Friday, April 21, 2017

கலந்துரையாடல் - கடிதம் 13 - காயத்ரி சத்ய கிருஷ்ணன்

001/18-04-2017
பாவ புண்ணிய கடித உரையாடலின் தொடர்ச்சியாக...
காயத்ரி சத்யகிருஷ்ணன்
பெரியாரையும் அம்பேத்கரையும் எனக்குத் தெரியாது. மார்க்ஸ்ஸையும் எங்கெல்ஸ்ஸையும் சத்தியமாய் தெரியாது. ஆய்வு செய்து அரசியல் வார்த்தைகள் கொண்டும் எழுத தெரியாது. பார்த்து உணர்ந்தவற்றை எழுதியுள்ளேன். - காயத்ரி சத்யகிருஷ்ணன் 
பாவ புண்ணியங்கள் நம் வாழ்வில் நம்மை அனு தினமும் விடாது துரத்தி வருகின்றன. இறைநம்பிக்கையுடன் தொடர்பு படுத்திப் பார்க்கப்படும் பாவ புண்ணியங்களை கேள்வியே கேட்காமல் ஏற்றுக்கொண்டு கடை பிடித்தும் வருகிறோம். உண்மையில் புண்ணியம் செய்தவர்கள் சந்தோசமாகவும் பாவம் செய்தவர்கள் கஷ்டபட்டுக்கொண்டும் இருக்கிறர்களா??
        இந்த பாவ புண்ணிய கணக்குகள் மனிதர்களை குற்றவாளிகள் ஆக்கி கடவுளை உன்னதபடுத்தவே கையாளபடுகின்றன. நம்மால் நேரும் குற்றங்களை மூடி மறைக்க பாவம் புண்ணியம் என கதை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
        பக்க்தியில் சிறந்து கோவிலிலேயே கிடையாய் கிடந்த ஒருத்தர் அகால மரணம் அடைகிறார். அதோடு நிற்காமல் அவரது மகனும்  விபத்தில் இறக்கிறார். பேரன் அப்பார்ட்மென்ட் குடியிருப்பின் மேல் மாடியில் கிரிக்கெட் விளையாடிகொண்டிருக்கும் போது அங்கிருந்து கீழே விழுந்து இறக்கிறான். அவ்வளவு பக்க்தியாய் இருந்தவரின் சந்ததி ஏன் இப்படி நாசமானது?? அவர் செய்த புண்ணியங்கள் எங்கே போனது?
        மதகுருவின் மடத்தில் பார்ப்பனர்களுக்கு மட்டும் தான் சாப்பாடு. இது தெரியாமல் பார்ப்பனர் அல்லாதவர் ஒருத்தர் பந்தியில் அமர்ந்து விட்டார். பார்க்க டிசன்ட்டாக இருந்தவர் சோத்துக்கு வக்கில்லாமலா சாப்பிட வருவார்? கடவுளின் பிரசாதம் என நினைத்து தான் வந்திருப்பார். பந்தியில் அமர்ந்தவரை தயவு தாட்சிண்யம் பார்க்காமல் எழுந்திரிக்க சொல்லி விட்டார்கள். பார்பனர் அல்லாதவர் அங்கு சாப்பிட்டால் தீட்டு பாவம் எனில் சாப்பிட உட்கார்ந்தவரை எழ சொன்னவனை அந்நியன் படத்தில் வரும் சொக்கன் 65 போல் வருத்தாலும் தகும்.
        புண்ணிய ஆத்மா கஷ்டம் இல்லாமல் இறைவனை அடையும் என்று சொல்வது உண்மையானால் எனக்கு தெரிந்த சிங்காரி பாட்டி புஷ்பக விமானத்தில் அழைத்து செல்லப் பட்டிருக்க வேண்டும். மூன்றரை வருடம் நாய் படாத பாடு பட்டு படுத்த படுக்கையிலேயே இருந்து இறந்து போனார்.
        பாவ புண்ணிய கணக்குகள் முற் பிறவியில் இருந்து தொடரும் என்பதில் இருந்து பல பிறவிகள் உண்டு என்பதை நம்புகிறோம் என உறுதி ஆகிறது. ஆக இறந்து போன ஜீவன் குறிப்பிட்ட வருடங்களில் மறு பிறவி எடுத்து விடுகிறது. அனால் இன்றும் நான்கு தலைமுறை தாண்டியும் அந்த ஆத்மாக்களுக்கு தர்ப்பணமும் திதியும் கொடுக்கா விட்டால் பாவம் என்றும் நம்புகிறோம். எங்கோ பிறந்து விட்ட ஆத்மாவுக்கு எதற்கு தர்ப்பணமும் திதியும். ஒன்று முற் பிறவி மறு பிறவிகளை நம்ப வேண்டும் அல்லது நம்பாமல் திவசம் கொடுக்கச் சொல்ல வேண்டும். கேள்வி கேட்டால் பதில் வராது. இப்படி கேள்வி கேட்டால் மழை பெய்யாது என்று சாபம் தான் வரும்.
        பாவ புண்ணிய கதைகளால் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் தனி டிப்பார்ட்மென்ட்.

        பாவ புண்ணிய கணக்குகளை பொய்யாக்கும் ஆயிரம் கதைகள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் நம்மை முட்டாளாக்கும் வேலையைதான் சமூகம் செய்து கொண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment