Saturday, September 30, 2017

எத்தனை கோடி - சத்யா - சிறுகதை



     “அய்யய்யோரிப்போர்ட்டைப் பார்த்தபடி டாக்டர் நிர்மலா சொன்னாள். காயத்ரிக்கு கண்களில் நீர் தளும்பியது. அருகிலிருந்த அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டாள். அம்மாவின் கையும் நடுங்கிக்கொண்டிருந்தது.விடியல் சூரியனாய் எப்போதும் வெடித்து விடுவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள்.
உண்மையில் அவள் இப்போதுதான் அழுது முடித்து சிரிக்கத் தொடங்கியிருந்தாள். காதல் கணவனைக் கைபிடித்தாலும் பெரிய குடும்பத்தை விட்டு பிரிவது அவ்வளவு எளிதில்லையே? அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா, பாட்டி,தம்பி போதாக்குறைக்கு நினைத்தால் வந்து நிற்கும் தூரத்திலிருந்த அம்மா வழித் தாத்தா என அனைவரையும் விட்டுப் பிரிவதென்பது அவ்வளவு லேசான காரியமில்லை. ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இன்னொரு நிலத்தில் நடுவது. அது பூக்குமோ புதையுமோ யார் அறிவார்? என்னதான் மாமியாருடன் அன்பான புரிதல் இருந்தாலும் இருபத்தைந்து வருடங்கள் வளர்ந்த, விளையாடிய, சண்டைபோட்ட,கண்ணீர் சிந்திய, கட்டிப்பிடித்த, தவறி விழுந்து உதடு பெயர்த்த அனைத்துக்கும் சாட்சியாய் நின்ற வீட்டைப் பிரிவது சுலபமில்லையே. திருவிழாக்கோலமிட்ட வீட்டைவிட்டு கல்யாணத்துக்குக் கிளம்பும்போதே, இனி இது நமக்கு சொந்தமில்லை என்ற எண்ணம் ஏக்கமாய் பரவி இதயம் முழுவதையும் அடைத்துக்கொண்டது. அடைப்பை மீறி வழியும் தண்ணீர் போல லேசாக கண்ணீர் எட்டிப் பார்த்தது. எதுக்கும்மா அழற? சந்தோசமா இருக்கணும்மா என்று உடைந்த குரலில் சொன்ன அம்மாவைக் கண்டு வெடித்துக் கிளம்பிய எரிமலையாய் கண்ணீர் கொட்டியது.
ஆயிரம் நாட்கள் காத்திருந்த வைபவமே இவள் திருமணம். ஆயிரம் இரவுகள் ஏங்கிதான் இவன் திருமணம் நடந்தது. இவள் பயந்ததுபோல் ஒன்றுமில்லாமல் எல்லாம் சுலபமாகவே நடந்திருந்தாலும், ஆயிரம் கனவுகளில் இவள் கரம் பிடித்தவனே இன்றும் அருகில் இருந்தாலும், இன்னும் ஆயிரம் வருடங்கள் இவனோடு வாழவேண்டும் என்று ஆசை இருந்தாலும்அந்த ஒருநாள் இவள் அழுதுகொண்டுதான் இருந்தாள். அன்று செய்த சடங்குகளெல்லாம், இவளை உயிருடன் ரத்தமும் சதையுமாக வைத்துக்கொண்டு இதயத்தை மட்டும் வெட்டி எடுக்கும் சடங்குகளாகவே இவளுக்குப்பட்டது. அவனை ஏறிட்டுப் பார்த்தாள், அவன் சந்தோசமாகத்தான் இருந்தான். ஆணுக்கென்ன கவலை? இதுவரைவாழ்க்கையின் அங்கங்களாக இருந்தவர்களை அழித்து புதிய உலகிற்குள் புகுந்து செல்லும் கொடுமை அவர்களுக்கு நேரப்போவதே இல்லை. அதனால்அவர்களுக்கு இந்த வலிகளைப் புரிந்துகொள்ள வழியேயில்லை. தன் அப்பாவை நினைத்துக்கொண்டாள், ஒருவேளை தன் மகளைத் திருமணம் செய்யும்போது புரியுமோ? ஒருவேளை புரியலாம், ஆனால் புரிவதற்கும் அனுபவிப்பதிற்கும் தொலைதூர இடைவெளி உள்ளது. என்னதான் புரிந்தாலும் அந்த இடத்தில் தன்னை நிறுத்திப்பார்க்கும் ஒப்பனையை ஒரு ஆணால் செய்துவிடமுடியாது. அது பெண்களால் மட்டுமே இயலும். அவள் கரத்தை அப்பா பிடித்து அவன் கரத்தில் கொடுத்தபோது உடைந்து அழுத அவளைப் பார்க்க அப்பாவுக்கும் சகிக்காமல் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார், தன் கண்ணீரை மறைத்துக்கொள்ள.
கணவன் வீட்டில் முதல்நாள் காய்ச்சிய பாலோடு சேர்ந்து பொங்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சிரித்தபடி வெளியே வந்தாள். தன் வீட்டில் ஒற்றை நாள் கூட வேலை செய்ய விடாத அம்மாக்களை நினைத்துக்கொண்டாள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில்தான்ஒரே நாளில் எப்படி அத்தனையும் தலைகீழாக மாறிவிடுகிறது. சுவை, மணம், வண்ணம் வாழ்க்கை என அனைத்திலுமே தனக்குப் பிடித்த ஒன்றை விடுத்து அடுதவர்களுக்காய் வாழச் சபித்துவிடுகிறது உலகம். ஆம், சபித்துதான் விடுகிறது, ஒருவேளை வரமாக இருந்தாலும் அவள் விரும்பிக்கேட்டாலும் அவளை தலைகீழாகப் புரட்டிப்போட்டு அவள்மீது செலுத்தப்படுவது சாபம்தானே? திருமணமான இரண்டுவாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவனோடு வாழப் பழகியிருந்தாள். மாமியார் வெளியூரில் வேலைபார்ப்பதால் அவள் ரிடையர் ஆகும் ஒரு வருடம்வரை இவளுக்கு தனிக்குடித்தனம்தான். அத்தனை சொந்தங்களை விட்டு வந்தவளுக்கு இந்த தனிமை அதிக வலியைத்தந்தது. இருப்பினும் கொஞ்ச கொஞ்சமாய் அழுவதை நிறுத்தியிருந்தாள்.இரவில் அம்மாவோடு போன் பேசும்போது அழுவதோடு சரி. அந்த நிலையில்தான் அவளது மாதவிலக்கு நாளை நினைவு வைத்திருந்து கணவன் நாப்கின் வாங்கி வந்திருந்தான். அவனதுஅன்பை நினைத்து அழுதவளுக்கு, இனி எல்லாம் ஆனந்தக் கண்ணீர்தான் என்று தோன்றியது..
‘விமன்ஆல்வேஸ்லவ்சர்ப்ரைஸஸ்’, என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுபோன்ற பேருண்மை எதுவுமேயில்லை. இவளுக்கும் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது. மாதவிடாய் நாள் கடந்தும் வரவில்லை, ஏற்கனவே திருமணமான அவள் தோழியிடம் கேட்கும் முன்னரே இவன் கூகுளிடம் கேட்டு‘பிரக்னன்சி டெஸ்ட் கிட்’ வாங்கி வந்திருந்தான். அதிலும் ரிசல்ட் பாசிட்டிவாக வர அவள் வயிற்றைக் கட்டிக்கொண்டு மெல்லிய முத்தமிட்ட அவள் கணவனைக் கண்டு அவனையே கருவில் சுமக்கப் போவதாய் எண்ணி மகிழ்ந்திருந்தாள். தாய்மை போன்ற மாபெரும் பேரு ஏது? இந்தப் பிரபஞ்சத்தின் ஜனன காரணியே அவள்தானே? சில நேரங்களில் அவள் நினைத்துக்கொள்வாள் இந்த பிரபஞ்சத்தையே ஒருதாய்தான் பெற்றெடுத்திருப்பாளோ என்று, எத்தனை ஜனனங்கள் இந்த உலகம் கண்டிருக்கும்? அத்தனைஉலகங்களையும் ஒருதாய், ஒரே ஒருதாய் தன் கருவில் சுமக்கிறாள். அந்த உலகத்தின் கண்ணீர், பசி, வலி, சிரிப்பு, காதல் அன்பு, முத்தம் என அனைத்தும் இங்குதானே தொடங்குகிறது? அவை அனைத்தையும் சுமப்பவள்தானே ஒருதாய்? ஆக உணர்வுகளால் உலகம் கட்டமைக்கப்பட்டிருந்தால் தாயைப்போல் உலகம் வேறில்லை.
இந்த நிலையில்தான் கர்ப்பத்தை உறுதிசெய்து ஸ்கேன் எடுத்து வந்தவளிடம் டாக்டர் நிர்மலா அய்யய்யோ என்றாள். வயதானவள், அனுபவசாலி தன் தாய்க்கும் பிரசவம் பார்த்தவள் என்ற நம்பிக்கையிலேயே இவளைப் பார்க்க இரண்டு அம்மாக்களுடன் மாமியாரைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தாள் காயத்ரி. இவர்கள் மூவருமே அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்க காயத்ரிதான் மனதை பலப்படுத்திக்கொண்டு என்னம்மா வந்துருக்கு ஸ்கேன்ல? என்று கேட்டாள். என்னம்மா இவ்வளவு பெரிய நீர்க்கட்டி இருக்கே? என்று டாக்டரிடமிருந்து பதில் வந்தது. அது எவ்வளவு பெரியதோ தெரியாது ஆனால் ஒரு மாபெரும் நெருப்புக்கட்டி தன் தலையில் விழுந்ததுபோல் உணர்ந்தாள். அவளது சந்தோசங்களை ஒரே நொடியில் உடைத்து எறிந்தது அந்தக்கட்டி. கண்ணீர் தளும்பும் கண்களைக் காட்ட விரும்பாமல் திருப்பிக்கொண்டவளுக்கு, அப்படியே பத்து மாசம் பத்திரமா பாத்துக்கிட்டு கொண்டாங்க,சிசேரியன் பண்ணி எடுத்துடலாம் என்ற வார்த்தைகள் காதில் நெருப்பையள்ளிப் போட்டதுபோல் இருந்தது. அதிர்ச்சி மாறாமல் வெளியே வந்தவளுக்கு உலகமே தடுமாறுவதாய்த் தோன்றியது. ஒன்னும் கவலைப்படாதீங்க,உங்க பேபி இங்க இருக்கு. கட்டி ஒரு ஓரமாதான் இருக்கு என்று இவள் மாமியாரிடம் நர்ஸ் கூறிக்கொண்டிருந்தது கிணற்றுக்குள் கேட்பதுபோல் தோன்றியதேயன்றி மனதுக்குள் இறங்கவில்லை. கண்களில் கண்ணீர் தன்னிச்சையாக வழிந்துகொண்டிருந்ததை இவள் வீட்டுக்கு வரும்வரை உணரவேயில்லை.
நீர்க்கட்டியெல்லாம் இருந்தா கன்சீவே  ஆக மாட்டாங்கம்மா. உனக்கு ஆனது பெரிய விஷயம்தான்.
கட்டி கருவ தொந்தரவு பண்ணிட்டே இருக்கும்மா. அபார்ட் ஆக சான்ஸ் அதிகம்
கட்டி இருந்துசுன்னாலே பிரச்சினைதான். 5 மாசம் வரைக்கும் பாதுக்கறதே பெரிய விஷயம்
அவ்வளவுதான் நார்மல் டெலிவரியெல்லாம் நெனச்சு கூட பாக்க முடியாது
அடுத்த மாதம் முழுவதும் இவைகளையேதான் கேட்டுக்கொண்டிருந்தாள். டாக்டர்கள், நர்சுகள், தெரிந்தஅம்மாக்கள், பக்கத்துவீட்டு அக்கா, பிள்ளை பெற்ற தோழி,தானாக வந்து சேர்ந்த அறிவுரையாளர்கள்என எல்லோரும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஒரே ஆறுதல் கணவன் மட்டும்தான். அவனோ எதற்கும் கவலை கொண்டானில்லை. எல்லாவற்றிற்கும் வைத்தியம் இருக்கிறது என்பான்.உடலுக்கு வைத்தியம் இருக்கும் மனதுக்கு எங்கே போவது? இவளுக்கோஇதுவரை எந்த அறிகுறியும் தெரிந்ததில்லை. மாதவிடாயில் எந்த மாற்றமும் இதற்கு முன்பு இருந்ததேயில்லை. அப்படி இருக்கையில் எப்படி கட்டி வந்தது என்று நினைத்து புலம்புவாள். சில சமயங்களில் கணவனின் தோளில் சாய்ந்துகொண்டு ‘இந்த பாப்பாக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்’ என்று அழுவாள். அவனுக்கு இவளை எப்படி சமாதானம் செய்வதென்றே தெரியாது. எல்லா ஆண்களையும்போல.
கடைசியில் ஒரு உருப்படியான டாக்டரைக் கண்டுபிடித்திருந்தார்கள்.உருப்படியாக என்றால் கட்டியைப்பற்றி மறக்குமளவு குழந்தையைப் பற்றி மட்டும் பேசத் தெரிந்தவளாக இருந்தாள்.குழந்தைக்காக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஊசி போட வேண்டியதாயிற்று. இவளுடையஆசைகளெல்லாம் உடைந்து போனதுபோல் இருந்தது.எல்லா புதுமணமான ஜோடிகளைப் போல கொஞ்ச நாள் தனிமையில் இருவரும் வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டிருந்தாள். ஆனால்இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. ‘ஒருஅஞ்சு மாசம் பத்திரமா பாத்துக்கங்க’ என்று டாக்டர் கூறியதைக் கேட்டு இரு வீட்டிலும் அவள் கணவன் உட்பட ‘அம்மா வீட்டிலேயே இரு’ என்று அனுப்பிவைத்திருந்தனர். அவள் கணவனோ இதற்கெல்லாம் சிறிதும் கவலைப்படவில்லை. ‘நான் தனியாக இருந்துகொள்வேன்’ என்று சொன்னான். இவளுக்கு மட்டும்தான் அவனைப் பிரிவதில் வருத்தம். எத்தனை ஆசைப்பட்டுக் கல்யாணம் செய்திருப்பாள்? இனிக்க இனிக்க இவனோடு வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டவளைப் பிய்த்தெடுத்துக் கொண்டுபோனதுபோல் இருந்தது. ஆசையாய் அப்பா வாங்கிக்கொடுத்த பொம்மையை விளையாடும் முன்பே உடைத்துத் தூக்கி எறிந்ததுபோல சிறு குழந்தையாய் மாறி அழுதுகொண்டே இருந்தாள்.
‘அழாதம்மா அழுதா டயர்ட் ஆயிடும்’ என்று சமாதானம் சொல்லும் கணவனுக்கு இவள் மனதை புரிந்துகொள்ளத் தெரியவில்லை. போதாக்குறைக்கு காலை நேர வாந்தியும் சேர்ந்துகொண்டது. தைராய்டு இருப்பதாகக் கண்டுபிடித்திருந்ததால் காலையில் ஒரு மாத்திரை சாப்பிட்டுஅடுத்த அரைமணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. இவளோ காலை எழுந்ததும் காபி குடிக்காமல் இருந்ததேயில்லை. அதுவும் காலை எழுந்ததும் வாய்க்குள் கையை விட்டு குடலைப் பிடித்து இழுப்பதுபோல் வரும் வாந்தியில் துவண்டுபோய் வந்து மாத்திரையை முழுங்கிவிட்டு அரை மயக்கத்திலேயே கிடப்பாள். அரைமணியில் பலமின்றி நடுங்கும் கைகளோடு காபியைக் குடித்த பிறகே கொஞ்சம் உயிர் துளிர்த்ததுபோல் இருக்கும். போதாக்குறைக்கு எதைத் தின்றாலும் நெஞ்சைக்கரித்துக்கொண்டு வரும் ஏப்பத்தில் நெருப்பில் மிளகாயை வாட்டி தேய்த்ததுபோல் தொண்டையெல்லாம் எரியும்.
மூன்று மாதத்தில் ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில்குழந்தை நன்றாக வளர்ந்திருப்பதாக டாக்டரம்மா சொன்னார். காதலுடன் கணவனின் தோளைக் கட்டிக்கொண்டவளது சந்தோசம் நிலைக்கவில்லை. அடுத்ததாக எடுத்த நீரிழிவு சோதனையில் இவளுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தது.‘சரியான சீக்காளியா இருக்கேன் நான்’ என விரக்தியாக சிரித்துக்கொண்டாள். ‘என்னால பிள்ளைக்கு எதுவும் ஆயிடக் கூடாது’ என்றுமறுபடி அழத் தொடங்கினாள். சர்க்கரையைக் கட்டுப்படுத்த தினமும் இன்சுலின் போடும்படி பணிக்கப்பட்டாள். காலை உணவுக்கு முன்பு தொடையில் ஊசி போட்டுக்கொள்ளவேண்டும். ஒரே ஊசியை ஒருநாளைக்கு மேல் போட்டால் தொடையைக் கிழித்துக்கொண்டு போவதுபோல் வலிக்கும்,அதற்காக எட்டுரூபாய் ஊசியை ஒரே நாளில் தூக்கிப் போட முடியுமா? ஒரு ஊசியில் மூன்று நாட்கள் போட்ட பிறகே அதைத் தூக்கிப்போடுவாள். கொஞ்ச நாட்களில் தொடையெல்லாம் பழைய கந்தல் துணியாய் பொத்தல் பொத்தலாக ஓட்டைவிழுந்துபோனது.
ஆறாவது மாத ஸ்கேனில் கட்டி சிறியதாக தெரிந்தது. ஏற்கனவே ஒரு மாதமாக குழந்தை மிதிப்பது தெரிய ஆரம்பித்திருந்தது. இந்த புள்ள எல்லாத்தையும் சீக்கிரம் பண்ணுதுங்க என்று கணவனிடம் சொல்லிக்கொண்டாள். கொஞ்ச நாளாகவே அவள் சரியாக படுப்பதில்லை. ஒரு பக்கமாக படுத்தால் வயிறு தரையில் படும் என்று ஒரு பக்கமாகதன் தோளை ஊன்றி வயிறு தரையில் பட்டுவிடாதபடியே படுப்பாள். நல்லாதான்படேன்மா என்றால்,இல்லைங்கவயிறு கீழ பட்டா பிள்ளை வந்து மிதிக்குதுங்க, அதுக்கு வலிக்கும்போல என்று சொல்லுவாள். ‘ஏன்மா பாப்பாவைச் சுத்தி தண்ணி இருக்கும்மா, அதெல்லாம் வலிக்காது’ என்று அம்மா சொல்லும் சமாதானங்கள் இவளுக்கு போதவில்லை. பிள்ளைகளுக்கு வலிக்கிறதோ இல்லையோ, அம்மாக்களுக்கு வலிக்கத்தானே செய்யும். குழந்தைகளின் மூளைக்கு வலியைக் கடத்தாத நரம்புகள் கூட அம்மாவின் மூளைக்கு வலியைக் கடத்தி விடுகின்றன. குழந்தைக்கு வலிக்கிறதோ இல்லையோ அம்மா துடித்துப் போகிறாள்.குழந்தையின்கண்கள் கலங்கும் முன்னால் அம்மாவுக்குக் கண்ணீர் வந்துவிடுகிறது. இதெல்லாம் இவ்வுலக நியதி, அதுவே இன்று இவளையும் ஆட்டுவிக்கிறது. இருந்த நோய்களோடு இடுப்பு வலியும் சேர்ந்துகொண்டது.
ஏழாவதுமாதத்திலெல்லாம் நடப்பதே சிரமமாகிப் போனது. வளைகாப்புக்கு முன்னால் பத்துநாள் மட்டும் கணவனோடு வந்து இருந்துகொண்டாள். அவளுக்கு அந்த நாட்களே மொத்த வாழ்க்கையும் வாழ்ந்ததாய் தோன்றியது. வளைகாப்பு முடிந்த அன்றுமாலை அம்மா வீட்டுக்குக்கிளம்பும்போது வீட்டை திரும்பத்திரும்பப் பார்த்துக்கொண்டாள். இன்னும் எட்டு மாதங்களுக்கு இந்தப் பக்கமே வர முடியாது. அதை நினைத்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவனுடன் வாழ்ந்த பத்து நாட்களைநினைத்துக்கொண்டாள். ஆட்டோ போன பாதை இவள் கண்ணீரால் நிரம்பி ஆட்டோ தடுமாறிக்கொண்டே போனது.


