும் தனிநபர் விருப்பம் / ஆசை / இச்சை சார்ந்தவை என்பதால் திசைவிலக வாய்ப்புள்ளது. காத்திரமான தர்க்க வழிப்புரிதல் இல்லாத சூழலில் விருப்புறுதி சார்ந்த எதையும் செயல்திட்டமாக ஏற்கவல்ல மனித இயல்பிற்கு நாம் மாற்றாக மாறுவதற்கான முயற்சியில்தானே இருக்கிறோம்.
‘சூழல் மனிதனைப் பாதிக்கிறது என்பது உண்மையில் ஒரு பாதி மட்டுமேஇன்னொரு பாதி, சூழலுக்கு எதிராக மனிதன் செயல்பட்டு அதனை மாற்றுகிறான்‘
-    கார்ல் மார்க்ஸ் (பயர்பாக் ஆய்வுரையில்)
சூழலுக்கு எதிரான புதிய சூழல் உருவாக்க முயற்சியாக, நாம் நம்மை கடித ஊடாடலுக்கு உட்படுத்திக் கொண்டோம். இக்கடித ஊடாடலில் எண்வர் உள்ளோம். எண்வருக்கும் பகுதி தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்ற ஒரு இடத்தில் தொடங்கலாம் என்ற முடிவுடன் ‘பாவ-புண்ணியம்‘ விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 2011 செப்டம்பர் 26 ஆம்நாள் முன்வைப்புக்கடிதம் கொடுக்கப்பட்டது.
எனது முழுஅறிவு ரீதியான உருவாதலும் விவாத இயல்பைக் கொண்டிருக்கும். ஆகவே விருப்பமற்று ஈடுபடுதல் எனச்சிந்திப்பது என்னளவில் சாத்தியமில்லை. படிப்பதற்காகப் படிப்பது என்பதுகூட என்னளவில் சாத்தியமில்லை. அபூர்வமான சில சந்தர்ப்பங்களில் மட்டுமே குறிப்பிட்ட சிந்தனை உக்கிரத்திலிருந்து விடுபட்டு நிற்பேன். ஒன்றின் உள்ளார்ந்த தன்மை கருதி பகுப்பாய்வு செய்கையிலேயே இதுவும் நேரும். ... ... ... எனக்கு எப்போதும் உரையாடுவதற்கென ஒருவர் வேண்டும். ஒரு ஸ்தூலமான எதிராளி வேண்டும்
-    மைத்துனி தாந்தியானாவிற்கு கிராம்ஸி சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் இருந்து.
முன்வைப்பிற்கு ஸ்தூலமான எதிர்வினை ஐவரிடமிருந்து கிடைத்துள்ளது. சிரத்தைக்கு நன்றி கூறி அவர்களுடனான ஊடாடலைத் தொடரும்விதமாக அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்.
28/10/2011
கடிதம் எழுதத் தொடங்கி 16 நாட்களுக்குப் பிறகு இன்று தொடர்கிறேன். இதுவும் ஒருவகை விதி(rule)தான். வெறிநாயால் துரத்தப்படும் வாழ்வின் ஓட்டம் வேலைகளை வரிசைப்படுத்துகிறது. வாழ்க்கை நிறுத்திய வரிசையில் கடிதத்தின் தொடர்ச்சி 16ஆம் நாள் காரியமாக மாறியதைத் தவிர்க்க இயலவில்லை.
கேகே கடிதத்தின் தொடக்கத்தில் அவருடைய கடிதம் முன்வைப்புக் கடிதத்திற்கு நேரடியாய் தொடர்பற்றதாய் இருக்கலாம் எனவும், ஆனாலும் ஒருகிளையில் சந்திக்கும் என நம்புவதாகவும் எழுதியிருந்தார். மற்றவர்கள் இவ்வரிகளைச் எழுதவில்லை என்றாலும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. அதுதான் நிகழும். அதுதான் நிகழவும் வேண்டும்.
ஒவ்வொருவரும் கடிதங்களில் தொடர்புடைய நிறைய இடங்களைத் தொட்டிருக்கிறீர்கள். வாஸ்து, கார்ப்பரேட் சாமியார்கள், செக்ஸ் சாமியார், பாவத்திற்கான தண்டனை, மனச்சாட்சி, பொருளாதாரக் குற்றங்களுக்குக் காரணம் தனிச்சொத்தே, கதை நாயகர்கள் கடவுளர்களானது, பணக்காரர்களுக்காக புதிய வரலாறுகள் எழுதப்படுவது, பரம்பரை வழி வந்த வழிபாட்டு ஒழுங்கு, அறிவியலை ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக தத்துவங்கள், முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி, எதிர்வுகள் இப்படிப்பல்வேறு இடங்களைத் தொட்டிருக்கிறீர்கள். தொடப்பட்ட இடங்கள் எல்லாம் அழுத்தமாக, மீண்டும் மீண்டும் ‘பொருளாதார அதிகாரத்துடன் தொடர்புடையதாக முதலாளித்துவ சமூகம் பாவபுண்ணியத்தை வரையறை செய்துள்ளதுஎன்பதை நிறுவுவதாகவே உள்ளது.
முன்வைப்புக் கடிதத்தின் மையக் கேள்விகளான ‘நிலவிவரும் ஒழுக்கம் தொடர்பான சொற்களான பாவம், புண்ணியம், தீட்டு, புனிதம் போன்ற சொற்களை நாம் எப்படி உள்வாங்கிக் கொள்வது? அச்சொற்களை எப்படிக் கடப்பது? கடக்கத்தான் வேண்டுமா? அல்லது அச்சொற்களுக்கு பாட்டாளி வர்க்கப் பார்வையுடன், சுரண்டலுடன் தொடர்புடையதாக மறுவரையறை தரவேண்டுமா? பண்பாடு இவற்றுடன் நெருக்கமான தொடர்புடையது என்று உறைந்துபோன புனிதம், புண்ணியம் போன்ற சொல்லாடல்களில் / இடங்களில் நம்முடைய நிலைப்பாடு என்னவாக இருக்கலாம்? இருக்க வேண்டும்?இடம் நோக்கி கடிதங்கள் நகரவில்லை. ஆனால், கேள்விகளின் காத்திரமான நிழல் கடிதங்களில் படிந்துள்ளது. நிழலின் நீட்சியாய்...
‘பண்பாடு தொடர்பான ஆழமான விவாதங்களை கருத்தியல் மட்டத்தில் எடுத்துச் செல்வது, தீவிரமான களச்செயல்பாடு இரண்டுமே இன்றைய காலக்கட்டத்தின் உடனடித்தேவை எனக்கருதுகிறேன். காத்திரமான ஒருசில பேருங்கூட கவனம் சிதறிப்போவதுதான் என் வருத்தம். மார்க்சியத்தின் மீதான நம்பிக்கையும், மார்க்சியம் தரும் நம்பிக்கையுமே வாழ்வை பிடிப்புள்ளதாக, அர்த்தமுள்ளதாக ஆக்குவதாக உணர்கிறேன் ஆழமாக. என மார்க்சிய வழியிலான நகர்தலுக்கு இட்டுச் செல்லும் தன் முன்வைப்பைத் தருகிறார் தோழர் கேகே.
இத்தகைய சமூக அமைப்புக்குள் பொருளியல் தேவை, அளவு குறித்து நாம் கொள்ள வேண்டிய நிலைப்பாடு பற்றிய கேள்வி அவசியமாகிறது. எந்தளவு பொருளைத் தேடுதல், எந்தளவு பொருளைச் செலவிடுதல், எவ்விதம் பொருளைப் பயன்படுத்துதல் போன்ற கேள்விகளுக்கு நமக்குள் பதில் காண தொடர்ந்து விவாதிப்போம்.‘ என தோழர் விஜி அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறார்.
கடவுள் என்ற ஒன்று உள்ளவரை பாவ, புண்ணியம் தொடர்ந்த செயல்பாடுகள் இருக்கத்தான் செய்யும். பொதுவுடைமை தத்துவத்தை முன் வைப்பவர்கள், இவற்றைக் கடக்கத்தான் வேண்டும். எப்படிக் கடப்பது? அதற்கான மறுவரையறை என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. கணக்கற்ற கேள்விகள் எனக்கும் உண்டு. அவையெல்லாம் பொருளுடையதுதான? சரியா? என்ற குழப்பமும் உண்டு. என உழைக்கும் வர்க்கத்திற்கான பாடுகள் பெரும்பாடாய் இருக்கும் வரை இப்படியான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவற்றை எதிர்கொள்வது எப்படி? எதிர் கேள்வி எழுப்புகிறார் தோழர் கருப்பு.