இது வரைக்கும் எந்த ப்ராப்ளமும் இல்ல, தேர்ட்டி போர் வீக்ஸ் தாண்டிட்டா எந்த பிரச்சினையும் இல்ல. என்று டாக்டர் சொல்லிவிட கூடுதல் கவனம் இவள் மீது செலுத்த வேண்டியதாயிற்று. பயத்திலேயே இன்னும் இரண்டு வாரத்தை கடத்த அதில் இன்சுலின் அளவையும் கூட்டி ஊசியின் வலியை அதிகரித்திருந்தார். மூச்சு விடுவதே சிரமமாகிப்போக எந்நேரமும் சுளுக்குப் பிடித்துக்கொண்டதுபோல் வலித்துக்கொண்டே இருந்த இடுப்பில் கைவைத்து நீவினால் கூட பிள்ளைக்கு வலிக்குமோ என்று யோசித்து வலியைப் பொறுத்துக்கொண்டாள்.
‘புண்ணியாஜனம் பண்ணற வரைக்கும் புது டிரஸ் போடக்கூடாதும்மா.. வேற குழந்தைக்கு போட்டதுதான் போடணும், அதுதான் சாஸ்திரம் என்று அம்மா சொல்லதோழியிடம் சொல்லி அவள் குழந்தையின் உடைகளை வாங்கி வந்தாள். அவள் போனதும் அந்தப் பிஞ்சு உடைகளை வயிற்றில் வைத்து.பாப்பா.. இங்க பாரு உனக்கு டிரஸ், இது பிடிச்சுருக்கா? இல்ல இதுவா என்று குழந்தையிடம் பேசி வயிற்றில் உதைவாங்கி சந்தோஷமாக சிரித்தாள். பெண்களுக்குத்தான் எப்படி உலகம் வயிற்றுக்குள் சுருங்கிப்போய் விடுகிறது? அவளதுபேச்சும் பாடல்களும் குழந்தைக்கு பிடித்ததாகவே மாறிவிடுகிறது. உணவு, உடை(ஆம் உடைதான்), நடை என்று எல்லாம் மாறி மூச்சு விடும்போது கூட குழந்தைக்கு வலிக்காமல் மெதுவாக விடப் பழகியிருந்தாள். ஒருவழியாக முப்பத்தாறு வாரங்கள் கடந்திருக்க, டாக்டர் கூப்பிட்டு, நீ சுகருக்கு இன்சுலின் போடுறதால லாஸ்ட் டூ வீக்ஸ்ல பேபிக்கு சுகர் லோ ஆயிடும். சோ ஒரு டூ வீக்ஸ் முன்னாலேயே டெலிவரி பிளான் பண்ணிக்கலாம். பேபி பொசிஷன்ல இருக்கான்னு பாப்போம், இல்லன்னா சிசேரியன் பண்ணிக்கலாம். என்றார். இவளுக்கு குழந்தையை சீக்கிரம் பார்க்கப் போகிறான் என்ற சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும் சிசேரியன் என்றால் செலவு அதிகம் ஆகுமே. ஏற்கனவே பெரும் செலவு செய்து கல்யாணம் செய்துவைத்திருந்த அப்பாவுக்கு மேலும் செலவு கூடாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். இப்போதெல்லாம் குழந்தை உதைக்காமல் அரைமணிநேரம் கூட இருப்பதில்லை. அப்போதெல்லாம் சொல்லிக்கொள்வாள், இந்த பிள்ளை போடுற ஆட்டத்துக்கு அதுவே வெளிய வரலாம் என்று. என்னதான்ஆட்டம் போட்டாலும் குழந்தையின் தலை சரியாக கீழ்நோக்கி வரவில்லை. சிசேரியன்தான் என்று முடிவுசெய்து இரண்டு, மூன்று தேதிகளை ஒதுக்கி நல்ல நாளாக பார்த்து டெலிவரிக்கு நேரம் குறிக்க சொன்னார்கள். ஒரு வகையில் அவர்கள் அனைவருக்கும் நிம்மதி, ஏற்கனவே எதிர்பார்த்த சிசேரியன் என்பதால் கவலை இல்லை, இதேஎதிர்பாராமல் திடீரென சிசேரியனாக இருந்தால் ரிஸ்காகியிருக்கும் என்று பேசிக்கொண்டனர்.