பாவபுண்ணிய நம்பிக்கைகள் கடவுளுடனும் மதத்துடனும் தொடர்புடையது. ஆனால் முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக தனக்கேற்றவகையில் அவற்றை வரையறை செய்திருக்கிறது. பாவம் புண்ணியம் போன்ற சொற்களை நாம் உள்வாங்கி அச்சொற்களைக் கடக்க வேண்டும். மறுவரையறை செய்ய வேண்டுமென்றால் தத்துவம், அரசியல், பண்பாடு போன்ற களங்களில் நாம் சரியான தெளிவுடன் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கும். அதையொட்டி சரியான செயல்பாட்டிற்குரிய வேலைத்திட்டத்தை நாம் உருவாக்குவதற்கான முயற்சியில் தொடரவேண்டும். இந்த வழிகளில் நாம் செயல்படுவது மிகவும் எளிதானதல்ல. ஆனால் அடுத்துவரும் தலைமுறைகளுக்காகவும், அவர்களுக்கு நல்ல ஒரு சூழலை உருவாக்குவதற்காகவும் இதை நாம் செய்தே ஆக வேண்டும் என, சிரமமான வேலை என்றாலும் செய்துதானே ஆகவேண்டும் என்கிறார் தோழர் சுப்புராயுலு.
புனித(?) பூமியான இந்தியாவில் கடவுளாக சித்தரிக்கப்படும் அனைவரும் ஒரு கதையின் கதாப்பாத்திரங்களாகத்தான் இருக்கிறார்கள். இப்போதும்கூட பணம்படைத்தவர்களின் வரலாறுகள் புத்தகமாவதை நாம் பார்க்கலாம். அங்கும் நமக்கு கதைதான் சொல்லப்படுகிறது. நீங்கள் சொல்வதைப்போல எழுதுகிறவர்கள் அல்லது எழுதுகிறவர்களை கவனிப்பவர்கள் அங்கு முன்னிலைப்படுத்தப்படுவதும், மற்றவர்கள் அங்கு இல்லாமல் இருப்பதும் சாதாரணமான உண்மையாகி விடுகிறது. அவர்களின் பாவ, புண்ணிய வரையறை அவர்களின் சமூகத்திற்கானதாகத்தான் இருக்கும்.‘ என்ற வரிகள் மூலமாக நமக்கான மறுவரையறை தேவை என்பதைச் சொல்லாமல் சொல்லும் செல்வா.
இக்கருத்துக்கள் எல்லாம் அப்படியே நிற்க. கடித ஊடாடலில் நாம் தொட்ட இடங்களின் அடிப்படைகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம். வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பற்றிய அறிமுகமாக எங்கல்ஸ், டூரிங்கிற்கு எழுதிய மறுப்பில் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்போதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் வரலாற்றில் அந்தக் காலக்கூறுக்குரிய நீதிநெறி, அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களுமாகிய மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடியும்…. இதுவரை செய்யப்பட்டது போல மனிதனது உணர்வைக் கொண்டு அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் கூறுவதற்குப் பதில், மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுக்கு விளக்கம் கூறுவதற்கு ஒரு வழி கண்டறியப்பட்டது.  என்று முன்வைக்கிறார்.
அதாவது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின்படி ‘சமூக உற்பத்திமுறைதான், எல்லாவகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கிறது. உற்பத்திமுறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். இந்தப் பொருளாதார அமைப்பே அடித்தளம். தத்துவம், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை இலக்கியம் போன்றவை குறிப்பிட்ட பொருளாதார நிலைக்கு ஏற்பத் தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.
அடித்தளமும் மேற்கட்டமைப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பைத் தோற்றுவிக்கும் காரணமாகவும் அமைகிறது. அதாவது சமூகத்தின் அடித்தளத்திற்கு (உற்பத்திமுறைக்கு) ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது.
மேல்கட்டமைப்பின் சுதந்திரம் சார்பு நிலையானது. அது தோன்றிய அடித்தளத்தை வலுப்படுத்தும் அல்லது அதன் வழியாக தான் நவீனப்பட்டு வளருமே ஒழிய அடித்தளத்தில் பெரியஅளவில் எந்த மாற்றத்தையும் நேரடியாக ஏற்படுத்திவிடாது.
மேல்கட்டமைப்பு அடித்தளத்தின் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதல்ல இதன் பொருள். பெரிய அளவில் ஏற்படுத்தாது. மேல்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது இடையீடு செய்வதை இயக்கவியல் முறையில் புரிந்துகொள்ள வேண்டும்‘
வறட்டுத்தத்துவமாக இந்தக் கருத்துக்களை முன்வைக்கவில்லை. மார்க்சும், எங்கல்சும்கூட அப்படிச் சொல்லவில்லை. “...வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுஉற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும். மார்க்சோ, நானோ இதற்கு மேல் ஒருபோதும் சொல்லவில்லை. ஆகவே, பொருளாதாரக்கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால், அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத, சூக்குமமான, அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றிவிடுகிறார்.“ என 1890 செப்டம்பர் 22ல் பிலோஹுக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான வரலாற்றுப் பொருள்முதல்வாத கருதுகோளின்படி பார்த்தால், நிலவுடமைச் சமூக காலம்வரை இறையுடன் தொடர்புடையதாய் இருந்த பாவ புண்ணியங்கள், முதலாளித்துவ சமூகத்தில பொருளதிகாரத்துடன் தொடர்புடையதாய மாறியதை நாம் புரிந்து கொள்ள முடியும். இதன் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியத்தின் நவீன வடிவமான உலகமயமாதல் காலகட்டத்தில் நிறுவன அதிகாரம், அதிலும் குறிப்பாக பன்னாட்டு நிறுவன அதிகாரமும், பொருளாதார நிலையில் உச்சத்தில் உள்ள பன்னாட்டுப் பரதேசி மடங்களும் பாவ புண்ணியத்தை வரையறை செய்வதற்கான அங்கீகார மையங்களாக மாறுவது தவிர்க்க முடியாதது.
அடித்தளமாக உள்ள உற்பத்தி உறவுகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய பாவம், புண்ணியம், புனிதம், தீட்டு போன்ற நம்பிக்கைகள் அவற்றையும் மீறி இன்னும் நிலவுகின்றனவா? என்றால் ஆம் என்பதே பதில். ஏனெனில், எப்படி எல்லாக் குரங்கும் மனிதனாக மாறவில்லையோ, அப்படி நிலவுடமைச் சமூகத்தின் எல்லா நம்பிக்கைகளும் முதலாளித்துவக் கருத்துக்களாக மாறவில்லை. இந்தியா ஒரு அரை முதலாளித்துவ நாடாக / கால் நிறுவனமய நாடாகத்தான் இன்னும் இருக்கிறது. ஆனால் அதனை முழு ஏகாதிபத்திய சக்தியாக மாற்றுவதற்கான இச்சை / விருப்பம் / ஆசை (ஃப்ராய்டிய மனோநிலையுடன்) சில தொழில் நுட்ப வணிகர்களால் இந்தியர்கள் என தம்மை (ரொம்ப ரொம்ப) ஆழமாக நம்புபவர்கள் மனதில் ஊன்றி வளர்க்கப்படுகிறது.
இவற்றுக்கு மத்தியில், இவை பற்றிய புரிதலுடன் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி நாம் இயங்கியல் ரீதியாக பாவம், புண்ணியம், புனிதம், தீட்டு போன்றவற்றை நிராகரிப்போம். அதே நேரத்தில், நிலவுடமைச் சமூகத்தின் மிச்ச சொச்சங்களை, வர்க்க உணர்வுடன் எதிர்கொள்வோம். அவர்களின் அந்த நம்பிக்கை வளர்ப்பிற்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். இக்கடிதத்தை இத்துடன் தற்காலிகமாக முடித்துக் கொள்கிறேன். மீண்டும் தொடர்வோம்.
என்றென்றும் தோழமையுடன்
மதிகண்ணன்
பி.கு. : (கடித ஊடாடலின் இடையே வெளிப்பட்ட ‘பண்பாட்டு மார்க்சியம் என்ற சொற்பிரயோகம் தொடர்பான கருத்துக்களை தோழர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்)

No comments:

Post a Comment