ஒரு நல்ல நாள் பார்த்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்துவிட்டார்கள். ஆபரேஷனுக்கு முந்தைய நாள் முழுவதும் ஏதும் சாப்பிடக்கூடாது என்று சொல்லியிருந்தனர்.ஒருநாள் முழுவதும் சாப்பிடாத களைப்புடன் இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல் உற்சாகமாகவே இருந்தாள். ‘சிசேரியன் பண்ணும்போது முதுகுதண்டுல ஊசி போடுவாங்க அதுனால எனக்கு ரொம்பநேரம் உக்கார முடியாது.’ என்ற பக்கத்துக்கு வீட்டு அக்காவின் சிரமங்களோ, ‘கூடுமானவரை நார்மல் டெலிவரியே ட்ரை பண்ணு காயத்ரி, சிசேரியன் பண்ணினா பால் சரியா ஊறாது’ என்ற எதிர் வீட்டு அக்காவின் அறிவுரையோ மனதில் உறுத்திக்கொண்டிருந்தாலும் அதையெல்லாம்மறக்கடிக்குமளவுகுழந்தையின் நினைவு இருந்தது. ஏங்க, பையனா பொண்ணா? என்னங்க வேணும் என்று கணவனிடம் இன்னொரு முறை கேட்டாள். எதுவாயிருந்த என்னம்மா? எனக்கு குழந்தைதான் வேணும் என்று எப்போதும்போல் சொன்னான். நீங்க ஆசைப்பட்டாலும் இனிமே மாத்தவா முடியும் என்று சொல்லி சிரித்துக்கொண்டாள். ஆபரேஷனுக்காக பச்சை உடை அணிவிக்கப்பட்டது.. ஏங்க வாங்க செல்பி எடுத்துக்கலாம். என்று சந்தோசமாக அந்த உடையுடன் போட்டோ எடுத்துக்கொண்டாள். பிரஷர் பார்க்க, ஊசிபோட என வந்துகொண்டே இருந்த நர்சுகளுக்கு அவன் இடையூறாக இருக்க, அண்ணா கொஞ்சம் வெளிய இருங்கண்ணா, என்ன உங்க ஒய்ப அனுப்ப மனசே இல்லையா என்று கேட்க ஆமாம் என்று சொல்லி அந்த நர்சுகளிடம் கிண்டலைப் பெற்றுக்கொண்டான். வீல் சேர் வேண்டாமென்று சொல்லி நடந்தே ஆபரேஷன் தியேட்டருக்கு போனவளை ஒட்டுமொத்தக் குடும்பமும் கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருந்தது.
ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்து கடைசியாக ஒருதடவை திரும்பிப் பார்த்துக்கொண்டாள். யாருக்குத் தெரியும் திரும்ப வருவோமா இல்லையா என்று. ஒருவேளை வராவிட்டால் பார்க்கும் கடைசி முகங்களாக இவையே இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எத்தனை பிரசவங்களை இந்த ஆபரேஷன் தியேட்டர் கண்டிருக்கும். இவளைப்போல ஏற்கனவே முடிவு செய்தது, கடைசிநேரத்தில் கர்ப்பப்பை வாய் திறக்காதது, குழந்தையின் தலை திரும்பாதது, இரட்டைக் குழந்தைகளால் சிசேரியனாக்கப்பட்டது, குழந்தை எடை கூடியதால் சிசேரியன் செய்யப்பட்டது, தாயின் வயதால் சிசேரியனாக்கப்பட்டது என எத்தனைபேரைக் கண்டிருக்கும்? ஆனால் ஒவ்வொருமுறையும் இந்த ஆபரேஷன் தியேட்டர் புதியதாகப் பொலிவுருகிறது. இரண்டு உயிரைக் காப்பாற்றச் சித்தமெடுக்கிறது. அந்த உயிர் துடிப்பை முதலில் உணர்கிறது. ஆபரேஷன் தியேட்டர்களுக்கு உயிர் இருந்தால் ஆயிரம் கதைகளை சொல்லும், ஆயிரம் ஆறுதல் சொல்லும்.
ஆபரேஷன் தியேட்டருக்குள் தாங்கிப்பிடிக்க இரண்டு நர்சுகளோடு சென்று படுக்கையில் படுத்தவளுக்கு கொடுத்த அனஸ்தீசியா இப்போதுதான் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது, லேசாக கண்கள் சொக்கும் நிலையில் இருந்தவளிடம் ஒரு டாக்டர் மெதுவாக வந்து, மேடம், நான் இப்ப உடம்பு மரத்துப்போறதுக்காக முதுகுல ஒரு ஊசி போடப்போறேன். பயப்படாதீங்க. என்றார். பக்கத்துக்கு வீட்டு அக்கா சொன்னதெல்லாம் மனதுக்குள் காற்றில் படபடக்கும் காகிதமாய் லேசான நடுக்கத்தைக் கொடுத்தாலும் தன் தைரியத்தைக் காட்டிக்கொள்ள, நான் பயப்படல சார், நீங்க ஊசி போடுங்க என்றாள். மனது சொன்னதை வாய் கேட்கவில்லை போலும். இவள் சொன்னதைக் கேட்டு டாக்டர்கள் லேசாக சிரித்துக்கொண்டனர். அவளுக்குப் போட்டிருந்த உடைகள் களையப்பட்டது. வயிற்றுக்குக் கீழே எதோ சிலீரென்ற உணர்வு தெரிந்தது. இப்போதுதான் வயிற்றில் டெட்டால் தடவுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே இவள் வயிற்றின் மேலே கைவைத்து யாரோ தள்ள இவளுக்கு கழுத்தில் விண்ணென்ற வலி கிளம்பியது. ‘இதென்ன சிசேரியன் என்று சொல்லி வயிற்றைக் கிழிக்காமலே குழந்தையை எடுக்கிறார்கள்’ என்று நினைத்துக்கொண்டிருக்கையில் கழுத்து வழி இன்னும் அதிகரிக்க, பிடித்துக்கொண்ட கழுத்தை விடுவிக்க சொடுக்கு எடுப்பதுபோல் கழுத்தை இப்படியும் அப்படியும் ஆட்டினாள், வியேஏன்..... என்று குழந்தை அழும் சத்தம். எங்கோ கிணற்றுக்குள் கேட்பதுபோல் கேட்டது. ‘என்ன அதற்குள் குழந்தை பிறந்துவிட்டதா?’ என்று ஆச்சர்யப்பட்டு முடிப்பதற்குள். கலங்கிய தண்ணீர்போல தெரிந்த காட்சிகளுக்குள் தலைநீட்டி, மேலேறிய நெற்றியும் அளவான மீசையுமாய் ஒருவர் எட்டிப்பார்த்து, என்ன மேடம் என்ன குழந்தை வேணும்னு ஆசப் பட்டீங்க என்று கேட்டார். நிஜமாகவே குழந்தை பிறந்துவிட்டதா இல்லையா என்று குழம்பியபடியே, ஏதுவ இருந்தாலும் சரிதான் சார் என்றாள். சிரித்தபடி, சும்மா சொல்லுங்க மேடம் என்ன குழந்தை வேணும்னு ஆசப்பட்டீங்க? என்று கேட்டார். இவள் அவசரமாய், எதுவா இருந்தாலும் சரிதான் சார். குழந்தையக் காட்டுங்க என்று உளறினாள். வாய்விட்டு சிரித்தபடி உங்களுக்கு பையன் பிறந்திருக்கு மேடம், குழந்தைய உங்க பேமிலிகிட்ட குடுத்துருக்கோம். நீங்க ரெஸ்ட் எடுங்க. என்று சொல்லிவிட்டு மேகம் கலைந்ததுபோல விலகிப் போனார். இவள் கால்மாட்டில் வெகு தூரத்தில் டாக்டர்கள் எதோ செய்துகொண்டிருந்தது தெரிந்தது. இத கட் பண்ணுங்க. ஏம்மா, இந்த டிரஸ் கிளீன் பண்ணி எடுத்துட்டுப் போம்மா என உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். சமீபத்தில் நடந்த நீட் தேர்வைப் பற்றி வெகுதூரத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது இவள் காதில் லேசாகக் கேட்டது. எல்லாம் முடிஞ்சது, கங்கிராஜுலேஷன் காயத்ரி என்று அழகான புன்னகையோடு டாக்டரம்மா சொன்னது இவள் காதில் விழுந்தது.
காயத்ரி மேகத்தில் மிதந்துகொண்டிருந்தாள். அவள் தலைக்கு மேலும், கீழும், அவளைச் சுற்றிலும் மேகங்கள் அவளைத் தூக்கிக்கொண்டிருந்தன. வயிற்றில் பாரம் குறைந்திருந்தது. என்ன கழுத்துதான் லேசாக வலித்தது. கனவாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டாள். உடல்தான் எத்தனை லேசாகிவிட்டிருந்தது? பறக்கும்போது தூரத்தில் அவள் கணவன் நின்றுகொண்டிருந்தான். ஆஹா.. இங்கும் இருக்கிறானா? எப்படி இல்லாமல் போவான் இவள் கனவுகள் அவனில்லாமல் என்று முழுமையடைந்திருக்கின்றன.இவளைப் பார்த்ததும் அருகில் வந்து நெற்றியைத் தொட்டு தடவிவிட்டு என்னவோ சொல்லிவிட்டுப் போனான். என்ன சொல்கிறான் ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் யாரையோ பார்த்து பேசுகிறான். அப்போதுதான் கவனித்தாள் இரண்டு நர்சுகள் இவள் அருகில் நின்றிருந்தனர்.இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நினைக்கும்போதே இவள் பறக்க கணவனும் பின்னாலேயே பறந்துவந்தான்.அவன்திடீரென ஒரு மேகத்தின் மீது ஏறி நின்று இவளை தூக்கி அவன் அருகில் படுக்கவைத்துக்கொண்டான். அவன் தடுமாறி விழப்போக இவள்அவன் கீழே விழாமல் இருக்க கையை நீட்டி அவன் பேண்டை இறுக்கப் பிடித்துக்கொண்டாள்.அக்கா கைய எடுங்கக்கா என்று கிணற்றிலிருந்து பேசுவதுபோல் அருகிலிருந்த நர்சுகளில் ஒருத்தி சொன்னாள். கணவன் அன்போடு இவளைப் பார்த்து சிரித்தான். கையை எடுக்க பிரயத்தனம் செய்தாள். ஆனால் அவளால் கையை எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் கையை அசைக்கக்கூட முடியவில்லை.ஒருவழியாக இரண்டு நர்சுகளும் முயற்சி செய்து கையை விடுவித்தனர். அப்போதுதான்கவனித்தாள், அவள் படுத்திருந்த மேகம் கட்டிலாக மாறியிருந்தது. அவள்ICUவில் படுத்திருந்தாள்.அவள் கணவன் அறையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தான்.பாத்தியா அந்தண்ணன் எவ்வளவு அழகா குழந்தைய தூக்கி வைக்குற மாதிரி அவரு ஒய்ப தூக்கி வைச்சாரு என்று ஒரு நர்ஸ் சொன்னாள்.காயத்ரிக்கு‘எனக்கு குழந்தைதான் வேணும்’ என்று அவள் கணவன் சொன்னது நினைவுக்கு வந்தது. அவளுக்குசந்தோசம் பொங்கியது,சாதாரணமாகஇருந்திருந்தால் அழுதிருப்பாள். இன்றுகண்கள் கூட மரத்துப்போனதுபோல் இருந்தது.அதற்குள் இன்னொருத்தி, அந்தக்கா மட்டும் என்னவாம். இந்த மயக்கத்துலயும் அவங்க வீட்டுக்காரர கீழ விழாம பிடிச்சுக்கிட்டாங்க என்று சொன்னாள்.
இதெல்லாம்கனவில்லை நிஜம்தான் என்பதை வலி உணர்த்தியது. அடிவயிற்றில்நெருப்பையள்ளிக் கொட்டியதுபோல் வலித்தது. சரியாக தையல் போடாமல் ரத்தம் ஒழுகிக்கொண்டே இருக்கிறதோஎன்று தோன்றியது.கையை இப்போது தூக்க முடிந்தது ஆனால் வலித்த இடத்தை தொட்டுப் பார்க்க கையை கொண்டுபோனதும்உடனே நர்ஸ் ஓடிவந்து ‘அக்கா தையல்ல கை வெச்சுடாதீங்கக்கா.’ என்று பிடித்துக்கொண்டாள். குழந்தையைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்திருந்தார்கள் அழகாக இருப்பதாகத்தான் தோன்றியது. ‘யாரை மாதிரி இருக்கிறான்’ என்றுநிறைய யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை. தூங்கியபடிதலை சாய்ந்து மாரைக் கடித்துக்கொண்டிருந்தான். அடிவயிற்றுவலியைத் தாண்டி சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது.
என்னக்கா இப்படி கடிச்சு வெச்சுருக்கான் காயமானமாரைப்பார்த்தபடி நர்ஸ் கேட்டாள். இப்போது ICUவை விட்டு வெளியே வந்து இரண்டுநாள் ஆயிருந்தது. குழந்தை அம்மாவும் அப்பாவும் கலந்தபடி இருப்பதாக சொல்லிக்கொண்டார்கள். இவளுக்கு வலி குறைந்திருந்தது. முதன்முதலில் பால் குடிப்பதில் குழந்தை மாரைக்கடித்திருந்தது. அக்கா, பால் குடுக்கும்போது அவன் தொடையில கொஞ்சம் கிள்ளுங்க அழுவான். அழவாயத் திறக்கும்போது காம்பு நல்லா வாய்க்குள்ள போயிடுச்சுன்னா கடிக்க மாட்டான் என்று நர்ஸ் யோசனை சொன்னாள். இவளோ குழந்தைக்கு ரத்தப்பரிசோதனைக்கு ஊசி குத்தியபோதே குழந்தை அழுவதற்கு முன்னாலேயே அழுதவளாயிற்றே. இவளா குழந்தையைக் கிள்ளுவாள்? தாய்களுக்கு பிள்ளைகளுக்கு வலியைக் கொடுக்க மனம் வருமா? நன்றாகப் பால் குடிக்கப் பழகும்வரைஇவள்தான் வலியைப் பொறுத்துக்கொண்டாள்.
ஆயிற்று இரண்டு மாதங்கள், இரவு பகல் தூங்காமல் குழந்தையை கவனித்ததில் ஆளே கறுத்துப்போய் பாதியாக இளைத்திருந்தாள் காயத்ரி.குழந்தை இவளைப் பார்த்து சிரிக்கத் தொடங்கியிருந்தான். அதில்இப்போதெல்லாம் கர்ப்பகாலத்தில்கண்ட துன்பங்களெல்லாம் மறந்துபோனது.‘துன்பங்களா அவை இன்பங்கள்’ என்றே சொல்லிக்கொண்டிருக்கிறாள்.இவன் சிரிப்புக்காக ஆயிரம் துன்பங்களையும் தாங்க தயாராக இருந்தாள். ஆயிரமென்ன, எத்தனைகோடி துன்பங்களையும் தாங்குவாள் அவள்.உலக இயக்கத்தின் அச்சாணியான தாய்மையின் ஒரு பாகமல்லவா அவள்?
இன்று பசியில் அழுத குழந்தை இவள் வந்து தூக்கும்போது, முதன்முறையாகம்ம்மா... என்று அழுதது. அம்மா உணர்ச்சிவசப்பட்டுஆஹா.. இதற்காகத்தானேடா.. இவ்வளவு கஷ்டப்பட்டா... என்றுசொல்ல வாய்விட்டு அழுதேவிட்டாள். பின்பு பால் கொடுத்தபடி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு விசும்பியபடி சொன்னாள்.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா
(நன்றி : 24/09/2017 தினமணி கதிர்)

No comments:

Post a Comment